மக்களாட்சியின் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது தனது மாண்புகளை இழந்து கொண்டிருக்கிறது.
ஒரே ஒரு விஷயம் தான் அதன் உன்னதம்: ‘அரசியல் நுண்ணுணர்வு கொண்ட மக்களதிகாரம்’ ஒன்றை உருவாக்குவது! இதை இன்னும் எளிமையாக இப்படிச் சொல்லலாம் - கூட்டமாக நிற்பவர்களை மக்களாக உணர வைக்கிற சாதனையை ஜனநாயகமே செய்கிறது.
ஆனால், அரசியல் நுண்ணுணர்வு கொண்ட மக்களதிகாரம், ஆகப்பெரிய கற்பனையும் கூட. கடந்த இரு நூற்றாண்டுகளில், ஜனநாயகம் செயல்படத் தொடங்கிய நாடுகளில் ஏதாவதொன்றில், ஏதோவொரு காலகட்டத்தில், சொற்ப காலத்திற்கு மட்டுமே இந்தக் கற்பனை செயல்பட்டிருக்க வேண்டும். இந்தியா போன்ற நாடுகளில் அதை நீங்களும் நானும் பார்த்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், அது குறித்த நம்பிக்கையை தொடர்ந்து நம்மிடம் உருவாக்கி வந்திருக்கிறார்கள்.
ஒவ்வொரு முறை, ஒவ்வொரு கவர்ச்சிகர தலைவர் ஆட்சியமைக்கும் பொழுதும், அந்த மக்களாட்சிக் கற்பனையை நாம் நெருங்கிக் கொண்டிருக்கிறோம் என்றே நமக்கு உறுதியளித்திருக்கிறார். அந்த கணங்களில், நாமெல்லாம் ‘மக்கள்’ என்று நம்மை உணரச் செய்திருக்கிறார். ஆனால், இப்பொழுதோ நிலைமை தலைகீழாக இருக்கிறது. நம்மை மக்களென்று உணர வைக்கும் திராணியுள்ள தலைமைகள் காலாவதியாகி விட்டன. இதுவொரு இக்கட்டான சூழல். ஆனால், ஒரு விஷயம் தெளிவாகியிருக்கிறது - மக்களாட்சியும் ஒரு உன்னத அரசியல் திட்டம் அல்ல; அது வீழ்ந்து கொண்டிருக்கிறது.
*
தமிழகத்தைப் பொறுத்தவரையில் மக்களாட்சி மீது அவநம்பிக்கை கொள்வதற்கு இரண்டு காரணங்கள் இருக்க முடியும்: கவர்ச்சிகர அரசியல் தலைமையில் ஏற்பட்ட வறட்சி, வாக்களிக்கப் பழகிய கூட்டம்! இவையிரண்டும் ‘அரசியல் நுண்ணுணர்வை’யே முதலில் கொல்கின்றன.
1. ஒரு ஜனநாயக அமைப்பில், கவர்ச்சிகரமான தலைமை மட்டுமே அரசியல் நுண்ணுணர்விற்கான ஜவாப்தாரி. அப்படியொரு தலைமையை இழந்த மக்களாட்சி, துக்க வீட்டிற்கு சமானம்.
2. அதே போல, சுழற்சி முறை அதிகாரத்திற்குப் பழகுவது பெரும்போதை. மதம் அல்லது அபினுக்கு ஒப்பான விஷம். எனவே தான் மக்களதிகாரம் சாஸ்வதம் அல்ல என்று சொல்கிறோம். அதே போல அது சுய நுண்ணுணர்வு கொண்டதும் அல்ல.
அந்த வகையில், ஐந்து வருட தேர்தல் சுழற்சிக்குப் பழகிய மக்கள் கூட்டமும் அந்தத் துக்க வீட்டிற்கு வந்த கூட்டம் தான். இரண்டு தருணத்திலும் மக்களாட்சி தனது ‘அரசியல் நுண்ணுணர்வை’ இழந்து விடுகிறது என்பதே உண்மை.
கவர்ச்சிகரமான தலைமையின்மை, வாக்களிக்கப் பழகிய மக்கள் கூட்டம் என்ற இரண்டும் ஆகக்கொடிய விஷயங்கள். இதனாலேயே மக்களாட்சியின் கடைசி காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று நாம் சொல்கிறோம். வேறொரு உயரிய மக்கள் அதிகார அமைப்பை யோசிக்கவும் கட்டமைக்கவும் நாம் முயல வேண்டும்: இலையென்றால் நமக்கு விமோசனம் இல்லை.
