நமது விவாதத்தை மேலும் வளர்த்தெடுப்பதற்காக
இன்னுமொரு களத்தகவலை பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன். இந்தத் தகவல் பள்ளர் சமூகத்தினரின்
தற்கால அரசியல் பண்பாட்டு நடவடிக்கை தொடர்பானது. கடந்த ஐந்தாறு வருடங்களாக பரபரப்பாக
பேசப்பட்டு வருவது தான் என்றாலும், 2011ல்
காவல்துறை ஆறு உயிர்களை படுகொலை செய்த செய்தி ஊடகங்களில் பெரிதும் விவாதிக்கப்பட்ட
பின்பு இன்னும் அதிக முக்கியத்துவம் பெற்ற, இம்மானுவேல் சேகரன் நினைவு தின நிகழ்ச்சியே
அது.
இம்மானுவேல சேகரன், இராமநாதபுர
மாவட்டத்தின் பரமக்குடி என்ற நகரத்தில் 1950களில் தீவிரமாக செயல்பட்ட
ஒடுக்கப்பட்ட சமூகத்துத் தலைவர். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின்
இளைஞர் அணித் தலைவராக செயல்பட்டவர். அந்நாட்களில் அப்பகுதிகளில், பிற்படுத்தப்பட்ட சாதியான
மறவர்களின் ஒடுக்குதல்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை துணிச்சலாக எடுத்தவர்.
இம்மானுவேல் சேகரனின் சுயமரியாதைக்கான உந்துதல்கள்,
நிலவுடமை சமூகத்தின் சாதிய மனோபாவத்தில் ஊறித்திளைத்த, பிற்படுத்தப்பட்ட
சாதியைச் சார்ந்த முத்துராமலிங்கத்தை எரிச்சலடைய வைத்திருக்கின்றன. தங்களது வீடுகளில் ஏவல் வேலை செய்வதும்,
காடு கரைகளில் பண்ணை வேலை செய்வதும், தாங்கள் மனமுவந்து
கொடுப்பதை வாய்பொத்தி ஏற்றுக்கொள்வதுமே பள்ளர் போன்ற தாழ்த்தப்பட்ட சாதிகளின் குணமாக
இருக்க வேண்டும் என்ற வேட்கையே பிற்படுத்தப்பட்ட சாதிகளின் மனோபாவமாக இருக்கிறது. தனது நடத்தைகளின் மூலம் ஒரு கச்சிதமான
பிற்படுத்தப்பட்ட சாதிய வன்முறையின் வகைமாதிரியாக விளங்கியவர் முத்துராமலிங்கம். அவரது சாதிப் பிரக்ஞையை இம்மானுவேல் சேகரனின் எதிர்க்குரல்கள்
அசைத்துப் பார்த்தன என்றே சொல்லவேண்டும்.
வட்டார அளவில் மறவர் சாதித் தலைவராகவும், தேசிய
அளவில் 'அகில இந்திய பார்வர்ட் ப்ளாக்' வழியாய் அரசியல்வாதியாகவும்,
தீவிரமான முருக பக்தராக அடையாளப்படுத்திக் கொள்வதன் மூலம் சமயத்தலைவராகவும்
என்று 'சாதி - அரசியல் - மதம்' என்ற வலிமையான பின்புலத்தோடு திட்டமிட்டமிடப்பட்ட
நகர்வுகளை மேற்கொண்டிருந்த முத்துராமலிங்கம், ஒடுக்கப்பட்டோரின் சமூக விழிப்புணர்வுகளை தனது பாரம்பரிய ஆளுமைக்கு விடப்பட்ட சவாலாகவே எடுத்துக் கொண்டிருந்தார்.
இந்த முரண்பாடு, 1957ம் வருடம் முதுகுளத்தூரில் நடைபெற்ற 'பல்சமூகப் பேச்சுவார்த்தை'யொன்றில்
நேரடியான மோதலாகவே வெளிப்பட்டது. அந்த மோதல் சம்பவம், உணர்ச்சிக் கொந்தளிப்பான நாடகம்
போலவே இன்றைக்கும் பலரால் விவரிக்கப்படுகிறது.
