இந்தியச் சமூக
ஒழுங்கமைப்பின் மிக முக்கிய சமூகக் கூறான சாதி’யை விளங்கிக் கொள்ளும் முயற்சியில்
1966ம் வருடம் ஃப்ரெஞ்ச் சமூகவியலாளர் லூயி டூமோ முன்வைத்த ‘போலச்செய்தல்’’ என்ற கருத்தாக்கம்
மிகப் பெரிய விவாதத்தை உருவாக்கியிருந்த வேளையில், இதே போன்றதொரு கருத்தாக்கத்தை
‘சமஸ்கிருதவயமாதல்’’ என்ற பெயரில் இந்திய சமூகவியலாளர் எம். என். ஸ்ரீனிவாஸ் 1952லியே
முன்வைத்திருந்தார் என்று முந்தைய பகுதிகளில் பார்த்திருந்தோம்.
பார்ப்பனர்களை
முன்மாதிரியாகக் கொண்டு பிற சாதியினரும், குறிப்பாக தாழ்த்தப்பட்டவர்களும், சாதிய
ஒழுங்கமைப்பின் அடிப்படைகளையும் பழக்கவழக்கங்களையும் ‘போலச்செய்கிறார்கள்’’ என்றோ அல்லது
‘சமஸ்கிருதவயப்படுகிறார்கள்’’ என்றோ முன்வைக்கப்பட்ட வாதம், அப்படியொன்றும் புதிய விவாதமில்லை;
இவ்வகை உரையாடலை,
இந்த நாட்டின் தாழ்த்தப்பட்ட சமூகத்தவர்கள் இருபதாம் நூற்றாண்டின் தொடக்க வருடங்களிலேயே
நிகழ்த்தியிருந்தார்கள்; அவ்வாறு நிகழ்த்தப்பட்ட விவாதம் இது வரையிலான சமூகவியல்,
மானிடவியல் விவாதங்களையெல்லாம் விட செழுமையானதாகவும், கூர்மையானதாகவும் இருந்தது;
ஆனால், வழக்கமாய் தாழ்த்தப்பட்ட மக்களின் அறிவார்ந்த முன்னெடுப்புகளை மறைப்பது
போல் இந்த விஷயமும் பொது வெளியிலும், கல்விச் சூழலிலும் மறைக்கப்பட்டது என்று
சொன்னால் நீங்கள் நம்புவீர்களா?
நீங்கள்
நம்பாவிட்டாலும், அது அப்படித்தான் நடந்தது!
1916ம்
வருடம் மே மாதம் 9ம் நாள், கொலம்பியா பல்கலைக்கழகத்தின் மானிடவியல் கருத்தரங்கில்
அம்பேத்கர் வாசித்தளித்த ‘இந்தியாவில் சாதிகள்: அவற்றின் தொழிற்படுமுறை, தோற்றம்
மற்றும் வளர்ச்சி’’ என்ற தலைப்பிலான கட்டுரை சாதியமைப்பு பற்றிய சமூகவியலில் பல காத்திரமான
முன்னெடுப்புகளை எடுத்த ஒன்று. இக்கட்டுரை, மறுவருடம், அதாவது 1917, மே மாதம்
வெளியான Indian Antiquary
Vol XLI
என்ற ஆய்விதழில் அச்சிடப்பட்டது. இதே கட்டுரை டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு
– தொகுதி 1ல் இடம்பெற்றுள்ளது.
அளவில்
மிகச்சிறிய இக்கட்டுரை நமது உரையாடலின் திசைவழியை மாற்றக்கூடியது என்று நான்
நம்புகிறேன். அதனால் இக்கட்டுரையின்
விவாதப்புள்ளிகளை இங்கே தொகுத்துச் சொல்ல முயற்சிக்கிறேன்.
1. சாதி குறித்த பொதுவான அபிப்பிராயம்:
“‘சாதி’, இன்றளவும் விளக்கப்படாததாகவே இருக்கிறது;
அதனைப் புரிந்து கொள்வதும் எளிதாயில்லை.