*
ஆனாலும், இவ்விடைப்பட்ட காலத்தில் மக்களாட்சிக்கு மாற்று எதுவும் இல்லை. ஏனெனில், ஜனநாயக அமைப்பிற்கு எதிரான நமது எந்தவொரு விமர்சனத்தையும் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்வதற்கு பழைய எதிரிகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள், சர்வாதிகாரத்திற்கு புனித முலாம் பூசி இறையாண்மையாக அறிமுகப்படுத்த தயாராக இருக்கிறார்கள். இந்தியாவைப் பொறுத்தவரையில், பாஜக மூலம் மதவெறிக்கு உயிர் வந்து கொண்டிருப்பதன் சூட்சுமமும் இது தான்.
சமீப காலங்களாக, கலைஞர்கள் - வணிகர்கள் - எழுத்தாளர்கள் என்று சமூகத்தின் அனைத்து தரப்பினரும், தங்களது மத அபிமானத்தை ஒவ்வொரு விதத்தில் பறைசாற்றத் தொடங்கியிருக்கிறார்கள். மதம், அவர்களது தோலைத் தடித்து விட்டிருப்பது நமக்கு விளங்குகிறது. அவர்கள் ஐம்புலன்களை இழக்க ஆரம்பிக்கிறார்கள். ஐம்புலன்களை அடக்கி ஆழ்மனத் தேடலில் இறங்குவதை, ஐம்புலன்களை இழந்து மதவுணர்வுள்ளவனாக மாறுவதோடு ஒப்புமைபடுத்துவது இந்தியாவில் எளிது. ஞானத்திற்கும் கிறுக்குக்குமான வேறுபாடு இது. ஐந்திரம் அடக்குவதும், ஐந்திரம் இழப்பதும் வேறு வேறு என்று அறியாதவர்களே, ஜெயமோகன் சொல்வது போல தங்களை ‘மதவுணர்வுள்ளவர்களாக’ அறிவித்துக் கொண்டு ஞானவிசாரத்தில் ஈடுபட முடியும். கஞ்சா புகைத்தலை ஞானத்தின் படிக்கட்டாக உருவகிக்கும் கோளாறு இது; இன்றைக்கு வரைக்கும் நவீனத் தமிழ்க் கவிஞர்கள் போட்டு வரும் நாடகமும் இது தான்!
*
அப்படியானால், ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைப்பதற்கு அதன் எதிரிகள் மட்டுமே தான் காரணமா என்று நீங்கள் கேட்கலாம். அதாவது, ‘பாஜக வந்து விடும்!’ என்பது தான் திமுகவை ஆதரிக்க வேண்டிய ஒரே காரணமா? இந்தக் கேள்வியை, திமுகவை தேர்ந்தெடுக்கும் பெரும்பான்மையோர், திமுகவின் கொள்கைப் பிடிப்பு - நேர்மை என்று வாதிடுவதன் மூலம் செய்ய ஆரம்பிக்கிறார்கள். ஆனால், அது மிக மிக இற்றுப்போன வாதம் என்று நிரூபிக்கப்பட்டிருக்கிறது.
இந்தத் தேர்தலில் ஏன் திமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்பதற்கு நேர்மறையாக என்னால் ஒரே ஒரு காரணத்தை மட்டும் இப்போதைக்கு சொல்ல முடியும்.
அரசியல் விழிப்புணர்வோ அல்லது அதைக் கொண்டு வரும் சீரிய தலைமையோ அல்லது சமூக மாற்றத்திற்கான வேட்கையோ இல்லாத கூட்டத்தை ஒரே ஒரு விஷயம் தான் மக்களாக உணர வைத்துக் கொண்டிருக்கிறது - அது, ஒவ்வொரு தேர்தலின் போதும், ஏற்கனவே அதிகாரத்தில் இருந்த நபர்களை கீழிறக்கி விட்டு, அடுத்த நபர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் பாங்கு! தேர்தலுக்குத் தேர்தல் மக்களதிகாரத்தை அடுத்த கைகளுக்கு மாற்றுவது மட்டுமே மக்கள் கூட்டத்தின் ‘நுண்ணுணர்வாக’ எஞ்சியிருக்கிறது.
‘வாக்களிக்கும் பழக்கத்திற்கு அடிமையான கூட்டம்’ என்று சொல்லப்பட்ட மக்கள் ஆட்சி அதிகாரத்தை மாற்றி மாற்றி வழங்குவதன் மூலமே தங்களது இருப்பைத் தக்கவைத்துக் கொள்ள முடிகிறது. அந்த வகையில் இது போன்ற ‘ஆட்சி மாற்றம்’ மட்டுமே ஜனநாயக அமைப்பில் மிஞ்சியிருக்கும் ஒரே அரசியல் நுண்ணுணர்வு. அந்த வகையில், இந்தத் தேர்தலில் எனது தேர்வு, திராவிட முன்னேற்றக் கழகத் தலைமையிலான கூட்டணி மட்டுமே. இது திமுகவின் சாரத்தினால் நடக்கும் தேர்வு அல்ல: மக்களாட்சியின் நுண்ணுணர்வை தக்க வைக்க நான் மேற்கொள்ள விரும்பும் ஆட்சி மாற்றம்.
