இளங்கோ எனும்
இனவரைவியலாளர்
1. புனைவின் சூத்திரங்களால் செய்யப்பட்ட மொழி:
‘பண்பாட்டை எழுதுதல்’ தொடர்பான விவாதங்கள் இலக்கியம், இனவரைவியல்,
வரலாற்றுவரைவியல் போன்ற எழுத்து தொடர்பான செயல்பாடுகளில் பல்வேறு மாற்றங்களையும்
அவற்றை அணுகுவதிலான முறைமைகளில் பல புதிய வழித்தடங்களையும் தோற்றுவித்துள்ளன. புனைவு மொழி, அறிவு மொழி என்ற இருவேறு
மொழிகளின் இடைவெளிகளை அது கணிசமாகக் குறைத்ததோடு, புனைவு – அறிவியல் என்று இருவேறு
நிலைப்பாடுகளின் தேவைகளை பூர்த்தி செய்து, அவ்வவற்றின் தனித்த குணநலன்களை
வெளிப்படுத்தும் தகுதிப்பாடு மொழிக்கு இருக்கிறதா என்ற ஆதாரமான சந்தேகத்தையும்
எழுப்பியது.
புனைவின் சூத்திரங்களால் தான்
மொழியின் அடிப்படை அலகுகள் செய்யப்பட்டுள்ளன என்ற சசூரின் விளக்கங்களுக்குப்
பின்பு, மொழியின் மூலமாக அறிவியலை வெளிப்படுத்துவது எவ்வாறு என்பது முறையியல்
சார்ந்த சிக்கல் என்பதை விடவும் மிகப்பரந்த அளவில் தத்துவார்த்த குழப்பங்களையும்
ஏற்படுத்தியிருந்தது. ஒன்றைப்
பிறிதொன்றிலிருந்து பிரித்தறிய முடியாத வகைக்கு புனைவெழுதியலும் இனவரைவியலும் வரலாற்றுவரைவியலும் ஒரே மாதிரியான மொழி வழி
வெளிப்பாட்டுக் குழப்பங்களைக் கொண்டிருப்பது விவரிக்கப்பட்டிருக்கிறது. புனைவு, இனவரைவு, வரலாற்றுவரைவு என்ற மூன்று
வெவ்வேறு (?) தளங்களில் பயணம் செய்பவர்களும் ‘பொய் – மெய்’ என்ற இரட்டை எதிர்மறைகள் தோற்றுவிக்கும் இருவேறு நிலைப்பாடுகளுக்கும் நியாயம்
செய்யும் விதத்தில் மொழி நடந்து கொள்கிறதா என்ற கேள்வியைத் தங்களுக்குள்ளும்
தங்களுக்கு இடையிலான உரையாடல்களிலும் கேட்டுக்கொண்டேயிருக்கிறார்கள். இந்த
உரையாடல்களால் சாத்தியமான ஏராளமான நகர்வுகளில், இலக்கியம் பண்பாட்டை நோக்கி நகர்ந்ததும்,
பண்பாடும் வரலாறும் ‘எழுதுதல்’ என்ற மொழிச்செயல் நோக்கி கவனம்
செலுத்தியதும் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தின.
2. இலக்கிய இனவரைவியல்:
பண்பாடு மற்றும் கடந்த காலம் தொடர்பான அறிவுத்
தொகுப்புகளை எழுத்தின் மூலமாக வெளிப்படுத்துகையில், எழுதி எழுதி மேற்செல்கிற
தன்னிலைக்கான பாத்திரத்திற்கான நிகழ்த்து வெளியைப் அப்பண்பாட்டு / வரலாற்றுப்
பனுவலுக்குள் இடம் பெறச்செய்வது எவ்வாறு, தனக்குள் சேகரமாகியுள்ள தொல் பொருண்மை
எச்சங்களை எழுதிச்செல்லும் தன்னிலை விட்டுச் செல்லும் இடைவெளிகளெங்கும் விதைத்து
வைத்து பனுவல்களை ரகசியங்களின் சொர்க்கமாக மாற்றி விடுகிற மொழியின் விளையாட்டை
மட்டுப்படுத்துவது எவ்வாறு என்பது போன்ற சவால்கள் பல புதிய பொருள்கோளியலுக்கும்,
வகைமைகளுக்கும் தொடக்கமாக அமைந்தன. இலக்கிய
ஆய்வுகள், ‘பண்பாட்டு ஆய்வுகள்’ என்ற பெயரின் கீழ் அழைக்கப்படலாயின.
அதன் பின்பு இலக்கிய ஆய்வுத் தளத்தில் மாந்தரீக யதார்த்தவாதம், இனவரைவியல் கவிதை /
நாவல் போன்ற புதிய கலைச்சொற்கள் புழங்கத்தொடங்கின. இலக்கியப் பனுவல்கள் பண்பாட்டுப் பெரும்
சூழலுக்குள் தான் தொழிற்படுகின்றன என்பதும், ஒரு சமூகத்தின் பண்பாடு
அக்காலகட்டத்து இலக்கியப் பனுவல்களுக்குள் தொடர்ச்சியாக பதிவு செய்யப்படுகின்றது
என்பதும் இலக்கிய ஆய்வுகளில் பெரும் மாற்றங்களை விளைவித்தன. குறிப்பாக, பிரதிகளிலிருந்து சமூகத்தை விளங்கிக்
கொள்ளும் போக்கு பன்முகப்பட்ட பிரதி வாசிப்பு முறையியல்களுக்கு தோற்றுவாயாக
அமைந்தன.