அந்தப் பேச்சுவார்த்தையில் முத்துராமலிங்கமும், இம்மானுவேல்
சேகரனும் பிரதிநிதிகளாக அழைக்கப்பட்டிருந்தனர். மாவட்ட ஆட்சித்தலைவரின்
முன்னிலையில் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை அது. இக்கூட்டத்தில் கலந்து
கொள்வதற்காக முத்துராமலிங்கம் அரங்கினுள் நுழைந்த பொழுது, அங்கிருந்த
அத்தனை பேரும் எழுந்து மரியாதை செய்ததாகவும், இம்மானுவேல்
மட்டிலும் நாற்காலியிலிருந்து எழுந்திருக்கவில்லை என்றும் சொல்லப்படுகிறது.
எழுந்திருக்காததோடு, முத்துராமலிங்கத்தின்
முன்பாகக் கால்மேல் கால் போட்டு (தன் கால் மீது தான்!)
உட்கார்ந்திருந்ததாகவும் வாய்மொழித் தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு படி மேலே போய்
அங்கேயே புகைபிடித்ததாகவும் சிலர் சொல்கிறார்கள். இதையெல்லாம் சொல்கிறவர்கள், இச்செய்கைகள்
முத்துராமலிங்கத்தின் 'பிற்படுத்தப்பட்ட சாதி' சுயத்தை ('பிற்படுத்தப்பட்ட' என்ற
சொல் இந்த வரியில் தான் எவ்வளவு விகாரமாய் பொருள்படுகிறது!!!) காயப்படுத்தியதாகவும்
விளக்கம் சொல்கிறார்கள்.
தாழ்த்தப்பட்ட ஒருவன் தனக்கு முன்னால்
கால்மேல் கால் போட்டு உட்கார்வதா, புகையும் பிடிப்பதா என்று அவர் விசனப்பட்டதாகவும்
சொல்கிறார்கள். இதன் பின், பேச்சுவார்த்தை முடிவில் தனக்கு சமமாக இம்மானுவேல் கையெழுத்திட முடியாது
என்று கொஞ்ச நேரம் முத்துராமலிங்கம் அடம் பிடித்தார் என்பதும் தகவல்.
இந்தத் திராவிட பூமியில், சாதிய
மனோபாவத்தை காயப்படுத்துவதற்கு தூய வெண்ணிற ஆடையை அணிவது, நாற்காலியில்
அமர்வது, அதுவும் அட்டனக்கால் போட்டு அமர்வது, சரிசமமாய் கையெழுத்திடுவது, புகைப்பது போன்ற இயல்பான நடவடிக்கைகளே
போதுமானதாய் இருக்கிறது! இப்படியான சாதாரண நிகழ்வுகளைக் கூடத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான்,
திராவிட சாதிய மேலாண்மை ‘கொலைக் குற்றம்’ செய்யக்கூட
தயாராகி விடுகிறது. வேறேந்தவொரு
பண்பாட்டிலும் இவையெல்லாம் புரட்சிகர நடவடிக்கையாகக் கருதப்படுவதில்லை. ஆனால்,
இவையனைத்தும் சாதி அபிமானிகளைக் கொதித்தெழச் செய்கிறதென்றால் சக்தி
வாய்ந்த வேறு போராட்டங்கள் இருந்து விடுமா என்ன?
முத்துராமலிங்கமும் சரி, அவரைத்
தங்களது ‘குலதெய்வமாகக்’ கருதுபவர்களும்
சரி, பரமக்குடி தேவேந்திரர்களை வன்மத்துடன் பார்த்ததற்கான
காரணமாக ஒன்றே ஒன்றைத் தான் சொல்லத் தோன்றுகிறது. 'அவர்கள் முன்பு போல் இல்லை;
இப்பொழுதெல்லாம் நம்மைப் போலவே அனைத்தையும் திரும்பச் செய்கிறார்கள்!'.
தனக்கு அடுத்துள்ள உயர்சாதியின் நடத்தைகளை
திருப்பிச் செய்து பார்க்கிற வழக்கம் தேவேந்திர சமூகத்தைப் பொறுத்தவரையில் புதியது
அல்ல. வேறு சில தளங்களிலும் அச்சமூகம்
இவ்வாறே எதிர்வினையாற்றுவதை நாம் கவனிக்க முடியும்.