அது ஒரு பழஞ்சமூக நிறுவனம்; அதன் சிக்கல், கோட்பாடு சார்ந்ததும் செயல்பாடு சார்ந்ததுமாக
இருக்கிறது; அது வட்டாரப் பிரச்சினையாகவே வெளிப்படுகிறது; ஆனால், உலகச் சிக்கலாக
மாறிவிடக்கூடிய அத்தனைக் கொடூரங்களும் அதற்கு உண்டு.”
இத்தகைய முன்னுரையோடு தான் அம்பேத்கர் தனது கட்டுரையை ஆரம்பிக்கின்றார். ‘உலகச் சிக்கலாக
மாறிவிடக்கூடியது’ என்ற எச்சரிக்கை,
கொலம்பியா பல்கலைக்கழக அமெரிக்கர்களுக்கு இந்தப் பிரச்சினையின் தீவிரத்தை
உணர்த்துவதற்காக சொல்லப்பட்ட மிகை வாசகமாக இருந்தாலும், அம்பேத்கர் அதன் பின்
சாதியமைப்பு குறித்து முன்வைக்கும் விளக்கங்கள் ‘அது அப்படித்தானோ’ என்ற சந்தேகத்தை நமக்குள்ளும் எழுப்புகின்றன.
அதே போல், சாதி என்பது ஒரு சமூக நிறுவனம் என்ற அவரது பார்வையும் இந்த இடத்தில்
முக்கியமானது.
2. ஏன் சாதியை எளிதாக விளங்கிக்கொள்ள முடிவதில்லை?
இந்தக் கேள்விக்கு அம்பேத்கர் சொல்லக்கூடிய பதில் கொஞ்சம்
ஆச்சரியமானது. சாதி, மிகத் தெளிவாக
மக்களுக்குள் பேதங்களை வலியுறுத்துகிறது; கூசாமல், அந்த பேதங்களுக்கான நியாயங்களையும்
பேசுகிறது. ஆனாலும், இந்திய சமூகம் ஒன்றே
போல் இன்றும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மிகக் கொடூரமான உட்பகைகளை சமூகக் காரணியாகக் கொண்ட குழுக்கள், ஒரே சமூகமாக
எவ்வாறு ஒருங்கிணைந்து இருக்கமுடிகிறது என்ற கேள்வியே சாதியை விளங்காப்புதிராக
மாற்றிக் கொண்டிருக்கிறது. அப்படியானால், சாதி உண்மையிலேயே இந்த நாட்டின் குடி
மக்களை விரோதமுடைய சாதிய குழுக்களாக மாற்றிவிடவில்லையா? இல்லை, அப்படித்தான் மாற்றுகிறது என்றால்,
இந்தியா எவ்வாறு இன்னும் பல்வேறு சாதியத் துண்டுகளாக சிதறாமல் இருக்கிறது?
இதற்கு
அம்பேத்கர் சொல்லக்கூடிய பதில் வரலாறு சார்ந்தது.
ஆரியர்கள், திராவிடர்கள், மங்கோலியர்கள், சிந்திக்கள் போன்ற பல்வேறு
பழங்குடி வகையினர், இந்தியாவிற்குள் வந்து குடியேறி, ஆரம்பத்தில் தங்களுக்குள்
முட்டி மோதிக்கொண்டதாக அம்பேத்கர் கருதுகிறார்.
இத்தகைய இனக்குழு மோதல்களின் பாதகமான விளைவுகளால், இக்குழுக்கள் நாளடைவில்
தங்களுக்கு இடையிலான வேற்றுமைகளிலிருந்து ஒரு பொதுவானப் பண்பாட்டைக்
கண்டடைந்தார்கள். அந்த வகையில், இனக்குழு என்று எடுத்துக் கொண்டால், இந்தியா
பன்முகங்களை உடையது. ஆனால், பண்பாட்டு
அடிப்படையில் தனித்துவமான ஒருமைத்தன்மையை அது கொண்டிருக்கிறது.
