பாரதப் பிரதமர் நரேந்திர மோடி கீழடிக்கு வருகிறார் என்றொரு செய்தி வந்தால் ஆச்சரியப்படுவீர்க்ளா? நான் படமாட்டேன். அவர் ஒருவிளம்பரப்பிரியர் என்பதாலா? அது மட்டுமல்ல, கீழடியும் சுற்றுலாத்தலமாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதாலும்.
ஒரு வலதுசாரி பிரதமருக்கு, வெகுஜன பிம்பத்தை பூதாகரமாய் பெருக்குவதற்கு நல்ல புகைப்படங்களும், அப்புகைப்படங்களுக்குகவர்ச்சிகரமான நிலக்காட்சிகளும் தேவைப்படுகின்றன என்பதை என்னால் விளங்கிக் கொள்ள முடிகிறது. எனது கேள்வியெல்லாம், நாம் ஏன்கீழடியை உடனடியாக சுற்றுலாத்தளமாக மாற்ற விரும்புகிறோம்.
வரலாற்றின் அசைவியக்கம் பற்றி பேசுகிற ஃப்ரெஞ்ச் வரலாற்றறிஞர் பியர் நோரா திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தைக் குறிப்பிடுகிறார் - நினைவிடங்கள். Les Leux de Memoire என்று ஃப்ரெஞ்சில் எழுதுவதை நான் இப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.
நினைவிடங்களை நிர்மாணிப்பதே வரலாற்றின் அடிப்படையான நோக்கம். அது ஒரு சமூகத்தின், பண்பாட்டின் ஞாபகங்களை கண்ணுக்குத்தெரியும் வகையில் ஓரிடத்தில் குவித்து வைக்கத் தொடங்குகிறது. அது புத்தகமாக இருக்கலாம்; கல்வெட்டுகளாக இருக்கலாம்; கற்படுகைகள், சமாதிகள், கோட்டை கொத்தளங்கள்…என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். கீழடியை நாம் ஏறக்குறைய அப்படியொருநினைவிடமாக மாற்றத் தொடங்கியிருக்கிறோம்.
நினைவிடமாக மாற்றப்படுவதற்கான அத்தனை லட்சணங்களும் கீழடிக்கு உண்டு. ஆனால், முதலில் அது என்னனென்ன ஞாபகங்களைக்கொண்டிருக்கிறது என்பதை நீங்கள் விசாரிக்க வேண்டும். அதற்கு முன்பே அதை நினைவிடமாக மாற்றும் கந்தரகோலத்தை ஏன் செய்கிறோம்என்பது தான் கேள்வி.
இது ஒரு எளிய கேள்வி என்றாலும், இதற்கு சொல்லப்படும் பதில் சிடுக்குகள் நிறைந்த, ‘குற்றச்சாட்டுகளின் நீண்ட பட்டியல்’. தமிழ்க்கலாச்சார மேன்மைகளை இந்திய இறையாண்மை அங்கீகரிப்பது இல்லை; ஆரியர்களின் மேலாண்மைக்காக திராவிடச் சுவடுகள் திட்டமிட்டுமறைக்கப்படுகின்றன; மத்தியத் தொல்லியல் துறை காழ்ப்புணர்ச்சிகளுடன் செயல்படுகிறது; தமிழ் மரபுகளை ஆய்வு செய்வதற்கான நிதிஆதாரங்கள் வழங்கப்படுவது இல்லை; இந்துத்துவத்திற்கு மாற்றான பண்பாட்டுச் செயல்பாடுகளை நசுக்கும் வலதுசாரித்தனம்; பிராமணர்களின்நலனைக் காப்பதற்கான ‘ஒற்றைப் பண்பாடு’ என்ற கொள்கையின் எதேச்சதிகாரம்; தமிழர்கள் இறையாண்மைக்கு எதிராகத் திரும்பிவிடுவார்கள் என்ற இந்திய பயம்.
இவை குற்றச்சாட்டுகள் மட்டும் அல்ல, தமிழக வெகுஜன அரசியலை தீர்மானிக்கும் காரணிகளும் கூட. எனவே, இதில் அறிவியல்பூர்வமானதர்க்க நியாயங்களைத் தேடிக் கொண்டிருக்க வேண்டியது இல்லை. இப்பட்டியலை வாசிப்பவர்களும் சரி, அதற்கு எதிர்பாட்டுப்பாடுகிறவர்களும் சரி உணர்ச்சிகளாலும் லாப நோக்கங்களாலும் உந்தப்பட்டவர்கள். சிலருக்கு வணிகக் காரணங்கள், சிலருக்கு அதிகாரக்காரணங்கள். இவை அனைத்தும் சங்கமிக்கும் மையப்புள்ளி, இந்திய இறையாண்மையின் சர்வாதிகாரத்தன்மை. இன்றைய யதார்த்தமானவலதுசாரி சிந்தனை மட்டுமல்ல, நேற்றைய சோசலிச இந்திய இறையாண்மையும் கூட ‘தமிழ்’ குறித்து இதே சர்வாதிகாரத்தோடே செயல்பட்டுவந்தது என்பது ஒட்டுமொத்த குற்றச்சாட்டும்.
