நேற்று (10-11-2014) மாலை ஹைதராபாத்திலிருந்து நண்பர் பார்த்தசாரதி MSS பாண்டியன் தவறிப்போனதைத் தெரிவித்த போது, ஒரு நிமிடம் எனக்கு பொக்கென்று போனது. ஒரு படபடப்பு எனக்குள் தொற்றிக்கொண்டது. ‘ச்சைய் ’ என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன். யாரிடமாவது புலம்ப வேண்டும் என்று தோன்றியது. மரணம் யாரையாவது பறித்துக் கொள்ளும் போது, இனி என்றைக்குமே செய்ய முடியாத காரியங்களின் பட்டியலை மட்டும் நம்மிடமே தந்து விட்டு செல்கிறது. பாண்டியன் குறித்து அப்படியொரு இனி என்றைக்குமே முடியாத காரியமொன்று என் பட்டியலில் ஏறிக்கொண்டது. பாண்டியனுக்கும் எனக்கும் நேரடிப் பழக்கம் இல்லை; நாங்கள் பேசிக்கொண்டது கூட இல்லை. ஆனால், ஒருவரையொருவர் நன்கு தெரிந்திருந்தோம். தெரிந்திருந்தோமா என்பது கூட இப்பொழுது கேள்விக்குறி தான். பாண்டியனுக்கு என் மீது மனக்கசப்பும், வருத்தமும் இருந்தது. அவரது நூலுக்கு 2008ம் வருடம் காலச்சுவடில் நான் எழுதிய விமர்சனக் கட்டுரையினால் விளைந்த வருத்தம் இது. அந்த கட்டுரையை அவர் தமிழில் எதிர்பார்க்கவில்லை. அக்கட்டுரை எழுப்பிய கேள...