இம்மானுவேல் சேகரனின் படுகொலையைத் தொடர்ந்து நடைபெற்ற சமூக
மோதல்கள், கொலைகள், கலவரங்கள்
அனைத்தும் தேவேந்திரர்கள் செய்த எதிர்வினைகளாகவே உள்ளன. மறவர் செய்த வன்முறைகளை,
அவர்களுக்கு எதிராகத் திரும்பச்செய்து காட்டுகிறார்கள். இது
பரமக்குடியில் மட்டுமல்லாது, அதன் முன்பும் பின்பும்
நடைபெற்ற, இன்றைக்கும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் தென்தமிழக சாதிய அடக்குமுறைகள்
அனைத்திற்குமான பொதுத் தன்மையாகக் காணப்படுகிறது.
பரமக்குடியில் நடைபெற்ற இம்மானுவேல் சாதியப்படுகொலையும்
அதனைத் தொடர்ந்த நிகழ்வுகளும் ஊடகங்களும் அரசும் எதிர்பார்த்தது போல் ஒன்றிரண்டு
வருடங்களில் மக்களின் மனதிலிருந்து மறந்து போய்விடவில்லை. வருடங்கள் செல்லச் செல்ல முத்துராமலிங்கமும்
இம்மானுவேலும் இரு முரண்பட்ட சமூக அடையாளங்களாக உருவெடுக்கத் தொடங்கினர்.
முத்துராமலிங்கத்தின் மரணத்திற்குப் பின் (1963)
அவரது பெயர் 'மறவர்-தேவர்-கள்ளர் என்ற முக்குலத்தோர்' சாதிய உணர்வுகளின் குறியீட்டு
அடையாளமாக மாற்றப்பட்டது. அவரது பிறந்த தினம் குருபூஜை என்று
அறிவிக்கப்பட்டு, முளைப்பாரி, நேர்ச்சை,
தீம்பந்த ஓட்டம், திருவிழா கொண்டாட்டம் என்று
சாதிய விழாவாக உருவெடுத்தது.
முத்துராமலிங்கம் உயிரோடு இருந்த வரை மறவர்
சமூகத்திடமோ அல்லது பிற சகோதர முக்குலத்து சமூகங்களிடமோ திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு செல்வாக்கு எதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், முத்துராமலிங்கத்தை சாதிய பிம்பமாக
வடிவமைக்க விரும்பும் பிற்படுத்தப்பட்ட சாதியொன்றின் யத்தனங்களை அறிந்து கொண்ட
இக்கட்சி, அதனை சாதுர்யமாகப் பயன்படுத்திக்கொள்ளத் தொடங்கியது. 1967ல்
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய திராவிட முன்னேற்ற கழகம், 1968ம் வருடம் ஜூலை மாதம்
உசிலம்பட்டியில் 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரி'யை ஆரம்பித்து, சாதிய
பிம்ப உருவாக்க வரலாற்றில் மிக முக்கிய நகர்வைச் செய்தது.
அடுத்து வரவிருக்கிற கொடூரமான காலத்தை முன்னறிவிப்பது
போல, அதே வருடத்தின் (1968) டிசம்பர் மாதம் 25ம் நாள் கீழ்வெண்மணியில் 44 தாழ்த்தப்பட்ட நபர்கள் உயிரோடு தீவைத்து எரிக்கப்பட்டனர். இச்சம்பவம் நாம் விவாதித்துக் கொண்டிருப்பதோடு நேரடியாய் தொடர்பு கொண்டது
இல்லையென்றாலும், பிற்படுத்தப்பட்ட சாதிகளின்
நலன்களை பாதுகாப்பதை அடித்தளமாகக் கொண்டிருந்த திராவிட முன்னேற்ற கழகம்,
பிற்படுத்தப்பட்ட நலன் என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கு எதிரானது என்ற நிலைப்பாட்டை
நோக்கி நகரத் தொடங்கியது இச்சமயங்களில் வெளிப்படையாய்த் தெரிந்தது.
இதன் மறுபக்கம், தமிழ்
பேசும் எல்லைக்குள், பொருளாதாரத்திலும் மக்கள்தொகையிலும் நலிவுற்ற
சிறுபான்மையினராகவே இருந்து வரும் தாழ்த்தப்பட்ட சமூக மக்கள், இந்திய இறையாண்மையில்
மட்டுமே தங்களுக்கு எதிரான அநியாயங்களுக்கான நிவாரணங்களை வலியுறுத்த முடியும் என்ற
யோசனையில் காங்கிரஸ், கம்யுனிஸ்ட் போன்ற தேசிய கட்சிகளை மட்டுமே நம்பிக்கையோடு
பார்த்திருந்தனர். தாழ்த்தப்பட்ட மக்களின் இச்சந்தேகத்தை இரண்டு திராவிட முன்னேற்ற
கழகங்களும் துல்லியமாக அறிந்திருந்தன.
