Skip to main content

யாரோ



(கவனம்: இது மேற்கோள் காட்டுவதற்கான பிரதி அல்ல; இதைக் கப்ஸா என்று அறிகிறவர்கள் பாக்கியவான்கள்!)

1710 ஆம் ஆண்டு, நவம்பர் மாதம் 18ம் நாள், தரங்கம்பாடியின் சீயோன் தேவாலயத்திற்கு அடுத்திருந்த மாளிகையின் உப்பரிகையிலிருந்து, கிழக்கிலேயே சென்று கொண்டிருந்தால் மேற்கு வந்துவிடும் என்று தீவிரமாக நம்பிய லூத்தரன் மிஷனரி ஹான்ரீச் ப்ளூச்சாவ், புயலுக்கான அறிகுறிகள் வலுத்திருந்த வங்கக் கடலையேக் கூர்ந்து பார்த்து தனது பதிவேட்டில் இப்படி எழுதினார்:

‘இன்று காலையில், சிப்பிகளைப் பொறுக்க வரும் சிறுவர்களுக்காக வாதாமரக் கொட்டைகளைச் சேகரித்துக் கொண்டிருந்தேன்.  கேட்டிகிஸ்ட் பர்னபாஸ் கவலையோடு என்னைப் பார்க்க நின்றிருந்தான்.  இன்னமும் இயேசுவுக்குள் திரும்பியிராத அவன் மனைவி சில நாட்களாய் நெருநெருக்கும் மணல் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தாள்.  அவள் நிலைமையில் ஏதாவது அசம்பாவிதமோ என்றே நான் அவனிடம் கேட்டேன். ஆனால், அவன் மலைநாட்டிற்குச் சென்று மாந்தரீகனை அழைத்து வர விரும்புவதாகவும், தன் மனைவியைக் காப்பாற்றுவதற்காக இந்த ஒரு முறை மட்டும் இதை அனுமதிக்கும்படியும் என்னைக் கேட்டான். அவளுக்கு வந்திருப்பது நெருநெருமணல்காய்ச்சல்தானென்றும் அதை வைத்தியத்தாலும் பிதாவின் மீதான நம்பிக்கையாலும் குணமாக்கலாம் என்றும், இது போன்ற துஷ்ட காரியங்களைச் செய்பவர்களை பிதாவானவர் மன்னிப்பதில்லை என்றும் அவனுக்கு நான் பொறுமையாய் எடுத்துச் சொன்னேன்.  ஆனால், பர்னபாஸ் தன் மனைவிக்கு யாரோ மாந்தரீகம் வைத்து விட்டதால் தான் இப்படி நடக்கிறது என்றான்.  தான் கடவுளின் வழிக்குத் திரும்பியதைப் பொறுக்காத யாரோ தான் இப்படி செய்திருக்க வேண்டுமென்று நம்புவதாகச் சொன்னான்.  இந்தப் பகுதியில் 'யாரோ'வின் ஆதிக்கம் அதிகமாக இருக்கிறது.  'யாரோ' தீமையின் ராஜாவென்றும், மனம் விட்டு மனம் பாயக்கூடியவர் என்றும் இந்த மக்கள் நம்புகிறார்கள்.

தமிழில் வழங்கப்படும் யாரோ என்ற மரபு குறித்த முதல் எழுத்துப் பதிவு இது தானென்று 1987ம் ஆண்டு, டர்டு பல்கலைக்கழக, இறையியல் துறையில் 'கீழைத்தேய எதிர்க்குரல்களின் அழகும் அனாமதேயமும்' என்ற தலைப்பில், ஆய்வேட்டை சமர்பித்திருந்த தஞ்சாவூரைச் சார்ந்த லூத்தரன் பாஸ்டர் போல் வேதெபோதெகெம் கருதுகிறார்.  ஹால்லே ஆவணக்காப்பகத்தில் ஹான்ரீச் ப்ளூச்சாவ்வின் பதிவேடுகளைப் படிக்க நேர்ந்த வேதெபோதெகெம், யாரோ மரபு குறித்து (யாரோவை மரபாகப் பார்க்கும் பார்வை இவருடையது தான்) நாகப்பட்டினம், தஞ்சாவூர் பகுதிகளில் செய்த களப்பணிகளின் மூலமாக தமிழில் பெரிதும் கவனிக்கப்பட்டிராத எதிர்மரபொன்று குறித்த தகவல்களை தன்னால் ஒருங்கிணைக்க முடிந்தது என்கிறார்.
 
