இருபதாம் நூற்றாண்டு இந்தியாவில் அதிதீவிரமாக விவாதிக்கப்பட்ட, அரசியல்படுத்தப்பட்ட கருத்தாக்கங்கள் என்றொரு பட்டியலை தயார் செயதால் அதில் கட்டாயம் சாதி, மொழி, சமயம் என்ற மூன்று கருத்தாக்கங்களும் இடம்பெற்றிருக்கும். கடந்த ஒரு நூற்றாண்டின் இந்திய சமூக அசைவுகளை அடையாள உருவாக்கங்கள், அதிகாரத்தை நோக்கிய நகர்வுகள், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், ஒடுக்கப்பட்டோரின் விடுதலை என்று வெவ்வேறு பெயர்களில் குறிப்பிட்டாலும் இவையனைத்தின் மைய விவாதப் பொருட்களாக இம்மூன்று கருத்தாக்கங்களே இருந்து வந்துள்ளன. இவற்றை விளங்கிக் கொள்வதன் மூலமே இந்திய சமூக அமைப்பை விளங்கிக் கொள்ள முடியுமென்ற யோசனை ஆய்வுத்தளங்களில் ஆழமாக வேரூன்றியிருந்துள்ளது. இதனால், இம்மூன்றைப் பற்றியும் ஏராளமான வாதங்களும் விவாதங்களும் நடைபெற்றுள்ளன.
'சாதி' என்ற வினோதமான காரணியை புரிந்து கொள்வதற்கும் அவ்வமைப்பிலிருந்து வெளியேறுவதற்கும்
எடுத்த முயற்சிகளில் ஒருபடித்தான ஏற்றத்தாழ்வு, சுத்தம் - அசுத்தம், தாழ்த்தப்பட்டவர்களின் 'கருத்தொற்றுமை' யும் 'திரும்பச்செய்தலும்',
சாதியின் இனச்சமூகவியல், அம்பேத்கரின் 'சாதித் தோற்றம் பற்றிய வரலாற்று மீட்டுருவாக்கம்',
இந்துமத வெளியேற்றம், பிராமணரல்லாதோர் என்ற அடையாள உருவாக்கம், சுயமரியாதை, சமஸ்கிருதவயமாதல், தலித்தியம் போன்றவை காத்திரமான நகர்வுகளை சாத்தியப்படுத்தியுள்ளன. அதே நேரம், மொழியை மையமாக வைத்து நடைபெற்ற உரையாடல்கள் பெரும்பாலும் தேசிய இன அடையாள சிக்கல்களாகவும், அதிகாரத்தை கையகப்படுத்தும் உத்திகளாகவும் வெளிப்பட்டதையும்,
'ஆரியம் - திராவிடம்' என்ற இரு எதிரெதிர் அடையாளங்களை உடையதாக இந்திய சமூக அமைப்பு கட்டமைக்கப்பட்டதையும் நாம் பார்க்க முடிகிறது.
சாதி குறித்து பேசும் போதும் சரி, மொழி குறித்து பேசும் போதும் சரி, தவிர்க்க முடியாத வகையில் இணையான விவாதப்பொருளாகவே இருந்து வந்திருக்கும் சமயம் என்ற காரணி, பிற இரண்டு கருத்தாக்கங்களை விடவும் 'உணர்ச்சிகரமாக' விவாதிக்கப்பட்டதற்கான அறிகுறிகளாக சமய மோதல்களால் வெடித்த வன்முறையையும் சிந்தப்பட்ட இரத்தத்தையும் குறிப்பிடமுடியும். இது இருபதாம் நூற்றாண்டின் தனித்துவம் மட்டுமல்ல, மாறாக வரலாறு நெடுகிலும் இந்திய நிலப்பரப்பானது மத மோதல்களால் வழிந்த இரத்தத்தில் தான் நனைந்திருக்கிறது.