ஆனால், அதை
மாற்றும் வகையில் தாழ்த்தப்பட்டவர்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கான செயல்களில்
ஈடுபடாமல், தங்களது பிற்படுத்தப்பட்ட சாதிப்பிடிமானத்தை வலுப்படுத்துவதிலேயே அவ்விரு
கட்சிகளும் முனைப்பாய் இருந்தனர். அதன்
வெளிபாடாக, 1971ம் வருடம் 'பசும்பொன் முத்துராமலிங்கத் தேவராக' மாற்றப்பட்ட முத்துராமலிங்கத்தின்
நினைவு நாளை அரசு விழாவாக அறிவித்தனர். 1980ல்
தமிழ் நாட்டு சட்டமன்றத்தில் அவரது ஆளுயர உருவப்படமொன்றை நிறுவினர். மிகச் சமீபத்தில், முத்துராமலிங்க
குருபூஜையில் பயன்படுத்துவதற்காக தங்கக் கவசமொன்றையும் வழங்கியிருந்தனர்.
இதுவெல்லாம் ஒரு
பக்கம் இருக்க, தனது முப்பத்திரண்டாவது வயதில் படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல்
சேகரனும், அதைத் திட்டமிட்டதாகச் சொல்லி கைது செய்யப்பட்ட முத்துராமலிங்கமும்,
தங்களது இறப்பிற்குப் பின்னர், ஆச்சரியப்படும்வகையில் மீண்டுமொரு முறை சந்தித்துக்
கொள்ள நேர்ந்தது. அந்த சந்திப்பு, மிகச்
சரியாக 2007ம் வருடம் நிகழ்ந்தது.
அப்பொழுதே முத்துராமலிங்கம் குருபூஜை கொண்டாடப்படும் பாதிக் கடவுள் நிலையை
எய்தியிருந்தார். இம்மானுவேலோ, தனக்கான
அரசியலைத் தேடிக்கொண்டிருக்கும் பள்ளர் சமூகத்தின் விடிவெள்ளியாகப் பார்க்கப்பட்டிருந்தார்.
1957ம் வருடம்
படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேலின் ஐம்பதாவது நினைவு தினத்தை 2007ல் விமரிசையாய்
கொண்டாடுவதற்கு பள்ளர் சமூகத்தின் பல்வேறு அமைப்புகள் முனைந்து நின்றன. அதே போல், 1907ம் ஆண்டு பிறந்த
முத்துராமலிங்கத்தின் நூறாவது பிறந்த தினத்தை 2007ல் திருவிழாவாகக் கொண்டாடுவது
என்று முக்குலச்சாதி அமைப்புகள் தயாரிப்பு வேலைகளில் இறங்கின. அது
நாள் வரையில், துக்கதினமாகக் கடைப்பிடிக்கப்பட்டிருந்த இம்மானுவேலின் மறைவு தினம்,
2007ல், ஐம்பதாவது வருடம் (பொன்விழா) என்ற சந்தடியில் 'குருபூஜை' என்று அழைக்கலானது.
2007ம் வருடம் முதல், முத்துராமலிங்கத்தின்
குருபூஜையைப் போலவே, இங்கும் முளைப்பாரிகள் தூக்கிச் செல்லப்பட்டன; நேர்ச்சைகள்
செய்யப்பட்டன; தமிழகமெங்கிலிருந்தும் 'ப(ம)ள்ளர் நாடு' போன்ற
முழக்கங்களோடு தேவேந்திரர்கள் பரமக்குடியில் திரளத் தொடங்கினார்கள்; படுகொலை செய்யப்பட்ட இம்மானுவேல் சேகரனின் நினைவு தினம் ஆர்ப்பாட்ட
நிகழ்வாக உருமாறியது.
துக்கம் கொண்டாட்டமாக மாறியதை தர்க்கரீதியாய் விளக்குவதற்கு 'பொன்விழா
துக்கம்' என்ற ஒன்று மட்டுமே காரணமாக நமக்குக் கிடைக்கிறது. ஆனால், 'இம்மானுவேல் துயரம்'
கொண்டாட்டமாக உருவாக முடியாது என்பதற்கு நமக்குக் கூடுதலான பண்பாட்டு நம்பிக்கைகள்
கிடைக்கின்றன.
இம்மானுவேல் குருபூஜையன்று செய்யப்படும் சடங்கு
முறைகள் நாட்டுப்புறச் சமய நம்பிக்கைகளுக்குப் புறம்பானவை என்பதை நம்மால் அறுதியிட்டுச்
சொல்லமுடியும். முளைப்பாரித்தல்,
நேர்ச்சை செய்தல், குருபூஜை போன்ற எந்தவொரு
சடங்கும் படுகொலை செய்யப்பட்டு பின்பு தெய்வமாக்கப்படும் மனிதர்களுக்குச்
செய்யப்படுவதில்லை. படுகொலை
செய்யப்பட்ட பின்பு தெய்வமாக்கல் நிகழுகையில், ‘பலியிடப்பட்ட’ ஆற்றாமையோடு
இருக்கும் சாமிகள் ‘துடியானவை’யாக
இருக்குமென்பதும், அவற்றை சாந்தப்படுத்துவதற்கான சடங்குகளே
அப்பொழுது தேவைப்படும் என்பதும் நாட்டுப்புற நம்பிக்கைகள்.
ஆனால், குருபூஜை என்ற பெயரில் நிகழும்
அனைத்தும் வளமைச்சடங்குகள் என்று அழைக்கப்படுபவை. இவற்றை, இம்மானுவேல்
போன்ற துர்மரணம் தழுவிய ‘துடியான சாமிகள்’ ஏற்றுக்கொண்டு
சாந்தமடைவதில்லை; இதை மக்களும் நன்றாகவே அறிவார்கள். ஆனாலும், 2007ல் 'இம்மானுவேல் துக்கம்' உருமாறியது. இந்த உருமாற்றம் எப்படி நிக்ழந்திருக்கும்
என்று யோசித்தால், ஒரே ஒரு விளக்கத்தைத் தான் நம்மல் சொல்ல முடிகிறது. அது, திராவிட கட்சிகளின் அரசியல் அதிகாரத்தோடு
கட்டப்பட்ட வன்முறையான பிற்படுத்தப்பட்ட சாதிய பிம்பத்திற்கு எதிரான தாழ்த்தப்பட்ட
சாதிகளின் அரசியல் செயல்பாடு என்பது மட்டுமே. தங்களுக்கான நியாயங்களை எந்தத்
தளத்திலும் முன்வைக்க முடிந்திராத தாழ்த்தப்பட்டவர்கள் இறுதியிலும் இறுதியாக நேரடி
மோதலுக்குத் தயாராகிறார்கள். இந்த மோதலின்
ஒரு வகையாகவே திரும்பச்செய்தல் காணப்படுகிறது. தன்னை ஒடுக்கிக்கொண்டிருக்கும்
உயர்சாதியின் நடத்தையை அப்படியே திரும்பச்செய்வதன் மூலம் (அது எவ்வளவு தான்
பிற்போக்குத்தனமாக இருந்தாலும் சரி! நிறைய
நேரங்களில் அப்படித்தான் இருக்கிறது) ஒடுக்குமுறைக்கு எதிரான அரசியலொன்றை வடிவமைக்கிறது.
அந்த வகையில், 'பசும்பொன்
முத்துராமலிங்கத் தேவர்' என்று கட்டப்படும் பிற்படுத்தப்பட்ட சாதி பிம்பத்திற்கு
எதிரான கலகமாகவே, இம்மானுவேல் குருபூஜை முன்னெடுக்கப்பட்டிருக்கிறது.
