அஞ்ஞாடியின் பிரதானமான கதைசொல்லும் முறை 'பேச்சு' தான். பேச்சின் சகல வடிவங்களும் அதில் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிக எளிதாக அடையாளம் கண்டு கொள்வது போல், அந்த நாவல் பல்வேறு படலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது; அப்படலங்கள் பின்பு அத்தியாயங்களாக
வகிரப்பட்டுள்ளன. அத்தியாயங்களின் தலைப்புகள்
பேச்சின் தெறிப்புகளாக விளங்குவது தான் அலாதியானது. ஒரு அத்தியாயத்தின் தலைப்பு - 'போடி அனந்தி';
இன்னொன்று - 'அது போதும் அப்புச்சி'; அப்புறம் 'அடியே மாடத்தி...'
இப்படியே.....
நாவல் முழுக்க யாராவது யாரோடவாது பேசிக்கொண்டேயிருக்கிறார்கள். எந்த முஸ்தீபுகளும் இல்லாமல் இப்படியான பேச்சுகள்
நாவலுக்குள் தொடர்ச்சியாக நிகழ்ந்து கொண்டே இருக்கின்றன. இரண்டிரண்டு பேராய், சில நேரங்களில் கூட்டமாய் கூடி
நின்று நாவலில் நிகழும் சம்பவங்களைக் குறித்துத் தங்களுக்குள் விவாதித்துக் கொள்கிறார்கள். அது கிராமங்களில் காணப்படும் தேநீர் கடை, களத்து
மேடு, மந்தை, பேருந்து நிலையம், வயக்காடு போன்ற இடங்களிலெல்லாம் ஒன்றிரண்டு பேராய் சேர்ந்து கொண்டால் எவ்வாறு
பேசிக்கொள்வார்களோ அவ்வாறு பேசிக்கொள்கிறார்கள்.
அவரவர்க்கு தெரிந்த ஞானத்தினடிப்படையில் அந்த உரையாடல்கள் நடைபெறுகின்றன. அதில் தத்துவ விளக்கங்கள் இருக்கவில்லை; அறிவியல்
பூர்வமான அலசல் முறை வெளிப்படவில்லை; பகுத்தறிவிற்கு அங்கு வேலை ஏதும் இருக்கவில்லை. ஆனால், அக்குரல்கள் பேசிக்கொண்டே இருக்கின்றன.
எடுத்துக்காட்டுக்கு ஒன்று:
[‘இன்னொரு நாள் ஆறு நாடார்கள் தெருவில் நின்று
சகடாலடித்துக் கொண்டிருந்தார்கள்.
“அண்ணைக்குக் கலகத்துல மறவங்க வாங்கிக்கெட்னது
லேசுக்குள்ள மறக்குமா.”
“காலத்துக்கும் மறக்க மாட்டான்.”
“அஞ்சாறு துப்பாக்கிய வச்சுக்கிட்டு எர நூறு முன்னூரு
பேரச் சுட்டுத் தள்ளுனமா சும்மாவா?”
“கொதிக்கிற எண்ணெய ஊத்தி அவிஞ்சு போனது எத்தனையோ?”
“மொளகாப்பொடி தூவி குருடானது எத்தனையோ?”
“நானே ரெண்டு பேரு மண்டையில கல்லத் தூக்கிப்
போட்டென். பெழச்சுக்கிருவான்னு
நெனைக்கயா. மூளக்குழி
செதறிப்போயிருக்கும்.”
“அத்தன பேரவும் தூக்கிட்டுப் போயிட்டானே. அதான்
சாமர்த்தியம்...”
“அது நல்லது தான். இங்க கிடந்து நாறவா.”
“செவங்கோவில் மட்டும் தொறக்கட்டும். அப்ப என்ன நடக்கப் போகுதுன்னு பாரு.”
“எதிரியெல்லாம் ஓடிப்புட்டான். நம்மள் எந்தப் பய தடுக்கப் போறான்.”
“பட்டாளத்தானும் போலீசுந்தான் காவலுக்கு நிப்பான்.”
“அவனவும் சுட்டுத் தள்ளீற வேண்டியது தான்.”
“ரெண்டு மூணு பேர போட்டுத் தள்ளுனா போதும். எல்லாம் ஓட்டம் புடிச்சிருவான்.”
“நம்ம சாதிக்காரங்க எடஞ்சலில்லாமச் சாமி கும்புடனும்.”]
(அஞ்ஞாடி – பக்கம் 804)
இந்த வெகுஜனப் பேச்சுகள் தான் அந்நாவலில் கதையை நகர்த்திச் செல்கிறது.
Comments