இம்மூன்று கருத்தாக்கங்களின் அடிப்படையில் நடைபெற்ற விவாதங்களானாலும் சரி, அதனடிப்படையில் மேலெழுந்த அரசியல் செயல்பாடுகளானாலும் சரி, இந்தியாவின் நவீனத்துவம் என்று ஏதாவது சொல்லப்படுமானால் அதனை வடிவமைத்ததில் பெரும்பங்கை ஆற்றியிருக்கின்றன என்று தான் சொல்ல வேண்டும். சாதியமைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொள்ளவும், மொழியை இன்னும் கூடுதலான தெளிவோடு புரிந்து கொள்ளவும், சமய நடவடிக்கைகளுக்கான சமூக எல்லைகளைக் கறாராக வடிவமைக்கவும் இந்தியாவின் வெவ்வேறு சமூகப் பண்பாட்டுக் குழுக்கள் தொடர்ந்து முயற்சி செய்து கொண்டிருப்பதையும், அம்முயற்சிகள் சொற்பமான வெற்றியையும் வலிமிகுந்த, வெட்கப்படத்தக்க தோல்விகளையும் தந்து கொண்டிருப்பதை நம்மால் பட்டியலிடமுடியும்.
ஒருபக்கம் தொடர்ச்சியான விவாதங்கள், நீண்ட நெடிய களச்செயல்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன
என்றாலும், இன்னொரு பக்கம் சாதியமைப்பு மேலும் மேலும் இறுக்கமடைவதையும், சமய நிறுவனங்கள் புதிய புதிய வடிவங்களில் பல்குவதையும், மொழி மீதான ஈடுபாடு வெறியாகவும் துவேஷமாகவும் உருமாறுவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
இந்தத் திசையறியா நிலையும் கூட மனிதகுல வரலாற்றைப் பொருத்த வரையில் பரிச்சயமானவொன்றுதான். வேகப்பாய்ச்சல், தடுமாற்றம், திகைப்பு, பின்பு பலங்கொண்ட பாய்ச்சல் என்ற படியே சமூகம் நடைபயின்று வந்திருக்கிறது. ஒவ்வொரு தடுமாறுகையிலும், திகைத்துப் பின்வாங்குகையிலும் சற்றே மறந்து போயிருந்த கடந்த காலத்திலிருந்து பற்றுக்கோல்களைக் கண்டடைவது தான் வழமை.
அந்த வகையில், தற்போதைய தமிழ்ச்சமூக இயங்கு தளங்களில் உணரப்படும் தடுமாற்றத்திலிருந்தும், திகைப்பிலிருந்தும் விடுபடுவதற்கான வெளிச்சங்களைத் தேடி பத்தொன்பதாம் நூற்றாண்டு நடவடிக்கைகளை மீள்பார்வை பார்ப்பது உபயோகமான காரியமாக இருக்கலாம். இப்பின்னணியில், பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தோன்றி இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களில் தனது எழுத்துகள் மூலம் பெரும் பதிவொன்றை விட்டுச் சென்றுள்ள அயோத்திதாசப் பண்டிதரின் சிந்தனைகளிலிருந்து புதிய பதில்களைக் கண்டடைய முடியுமா என்று தேடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
அயோத்திதாசரின் சிந்தனைகளை மீண்டும் வாசித்துப் பார்ப்பதில் ஏதேனும் லாபம் இருக்க முடியுமா என்று கேட்பவர்களுக்கு தற்சமயம் என்னால் இரண்டு தகவல்களை மட்டுமே ஞாபகப்படுத்த முடியும். ஒன்று, நாம் இங்கு விவாதிக்க விரும்புகிற சாதி - மொழி - சமயம் என்ற மூன்று கருத்தாக்கங்களையும் அயோத்திதாசர் விரிவாகப் பேசியிருக்கிறார்;
இரண்டு, அதிர்ஷ்டவசமாக (?) அயோத்திதாசரின் எழுத்துகள் அவருடைய மறைவிற்குப் பின்னர் உதாசினப்படுத்தப்பட்டிருந்தன (இதனால், இருபதாம் நூற்றாண்டின் எந்தவொரு அரசியல் வெற்றிக்கோ அல்லது தோல்விக்கோ அவரைக் காரணமாக்க முடிவதில்லை. சொல்லப்போனால், அவருடைய சிந்தனைகள் பரீட்சித்துப் பார்க்கப் படாதவைகளாகவே இருக்கின்றன). இந்த அளவில் நிறுத்திக் கொண்டு மேற்கண்ட மூன்று கருத்தாக்கங்கள் குறித்த அயோத்திதாசரின் சிந்தனைகளுக்கு சென்று விடலாம் என்று நினைக்கிறேன்.