இந்தப்
பண்பாட்டு ஒருமையினாலேயே சாதிப் பிரச்சினையை நம்மால் முழுமையாக விளக்கமுடியவில்லை. ‘பல்வேறு சமூகக் குழுக்களின் மேம்போக்கான, இயந்திரத்தனமான,
செயற்கையானக கூட்டமைப்பு இந்தியா’ என்று கருதினால், சாதியை எளிதாக நம்மால் புரிந்து கொள்ள முடியும்.
ஆனால், நமது
சூழல் அப்படியல்ல. சாதியின் பெயரால்
பிரிந்து நிற்கிற மக்கள் பண்பாட்டளவில் ஒற்றுமைகளைக் கொண்டிருக்கிறார்கள். இது
எவ்வாறு சாத்தியமாகிறது என்ற கேள்விக்கு அம்பேத்கர் அளிக்கும் பதில் இன்னும் சுவராஷ்யமானது.
சாதியமைப்பை
ஒரு பொட்டலம் என்று அழைக்கிறார் அம்பேத்கர். ஆச்சரியம் வேண்டாம், நிஜமாகவே
அப்படித்தான் சொல்கிறார்!
சாதி என்பது,
தங்களுக்குள்ளே வலுவான பண்பாட்டு இணக்கத்தைக் கொண்டு ஏற்கனவே ஒன்றாய் திரண்டுள்ள சமூக
அமைப்பின் மீது சுற்றப்பட்ட பொட்டலம். அதாவது,
இந்திய சமூகம் சாதியால் ஏந்தப்பட்டிருக்கிறது.
ஒரு உறை போல இந்தச் சமூகத்தை சாதியமைப்பு மூடி மறைத்துக் கொண்டிருக்கிறது.
உண்மையில், சாதி
எவ்வாறு தோன்றியது என்ற கேள்வி, இந்தச் சமூகத்தின் மீது சாதி என்ற உறை அல்லது
பொட்டலம் எவ்வாறு இடப்பட்டது என்ற கேள்வியாகும் என்று எழுதுகிற அம்பேத்கர் இதையே இந்தக்
கட்டுரையில் தான் செய்ய இருப்பதாகவும் தெரிவிக்கிறார்.
ஏறக்குறைய
இந்திய சமூக அமைப்பு குறித்து தனக்கிருக்கும் பார்வையை முழுமையாக வெளிப்படுத்தி
விடுகிற அம்பேத்கர், இந்த இடத்தில் வேறு சில செய்திகளையும் சந்தடிச் சாக்கில்
சொல்லி விடுகிறார்:
·
சாதி பின்னாட்களில்
ஏற்படுத்தப்பட்ட ஒரு அமைப்பு.
·
‘சாதிக்கு முந்தைய
இந்திய சமூகம்’ தனது வெவ்வேறு இனக்குழுக்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பை பண்பாட்டளவில்
ஏற்படுத்தியிருந்தது.
·
சாதி என்பது இந்த
ஒருங்கிணைப்பை மறைத்து இடப்பட்டிருக்கும் மேலுறை – அப்படியானால், கழற்றி
எறிந்துவிடக்கூடியது.
3. சாதி குறித்து ஏற்கனவே சொல்லப்பட்டிருக்கும் விளக்கங்கள் என்னென்ன?
செனர்ட், நெஸ்ஃபீல்ட், ரிஸ்லி மற்றும் கேட்கர் என்ற நான்கு ஆய்வாளர்களின்
சாதி குறித்த ஆய்வுகளை தனது ஆய்விற்காக எடுத்துக் கொள்ளும் அம்பேத்கர் அவர்களின்
முடிவுகளின் மீது கீழ்க்கண்ட விமர்சனங்களை முன்வைக்கிறார்.
·
சாதி குறித்து ஆய்வு
செய்பவர்கள் அனைவரும், ஏதாவதொரு சாதியை எடுத்துக் கொண்டு அதனை ஒரு முழுமையானக்
காரணியாகக் கருதி தங்களது ஆய்வுகளை மேற்கொள்கிறார்கள். ஆனால், சாதியை ஒரு பெரும் அமைப்பின்
ஒருங்கிணைந்தக் கூறாகக் கருதினால் மட்டுமே அதன் இயல்புகளை நம்மால்
அறியமுடிகிறது. ஒவ்வொரு சாதியையும், சாதி
ஒழுங்கமைப்பில் வைத்து யோசிக்க வேண்டியது அவசியம்.
·
பெரும்பாலான
ஆய்வாளர்கள், ‘தீட்டு’ என்பது சாதியின் முக்கிய குணம் என்று கருதுகின்றனர். அதைக் கொண்டு சாதி சார்ந்த அனைத்தையும்
விளக்கிவிட முடியும் என்று கருதுகின்றனர். ஆனால், தீட்டு என்பது சமயச்சடங்கோடு
மட்டுமே தொடர்பு கொண்டுள்ளது. அது முழுக்க
முழுக்க பூசக சாதியின் எல்லைக்குள் மட்டுமே அர்த்தமுடையது. பூசக சாதி, படிநிலைவரிசையில் உயர்ந்த இடத்தைப்
பிடித்துக் கொண்டிருப்பதால் சாதியமைப்பு என்றதும் அவர்களுக்கு தீட்டு முக்கியமான
விவாதப்பொருளாய் தெரிகிறது.
·
சாதி என்பது
'பிறருடனான' தொடர்பு விலக்கம் என்றும் சொல்லப்படுகிறது. ஆனால், பிறருடன் தொடர்பின்மை என்பது சாதி உருவானதற்கான
காரணம் அல்ல; அது சாதியின் விளைவு. சாதி உருவாக்கத்திற்கான காரணம் விலக்குகள்
அல்ல. தன்னைச் சிறப்புத் தன்மைகள் கொண்ட
ஒன்றாக சித்தரிக்க விரும்பும் சாதி பிறரிடமிருந்து தன்னை விலக்கிக் கொள்கிறது.
எனவே, விலக்கு என்பது சாதியின் விளைவு தானேயொழிய காரணம் அல்ல.
·
ஒரு சாதி, தன்னை
சாதியாகவே தக்கவைத்திருக்க சில அடிப்படையான குணங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்று சொல்கிறார்கள்:
ஒன்று, அச்சாதியினுள் பிறந்தால் மட்டுமே அதன்
உறுப்பினராதல் முடியும் என்ற கட்டுப்பாடு; இரண்டு, பிற சாதிகளோடு எந்தக்
காரணத்தைக் கொண்டும் மணவுறவு பேணாதிருத்தல்.
ஒரு வகையில் இவ்விரண்டு குணங்களுமே ஒன்று தான். தன் சாதிக்குள் மட்டும்
தான் திருமணவுறவு (அகமணமுறை) சாத்தியம் என்று சாதித்து விட்டால், அச்சாதியினுள்
பிறந்தால் மட்டுமே உறுப்பினராதல் முடியும் என்பது இயல்பாகவே நிறைவேறி விடுகிறது.
4. சாதிக்கும் அகமணமுறைக்குமான தொடர்புகள்:
பிற
ஆய்வுகளைப் பற்றிய விமர்சனங்களின் மூலம் அம்பேத்கர் ஒரு விஷயத்தை நமக்கு சுட்டிக்காட்டுகிறார்.
அகமணமுறை.
சொந்த
சாதிக்குள் மட்டுமே மணமுடிக்கும் பழக்கம்!