செங்கோட்டையை ஒட்டிய மலைகளில் விளையும் மூங்கில்களால் பின்னப்பட்ட கூடை நாற்காலியில் அமர்ந்து, அஸ்ஸாமின் பசுந்தேநீர் அருந்திய படி என்னைக் கேட்டுக்கொண்டிருந்த எஸ். கார்த்திகேயன், 'எல்லா அறிவியல்களும் தங்களுக்கான முட்டாள்களைத்தான் முதலில் உருவாக்குகின்றன' என்றார். நாற்பதாண்டு காலமாக தென்னிந்திய கட்டிடக் கலை வரலாறு குறித்து பல்கலைக்கழகங்களில் படிப்பித்துக் கொண்டிருக்கும் அவரோ அல்லது நானோ யாரோ மரபு பற்றி அது நாள் வரையில் எதையும் அறிந்திருக்கவில்லை; கேள்விப்பட்டிருக்கவுமில்லை.
'அந்த ஆய்வேடு கிடைத்தால் இன்னும் வசதியாயிருக்கும்' என்ற கார்த்திகேயனிடம், 'அது கிடைத்தும் விட்டது.  ஆனால், பெரிதாய் தகவல்கள் ஏதும் இல்லை.  முன்னுரையில் மட்டும் ஒரு பக்கம் எழுதியிருக்கிறார். அவ்வளவு தான்' என்று சொல்லி என் கணிணியிலிருந்த ஆய்வேட்டின் புகைப்படப் பிரதியைத் திறந்து அவருக்குக் காண்பித்தேன். 

'பெரு மரபுகளை கேள்விக்குட்படுத்தும் யத்தனங்களைக் கொண்டுள்ள, சூபிக்கள், பக்கிர்ஷாக்கள், காஃபிர்கள், சித்தர்கள் போல யாரோ என்ற எதிர்மரபு எழுத்துப் பண்பாட்டிற்கு எதிரான குரல்களைக் கொண்டது. காலத்தால், எழுத்திற்கு முந்தைய பேச்சில் தொனிக்கும் அனாமதேயத்தைக் கொண்டாடும் யாரோக்கள் எழுத்து கண்டுபிடித்த செயலை 'மனித சமூகத்தைக் கண்காணிப்பின் வளையத்திற்குள் கொண்டு வந்து சேர்த்ததின் உச்சகட்ட நிகழ்வு' என்று கருதுகின்றனர்.  யாரோ மரபின் படி, எழுத்து வடிவம், மொழியின் குரல்வளையை நெறிக்கிறது.  எழுத்தின் அதிகாரத்தை எதிர்த்து உருவான இந்த மரபை இரண்டாயிரத்து அறுநூறு வருடங்களுக்கு முன்பு யாரோ உருவாக்கினார் என்பது அவர்களின் வாய்மொழி வரலாறு.' 

இதன் பின் அவர் பதிவு செய்வது தான் மிக முக்கியமான தகவல். தனது கள ஆய்வின் போது யாரோ மரபு பற்றி தகவல்களைப் பகிர்ந்து கொண்ட பலரும் தங்களைப்பற்றிய விபரங்களைத் தருவதை கவனமாக தவிர்த்ததாகவும், ஒரு முறை சந்தித்தத் தகவலாளர்களை தன்னால் மறுமுறை சந்திக்க முடியாமல் போனது என்றும் சொல்கிற விஷயம் ஆச்சரியமாயிருக்கிறது. இதனால், ஒரு வருடம் போல் தமிழகத்தில் தங்கியிருந்து  தானே நேரடியாய் சேகரித்த எந்தத் தகவலையும் ஆய்வேட்டில் இணைக்கமுடியாமல் போயிற்று என்று சொல்லும் வேதேபோதெகெம், யாரோ மரபு பற்றி வலுவான ஆதாரங்களுடன் நூலொன்றை எழுதுவது தான் தனது அடுத்த கட்ட ஆய்வுப் பணி என்று அறிவிக்கிறார். ஆனால், அதன் பின் வேதெபோதெகெம் ஆய்வுலகில் எங்கும் தட்டுப்பட்டதாகத் தெரியவில்லை.
'இதை இப்படியே மறந்து விடுவது உத்தமம். இது சுத்தமான Doctoral syndrome.  பிரசவ நேரத்து பதட்டங்கள் போல, இதுவும் ஒரு வகை. முனைவர் பட்ட பதட்டம்.  சேகரிக்காத ஆவணங்களையெல்லாம் சேகரித்தது போல' என்று சொல்லி கிளம்பிய எஸ். கார்த்திகேயன், அடுத்த அரைமணி நேரத்திற்குள் வெளிறிப் போன முகத்துடன் என் முன்னிருக்கும் இருக்கையில் சரிவார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்கவில்லை.