சுதந்திரமடைந்த காலத்திலிருந்து இது தான் தமிழக அரசியலை இயக்கிக் கொண்டிருக்கிறது. ஆனால், வேறு வேறு வடிவங்களில். திராவிடஇயக்கங்கள், மீண்டும் மீண்டும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் பிராமண எதிர்ப்பு, சுயமரியாதை, நாத்திகம், திராவிட அடையாளம் என்றஅத்தனை வெகுஜன பேச்சுகளுக்கும் பின்னால் இந்திய இறையாண்மை மீதான அவநம்பிக்கையே மறைந்திருக்கிறது.
ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இறையாண்மைக்கு எதிரான எந்தவொரு அசைவும் ‘பிரிவினைவாதம்’ என்று முத்திரை குத்தப்பட்டதால், திராவிடஇயக்கங்களின் அரசியல் உரையாடல்கள் வலுக்கட்டாயமாய் பண்பாட்டு அரசியல் உரையாடல்களாக மடைமாற்றம் செய்யப்பட்டன. அரசியலுக்கும் பண்பாட்டு அரசியலுக்கும் என்ன வேறுபாடு என்ற விவாதத்திற்குள் சென்றால் அதுவொரு கேலிகூத்து என்று விளங்கி விடும். அதனால், அது உருவாக்கிய எதிர் விளைவுகளைக் கவனப்படுத்துவோம்.
பண்பாட்டு அரசியல், அரசியலை பாதித்ததை விடவும் ஆய்வுகளில் தான் அதிக சேதாரங்களை ஏற்படுத்தியது. ஒரு உதாரணத்திற்குதமிழிலக்கியச் சூழலை எடுத்துக் கொள்ளுங்கள். யார் இலக்கியலாளர், யார் அரசியலாளர் என்ற குழப்பம் தோன்றுகிறதா? நமக்கு எல்லாஅறிஞர்களும் அரசியல்வாதிகளாக இருந்தார்கள், தலைகீழாகவும் இருந்தார்கள். வெகுஜன அரசியலுக்கு இதை விட உத்தமமானக் காரியம்இருக்க முடியாது. ஆனால், அறிவியல் சூழலுக்கு. ஒரு துயரமானக் கருத்துக் கணிப்பின்படி, தமிழகம் குறித்த எந்தவொரு பண்பாட்டு அறிவியல்ஆதாரத்திற்கும் நாம் மேற்கத்திய உலகையே நம்ப வேண்டிவந்தது. ஏனெனில், நம்மிடம் இருப்பது அனைத்தும் விதந்தோதுவதும், ஊதிப்பெருக்குவதுமே. தமிழில் பண்பாட்டு ஆய்வுகள் வளராமல் போனதற்கு இதுவே ஆகப்பெரிய காரணம்.
சங்க இலக்கியம் என்ற மாபெரும் வரலாற்றுத் தரவிலிருந்து நாம் அறிவியல்பூர்வமாய் பெற்றுக் கொண்ட விஷயங்கள் என்ன என்பதை கொஞ்சம்யோசித்துப் பாருங்கள். இன்றைக்கு சங்க இலக்கியம் ஒரு ‘நினைவிடமாகப்’ போற்றப்படுகிறது என்றால், அதன் நினைவுகளைவடிவமைத்தவர்கள் யார் என்று கேட்டுப் பாருங்கள். திராவிட அரசியல்வாதிகள்! அதனால் தான் அந்த வரலாற்றுத்தரவு பெருமிதங்களைமட்டுமே வாரி வழங்கிக் கொண்டிருக்கிறது.
இது, ஏதோ ஒரு முறை நடந்த சீர்கேடு மட்டுமல்ல. இது, தமிழர்களின் அடிப்படையானக் கோளாறு. அதனால் தான் இன்றைக்குக் கீழடியிலும்அது தொடர்கிறது.