1 - அயோத்திதாசரும் அவரது எழுத்துகளும்:
இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்தில் தமிழகத்தில் வாழ்ந்த (1845-1914) மிக முக்கியமான சிந்தனையாளர் அயோத்திதாசர். பாரம்பரியமாக சித்த மருத்துவர்; திண்ணைப் பள்ளியில் தமிழ் இலக்கணம், இலக்கியம் கற்ற தமிழ்ப் பண்டிதர்;
'தமிழன்' என்ற வாரப்பத்திரிகையை 1907 முதல் 1914 வரை தொடர்ந்து நடத்திய பத்திரிகையாளர்; சமத்துவத்தைப் பாதுகாக்கிறது என்ற ஒரே காரணத்திற்காக பௌத்தமதத்தை பரப்பிய சமயவாதி; திருக்குறளுக்கு உரை, ஔவையின் மூன்று நூற்களுக்கு உரை, இந்திர தேச சரித்திரம் என்ற வரலாற்று நூல், ஆதி வேதம் என்ற புத்தரின் வாழ்க்கை வரலாறு என்று ஏராளமான நூற்களை எழுதிய ஆய்வாளர்; சமதர்மம், பகுத்தறிவு, பிராமண எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, திராவிடம் போன்ற இருபதாம் நூற்றாண்டு தமிழக அரசியலை வடிவமைத்த கருத்தாக்கங்களை முதன்முதலில் யோசித்தவர்.
பெரும்பாலான இவரது எழுத்துகள்,
'தமிழன்' என்ற வாரப்பத்திரிகையிலேயே வெளிவந்திருந்தன என்பதால், நீண்ட காலங்களுக்கு வெளியுலகம் அறியாமலேயே இருந்தது. ஏறக்குறைய அவர் மறைந்து என்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பின்பே அவ்வெழுத்துகள் தொகுக்கப்பட்டு மூன்று தொகுதிகளாக வெளியிடப்பட்டன. இந்த மூன்று தொகுதிகளே நமது வாசிப்பிற்கான அடிப்படைப் பனுவல்களாக அமைகின்றன.
அயோத்திதாசரின் எழுத்துகளை வாசித்துப் புரிந்து கொள்வதில் இரண்டு நடைமுறை சிக்கல்கள் இருக்கின்றன. முதலாவது, அவர் பயன்படுத்தும் மேற்கோள் நூற்கள் குறித்தது - அவற்றுள் பலவற்றை நம்மால் இன்றைக்கு அடையாளம் காண முடிவதில்லை; வேறு சில இன்றைக்கு வழக்கில் இல்லை. அவருடைய சமகால மனிதர்களின் எழுத்துகள், நண்பர்களின் ஞாபகங்கள், குடும்பப் பதிவுகள், அவர் பயன்படுத்திய நூலகம் என்று யாராவது தீவிரமான முயற்சியை மேற்கொண்டாலொழிய இந்த இடைவெளியை இட்டு நிரப்ப முடியாது. இரண்டாவதாக, அயோத்திதாசரின் பெரும்பான்மை எழுத்துகள், பத்திரிகைகளில் வெளியானவை என்பதால், ஒரு தலைப்பை பற்றிய சிந்தனைகள் முழுமையாகக் கிடைக்காமல், துண்டு துண்டாக அங்கொன்றும் இங்கொன்றுமாகவே தொகுக்கப்பட்டுள்ளன. சில தலைப்புகளிலேயே அவர் தொடர் கட்டுரைகளை எழுதியுள்ளாரே தவிர (சுதேசியம், இந்திர தேச சரித்திரம், ஆதி வேதம், இலக்கிய உரைகள் போன்றவை),
பிற அனைத்தும் காலச்சூழல்களுக்கு தக்கவாறு வேறு வேறு தருணங்களில் வேறு வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ளன. எடுத்துக்காட்டாக, சாதி குறித்த அவரது சிந்தனைகள் ஐந்தாறு தலைப்புகளில் வெளியாகியுள்ளன. அதே போலத்தான் மொழி மற்றும் சமயம் பற்றிய சிந்தனைகளும். இக்கட்டுரையின் அடுத்த பகுதியில் இவ்வாறு சிதறிக்கிடக்கின்ற எழுத்துகளை கருத்தாக்கத் தினடிப்படையில் தொகுத்து விளக்கும் வேலையையே நான் செய்கிறேன்.
(தொடரும்)
Comments