Skip to main content

வெண் ஞானி

ஞானியின் மறைவை கோவையிலிருந்து கந்த சுப்பிரமணியம் தெரிவித்த போது துணுக்கென்றிருந்தது.



ஞானியைப் பார்க்கவும் பேசவும் எனக்குப் பிடிக்கும்.  அவருக்கும் பேராசிரியர் தே. லூர்துவிற்கும் ஒரே முகம் என்று தோன்றுவதுண்டு.  இரண்டு பேரும் கடைசி காலங்களில் கண்பார்வை இழந்து துயரப்பட்டவர்கள்.  புத்தகங்களை வாசிக்க முடியவில்லையே என்ற துயரம்.  ஆனால், இரண்டு பேரும் புத்தகங்களோடும் அதை வாசிப்பதற்கான இளைஞர்களோடுமே இறுதி வரை வாழ்ந்தனர்.


ஞானியை என்னைப் போன்ற பலருக்கும் ‘நிகழ்’ மூலம் தான் பரிச்சயம்.  அவரையும், எஸ். என். நாகராஜனையும், எஸ். வி. ராஜதுரையையும் பதின்ம வயதில் பயபக்தியோடு பார்த்திருக்கிறேன்.  1988ல் எஸ். வி. ராஜதுரை நடத்திய ‘இனி’ இதழில் எனது சிறுகதை (அன்புள்ள தாத்தா பாட்டிக்கு) வெளிவந்த போது ஞானியோடு நேரடி பரிச்சயம் ஏற்பட்டது.  அதன் பின், ‘அஸ்வமேதா’ சிற்றிதழைக் கொண்டு வந்த போது, அது குறித்த குதூகலங்களை வெளிப்படுத்தி தொடர்ந்து உற்சாகப்படுத்தினார்.  


ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும், முழங்கையைப் பற்றிக் கொண்டு தான் பேசுவார்.  அதில் கிடைக்கும் ஆதூரத்தை நான் வேறு யாரிடமும் உணர்ந்ததில்லை.  1994ல் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பொழுது ‘தண்டனைகளின் காலம்’ என்ற சிறுகதையை நிகழில் இரண்டு இதழ்களில் தொடர்ச்சியாக வெளியிட்டார்.  அது, அவர் எனக்கு வழங்கிய பெரிய மரியாதை.  இரண்டு வருடங்களுக்குப் பின் கோவையில் அவரைச் சந்தித்த போது, என்னை நன்றி சொல்லக்கூட அனுமதிக்காமல், அச்சிறுகதையில் இராவணன் மீது எழுதியிருந்த ஒரு வார்த்தையை நீக்க வேண்டி வந்த துயரத்தை வெளிப்படுத்த ஆரம்பித்தார்.  இந்த மனிதர் ஏன் நம் மீது இத்தனைப் பிரியமாக இருக்கிறார் என்றே எனக்கு மீண்டும் மீண்டும் தோன்றியது.  ஆனால், அவர் இளைஞர்கள் அத்தனை பேர் மீதும் அக்கறையோடிருந்தார் என்பதே உண்மை.  2003ல் ‘நான் பூர்வ பெளத்தன்’ வெளியாகி, பல திசைகளிலிருந்தும் அதற்குக் கண்டனங்கள் வந்த போது, முதலில் வந்த ஆறுதலான குரல் ஞானியுடையது.  


தமிழ்ச் சிந்தனையுலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் அபரிதமானது.  குறிப்பாக, மார்க்சியத்தை தமிழ் தேசியத்தோடு யோசிக்க வேண்டிய தேவையை அவரே இங்கு அறிமுகப்படுத்தினார்; செழுமைப்படுத்தினார்.  அந்த வகையில், அயோத்திதாசரிடம் வெளிப்படும் தமிழ் அடையாளச் சிந்தனைகளிலும் அவர் அக்கறை கொண்டிருந்தார்.  


நாட்டுப்புறக்கதைகளில் ஆய்வு செய்யப் போனாலும், தொல்காப்பியத்தையும் பழந்தமிழ் நூற்களையும் நான் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதற்கு கோவை ஞானியின் தமிழியல் சிந்தனைகளும் ஒரு காரணம்.  நிகழில் அவர் வெளியிட்ட கட்டுரைகள் அந்நாட்களில் எங்களைப் போன்றவர்களுக்கு பாட நூற்களைப் போலப் பயன்பட்டன.  


கடைசியாக, சென்ற வருடம், கோவையில் சந்தித்த போது, எடுத்த எடுப்பில், ’நான் ஏன் தலித்தும் அல்ல?’ என்று சொல்வது ஏன் என்றே கேட்டார்.  அடுத்திருந்த இரண்டு மணி நேரமும் இதைப் பற்றியே தான் பேசிக் கொண்டிருந்தோம்.  அவரோடு நடந்த ஒவ்வொரு சந்திப்பிலும் நான் தான் அதிகமாகப் பேசிக் கொண்டிருந்திருக்கிறேன்.  அவர் ஏன் அப்படிக் கேட்டுக் கொண்டிருந்தார், நான் ஏன் அப்படி பேசிக் கொண்டிருந்தேன் என்று எனக்குப் புரிவதில்லை.  பேசி முடிந்து விடை பெறும் போது, ‘நிகழில் வெளியான ‘தண்டனைகளின் காலம்’ மிகச் சிறந்த தலித் சிறுகதை’ என்றார்.  


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக