ஃபூக்கோ மீது பாய்வது எப்படி? மதுரையில் நடைபெற்ற ஃபூக்கோ கருத்தரங்கம் இனிய சந்திப்பாக மாறியிருந்தது. இத்தனை இளைஞர்கள் இவ்வளவு நாட்கள் எங்கிருந்தார்கள் என்று தெரியவில்லை. அவ்வளவு உற்சாகம் அவர்களிடம். ஏறக்குறைய தமிழகத்தின் அனைத்து திசைகளிலிருந்தும் இவர்கள் கிளம்பி அவர்களிடம் மதுரைக்கு வந்திருந்தனர். ஃபூக்கோவை, கேள்வி மட்டுமே பட்டவர்கள், காதால் மட்டுமே வாசித்துக் கொண்டிருந்தவர்கள், கொஞ்சம் நுழைந்து பார்த்து ‘இந்தப் பழம் புளிக்கும்’ என்று திரும்பியவர்கள், பாதி கிணறு தாண்டியவர்கள், ஃபூக்கோவை கொலை செய்ய விரும்பியவர்கள், அதிருப்தியாளர்கள், மருண்டவர்கள் … என்று விதவிதமான நபர்கள். கலைடாஸ்கோப்பின் கடைசி தகவலின் படி, கலந்து கொண்டவர்கள் மொத்தம் 65 பேர். ‘கலைடாஸ்கோப்’ பிரபாகர் நிச்சயமாய் இதை எதிர்பார்த்திருக்கவில்லை. அவர் முப்பது பேர் என்றே சொல்லிக் கொண்டிருந்தார். முன்ஜாக்கிரதையோடு, எதற்கும் கூடவொரு பத்து என்று, நாற்பது பேரை சமாளிப்பதற்கான தளவாடங்களோடு மட்டுமே அவர் வந்திருந்தார். ஆனால், வெள்ளிக்கிழமை மாலையே பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை எகிறிக் கொண்டிருந்தது.