இலக்கியப் பிரதிகளிலிருந்து சமூக வாழ்க்கையை அறிந்து
கொள்ள முடியுமா என்பது மேற்கத்திய ஆய்வுமுறைகளுக்கு வேண்டுமானால் நவீன விவாதப்
பொருளாக இருக்கலாம். ஆனால், தமிழ்ச்
சூழலில் இலக்கியங்களிலிருந்து பண்பாட்டுத் தரவுகளை வருவித்துக் கொள்வதற்கு நீண்ட
நெடிய வரலாறே இருக்கிறது. நினைவுக்கெட்டிய
காலத்திலிருந்து தமிழில் இலக்கியப் பிரதிகளை அவற்றின் பண்பாட்டுத் தகவல்களுக்காகவே
பொருள்கொண்டு வாசித்து வந்திருக்கிறார்கள்.
இறையனாரின் களவியலுக்கு நக்கீரர் எழுதிய உரையிலிருந்து, விளக்கமளிப்பதையே
முழு நேரத்தொழிலாகக் கொண்டு பல்வேறு மூலப்பிரதிகளுக்கு உரைசெய்த
நச்சினார்க்கினியரது உரைகள் வரையில் இலக்கிய -
இலக்கணப் பிரதிகளிலிருந்து அவ்வவ் காலகட்டத்து சமூக நிலையை எவ்வாறு
வருவிப்பதென்பது இன்றியமையாத விவாதப்பொருளாகவே இருந்து வந்துள்ளது. உரையாசிரியர்களுக்கு இடையேயான மாறுபாடுகள்
மூலப்பிரதியின் சொற்கட்டுகள் குறித்தும், இன்னின்ன சொற்களின் பண்பாட்டுப் பொருண்மை
இன்னின்ன என்பவற்றில் தான் இருந்தனவே தவிர, புனைவிலக்கியப் பிரதிகளில் பண்பாட்டு
யதார்த்தம் பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதில் அவர்களுக்குள் எவ்விதக்
கருத்துமாறுபாடும் இருந்திருக்கவில்லை.
ஏறக்குறைய ஒரு இலக்கியப் பிரதியின் நோக்கமே கூட பண்பாட்டைப் பதிவு செய்வது
தான் என நம்பிருந்தார்கள் என்று தான் தோன்றுகிறது.
இலக்கியத்திற்கும் பண்பாட்டிற்குமான உறவைப் பற்றிய
தீர்மானமான எண்ணமாக இது விளங்கியது என்றாலும், இன்னொரு வகையில், இலக்கியப்
பனுவல்களின் புனைவுவெளி குறித்து நமது மரபில் சொல்லிக்கொள்வது போல் ஏதாவது
பேசப்பட்டிருக்கிறதா என்று தேடிப்பார்த்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. பனுவல்களில் வெளிப்படும் புனைவின் சாத்தியங்கள
குறித்தும், அவற்றிற்கும் யதார்த்த வாழ்விற்குமான இடைவெளிகள் குறித்தும் அதிகம்
கவலைப்பட்டது போல் தோன்றவில்லை. மிக நீண்ட
காலம் செல்வாக்கோடு திகழ்ந்த உரையாசிரியர் மரபு, இலக்கியப்பிரதிகளைக் கடந்த கால
தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு வெளியை விளங்கிக் கொள்வதற்காகவே பயன்படுத்தி
வந்துள்ளது.
3. தமிழ்ப் பொருள்கோளியல்:
பன்னெடுங்கால வரலாற்றைக் கொண்டுள்ள தமிழ் எழுத்துலகம் தனது
இலக்கியப் பிரதிகளை அவையவை எழுதப்பட்ட சமகாலத்தில் பயன்படுத்திக்கொண்டதைக்
காட்டிலும் பிறிதொரு காலத்திலேயே (அதாவது நெடுங்காலத்திற்குப் பின்) முழுமையாக
வாசிக்கப்பட்டன என்று நம்மால் எடுத்துக்காட்டுகளுடன் நிரூபிக்க முடியும். சங்க இலக்கியப் பிரதிகள் என்று
வரிசைப்படுத்தப்படுபவை அனைத்தும் அவை புனையப்பட்ட காலம் கடந்து (கடந்து என்றால்
ரொம்ப க....டந்து) தொகுப்புகளாகத் திரட்டப்பட்ட பின்பே கொஞ்சநஞ்ச
பயன்பாட்டிற்காவது கொண்டு வரப்பட்டன. அக்கவிதைகள் உதிரிப்பாடல்களாக எழுதப்பட்ட
காலகட்டத்தில் அவற்றிற்கான வாசகப்பரப்பு என்று ஏதாவது இருந்திருக்க முடியுமா
என்பது பற்றி வழக்கம போல் நமக்கு அதீத புனைவுகள் தான் சொல்லக்கிடைக்கின்றன. அப்புனைவுகளும் கூட புலவர்களாலும் அரசர்களாலும்
செய்யப்பட்ட வாசகக்கூட்டத்தைத் தான் நமக்குக் கதைகளாய் விளக்குகின்றன.