மானிடவியலில்,
இரண்டு திருமணமுறைகள் பற்றி மீண்டும் மீண்டும் விவாதிக்கப்பட்டுள்ளது – அகமணம்,
புறமணம். ஒரு இனக்குழு (நமக்கு சாதி) தனது
உறுப்பினர்களுக்கான திருமணமுறைகளை ஒழுங்குபடுத்தும் பொழுது, யார் யார், யார் யாரை திருமணம் செய்து
கொள்ளலாம் என்பதையும் வரையறை செய்கிறது.
அவ்வாறு வரையறுக்கையில் இரண்டு முறைகள் முன்மொழியப்படுகின்றன – தனது
இனத்திற்குள்ளேயே தான் திருமண பந்தங்களைத் தேடிக்கொள்ள வேண்டும் என்ற கட்சி
(அகமணம்), தனது இனத்திற்குள் கண்டிப்பாய் மணவுறவுகளை ஏற்படுத்திக்கொள்ள முடியாது
என்று சொல்லும் கட்சி (புறமணம்). இது
குறித்து ஆழ, அகல ஆய்வுகள் நடைபெற்றிருக்கின்றன என்றாலும் இந்த இடத்திற்கு இது
போதும் என்பதால் அடுத்த கட்டத்திற்கு சென்று விடுகிறேன்.
சாதிகள்,
இந்த அகமணமுறையைத் தங்களது இன்றியமையாத பண்பாக அறிவிப்பதோடு அதனைப்
பாதுகாப்பதற்காக கொலையும் செய்யக்கூடிய அளவுக்குத் துணிவதை எண்ணி, அம்பேத்கர் இந்த
அகமணமுறையில் ஏதோ அடங்கியிருக்கிறது என்ற முடிவிற்கு வருகின்றார். அகமணமுறையை
இன்னும் கொஞ்சம் தீவிரமாக அணுகினோம் என்றால் புதிய விடைகள் ஏதாவது கிடைக்க
முடியும் என்ற நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார்.
ஆனாலும் ஒரு
சந்தேகமும் ஒட்டிக் கொண்டே வருகிறது.
அகமணமுறைக்கும் சாதியமைப்பிற்கும் நெருங்கிய உறவு இருக்கிறது என்றால்,
உலகின் வேறு பல பகுதிகளில் காணப்படும் அகமணக் குழுக்களிடமும் இந்த சாதியமைப்பு
உருவாகியிருக்க வேண்டுமே! அப்படி ஒன்று நடக்கவில்லையே! இந்தியாவில் கடைபிடிக்கப்படும் அகமணமுறை
மட்டும் தானே சாதியமைப்போடு காணப்படுகிறது! இதற்கு என்ன காரணம்?
இந்த இடத்தில்
அம்பேத்கர், சாதிக்கு முந்தைய இந்திய சமூகம் குறித்து முன்வைத்த அதே கருதுகோளை
துணைக்கு அழைத்துக் கொள்கிறார். அதாவது,
இத்தீபகற்பத்திற்குள் இடம்பெயர்ந்து குடியேறி, தங்களுக்குள் வெகுவாக மோதிக்கொண்டு,
உயிரிழப்புகளை சந்தித்திருந்த வெவ்வேறு இனக்குழு மக்கள், ஒரு பொதுத் தனமையை எட்டி,
அதனைப் பண்பாடாக வளர்த்தெடுத்தனர் என்று முன்மொழிந்த கருதுகோளை இன்னும் விரித்து,
மோதிக்கொண்டிருந்த குழுக்கள் தங்களுக்குள் இணக்கத்தை எட்டும் விதமாக, புறமணமுறையை
வடிவமைத்து வைத்திருந்தன என்கிறார்.
அதாவது,
சாதியமைப்பு ஏற்படுவதற்கு முன்னால் இந்த நிலப்பரப்பில் அகமணமுறை
தடைசெய்யப்பட்டிருந்தது. அருகாமை
குழுக்களோடு அணுக்கத்தை ஏற்படுத்துவதற்கும் அதனை நிரந்தரமாக்குவதற்கும் மக்கள்
புறமணமுறையையே வழக்கமாகக் கொண்டிருந்தனர்.
