1 நாவலில் தான் நீளக் கதைகளை எழுத முடிகிறது. நீளம் அவளுக்குப் பிடித்த நிறம். கன்னியாகுமரி போய் முதன் முதலாய் கடலைப் பார்த்த பொழுது அவளுக்கு வயது பனிரெண்டு. கடல் பார்த்த மறுகணமே எப்படியாவது ஒரு நாவலை எழுதிவிடுவது என்ற முடிவிற்கு வந்திருந்தாள். கடல் அன்றைக்கு அத்தனை நீளமாக இருந்தது. அத்தனை அகலமான நீலத்தை அவள் கடலில் தான் பார்த்தாள். கடல் பார்த்து வந்த மறு தினமே கோணங்கியின் கோவில்பட்டி முகவரிக்கு, 'உப்பு நீலமாக இருக்கிறது!' என்று ஒருவரிக்கடிதம் எழுதியிருந்தாள். அவள் எழுதாமல் மறைத்த அடுத்த வரி, ' நீள நாவலொன்று எழுதப்போகிறேன்'. வெரோணிக்காவிற்கு சின்ன கண்கள். பார்த்தால் தெரியாது. அவள் முகத்தைப் பார்க்கிறவர்கள் அவள் எதையோ சிந்தித்துக் கொண்டிருப்பதாகவே நினைத்துக் கொள்வார்கள். உண்மையில், அவள் அப்படியெல்லாம் சிந்திக்கிற ஆளே இல்லை. சின்ன கண்களைக் கொண்ட பெரிய பெண் அவ்வளவு தான். நாவல் தான் எழுத வேண்டும் என்று முடிவு செய்த பின்பு தான், நாவலுக்கும் நீளத்திற்குமான பந்தங்கள் ஒவ்வொன்றாக அவளுக்குப் புலப்படத் தொடங்கின. ஒரு நாவல் முதலில் வாசகர்களின் கண்களை நீலமாக்குகிறது