கீழடி தரக்கூடிய தொல்லியல் சான்றுகளை உள்வாங்கிக் கொள்வதற்கு வெகுஜன பண்பாட்டு அரசியல் மட்டும் போதாது. அதே போல, தொல்லியல் மாதிரியான இயந்திரத்தனமான அறிவியலாலும் கூட அதனை முழுமையாக விளக்கி விட முடியாது. கீழடி, ஆதிச்ச நல்லூர்மாதிரியான சான்றுகள் ஏற்கனவே சொல்லப்பட்டவைகளை மீறக்கூடிய மனப்பான்மையையே அறிவியலில் வேண்டுகின்றன. Decolonisation என்று ஆங்கிலத்தில் சுருக்கமாகச் சொல்லிவிடுகிறார்கள். திராவிட - ஆரிய முரண் என்ற கற்பனை அவற்றுள் ஒன்று. தமிழி என்பதுஇன்னொன்று. இப்படி, நிறுவப்பட்ட கருதுகோள்களிலிருந்து விடுபட்டு சிந்திக்கிற மனங்களே நமது இன்றைய தேவை.
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கீழடியில் நமக்குக் கிடைப்பது, நகரம் அல்ல; நகரத்தின் இடிபாடுகள். அதாவது, ஏதோவொருநூற்றாண்டில் வாழ்ந்து, பின் பாழடைந்து போன நகரம். வாழ்ந்த நகரம் எவ்வாறு சுவடுகளை விட்டுச் செல்கிறதோ அதே போல பாழடைந்தநகரங்களும் சுவடுகளை விட்டுச் செல்கின்றன. வாழ் சுவடுகளும், பாழ் சுவடுகளும் வேறு வேறான சமூகப் பின்புலங்களிலிருந்துஉருவாகுகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
ஒரு தொல்லியல் சான்றிலிருந்து நான் கற்பனை செய்யக்கூடிய ‘மக்கள்’ உயிரோட்டமுள்ள நகரத்தில் வாழ்ந்தவர்களா அல்லது பாழடைந்தநகரில் தஞ்சமடைந்த மக்களா என்பது உங்கள் ஆய்வின் திசையையே மாற்றியமைக்கக்கூடியது. இரண்டு பேரும் வெவ்வேறு வர்க்கபின்னணியைக் கொண்டவர்கள் என்பதை உங்களால் உணர முடிகிறதா? இப்பொழுது, கீழடியில் கிடைத்த பானையோட்டுக் கீறல்கள் எந்தமக்களுடைய சுவடுகள் என்று நீங்கள் தீர்மானிப்பீர்கள்? அந்தப் பானையை புதிதாய் பயன்படுத்தி, பின் வீசி எறிந்த மக்களின் சுவடா அல்லதுவீசப்பட்ட குப்பையைப் பயன்படுத்தி வாழ்ந்த மக்களின் சுவடா?
கீழடி மாதிரியான தொல்லியல் சான்றுகள் பாழ் சுவடுகள் என்பதை முதலில் உணர வேண்டும். இந்தப் பாழ்சுவடுகள் தரும் செய்திகள்நிச்சயமாய் நாம் கற்பனை செய்கிற நாகரீகம் பற்றிய நேரடியான செய்திகள் அல்ல. ஒரு நகரத்தின் குப்பை மேட்டில் நிற்பது போலக் கற்பனைசெய்யுங்கள். அந்தக் குப்பைமேட்டைக் கொண்டு அதன் வாழ்க்கை முறையை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா என்பது தான் கீழடிஎழுப்பும் சவால்.
இதைத் தொல்லியல் என்ற ஒற்றை அறிவியல் செய்து விடும் என்பது அதிகப்படியான நம்பிக்கை. இதற்காகப் பல்வேறு அறிவியலாளர்களின்கூட்டமைப்பு ஒன்று தேவைப்படுகிறது. அந்தக் கூட்டமைப்பு வெகுஜன அரசியலுக்கு அப்பாலிருக்க வேண்டும் என்பது மிக முக்கியம். அரசும்அரசின் இறையாண்மையும் இதை வெகுதூரத்திலிருந்து மட்டுமே கண்காணிக்க வேண்டும் என்பது மிக மிக முக்கியம்.
கீழடி போன்ற தடயக் குவியல்கள் இதைத் தான் நம்மிடமிருந்து எதிர்பார்க்கின்றன. இதை நம்மால் செய்ய முடியவில்லை என்றால், கிமு 6ம்நூற்றாண்டுக் கீழடியில் நாகரீக தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பது கூட நிரூபிக்கப்படலாம், ஆனால், அவர்களின் வழிவந்தவகளே நாம் என்பதுநிரூபணம் ஆகாது.
Comments