ஆனால், என்றைக்கு புறமணமுறை வழக்கொழிந்து அகமணமுறை மேலோங்கியதோ அன்றைக்கு
சாதியமைப்பும் தோன்றியது. எனவே, அகமணமுறையும்
சாதியும் ஒன்றையொன்று பிரிக்கமுடியாதவை என்பது அம்பேத்கரின் கருத்து.
5. சாதியின் தொழிற்படுமுறை:
இந்த இடத்தில்,
புறமணமுறை கடைபிடிக்கப்படும் சூழலில் ஒரு சமூகக்குழு தன்னை அகமணமுறைக்கு மாற்ற
விரும்பினால் என்னென்ன சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றொரு கற்பனையை
அம்பேத்கர் செய்யத் தொடங்குகிறார்.
இப்படியான கற்பனை அகமணமுறையின் நெருக்கடிகளை உணர்ந்து கொள்ள உதவும் என்பது
அவர் நம்பிக்கை.
முதலாவதாக, தன்னை
தனக்குள்ளேயே சுருக்கிக் கொள்ள, அதாவது அகமணமுறையை விரும்பக் கூடிய குழு தன்னைச் சுற்றி
வலிமையான காப்பு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள வேண்டியிருக்கிறது. இந்த வளையம் ஒரு அரண் போல செயல்பட்டு
வெளியிலிருந்து வரக்கூடிய அத்தனை நெருக்கடிகளிலிருந்தும் அதனைக் காக்கும் வேலையைச்
செய்யும். ஆனால், தன்னை அகமணமுறையின்
மூலம் தனிமைப்படுத்திக் கொள்ள விரும்பும் குழுவிற்கு வெளியிலிருந்து வரும்
நெருக்கடிகளை விட உள்ளிருந்து கிளம்பும் நெருக்கடிகளே அதிகமாக இருக்கும்.
இந்த
நெருக்கடியை, ஆண், பெண் விகிதாச்சார சமநிலையின்மை என்று நாம் அழைக்க முடியும்.
அகமணமுறையை நடைமுறைப்படுத்தும் பொழுது, தனது ஆண்களுக்கும் பெண்களுக்கும் திருமண இணைகள்
கிடைக்கும் வாய்ப்பு சரிசமமாய் இருப்பதை அக்குழு உறுதிப்படுத்த வேண்டியிருக்கிறது.
அவ்வாறு இல்லாத பட்சத்தில் இணைக்கான போட்டி அதிகரித்து, குழப்பங்கள் ஏற்படுவதோடு,
அகமணமுறையை மீறி புறமணமுறையில் திருமணவுறவுகளைத் தேடத் தொடங்கும் ஆபத்தும் ஏற்படுகிறது.
எனவே, அகமணமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்த விரும்பும் குழு, தனது ஆண் – பெண்
உறுப்பினர்களின் எண்ணிக்கை சமமாக இருக்கும் படி பார்த்துக்கொள்ள வேண்டியது
அவசியம்.
எப்பொழுது
அதிகப்படியான ஆண்களோ அல்லது பெண்களோ ஒரு சமூகத்தில் காணப்படுகிறார்களோ அப்பொழுது
அதன் அகமணமுறைக்கு ஆபத்து வந்து விடுகிறது.
குறிப்பாகச் சொன்னால், கணவனை / மனைவியை இழந்த உபரி பெண்கள் / ஆண்களை என்ன
செய்வது என்ற சிக்கலை அந்தக் குழு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.
இந்திய
அகமணக்குழு இந்த உபரி பெண்களையும் ஆண்களையும் கீழ்க்கண்ட முறைகளில் கட்டுப்படுத்த
முனைகிறது என்று அம்பேத்கர் கருதுகிறார்.
