அயோத்திதாசரின் பெளத்தத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு இரண்டு நிகழ்வுகளைத் தெரிந்திருத்தல் அவசியம் - ஒன்று, அயோத்திதாசர் வரலாற்றில் செயல்பட ஆரம்பித்த தருணம்; இரண்டாவது, அயோத்திதாசர் ஆகி வந்த பின்புலம். இதில் இரண்டாவதான, அயோத்திதாசர் ஆகி வந்த கதையை முதலில் பார்க்கலாம். சும்மா ஒரு மாற்றத்திற்காகத் தான். எல்லாவற்றையும் முதலிலிருந்தே தொடங்க வேண்டுமா என்ன? அயோத்திதாசர் கொஞ்சம் பழைய காலத்து மனிதர். பழைய காலத்தின் கடைசி மனிதர் என்று கூட சொல்லலாம். கதை போலச் சொல்லி நாம் கேட்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் அவர் கல்வி கற்றிருக்கிறார். அதாவது தமிழ். தமிழ் என்றதும் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறார்கள். மொழி வழி விரியும் வாழ்க்கையை. தமிழ் எழுத்துக்களுக்குப் பின்னால் இலக்கணம் மட்டுமல்ல, ஒரு கச்சிதமான கருத்தியலே இருப்பதாக அக்காலங்களில் நம்பியிருக்கிறார்கள். பின்னாட்களில், அமுத எழுத்து - நச்சு எழுத்து என்று அயோத்திதாசர் பேசுவது அனைத்தும் அத்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றது தான். இது ஒரு வேடிக்கையான மொழியியல். ‘சொற்கள் உருவாக