கார்த்திகேயனைப் பற்றி தலைமைச் செயலகம் வரைக்கும் மொட்டைக் கடிதமொன்று அனுப்பப்பட்டிருக்கிறது.  அதன் ஒரு நகல் அவருக்கும் வந்திருந்தது.  தனது மாணவிகளிடம் பாலியல் ரீதியிலான அன்பளிப்புகளைப் பெறுகிறார் என்பது தான் அந்தக் கடிதத்தின் சாராம்சம். இதில் வேடிக்கை என்னவென்றால் எஸ். கார்த்திகேயனுக்கு ஆய்வு மாணவிகளே இல்லை; அவரிடம் பதிவு செய்த அத்தனை ஆய்வாளர்களும் அநியாயத்திற்கு ஆண்கள். 

'இதில் கவலைப்பட ஒன்றுமில்லை.  இதில் உள்ள எதுவும் உண்மையில்லை என்பதை நீங்கள் நிரூபிக்காமலேயே எல்லோருக்கும் தெரியும். மடத்தனமான கடிதம்.  கிழித்து எறியலாம்', என்று நான் சொன்னேன்.  இவ்வளவு நிலைகுலைந்து அவரை நான் பார்த்ததில்லை. அனாமதேயக் கடிதங்கள் எப்பொழுதுமே வாசிக்கிறவர்களின் ரகசிய ஆசைகளோடும் பயங்களோடும் தான் பேசுகின்றன. கார்த்திகேயன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தார். இக்கடிதத்தை யார் எழுதியிருக்க முடியுமென்று அவர் மனதில் கணக்கு போடுவதாக நினைத்தேன்.  இது ஒரு துன்பக்கணக்கு.  இறுதியில் நாமே கூட நம்மைப் பற்றி ஒரு விழிப்பற்ற தருணத்தில் இக்கடிதத்தை எழுதியிருக்கமுடியுமென்று நம்மையே நம்ப வைக்கும் கணக்கு.

'யாராயிருக்குமென்று உங்களுக்கு ஏதாவது தோணுகிறதா?' அவரால் முடியாமல் என்னைக் கேட்டார்.

'யாரோவாவது இருந்துவிட்டுப் போகட்டும்.  அதைப் பற்றி பேசி என்ன ஆகப் போகிறது. சனியனை விட்டு தலை முழுகுங்கள்' என்றேன்.
'யாரோவாவது இல்லை, யாரோவே தான்' என்று கார்த்திகேயன் அந்தக் கடிதத்தை என் முகத்திற்கு நேராய் நீட்டினார்.  அதில் யாரோ என்று கையொப்பமிடப்பட்டிருந்தது. இதன் பின்பு தான் யாரோ மரபு குறித்து நாங்கள் அக்கறை கொள்ளத் தொடங்கினோம்.

முதலில் அது ஒரு மரபு தானா என்பதில் எங்களுக்கு சந்தேகம் இருந்தது.  வேதெபோதெகமெ தான் அப்படியொரு மரபு இருந்ததாக எழுதுகிறார். அவருக்கு யாரோ பற்றி தகவல் சொன்ன யாரையும் இரண்டாவது முறை பார்க்க முடியவில்லை.  காணாமல் போகிறார்கள் அல்லது அப்படி யாரும் இல்லை. இதையெல்லாம் எழுதுகிற அவரும் அதன் பின்பு காணாமல் போகிறார். வேதெபோதெகமெ எழுதுவதில் இன்னொரு சந்தேகமும் இருக்கிறது.  யாரோ மரபை, எழுத்திற்கு எதிரான பேச்சு மரபாக அவர் கற்பனை செய்கிறார்.  இப்படி இருக்க முடியும் தான்.  பேச்சு மரபில் எல்லோருமே யாரோ தான்.  ஆனால், அது எழுத்திற்கு எதிரான குழுச்செயல்பாட்டைக் கொண்டிருந்த மரபா என்பதில் தெளிவில்லை.  நுண்ணரசியல் சார்ந்து யோசிக்கக்கூடிய ஆய்வாளர்களிடம் காணப்படும் குழப்பமாகக் கூட இது இருக்கலாம்.  நுண்ணரசியலின் விலங்குக்காட்சி சாலையில் பாம்பும் கீரியும் மட்டுமே இருக்கின்றன.  அது உலகை அருகம்புற் காடாகவே விவரிக்கிறது.

கார்த்திகேயனிடமிருந்து எஸ்கே என்ற சுருக்கக் கையொப்பத்துடன் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  அதில் கொடுக்கப்பட்டிருந்த தொடரைச் சுட்ட Legacy of Incognitos  என்றொரு பக்கம் திறந்தது. வழக்கம் போல் மின்னஞ்சல் முகவரி சொல்லி பதிவு செய்யச் சொன்னார்கள்.  பதிந்ததும் ஒரே ஒரு பக்கம் உள்ள முகப்பு விரிந்தது. அந்த முகப்பு பக்கத்தில் இப்படி இருந்தது.