1. உடன் கட்டை மூலம் எரித்து விடுவது
2. ‘விதவை’ விதிகளின் மூலம் வீட்டிற்குள்ளேயே முடக்குவது
3. உபரி ஆண்களுக்கு சந்நியாசத்தை பரிந்துரைப்பது
4. தகுதிக்
குறைவான சமூகப் படி நிலையிலிருந்து சிறுமிகளை மணமுடித்து வைப்பது.
சாதி வேறு
அகமணமுறை வேறு இல்லையென்றால், அகமணமுறையை வெற்றிகரமாய் செயல்படுத்துவதற்கு எடுக்க
வேண்டிய நடவடிக்கைகளே, சாதியை வெற்றிகரமாய் நடைமுறைப்படுத்துவதற்கு செய்ய வேண்டிய
காரியங்களாகும். சதி, விதவை, குழந்தைத்
திருமணம் என்ற மூன்றையும் சமூக விழுமியமாக ஒரு சாதி கொண்டிருக்கிறது என்றால், அது
தனது அகமணமுறையை எந்த எல்லைக்கும் சென்று பாதுகாக்க விரும்புகிறது என்று
அர்த்தம். அதாவது, சாதியமைப்பை
பாதுகாப்பதற்காக எடுக்கப்படும் அதிரடி நடவடிக்கைகள் என்று பொருள். இதையே அம்பேத்கர், சாதி தொழிற்படும் முறை என்று
சொல்கிறார்.
(தொடரும்)
Comments
சாதியைக் காப்பாற்றுவது மட்டுமே சந்நியாசம்/ கைம்பெண் விதிமுறைகளின் நோக்கம் என்பதும் சரியாகப் படவில்லை. அதுதான் நோக்கமென்ற தர்க்கரீதியாகப் பார்த்தால் உபரி ஆண்களுக்கு சந்நியாசம், உபரிப்பெண்களுக்குக் கைம்பெண் விதிமுறைகள் என்றிருப்பதைவிட உபரி ஆண்கள் உபரிப்பெண்களை மட்டும் மணந்துகொள்ளலாம் என்று அனுமதிக்கப்பட்டிருக்கலாமே?
தவிர உபரி ஆண்கள் எல்லாருக்கும் சந்நியாசம் என்ற நடைமுறை இருக்கவில்லையே? மனைவியை இழந்தவர்கள் வறிய நிலையிலுள்ள சிறுமிகளை மணந்தது மிகப்பெரும் அளவில் நடந்ததே?
மேலும் கைம்பெண் கோலக் கொடுமைகள் உயர்சாதிகளில் மட்டுமே அதிகமாயிருந்ததாகவும் கேள்விப்படிருக்கிறேன். அப்படியானால் மற்ற சாதிகள் இந்த சமநிலை பற்றிக்கவலைப்படவில்லை என்று பொருளா?
இன்னொரு முக்கியமான கேள்வி பெண்கள் பற்றாக்குறையாக இருந்த காலத்தில் கூட இந்தக் கைம்பெண் விதிமுறைகள் தளர்த்தப்பட்டதாகத் தெரியவில்லையே?
ஒரு வேளை அம்பேத்கர் அவர்களின் கட்டுரை வட நாட்டு நிலவரங்களை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டதோ?
அகமணமுறையை வலுப்படுத்துவதற்காக சாதியமைப்பு கடைபிடித்த நான்கு சம்பிரதாயங்களில், முதலிரண்டு பெண்களுக்கும், பின்னிரண்டு ஆண்களுக்குமாக அமைந்திருந்தன. அவற்றுள் உடன் கட்டையும், ச ந் நியாசமும் நடைமுறைப்படுத்துவதற்கு சிக்கலான பரிந்துரைகள். அவற்றின் மாற்றுவடிவங்கள் தாம் - விதவைக்கோலமும், சிறு பெண்களை திருமணம் முடிப்பதும். 'உபரி பெண்களை' இந்த சமூகம் தேவையற்ற உறுப்பாகவே கருதி வந்தது. எனவே அவர்களை வீட்டிற்குள்ளேயே முடக்குவதற்கு தயாரானார்கள். முடிந்தால் எரித்து விடுவது (இது அதீத நிலை), இல்லையென்றால் பயனற்ற பொருளாய் (?) மூலையில் விட்டெறிவது என்பதில் எந்த சிக்கலும் இல்லை.
ஆனால், மனைவியை இழந்த ஆண்களை இவ்வாறு அவர்கள் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று கையாளமுடியவில்லை. அந்த ஆண் சமூகத்திற்கு எப்பொழுதுமே தேவையாக இருக்கிறான். எனவே அவனுக்கு ச ந் நியாசத்தைப் பரிந்துரைப்பதே கூட உச்சபச்ச வன்முறையாக (?) சமூகம் கருதியது. அதனால் தான் மிக எளிய முடிவாக, தன்னை விட அந்தஸ்தில் குறைந்த பிரிவிலிருந்து சிறு பெண்களைத் திருமணம் செய்து கொள்ளும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்கினர்.
சதியும், ச ந் நியாசமும் தீவிர நிலைப்பாடாகவும், விதவைக் கோலமும், சிறு பெண்கள் திருமணமும் மிதமான நிலைப்படாகவும் சமூகத்தில் மாறியிருந்தது.
இதனாலேயே, நிறைய விதவைகள், நிறைய சிறு பெண் திருமணங்கள்.
உபரி பெண்களையும் உபரி ஆண்களையும் இந்த சமூகம் ஒன்றே போல் கருதவில்லை என்பதை நாம் ஞாபகத்தில் கொண்டால், ஏன் அவர்களுக்கிடையே திருமண ஒப்பந்தம் இல்லை என்பது விளங்கும்.
ஆண்கள் எப்பொழுதும் தங்களையே தங்களை மட்டுமே பூஜிக்கிற பெண்களைத்தான் மனைவிகளாக விரும்புகிறார்கள்.
தன்னிலும் கீழ் நிலையிலுள்ள சமுகப் பெண்களை திருமணம் முடிக்க விரும்புகிற உபரி ஆண், ஏன் சிறு பெண்களாகத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்ய வேண்டும் என்று கேட்டுப் பார்த்தால், அந்த உபரி ஆண், உடலளவில் மட்டுமல்லாது (கற்பு) மனதளவிலும் அந்தப் பெண்கள் தூய்மையைப் பேண வேண்டும் என்று எதிர்பார்ப்பது விளங்கும்.
மேலும், உயர் குடி ஆண் (அவர் உபரியாக இருந்தாலு சரி) கீழ் குடி பெண்களின் பாலியல் நடவடிக்கைகளில் சந்தேகம் கொண்டிருக்கிறார் என்பதன் வெளிப்பாடு தான் சிறுமிகளாக அவர்களைத் திருமணம் செய்து கொள்வது.
சமூகம் தனது சம்பிரதாய விதிமுறைகளை எந்த சூழ் நிலையிலும் தளர்த்திக்கொள்வது இல்லை என்பதை நாம் கவனிக்கலாம். அதை ரகசியமாய் மீறிக்கொள்ளலாமே தவிர, வெளிப்படையாய் தளர்த்தும் பேச்சை சமூகம் என்றைக்கும் அனுமதிப்பதில்லை.
நீங்கள் எழுப்பிய கடைசி சந்தேகம், அம்பேத்கர் வட நாட்டு நிலவரங்களை அடிப்படையாக வைத்து.....? இக்கட்டுரையின் அடுத்த பகுதி வரைக்கும் காத்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
அதே போல், உயர் சாதிகள் இந்த சம்பிரதாயங்களைக் கடைபிடிப்பது போல், பிறர் கடைபிடிப்பது இல்லையே என்ற கேள்விக்கும் நீங்கள் கட்டுரையை தொடர்ந்து கவனியுங்கள் என்று தான் சொல்வேன். இந்தப் போலச் செய்தல் தானே கட்டுரையின் மையமே!
டி. தருமராஜ்