Skip to main content

கொரோனா - பீதி வரும் முன்னே, நோய் வரும் பின்னே!


25-03-2020

1
கொரோனா பதட்டத்திற்கானக் காரணம் என்ன?
சிலர், அலோபதியில் இதற்கு மருந்துகள் இல்லை என்பதே காரணம் என்கின்றனர். உண்மை. 

ஆனால், கொரோனா தொற்று பரவிய நபரின் உயிரை தங்களால் இன்னமும் காப்பாற்ற முடியும் என்றே அலோபதி சொல்லிக் கொண்டிருக்கிறது. அது, ஓரளவு உண்மையும் கூட. அவர்களது உபகரணங்களைக் கொண்டு கொரோனா விளைவிக்கும் ஆபத்துகளை சரி செய்ய முடியும். 

ஆனால், கொரோனா கிளப்பியுள்ள பீதி அது குறித்தது அல்ல. கொரோனா தொற்று எனக்கு ஏற்படாமல் இருக்க அலோபதியில் ஏதாவது வழிமுறைகள் இருக்கிறதா என்பதே எல்லா மனிதர்களின் கேள்வியும்.


அலோபதி மருத்துவ முறைகளால் நிச்சயமாய் உலகிலுள்ள அனைவரையும் காப்பாற்றி விட முடியாது, ஏனெனில், அப்படியொரு கட்டுமான வசதி எந்த நாட்டிலும் இல்லை.
அப்படியென்றால், பிரச்சினை அலோபதியின் அறிவியல் தன்மையில் இல்லை, அதன் வார்ப்பில் இருக்கிறது. 

அலோபதி கடந்து ஒரு நூற்றாண்டு காலமாக தன்னை முதலீட்டியத்தின் செல்லப்பிள்ளையாக நினைத்தே வளர்ந்திருக்கிறது. அதன் கறாரான நிறுவனக் கட்டமைப்பு, சொற்பமான செல்வந்தர்களின் உயிர்காப்பானாக மட்டுமே அதனை மாற்றியமைத்திருக்கிறது.
அலோபதியின் சிகிச்சை முறைகளுக்கும், நோய்த்தடுப்பு முறைகளுக்கும் பெருத்த வேறுபாடுகள் உள்ளன. அதன் சிகிச்சை முறைகள் கொடூர மேட்டிமைவாதம் பேசுபவை (இந்தியச் சூழலில் ‘பார்ப்பனியம்’ என்று சொல்லலாம்). 

அதன், நோய்த்தடுப்பு முறைகள் மட்டுமே ஜனநாயகக் குணமுடையவை. அம்மை நோய்க்கான தடுப்பூசி ஒரு சிறந்த உதாரணம். தற்போதைய கொரோனா பீதிக்குக் காரணம், அலோபதியில் தடுப்பூசிகள் இல்லை என்பதே.

2
இதுவொரு சிக்கலான அரசியல் சூழலைத் தோற்றுவித்திருக்கிறது. நவீனத்துவம் முன்மொழிந்த நம்பிக்கைகளில் ஒன்றான அலோபதி மருத்துவம் வீழ்ந்து கொண்டிருப்பதை நாம் கடந்த இருபது வருடங்களாகவே அனுபவித்து வருகிறோம்.

முதல் வீழ்ச்சியை முதலீட்டியம் மீதான அதன் காமம் கொண்டு வந்தது என்றால் இரண்டாவது வீழ்ச்சியை அதன் நடைமுறைத் தோல்விகள் எழுதத் தொடங்கின.
அலோபதி வீழ்ந்த கதையில் அது ஏற்படுத்தும் பின்விளைவுகள் ஒரு முக்கியமான கதாபாத்திரம். அதே போல், அது தொடர்பாக எழுப்பப்பட்டுள்ள பிரம்மாண்ட பொய்யும் இன்னொரு காரணம். புதிய நோய்களின் வருகையின் போது அந்தப் பொய் வெலவெலத்துப் போகிறது.
நவீனத்துவத்தின் இந்த வீழ்ச்சியின் வெளிப்பாடாகவே, மாற்று மருத்துவத்திற்கு ஆதரவானக் குரல்களை கடந்த இருபது முப்பது வருடங்களாக நாம் கேட்டுக் கொண்டிருப்பது.

