ஞானியின் மறைவை கோவையிலிருந்து கந்த சுப்பிரமணியம் தெரிவித்த போது துணுக்கென்றிருந்தது.
ஞானியைப் பார்க்கவும் பேசவும் எனக்குப் பிடிக்கும். அவருக்கும் பேராசிரியர் தே. லூர்துவிற்கும் ஒரே முகம் என்று தோன்றுவதுண்டு. இரண்டு பேரும் கடைசி காலங்களில் கண்பார்வை இழந்து துயரப்பட்டவர்கள். புத்தகங்களை வாசிக்க முடியவில்லையே என்ற துயரம். ஆனால், இரண்டு பேரும் புத்தகங்களோடும் அதை வாசிப்பதற்கான இளைஞர்களோடுமே இறுதி வரை வாழ்ந்தனர்.
ஞானியை என்னைப் போன்ற பலருக்கும் ‘நிகழ்’ மூலம் தான் பரிச்சயம். அவரையும், எஸ். என். நாகராஜனையும், எஸ். வி. ராஜதுரையையும் பதின்ம வயதில் பயபக்தியோடு பார்த்திருக்கிறேன். 1988ல் எஸ். வி. ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் எனது சிறுகதை (அன்புள்ள தாத்தா பாட்டிக்கு) வெளிவந்த போது ஞானியோடு நேரடி பரிச்சயம் ஏற்பட்டது. அதன் பின், ‘அஸ்வமேதா’ சிற்றிதழைக் கொண்டு வந்த போது, அது குறித்த குதூகலங்களை வெளிப்படுத்தி தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்.
ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், முழங்கையைப் பற்றிக் கொண்டு தான் பேசுவார். அதில் கிடைக்கும் ஆதூரத்தை நான் வேறு யாரிடமும் உணர்ந்ததில்லை. 1994ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது ‘தண்டனைகளின் காலம்’ என்ற சிறுகதையை நிகழில் இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டார். அது, அவர் எனக்கு வழங்கிய பெரிய மரியாதை. இரண்டு வருடங்களுக்குப் பின் கோவையில் அவரைச் சந்தித்த போது, என்னை நன்றி சொல்லக்கூட அனுமதிக்காமல், அச்சிறுகதையில் இராவணன் மீது எழுதியிருந்த ஒரு வார்த்தையை நீக்க வேண்டி வந்த துயரத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார். இந்த மனிதர் ஏன் நம் மீது இத்தனைப் பிரியமாக இருக்கிறார் என்றே எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றியது. ஆனால், அவர் இளைஞர்கள் அத்தனை பேர் மீதும் அக்கறையோடிருந்தார் என்பதே உண்மை. 2003ல் ‘நான் பூர்வ பெளத்தன்’ வெளியாகி, பல திசைகளிலிருந்தும் அதற்குக் கண்டனங்கள் வந்த போது, முதலில் வந்த ஆறுதலான குரல் ஞானியுடையது.
தமிழ்ச் சிந்தனையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அபரிதமானது. குறிப்பாக, மார்க்சியத்தை தமிழ் தேசியத்தோடு யோசிக்க வேண்டிய தேவையை அவரே இங்கு அறிமுகப்படுத்தினார்; செழுமைப்படுத்தினார். அந்த வகையில், அயோத்திதாசரிடம் வெளிப்படும் தமிழ் அடையாளச் சிந்தனைகளிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார்.
நாட்டுப்புறக்கதைகளில் ஆய்வு செய்யப் போனாலும், தொல்காப்பியத்தையும் பழந்தமிழ் நூற்களையும் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதற்கு கோவை ஞானியின் தமிழியல் சிந்தனைகளும் ஒரு காரணம். நிகழில் அவர் வெளியிட்ட கட்டுரைகள் அந்நாட்களில் எங்களைப் போன்றவர்களுக்கு பாட நூற்களைப் போலப் பயன்பட்டன.
கடைசியாக, சென்ற வருடம், கோவையில் சந்தித்த போது, எடுத்த எடுப்பில், ’நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்று சொல்வது ஏன் என்றே கேட்டார். அடுத்திருந்த இரண்டு மணி நேரமும் இதைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தோம். அவரோடு நடந்த ஒவ்வொரு சந்திப்பிலும் நான் தான் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன். அவர் ஏன் அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார், நான் ஏன் அப்படி பேசிக் கொண்டிருந்தேன் என்று எனக்குப் புரிவதில்லை. பேசி முடிந்து விடை பெறும் போது, ‘நிகழில் வெளியான ‘தண்டனைகளின் காலம்’ மிகச் சிறந்த தலித் சிறுகதை’ என்றார்.
Comments