*
இதை அரசியல் கட்சிகள் மிக நன்றாகவே அறிகின்றன. அதனாலேயே, ‘அதுவா இதுவா’ என்ற விளையாட்டில் அதுவாகவோ அல்லது இதுவாகவோ தம்மை முன்னிறுத்தத் துடிக்கின்றன. உண்மையில், தமிழகத்து அதுவா இதுவா போட்டி இன்று வரை திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான்.
ஆனால், இந்த நிலைமை மாறப் போகிறது என்பது தான் 2021 தேர்தலின் சுவராஸ்யம். அதிமுக, வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறது. இந்த வாய்ப்பை தட்டிப்பறிப்பதன் மூலம், திமுகவிற்கு மாற்றாக அடுத்த சுழற்சியில் மக்கள் தன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே பாஜகவின் திட்டம். அந்த வகையில், தமிழக இந்துத்துவர்களான பிராமணர்களும்/அபிராமணர்களும் அதிமுகவை அழித்து விட்டு பாஜகவை முன்னிறுத்தத் தொடங்கியிருக்கிறார்கள். அந்த வகையில், இது அதிமுகவிற்கான கடைசி தேர்தலாக இருக்கப் போகிறது.
காலாவதியாகிப் போன மக்களாட்சி திட்டத்தினுள் நுண்ணுணர்வு என்ற பெயரில் மதக் காழ்ப்பை/பெருமையை இந்துத்துவர்கள் ஏற்படுத்த விரும்பும் போக்கு ஆபத்தானது. இத்தகைய முயற்சிகள் வரலாற்றில் நிறைய முறை நடைபெற்றிருக்கின்றன. கிபி 8ம் நூற்றாண்டில் பக்தி இலக்கிய காலகட்டம், கிபி 15ம் நூற்றாண்டு சிற்றிலக்கிய காலகட்டம் என்று தமிழிலக்கிய வரலாற்றில் வலுவான பதிவுகள் உள்ளன. ஆனால், ஒவ்வொரு முறையும் இத்தகைய மத முயற்சிகள் தமிழகத்தில் தோல்வியையே சந்தித்திருக்கின்றன.
ஆனாலும், இந்துத்துவர்கள் தொடர்ந்து இதனைச் செய்த படியே தான் இருக்கிறார்கள். தமிழகத்தைப் பொறுத்தவரையில், மக்களிடம் மதவுணர்வை ஊட்டுவதை விடவும், அதற்கு எதிரான அரசியல் பேச்சுகளை வீழ்த்துவதே அவர்களின் முதன்மை வேலையாக இருக்கிறது. இந்தியத் தத்துவ வரலாற்றில் நாத்திக மரபு என்று ஏதாவது இருக்குமென்றால் அதை நீங்கள் தமிழகத்தில் தான் தரிசிக்க முடியும். இதுவே, இந்துத்தவர்கள் தமிழகத்தை விரோதமாகப் பார்ப்பதன் காரணம். ஏனெனில், மதவுணர்வுகள் அவர்களின் தொழில், வியாபாரம், அரசியலும் கூட!
திமுக, மதஅரசியலுக்கு எதிரான பேச்சுகளை வலுவாக முன்னெடுத்த போது, எம்ஜியார், ஜெயலலிதா என்ற நபர்களை இந்துத்துவர்கள் முன்னிலைப்படுத்தியதும் இதன் காரணமாகத்தான். பிராமண எதிர்ப்பு என்பதை மதவுணர்வு எதிர்ப்பாகவே தமிழக அரசியல் களம் வெளிப்படுத்தியிருக்கிறது. திமுகவை வீழ்த்துவதை விடவும், மென் மதவெறி கொண்ட அதிமுகவை முன்னிலைப்படுத்துவது இந்துத்துவர்களுக்கு வசதியாக இருந்தது. ஏனெனில், திமுக முன்னெடுத்த மத எதிர்ப்பு என்ற அரசியல் நுண்ணுணர்வு பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற வலுவான தலைமைகளால் வேரூன்றியிருந்தது.
இந்தத் தேர்தல் நமக்கு அளிக்கிற சவால் இது தான் - ஆட்சி மாற்றம் என்ற காரணியைச் செயல்படுத்தி நம்மை நாமே ‘மக்களாக’ உணர்ந்து கொள்வது எப்படி?
தமிழகத்தின் முன்னிருக்கும் தனிப்பட்ட சவால் என்றால் அது, இது: மதவுணர்வுகளுக்கு எதிரான திமுகவிற்கான மாற்று எது?
உலகளாவிய மனித குல சவால் - மக்களாட்சியின் அடுத்த கட்டம் என்ன?
Comments