(4-02-2017 அன்று நடைபெற்ற நூல் வெளியீட்டு விழாவில் நான் பேசியதன் எழுத்து வடிவம்.) வேற்றுமைகளே உண்மை / வேற்றுமைகளைக் கடந்த உண்மை நான் மிகவும் மதிக்கக்கூடிய மானிடவியலாளர் பக்தவத்சல பாரதி எழுதியுள்ள ‘இலங்கையில் சிங்களவர்’ என்ற நூல் சிங்களவரைப் பற்றிய மானிடவியல் நூல் அல்ல. மாறாக இது ஒரு சர்ச்சையை உத்தேசித்து எழுதப்பட்ட அரசியல் நூல். முரண்பட்டே நிற்கும் என்று கற்பனை செய்யப்படும் (உபயம்: அமைப்பியல் மானிடவியலாளர் கிளாட் லெவி ஸ்ட்ரோஸ்) அருகாமை இனங்கள் ஒன்றையொன்று புரிந்து கொள்வதற்காக ஆரம்பிக்க வேண்டிய சர்ச்சை இது. தேசிய இனப் போரால் சகல தளத்திலும் சிதைக்கப்பட்டிருக்கிற இலங்கைக்கு இப்படியொரு சர்ச்சையும் அதைத் தொடர்ந்து நிகழும் உரையாடலும் அவசியம். அப்படியொரு உரையாடலை தமிழர்கள் பக்கமிருந்து பாரதி ஆரம்பிக்கிறார். புத்தகத்தில் அவரே சொல்வது போல், தொல்லியல், வரலாற்றியல், சமூக அறிவியல்கள், மொழியியல் என்று பல்வேறு துறைகள் சார்ந்து நிகழ்த்தப்பட்டிருக்கிற ஆய்வுகளின் வழி சிங்களவர்களை அறிமுகம் செய்ய இந்த நூல் முயற்சி செய்கிறது. அதுவும் குறிப்பாக, தமிழ் வாசகர்களிடம்