மானிடவியலாளர்கள் ‘போலச்செய்தலை’ பெருஞ்சமூகத்துடன்
கருத்தொருமித்து இணங்கிப் போகும் நடவடிக்கை என்று விளக்கமளித்து, இவ்வாறு செய்வதன் மூலம் ஒடுக்கப்பட்ட மக்கள் தங்களை சாதிய வட்டத்திற்குள்
பொருத்திக் கொள்ள முயற்சிக்கிறார்கள்; சாதிய சமூகத்துடன்
சமரசம் செய்து கொள்ள முயற்சிக்கிறார்கள் என்று கட்டுரைகளும் புத்தகங்களும்
எழுதிக்கொண்டிருக்கும் சமயத்தில், தேவேந்திர சமூகத்தின் இந்தத் ‘திரும்பச்செய்தல்’ முற்றிலும்
வேறான பரிமாணமொன்றை நமக்கு வெளிப்படுத்துகிறது.
தேவேந்திரர்களின் இதே போன்ற
திரும்பச்செய்தலுக்கு இன்னுமொரு சான்றும் நமக்குக் கிடைக்கிறது. அது, கடந்த இருபது
வருடங்களாக அவர்கள் செய்து வரும் ‘மள்ளர்’ என்ற வரலாற்றுக் கட்டமைப்பாகும். தேவஆசிர்வாதம், குருசாமிசித்தர், தே.ஞானசேகரன்
போன்றவர்கள் முன்னின்று செய்த ‘மள்ளர்’ என்ற
வரலாற்றுக் கட்டமைப்பு, தமிழின் சாதி தோய்ந்த வரலாற்று
எழுதியலின் மீது நிகழ்த்தப்பட்ட இன்னொரு கலகம்!
பத்தொன்பதாம் நூற்றாண்டில் அச்சுக்குக்
கொண்டுவரப்பட்ட செவ்விலக்கியப் பிரதிகளை முறையான ஆய்விற்கு உட்படுத்தாமல் (ஏன்
விளங்கிக்கொள்ளவே இல்லாமல்) அவற்றை தத்தமது சாதிய மேலாண்மையை
வலுப்படுத்துவதற்கான ஆதாரங்களாக மாற்றுவதையே வரலாற்று எழுதியல் என்று பிராமணர்கள்
தொடங்கி சகல சாதியினரும் 'தமிழக வரலாறு' என்ற பெயரில் எழுதிவந்த வேடிக்கை
உலகப்பிரசித்தம். இதனைத் தலைகீழாக்கிக் கேலி செய்வது போலவே,
தமிழிலக்கியப் பிரதிகளில் ‘ப’ என்ற
ஒற்றை எழுத்தை ‘ம’ என்று மாற்ற முடியுமானால், தமிழக வரலாறே மாறிப் போகிறது என்று தேவேந்திரர்கள் நிரூபித்துக்
காட்டினார்கள். இதற்காக,
அவர்கள் கையாண்ட உத்தி, அதே ‘திரும்பச்செய்தல்’ தான்.
சாதிய வரலாறுகள் எவ்வாறு எழுதப்பட்டனவோ
அதே ‘முறையியல்களையே’ இவர்களும் கையாண்டார்கள்; அதே
‘ஆதாரங்களையே’ இவர்களும் பயன்படுத்திக் கொண்டார்கள்; அதே 'கருத்தியலையே' இவர்களும் முன்வைத்தார்கள். வழக்கம் போல, தமிழக சாதிய சமூகங்கள்
இவர்களின் 'வரலாற்று மீட்டுருவாக்கம்' குறித்து பதட்டமடையத் தொடங்கின.
**********
தேவேந்திரர்களின் இத்தகைய நடவடிக்கைகளை, 'ஒடுக்கப்பட்ட
சாதிகளின் இன்னுமொரு மேல்நிலையாக்க முயற்சி' என்ற அர்த்தத்தில் விளக்கும் போக்கும்
காணப்படுகிறது. தாழ்த்தப்பட்ட 'பலியாடு' (இம்மானுவேல் துக்கம்)
நிலையிலிருந்து உயர்சாதி 'கொண்டாட்ட' (குருபூஜை) மனநிலைக்கு
'சமஸ்கிருதவயமாகிறார்கள்' என்பதாக அந்த விளக்கம் அமைகிறது. இப்படி விளக்குவது ஒரு வகையில் எளிதாக இருக்கிறது;
அப்படியே பொருந்துவது போலவும் தெரிகிறது.
ஆனால், அது இந்தச் சமூக நகர்வை முழுமையாக விளக்குகிறதா என்றால் இல்லை என்று
தான் சொல்லவேண்டும்.