சொல்லப்போனால், ஒவ்வொரு பாடலுக்குமான திணை, துறை போன்ற குறிப்புகளையும் தொல்
மரபுகளையும் அப்பிரதிகளின் மீது அடுக்கடுக்காய் உரையாசிரியர்கள் இணைத்த பின்பே
அவற்றின் வாசகத்தளம் விரிவடைந்திருக்கிறது அல்லது அப்பாடல்களை வாசிக்க விரும்பும்
வாசகத்தளம் உருவான பின்பு உரையாசிரியர்கள் என்றொரு புதிய பனுவலறிஞர் குழு
வரலாற்றில் தோற்றம் பெறுகிறது. எழுத்தறிவு
தொடர்பான ஏராளமான சமூகக்கட்டுப்பாடுகளும், விதிமுறைகளும் நிலவிய அக்காலகட்டம்
பற்றி எழுதுகையில் ‘வாசகத்தளம்’ என்ற சொல்லைப் பயன்படுத்துவது
சற்றே அதிகம் தான் என்றாலும் இந்த இடத்திற்கு பொருத்தமான வேறு வார்த்தை எதுவும் தென்படவில்லை. அதற்கு முன், அதாவது உரையாசிரியர்களின் உதவிகள்
தேவைப்பட்டிருக்காத காலகட்டங்களில் இப்பிரதிகளுக்கென்று வாசகர்கள் என்று யாராவது
இருந்திருப்பார்களா, இருந்திருந்தால் அவர்கள் இப்பிரதிகளை எவ்வாறு வாசித்து
அறிந்திருந்தார்கள் என்பது குறித்து நமக்கு நம்பகமானத் தகவல்கள் இல்லை.
‘பொருள்கோளியல்’ பற்றிய பதிவுகள் தொல்காப்பியத்தில் காணப்படுகின்றன என்றாலும்
அது நீண்ட, தொடர்ச்சியான, நிறுவனம் சார்ந்த
செயல்பாடாக உருவெடுப்பதற்கு கி.பி. 8ஆம் நூற்றாண்டு வரையில்
காத்திருக்கவேண்டியிருந்தது. பொருண்மை
சார்ந்த பஞ்சமொன்று நிலவியதாகவும், அதனைத் தீர்ப்பதற்காக பாண்டிய மன்னனொருவன்
ஆலவாய் தெய்வத்தை நாடியதாகவும், தெய்வமே இறையனாராக உருவெடுத்து வந்து பனுவலொன்றை
செய்த்ததாகவும், அப்பனுவலின் பொருண்மையில் சச்சரவுகள் ஏற்பட முருகக்கடவுள்
உருத்திரசன்மனாக அவதரித்து பொருள்கோளியலின் நியாய தர்மங்களை விளக்கியதாகவும்
தொன்மக்கதையொன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.
இக்கதையின்படி தொல்காப்பியப் பொருளதிகாரத்தை படித்து, விளக்கம்
சொல்லக்கூடிய புலவர்கள் இல்லாத பஞ்சமே பாண்டிய நாட்டை ஆட்டிப்படைக்கிறது. அதாவது தொல்காப்பியம் எழுதப்பட்டு சுமார்
ஆயிரம் வருடங்களுக்குப் பின் அதனை வாசித்துப் பொருள் சொல்லத் தகுந்த சான்றோர்கள்
இல்லாத நிலையொன்று ஏற்பட்டிருக்கிறது.
இந்தப் பொருண்மைப் பஞ்சத்தின் விளைவாகவே தமிழ்ப் பொருள்கோளியல் மரபைச்
சார்ந்த உரையாசிரியர்கள் தோற்றம் பெறுகிறார்கள். உரையாசிரியர்களின் தோற்றத்தை
பொருள்கோளியலின் தோற்றம் என்று நாம் ஏற்றுக்கொண்டால், இப்படியும் நம்மால் சொல்ல
முடியும். அதாவது, கடந்த காலப் பிரதிகளை விளங்கிக் கொள்வதிலிருந்து
தான் தமிழின் பொருள்கோளியல் தோற்றம் பெறுகிறது.
4. எழுத்து என்ற
அரசியல்:
கடந்த காலப் பிரதிகளை வாசிப்பதற்கும் சமகாலப் பிரதிகளை வாசிப்பதற்கும் கணிசமான
வேறுபாடுகள் உள்ளன. சமகாலப் பிரதிகள் பெரும்பாலும் அவை உருவாக்கும்
உணர்வெழுச்சிக்காகவும் கருத்தியல் நிலப்பாட்டிற்காகவுமே வாசிக்கப்படுகின்றன. சமகாலப் புனைவிலக்கியங்களில் அது வரை சொல்லப்பட்டிராத,
கேள்விப்பட்டிராத பண்பாட்டுத் தகவல்கள் முதன்முறையாய் பதிவு
செய்யப்பட்டிருந்தாலும் அவ்விலக்கியப் பிரதியை நாம் பண்பாட்டுக் களஞ்சியமாகவோ
பெட்டகமாகவோ பாவிப்பது இல்லை; மாறாக, அவ்விலக்கியப் பிரதிகளில் பண்பாட்டுக் கூறுகள்
பதிவு செய்யப்படும் நிகழ்வையும் கூட கருத்தியல் நிலைப்பாடாகவே விளங்கிக்
கொள்கிறோம். இருபதாம் நூற்றாண்டின்
பிற்பகுதியில் நவீனத் தமிழிலக்கியப் பரப்பைப் பெரிதும் பாதித்திருந்த வட்டார
இலக்கியம் மற்றும் தலித் இலக்கியம் என்ற இரு வகைமைகளும் பதிவு செய்த பண்பாட்டு
வெளிகள் முற்றிலும் புதிதானவை தான் என்றாலும், அப்பிரதிகளின் பலம் அவற்றில் பதிவு
செய்யப்பட்ட பண்பாட்டுத் தகவல்களில் இருக்கவில்லை; அப்பதிவுகளின் வழியே முன்
வைக்கப்பட்ட அரசியல் சொல்லாடலில் தான் மேலோங்கியிருந்தது. இவ்வரசியல் சொல்லாடலை
முன்னிட்டே அவ்விருவகைப் பிரதிகளும் எழுதப்பட்டன, வாசிக்கப்பட்டன,
சிலாகிக்கப்பட்டன. என்ன எழுதப்படுகிறது
என்பதைக் காட்டிலும் ‘எழுதப்படுகிறது’ என்ற தகவலே
முதன்மையானதாகக் கருதப்பட்டது. ஆனால்,
கடந்த கால இலக்கியப் பிரதிகளை எதிர்கொள்ளும் மனோபாவம் நிச்சயமாய் இதிலிருந்து
வேறுபட்டதாகவே அமைந்துள்ளது.
இந்த இடத்தில் இன்னுமொரு செய்தியையும் நாம் யோசித்துப் பார்க்கலாம். கடந்த காலப் பிரதிகளை வாசித்து விளங்கிக்
கொள்வது தான் சிக்கலான காரியமாகவும், அதற்கென்று தனியான திறமைகளைக் கொண்ட
‘உரையாசிரியர்’ என்ற அறிஞர்கள்
தேவைப்படுகிறார்களேயொழிய, சமகாலப் பிரதிகளை வாசிப்பதிலும் விளங்கிக் கொள்வதிலும்
தமிழ்ச் சமூகத்திற்கு எந்தவித பிரச்சினையும் இருந்திருக்கவில்லை. இதுவும் கூட, தமிழ்ப் பொருள்கோளியலானது
பிரதியினுள் விரவியிருக்கிற பண்பாட்டுத் தகவல்களை உணர்ந்தறிவதைத் தான் முதன்மைச்
சிக்கலாகக் கொண்டிருந்தது என்பதையே மீண்டும் வலியுறுத்துகிறது.
5. பிரதிகளின்
காரண காரியங்கள்:
நீண்ட எழுத்து மரபைக் கொண்டிருக்கும் சமூகங்கள் தங்களது கடந்தகால இலக்கியப் பிரதிகளை
மீண்டும் மீண்டும் வாசித்துக் கொண்டே தான் இருக்கின்றன. இந்த வாசிப்புகள் பல்வேறு காரணங்களுக்காக
நடைபெறமுடியும் – தொன்மையைப் போற்றும் நோக்கில் சில சமயம், சமகால இலக்கிய
உருவாக்கங்களில் தேக்க நிலையை உணரும் பொழுது சில சமயம், புதிய விளக்கங்களுடன்
அப்பிரதிகள் மீண்டும் முன்வைக்கப்படும் பொழுது சில சமயம் என்று அவற்றிற்கானக்
காரணங்கள் வெவ்வேறாக இருக்கமுடியும்.
ஆனால், செழுமையான இலக்கிய மரபைக்கொண்டுள்ள தமிழில், கடந்த கால இலக்கியப்
பிரதிகள் ஒவ்வொரு முறை திரும்பக் கண்டெடுக்கப்படுகையிலும் ஒரே ஒரு காரணம் தான்
அதன் அடி நாதமாக இருந்திருக்கிறது – அது, கடந்த கால தமிழ் சமூகத்தில் மக்கள்
வாழ்ந்த முறைமைகளைத் தெரிந்து கொள்ளுதல்!
இலக்கியப் பிரதிகள், அவற்றின் முதன்மைப் பண்பான புனைவிற்காக அல்லாமல், அதில்
சந்தேகத்திற்கிடமான வகையில் பதிவு செய்யப்பட்டுள்ள சமூக யதார்த்தத்திற்காகவும்
வரலாற்றிற்காகவும் ‘மறுவாசிப்பு’ (?) செய்யப்படும்
போக்கினை உரையாசிரியர்கள் காலகட்டத்திலேயே நாம் முதல்முறையாய்
சந்திக்கின்றோம். இக்காலகட்டத்தில் கடந்த
கால இலக்கியப் பிரதிகள் ‘பொக்கிஷங்களாகவும்’, ‘செல்வங்களாகவும்’ விவரிக்கப்படுகின்றன.
அவற்றின் பொருண்மையை அறிவது புலமையின் உச்சமாகக் கருதப்படுகிறது. ‘இலக்கியப் பிரதியின் பொருளைத் தெரியாதிருந்து
எழுத்து, சொல் என்று மொழியின் இலக்கணங்களை மட்டும் அறிந்திருப்பதால் என்ன பயன்?
பொருண்மையை அறிதல் தானே அனைத்து விதமான மொழிச் செயல்பாடுகளுக்கும் ஆதாரமானது?’ என்று களவியலுக்கான நக்கீரர் உரையில் கேட்கப்படுவது,
இலக்கியப்பிரதியின் புனைவுவெளியைக் குறித்தது அல்ல; அப்பிரதிகளின் காரண காரியங்களை
முன்னிட்டே அந்தக் கேள்வி எழுப்பபடுகிறது.
6. பிரதி பற்றிய
பிரதிகள்:
ஒரு குறிப்பிட்ட பிரதி என்ன காரணத்திற்காக, யாரால், எங்கே, எப்பொழுது, எவ்வாறு
உருவாக்கப்படுகிறது என்பதும், அப்பிரதியில் குறிப்பிடப்படும் செய்திகள் யாவை,
நபர்கள் யார் போன்ற தகவல்களே இன்றியமையாதத் தகவல்களாகக் கருதப்படுகின்றன.
இதனாலேயே, பழந்தமிழ் இலக்கியங்களுக்கான விளக்கங்களை எழுதும் உரையாசிரியர்கள்
அவ்வவ் பிரதி பற்றிய பிரதிகளை உருவாக்குவதனையே தங்களது முதன்மை நோக்கமாகக்
கொண்டிருந்தனர். ஏராளமான பழந்தமிழ்
இலக்கியப் பிரதிகளை அச்சு வடிவத்திற்குக் கொண்டு வந்த உ.வே. சாமிநாதன் தனது பதிப்பு
வேலையின் முக்கியப் பகுதியாக அப்பிரதிகளைப் ‘பாடினோர் வரலாறு’, பிரதிகளில் ‘பாடப்பட்டோர் வரலாறு’ என்ற நீண்ட பகுதியை எழுதுவதை நாம் கவனிக்கலாம்.
வரலாற்றை எழுதுதல் என்பதும், பண்பாட்டைப் பதிவு செய்தல் என்பதும் இலக்கிய
உருவாக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்ட முறையியல்களையும் அடிப்படைகளையும்
கொண்டவை என்ற யோசனை தமிழில் விவாதிக்கப்பட்டதற்கான சான்றுகள் இல்லை. வரலாறு, பண்பாடு, கணிதம், தத்துவம், இலக்கியம்
போன்றவைகளுக்கிடையே ஏதேனும் வேறுபாடு நிலவியதா என்பதிலும் தெளிவில்லை. வரலாற்றுப்பதிவுகளின்
முழுத்தோரணையையும் கொண்டுள்ள பதிற்றுப்பத்து, புனைவிலக்கியத்தின் அனைத்து
சாத்தியங்களையும் துல்லியமாய் பயன்படுத்திக்கொண்ட பனுவலாகத்தான் இன்றைக்கும் தோன்றுகிறது. புறநானூற்றின் பாடல்களனைத்தும் ஏட்டில்
இல்லாமல் கல்லில் வடிக்கப்பட்டிருந்தால் அவையனைத்தும் வரலாற்று ஆவணங்கள் தாம். இவையனைத்தும் சங்ககாலத் தலைவர்களின்
‘மெய்கீர்த்திகள்’ தான் என்பதை
யாராலும் மறுக்கமுடியாது.
மிகச் சொற்பமான வாசகத்தளத்தைக் கொண்டிருந்த தமிழின் செவ்விலக்கியப் பிரதிகள்
சமகால பயன்பாட்டிற்கு அல்லாது பிறிதொருகாலப் பயன்பாட்டிற்காகவே எழுதப்பட்டன என்று
நாம் சொல்வதானால், இலக்கியப் பனுவல் குறித்தும், அதன் பொருண்மைத் தளங்கள்
குறித்தும், ஆசிரியன் குறித்தும், வாசகன் பற்றியும், அது வழங்கக்கூடிய வாசிப்பு
அனுபவம் குறித்தும் நாம் புதிய விளக்கங்களைத் தேடிப் போக வேண்டிவரும். பழந்தமிழ் இலக்கியங்களைப் ரசனைக்காக வாசித்த
மரபு பற்றி நமக்கு போதுமான சான்றுகள் இல்லை.
இவ்விலக்கியங்களெல்லாம் இயற்றப்பட்டு, அரங்கேற்றப்பட்ட காலகட்டங்களில்
அவற்றின் இலக்கண அமைதிகள் சரிபார்க்கப்பட்டதாகத தகவல்கள் உள்ளனவேயொழிய வேறெந்தவகை
விவாதங்களும் இடம் பெற்றதாய் தெரியவில்லை.
மேலும், இலக்கியம் வேறு வரலாறு வேறு என்பது போன்ற வகைப்பாடுகள் ஏற்பட்டிராத
எழுத்து மரபில், புனைவும் அறிவியலும் வேறு வேறானதாக பிரித்தறியப்படாத சூழலில்,
எழுதப்படும் பனுவல்களை எந்த வகைமைக்குள் வரிசைப்படுத்துவது? அக்காலகட்டத்தில்
புனைவு என்ற யோசனையும் வரலாறு என்ற யோசனையும் எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும்
என்ற கேள்விகளையெல்லாம் நாம் எதிர்கொள்ள வேண்டும். தமிழிலக்கிய மரபில்,
வேறெந்தவொரு இலக்கியப் பிரதியை விடவும், பண்பாட்டுக் காரணங்களுக்காக ஆய்வாளர்களால்
தொடர்ந்து வேட்டையாடப்படும் பிரதி சிலப்பதிகாரம் தான்.
7. சிலம்பு என்ற
பண்பாட்டுக் களஞ்சியம்:
12 அல்லது 13வது நூற்றாண்டைச் சார்ந்த அடியார்க்குநல்லார் சிலப்பதிகாரத்திற்கு
உரை எழுதுகையில் மிகத்தெளிவாக ‘....(இப்பனுவல்) இயல்-இசை-நாடகத் தொடர் நிலைச்
செய்யுள்’ என்று
வரையறுத்து வைத்தார். சிலப்பதிகாரத்திற்கான
முதல் உரையை எழுதிய அரும்பதவுரைக்காரரும் கூட அப்பனுவலில் இடம்பெறும்
இயல்-இசை-நாடகக் குறிப்புகளுக்கான விளக்கங்களைத் தருவதில் தான் தனது முழு உழைப்பையும்
செலவளிக்கிறார். 1892ல் ‘சிலப்பதிகார
மூலமும் அடியார்க்கு நல்லார் உரையும்’ என்ற பெயரில்
உ.வே.சாமிநாதன் சிலப்பதிகாரத்தை அச்சுவடிவிற்குக் கொண்டு வரும் போது (இந்த நூல்)
‘...பண்டைக்காலத்திருந்த பலவகை மாந்தருடைய ஒழுக்க முதலியவற்றை இக்காலத்தார் எளிதிற்றெரிந்து
கொள்ளுதற்குச் சிறந்த கருவியாகவுள்ளது’ என்றே
நியாயப்படுத்துகிறார். ‘முத்தமிழும்
விரவப்பெற்றதாதலின் இயலிசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுளென்றும்,
நாடகவுறுப்புக்களை உடைத்தாதலின் நாடகக்காப்பியமென்றும்...’ சிலப்பதிகாரம் புகழ் பெற்றது என்பது தான் உ.வே. சாமிநாதனின்
முகவுரை.
பழைய உரைகளை ஒப்பிட்டுப் பார்த்து, முழுமையான புதிய உரையை எழுதி வெளியிட்ட
ந.மு. வேங்கடசாமி நாட்டார் ‘தமிழருடைய பழைய கால நாகரிகத்தை இறவாமற் பாதுகாத்த
பெருமை இளங்கோவடிகட்குறியது’ என்று
பாராட்டுகிறார். தமிழில் மேலோங்கிக்காணப்படும் இத்தகைய பண்பாட்டுப் புரிதல்களைக்
கடந்து இலக்கியத்தை அழகுணர்விற்காக அணுகவேண்டுமென்ற பார்வை வையாபுரிப்பிள்ளையிடம்
வெளிப்படுகிறது என்றாலும் அவரும் கூட ‘மக்கள் வழிபட்டு வரும் ஒரு பெண் தெய்வத்தின்
பூர்வ சரித்திரத்தை உணர்த்துவதே ஆசிரியரின் நோக்கமாகும்’ என்றுதான் முடிவு செய்கிறார். இதன் உச்சபட்சமாக கனகசபைப் பிள்ளை
சிலப்பதிகாரத்திலிருந்து பெறப்பட்ட பண்பாட்டுத் தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ‘The Tamils Eighteen Hundred
Years Ago’ என்ற வரலாற்று நூலை எழுதினார்.
ம.பொ.சிவஞானத்தின் ‘தமிழ் தேசியக் காப்பியம்’ என்ற நூலும், தெ.போ.மீ.யின் ‘குடிமக்கள் காப்பியமும்’, ந.சஞ்சீவியின் ‘சிலப்பதிகார விருந்தும்’ தொ.மு.சி. ரகுநாதனின் ‘இளங்கோவடிகள் யார்? சிலப்பதிகாரம் பற்றிய ஒரு
சமூகவியல் ஆராய்ச்சி’ என்ற நூலும் தமிழ்ச் சூழலில்
சிலப்பதிகாரம் எவ்வாறு ஒரு பண்பாட்டுக் கருவூலமாகப் பார்க்கப்பட்டு வந்துள்ளது
என்பதற்கு சான்றுகள்.
சிலப்பதிகாரம் என்பது ஒரு இலக்கியப் பனுவல்; புனைவின்
மேலோங்கியது என்பதையெல்லாம் கடந்து, அதனைப் பண்பாட்டு-வரலாற்றுப் பிரதியென்று
பாவிப்பதன் விளைவுகளை வையாபுரிப்பிள்ளையின் எழுத்துகளில் நம்மால் பார்க்க
முடிகிறது. சிலப்பதிகாரத்தை முன்வைத்து
‘தமிழ்ப் பெருமையை’ கட்ட முனைகிற ஆய்வாளர்களைப்
புறந்தள்ளுகிற வையாபுரிப்பிள்ளை, சிலப்பதிகாரம் ‘...உண்மை நிகழ்ச்சிகளைத் தம்
நூற்பொருளாகக் கொள்ளவில்லை’ என்று வாதிடுவதோடு ‘இயற்கையில்
நிகழ முடியாத பல விஷயங்களை நிகழ்ந்தனவாக...’ இளங்கோ எழுதுகிறார்;
எனவே, இளங்கோ ‘அவன் காலத்து வழங்கிய கன்ன பரம்பரை வரலாற்றை கதைப் பொருளாகக்
கொண்டான் என்பதேயாகும். அல்லது (சிலப்பதிகாரம்)
முழுதும் கற்பிதமென்று கொள்ளவேண்டும்’ என்று எழுதுவதைப் பார்க்கையில்,
தமிழின் பொருள்கோளியல் சிலப்பதிகாரம் போன்ற மிகத்தெளிவான இலக்கியப் பிரதிகளையும்
கூட புனைவு என்று நம்புவதற்கு எவ்வளவு தூரம் சிரமப்படுகிறது என்பது விளங்கும்.
8. சிலம்பின் சிக்கலான கதை சொல் முறை:
தமிழிலக்கிய ஆராய்ச்சி முறைகளில் இலக்கியப் பிரதிகளை
அணுகுவதில் இத்தகைய புனைவு – யதார்த்தம் என்ற சிக்கல் காணப்படுகிறது என்றாலும்,
சிலப்பதிகார அணுகுமுறைகளில் இது மேலோங்கியிருப்பதற்கு வலுவான காரணம் ஒன்று உள்ளது. அது, சிலப்பதிகாரத்தில் தான் அதன் ஆசிரியரும்
ஒரு கதாபாத்திரமாக புனைவிற்குள் வந்து நடமாடிக்கொண்டிருக்கிறார்!
இளங்கோவடிகள் யார் என்று கேட்டால், அவர் தாம்
சிலப்பதிகாரத்தை எழுதியவர்; அதே நேரம் அக்கதையைச் சொல்லும் கதாபாத்திரமும் அவர்
தான். கதையைச் சொல்கிறவர் என்றால்
தூரத்திலிருந்து விளக்கமளிப்பவரோ அல்லது வழி நடத்தும் சூத்திரதாரி அல்லது
கட்டியங்காரன் மாதிரியானவர் மட்டுமல்ல, கோவலன்-கண்ணகிக் கதையை அரசியல்படுத்தும்
கதாபாத்திரங்களுள் மிக முக்கியமான இடத்தினை வகிக்கக்கூடியவர். குன்றக்குறவர் ஆரம்பிக்க, தண்டமிழ் சாத்தனால்
விவரிக்கப்பட்டு, செங்குட்டுவனால் முன்னெடுக்கப்பட்டு, பாண்டிய நாட்டு வெற்றிவேற்
செழியன், கொங்கிளர் கோசர், இலங்கைக் கயவாகு, சோழன் பெருங்கிள்ளி போன்ற அரசர்களால்
நிலைப்படுத்தப்படும் பத்தினி வழிபாட்டை பண்பாட்டுத் தளத்தில் தமிழ் மரபென நிறுவும்
வேலையைச் செய்யும் முக்கியமான, ஏறக்குறைய சிலப்பதிகாரத்தின் பன்முகக் கதை
அடுக்குகளை ஒன்றிணைக்கும் வேலையைச் செய்யும் கதாபாத்திரம் இளங்கோவினுடையது.
நாமெல்லாம் கொஞ்சமும் எதிர்பார்க்காத வகையில், சிலப்பதிகாரக்
கதைப்போக்கு நான்கு தளங்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று,
மையக்கதையான கண்ணகியின் கதை. மற்றொன்று, அக்கதை நிகழக்காரணமான ஊழ்வினை என்று
சொல்லப்படும் பிறிதொரு கதை. மூன்றாவது, கண்ணகியைப் பத்தினித் தெய்வமாக நிலை நிறுத்தும்
கதை. இம்மூன்றையும் கடந்து நான்காவதாக ஒரு கதை உள்ளது, அது, கண்ணகியின் கதையை
நமக்குத் திரட்டிச் சொல்லும் இளங்கோவின் பயணத்தைச் சொல்லும் கதை. முதலிரண்டு கதையடுக்குகளை விளங்கிக் கொள்வதில்
எந்த வித சிக்கலும் இருக்கவில்லை. இது
வழக்கமாக எல்லாவிதமான காப்பியக் கதைப்பின்னல்களிலும் நாம் காண்பது தான்.
சிலப்பதிகாரத்தின் மூன்றாவது, நான்காவது அடுக்குக் கதைகள்
தான் ஒட்டுமொத்த காப்பியத்திற்கும் வரலாற்றுத் தன்மையைத் தந்து கொண்டிருக்கின்றன. சிலம்பை மையமாகக் கொண்ட கண்ணகிக் கதை கடந்த
காலத்தில் நிகழ்கிறது. அதனை
நிகழ்காலத்தோடு, அதாவது மூன்றாவது, நான்காவது அடுக்குகளோடு தொடர்புபடுத்தும்
வேலையைக் கண்ணகி குறித்த தங்களது இனக்குழு ஞாபகங்களை பகிர்ந்து கொள்வது மூலம் மலைவாசிகளான
குறவர்கள் தொடங்கி வைக்கின்றனர்.
சிலப்பதிகாரத்தின் நான்காவது அடுக்குக் கதையின்படி, பழங்குடி
ஞாபகத்தில் படிந்திருந்த கண்ணகி பற்றிய வாய்மொழிக் குறிப்பைக் கொண்டு தனது
தேடுதலைக் தொடங்கும் இளங்கோ என்ற இனவரைவியலருக்கு மிக முக்கியமானத் தகவல்களை
சாத்தனார் என்ற முதன்மைத் தகவலாளர் வழங்குகிறார்.
மூன்று தமிழ் அரசுகளைப் பற்றிய கதை என்பதால் அதனை வரையும் வேலையை நீயே செய்
என்று தகவலாளி, இனவரைவியலரைக் கேட்டுக் கொள்கிறார். இப்படியாக இளங்கோ தனது இனவரைவியலை
எழுதத்தொடங்குகிறார்.
இதனிடையே, மூன்றாவது கதையடுக்கின்படி பாண்டிய
நாட்டில் பஞ்சம் நிலவுகிறது; வெப்பு நோய் பரவுகிறது. கண்ணகி என்ற பெண்ணின் சாபம் தான் இத்தனைக்கும்
காரணம் என்று முடிவுசெய்கின்றனர். ஆயிரம்
பொற்கொல்லர்களை பலியிட்டு கண்ணகியை சாந்தப்படுத்துகின்றனர். மழை பொழிந்து, நோய் நீங்குகிறது. இதைக் கண்ட கொங்கு நாட்டு கோஸர் கண்ணகிக்கு
தங்கள் நாட்டிலும் விழா எடுக்க, வளம் பெருகியது.
இது இலங்கைக்கும் பரவி, அங்கிருந்து ஆட்சி செய்த கயவாகு என்ற அரசன்
ஆடித்திங்களில் பத்தினி தெய்வ விழாவினைச் செய்ய இலங்கை செழித்தது. இவையனைத்தையும் கண்டிருந்த சோழன் பெருங்கிள்ளி பத்தினிக்
கோட்டம் அமைத்து தன் நாட்டிலும் விழா எடுத்தான்.
இப்படியே கண்ணகி வழிபாடு பத்தினி வழிபாடாக தமிழ் பேசும் பகுதியெங்கும்
பரவியது. சேரன் செங்குட்டுவன் தனது வஞ்சி
நகரில் கண்ணகிக்கு கோட்டமெழுப்பத் திட்டமிடுகிறான். இதனிடையே வட நாட்டு ஆரிய மன்னரிருவர் தமிழ்
பேசும் மன்னர்கள் குறித்து இழிவாய் பேசுவதறிந்து, அவர்களை வெற்றி கொண்டு,
இமயத்திலிருந்து கல்லெடுத்து வந்து கண்ணகிக்கு சிலை செய்தான். அவ்விழாவிற்கு எல்லாரையும் போல் இளங்கோவும்
போயிருந்தார். கண்ணகி தெய்வம் அவரை
வாழ்த்தி புகழ்ந்தது.
தன்னை எழுதுகிறவனது கதையையும், தான் எழுதப்படுகிற
கதையையும் ஒரு கதையே நமக்குச் சொல்ல முடியுமென்றால், அது தான் சிலப்பதிகாரத்தின்
கதை சொல்லும் முறை. கண்ணகியின் வாழ்க்கை
மட்டும் தான் கதையம்சம் வாய்ந்தது மற்றவையனைத்தும் யதார்த்தவகையைச் சார்ந்தது
என்று கொண்டால், மலைக்குறவர் தொடங்கி இலங்கைக் கயவாகு வரைக்கும் அத்தனை பேரும்
வரலாற்று நாயகர்களாக மாறி விடுகின்றனர்; அதன் பின்பு, அவர்களோடு சேர்ந்து அவர்கள்
சொல்லும் கண்ணகியின் கதையும் கண்ணகியின் வரலாறாக மாறிவிடுகிறது.
கண்ணகி கதை, பூர்வ் ஜென்மக் கதை, பத்தினி தெய்வமான
கதை, சிலப்பதிகாரம் எழுதப்பட்ட கதை என்று அனைத்தையும் புனைவுகளாக வரையறுக்கிறோம்
என்றால், இக்கதைகளை சொல்லிக் கொண்டிருக்கும் புலவர் யார் என்பதற்கு நாம் பதில்
சொல்ல வேண்டும். அது தெரியவில்லை என்றால்
கூட, இவ்வளவு சிக்கலான கதைசொல்லும் உத்திகள் நடைமுறையிலிருந்த தமிழ் எழுத்துலகம்
எவ்வாறு கட்டமைக்கப்பட்டிருக்கும் என்று விவாதிக்க வேண்டியிருக்கும்.
சிலப்பதிகாரம் என்ற பனுவலை, புனைவு அல்லது வரலாறு
என்ற வரையறைகளுள் ஏதாவதொன்றினுள் பொருத்துவதற்கு மேற்கண்டவாறு சிரமப்படுவதைக்
காட்டிலும், வேறொரு காரியத்தை முயற்சி செய்து பார்க்கலாம். அது, புனைவு அல்லது அறிவியல் என்று
பிரித்தறியப்பட்டிராத தமிழ்ச் சூழலில் புனைவின் சாத்தியங்களோடு வரலாற்றையும்
பண்பாட்டையும் பதிவு செய்வதற்கான முயற்சியின் விளைவே சிலப்பதிகாரம் என்று
ஏற்றுக்கொண்டு, அத்தகைய முயற்சியை மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்தும்,
நோக்கங்கள் குறித்தும், அவ்வகைக் கருதுகோளின் அறிவுத்தோற்றவியல் குறித்தும்,
அவ்வாறு உருவாக்கப்பட்டப் பனுவலின் பயன்பாட்டுத் தளங்கள் குறித்தும், அதன்
பின்னணியில் தொழிற்படும் பல்வேறுபட்ட அரசியல் சொல்லாடல்கள் குறித்தும் நாம்
விவாதிப்பதாக அமையும். இது, மற்ற
இரண்டையும் விட அதிக சவாலானது!
Comments