நோய் மனித இனத்திற்குப் புதிது அல்ல. கொத்து கொத்தாய் செத்து மடிந்த வரலாற்றுப் பதிவுகள் உண்டு. ஆனால், ஒவ்வொரு முறையும், நோயின் உடல் சார்ந்த பிரச்சினைகளை மட்டுமே மருத்துவத்தால் தீர்க்க முடிந்திருக்கிறது. 

அது அலோபதி என்றாலும் சரி, அல்லது வேறு மாற்று மருத்துவங்கள் என்றாலும் சரி. ஆனால், நோய் உருவாக்குகிற சமூகப் பதட்டம் என்று ஒன்றிருக்கிறது. அதை காலம்காலமாக ‘மூடநம்பிக்கைகள்’ மட்டுமே தணித்திருக்கின்றன.

3
இன்றைக்கு, கொரோனா தொற்று நோயை முன்னிட்டு நாமொரு வித்தியாசமான சூழலை சந்திக்கிறோம். இந்தச் சூழலில் நம்மை சமூகப் பதட்டமே முதலில் தாக்குகிறது; உடல் ரீதியிலான பிரச்சினைகள் வந்து விடக்கூடும் என்ற அச்சுறுத்தலை மட்டுமே நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருக்கிறோம்.
நோய் பற்றிய கற்பனைகள் மட்டுமே நமக்கு வழங்கப்படுகின்றன. அதன் கொடூரத்தை நீங்கள் உங்கள் வசதிப்படி கற்பனை செய்து கொள்ளலாம். அதாவது, நோய் கட்புலன் சார்ந்து வருவதற்கு முன் கற்பனையாய் உங்களைத் தாக்கத் தொடங்குகிறது. ‘மெய்நிகர் நோயுற்ற’ உலகமொன்றினுள் நாம் வாழ ஆரம்பிக்கிறோம்.
இந்தக் கற்பனை உலகை நிர்மாணிக்க நமக்குத் திரைப்படங்களே பெரிதும் துணை செய்கின்றன. இரண்டு உலகப்போர்கள் பற்றிய திரைப்படங்களும், வேற்றுக்கிரகவாசிகள் பற்றிய திரைப்படங்களும். போர்ச் சூழல் இல்லையே தவிர, வேற்றுக்கிரகவாசிகள் வரவில்லையே தவிர ஊரடங்கு உத்தரவு, எல்லைகளை மூடல், தீவிரமான கண்காணிப்பிற்கு உட்படுதல் என்று மற்ற சமாச்சாரங்கள் அனைத்தும் உண்மை. 

அதாவது, அத்திரைப்படங்களில் வரக்கூடிய வில்லன் கதாபாத்திரம் மட்டும் இன்னும் வரவில்லை. ஆனால், அது அழிவை ஏற்படுத்தப்போவதாக நம்பி நாம் அடுத்தடுத்த காட்சிகளை வாழத் தொடங்கிவிட்டோம்.
எல்லா வில்லத்தனங்களும் ஏதாவது ஒரு அழிவை ஏற்படுத்துவதன் மூலமே தன்னை ஸ்தாபித்துக் கொள்கிறது. நமது கொரோனா கதையில், அந்த அழிவு வருவதற்கு முன்பே அது வந்ததைப் போல வாழத் தொடங்கி விட்டோம். வில்லன் நிஜ அழிவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவசியமே இல்லாத வகையில், அப்படியொரு கற்பனை அழிவை நாமே நிர்மாணித்துக் கொண்டோம்.

வேறெந்த சமயத்தில் சொல்லியிருந்தாலும் நாம் பிடிவாதமாய் மறுத்திருக்கக்கூடிய ஊரடங்கு உத்தரவு, கருத்துச் சுதந்திர தணிக்கை, தனித்திருத்தல், ராணுவக் கட்டுப்பாடு போன்ற பல்வேறு அடக்குமுறைகளை இன்றைக்கு நாமே எல்லோருக்கும் பரிந்துரைக்கிறோம். 

இதை மேலும் சிக்கலாக்குவது என்ன என்றால், இத்தனையையும் நாம் ‘வரும்முன்’ காக்கும் நடவடிக்கையாகச் செய்கிறோம் என்பது தான்.




































Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக