1 ‘பெரியார் பிறந்த மண்’ என்று சொல்கிற எல்லோருக்கும் தெரியும் பிறப்பின் அடிப்படையில் எதுவும் தீர்மானிக்கப்படுவது இல்லை என்று. பிறகு ஏன் இப்படி தொடர்ந்து சொல்லப்படுகிறது? உடுமலை சங்கர் படுகொலைக்கான நீதிமன்றத் தீர்ப்பின் வெற்றிக் களிப்பையும் அது சார்ந்த சவடால்களையும் கடந்து ஒரு சமநிலைக்கு வந்திருப்போம் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். சங்கர் கொலை வழக்கில், ஆறு பேருக்கு தூக்குத் தண்டனை வழங்கிய நீதிமன்றம், மிகத் தெளிவாக ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறது - இந்தத் தண்டனை ‘அந்தப்’ படுபாதகச் செயலுக்காக வழங்கப்பட்டிருக்கிறது. எது படுபாதக செயல் என்பதில் சட்டப்புத்தகங்களுக்கு குழப்பங்கள் இல்லை. கொலை, கொள்ளை போன்ற செயல்கள் படுபாதகங்கள். அதிலும், அவற்றைத் திட்டமிட்டு செய்திருந்தால், மாபாதகம்! அதிக பட்ச தண்டனை உண்டு. சங்கர் படுகொலையிலும் நீதிமன்றம் வழங்கியிருக்கிற மரண தண்டனை, அந்தப் பாதகத்திற்குத் தானேயொழிய, அதன் பின்னிருக்கிற சாதி ஆணவம் என்ற காரணத்திற்காக அல்ல. இதை இப்படி விளங்கிக் கொள்ளலாம் - பாதகத்தில் முடியாத சாதி ஆணவங்களுக்கு சட...