ஒரு ஒடுக்கப்பட்ட சாதி தனது குலதெய்வத்தை
'சைவப்படையல்' கொண்ட தெய்வமாக மாற்றுகையிலோ, அத்தெய்வத்தின் கோவிலை விரிவுபடுத்தி ஆகம
விதிகளின் படி அதற்கு கும்பாபிசேகம் செய்கையிலோ, பிராமண பூசகர்களை அழைத்துத் தனது
வாழ்க்கை வட்டச் சடங்குகளைச் செய்கையிலோ, உயர் சாதியினர் (பிராமணரால்) அத்தகைய முயற்சிகளை
உற்சாகப்படுத்தவே செய்கின்றனர். ஆனால், அதே
தாழ்த்தப்பட்டவர் தானும் பிராமணர்களைப் போல பூசகராக மாறி மந்திரங்களைச் சொல்ல விரும்புகிறேன்
என்று கோரிக்கை விடுக்கும் பொழுது, அது கலகமாகப் பார்க்கப் படுகிறது.
இம்மானுவேல் சேகரனின் நினைவு தினத்தை துக்கத்தோடு
கழிப்பதற்கு உயர்சாதியினர் பெருந்தன்மையோடு அனுமதி வழங்குகிறார்கள். ஆனால், அந்தத் துக்கத்தை கொண்டாட்டமாக மாற்றுகையில்
மட்டுமே அவர்களிடம் பதட்டம் உருவாகுகிறது.
'என் தம்பி பாப்பான்' என்றொரு சாதித் தோற்றத் தொன்மத்தைக் கட்டமைக்கையில் அது
குறித்து மகிழவே மகிழும் உயர்சாதி, 'பிராமணர் போடுவது வேஷம்' என்று மாற்றுத்
தொன்மத்தை உருவாக்குகையில் அதனை மௌனத்தாலேயே கொல்கிறது.
சுருக்கமாகச் சொல்வதானால் இப்படிச்
சொல்லலாம்: தாழ்த்தப்பட்டவர்களின் போலச்செய்தலை ஊக்குவிக்கும் உயர்சாதி, அவர்களின்
திரும்பச்செய்தலை விரோதமாய் பார்க்கிறது.
அப்படியானால், போலச்செய்வதலுக்கும் திரும்பச்செய்தலுக்குமான வேறுபாடுகள்
யாவை?
(தொடரும்)
Comments
//சுருக்கமாகச் சொல்வதானால் இப்படிச் சொல்லலாம்: தாழ்த்தப்பட்டவர்களின் போலச்செய்தலை ஊக்குவிக்கும் உயர்சாதி, அவர்களின் திரும்பச்செய்தலை விரோதமாய் பார்க்கிறது. அப்படியானால், போலச்செய்வதலுக்கும் திரும்பச்செய்தலுக்குமான வேறுபாடுகள் யாவை?//
தனக்கு அடுத்த அல்லது கீழான படிநிலையில் உள்ளவர்களின் 'போலச்செய்தல்' சாதியக் கட்டுமானத்திற்கு உரம் சேர்க்கும் செயலாக 'மேல்' சாதியினரால் பார்க்கப்படுகிறது. ஆனால் 'திரும்பச்செய்தல்' அந்தக் கட்டுமானத்தை கேள்விக்குள்ளாக்குகிறது. இவ்வாறு புரிந்துகொள்கிறேன்.
நான் அ மார்க்சின் அயோத்தி தாசர் குறித்த கீழ்வரும் கருத்தினை விளங்கிக்கொள்ள விரும்புகிறேன்.
//ஆனானப்பட்ட அறிஞர் அயோத்திதாசப் பண்டிதரே இதற்கு விதி விலக்காக இல்லையே. நமது சாதி முறையில் பறையர்களுக்குக் கீழாக அருந்ததியர் உள்ள நிலையை ஏற்றதோடு பறையர் அருந்ததியர் மீது கடைபிடிக்கும் தீண்டாமையை ஏற்றுக்கொண்டு அங்கீகரித்தாரே.//
நன்றி
பெ. பாலமணிதாஸ்
பெ. பாலமணிதாஸ்
நான் அ மார்க்சின் இந்தப் பதிவில் இருந்து மேற்கோள் காட்டியிருந்தேன். குழப்பம் ஏற்படும்படி எழுதியிருப்பின் மன்னிக்கவும்.
http://amarx.org/?p=838