யாரோ பரம்பரை:

கி. மு. 600ல் முதல் யாரோ தமிழகத்தில் தோன்றினார்.  அவர் இன்றைக்கும் வாழ்ந்து வருவதாக ஐதீகம்.  அடையாளங்கள் மனிதர்களைக் கூறு போடுகின்றன என்பதை தொடக்க காலங்களிலேயே கண்டு கொண்ட யாரோ, கலந்து போவதை / ஒன்றோடொன்று மயங்கிப் போவதை தனது சித்தாந்தமாக முன் வைத்திருந்தார்.  அவர், இவர், உவர் என்ற பேதங்களுக்கு எதிராக நாம் முன்வைக்கும் அடையாளமே 'யாரோ'.

முதல் யாரோ இந்த உலகை ஒரு கவிதையைப் போல் அழகுடையதாக விளக்கினார்.  சொல்ல வரும் விஷயத்தை மறைக்கையில் கவித்துவமும், சொல்லும் நபர் தன்னையே மறைத்துக் கொள்கையில் யாரோவும் உருவாகுகிறார்கள் என்பது தான் நமது பாரம்பரியம்.  எனவே கவித்துவமும் யாரோவும் ஒன்றாய் தோன்றினார்கள்.  யாரோ நமக்கென்று செய்து தந்தது ஒரே ஒரு கவிதை தான்.  சுமார் 2600 வருடங்களுக்கு முன்னால் எழுதப்பட்ட அக்கவிதையே இன்றைக்கும் நமது மரபை விளக்கிக் கொண்டிருக்கிறது. 
 
யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளிர்?
யானும் நீயும் எவ் வழி அறிதும்?
செம் புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.      - யாரோ


(உன் குடி வழி வேறு, என் குடி வழி வேறு.  உன் தந்தை வேறு, என் தந்தை வேறு. நீ யாரோ, நான் யாரோ.  நாம் ஒருவரையொருவர் அறிந்தவர் அல்ல.  ஆனாலும், செந்நிறத் தேரிக் காட்டில் பெய்த மழையைப் போல நம் நெஞ்சம் கலந்து பாதுகாப்பாய் இருக்கிறது.)

முதல் யாரோ எழுதிய இந்தப் பாடலின் உண்மைப் பொருள் அறியாத பிற்காலப் பண்டிதர்கள் இதனைக் காதல் பாடல் என்று கருதி தங்களது நூற்களில் இணைத்துக் கொண்டதும் அல்லாமல், யாரோவின் உள்ளர்த்தம் விளங்காமல், 'செம்புலப் பெயல் நீரார்' என்ற பெயரையும் இட்டு வைத்தார்கள்.  சிவப்பு நிறத் தேரிக்காட்டில் பெய்த மழை அம்மணல் குன்றுகளின் அடியில் போய் குளமாய் மறைந்து நிற்கிறது என்ற பொருளை அறியாததாலும், அடையாளங்களை கரைத்தவர் யாரோ என்பதை உணராததாலும் இது போன்ற குழப்பங்கள் தோன்றின.  யாரோவின் பாரம்பரியத்தைச் சார்ந்த நாம் அடையாளங்களுக்கு எதிரான நம யாரோவை முன்னிலைப்படுத்துவதில் ஒன்றிணைவோம்!'

இணையத்தில் இது போன்று கைக்கெட்டும் தூரத்திலான வேடிக்கைகள் சாத்தியம் தான் என்றாலும் கொஞ்சம் பதட்டமாகவும் இருந்தது.  ஜன்னலுக்கு வெளியே நெடுந்தூரம் பார்க்க வேண்டும் போலிருந்தது.  வெளியே மழைக்கான தயாரிப்புகளுடன் மதியம், தன் வழக்கமான ஒப்பனைகளைக் கலைத்து விட்டு அமைதியாய் ஒதுங்கி நின்று கொண்டிருந்தது.  இது போன்ற தருணங்கள் குழப்பமானவை. மதியமுமற்ற, மழையும் வந்திராத வெற்று மேடையை வெறித்துக் கொண்டிருப்பது போதிய பிராணவாயு கிடைக்காமல் நுரையீரல் விம்முவதைப் போலானது.  அப்படியானால் யாரோ மரபு உண்மை தானா என்று கேட்க கார்த்திகேயனை தொலைபேசியில் கூப்பிட்டேன்.  அவரைத் தொடர்பு கொள்ள முடியாத வருத்தத்தை யாரோ ஒரு பெண் மலையாளத்தில் பகிர்ந்து கொண்டாள்.
     
இதன் பின் சொல்லி வைத்தாற் போல கார்த்திகேயனுக்கும் அவரைச் சுற்றியிருப்பவர்களுக்கும் யாரோக்களின் அனுபவம் வாய்க்கத் தொடங்கியது.  பத்தொன்பது வயதில் தமிழ் நாடு பப்ளிக் கமிசன் தேர்வு எழுதி கார்த்திகேயனிடம் உதவி அலுவலராக பணியில் சேர்ந்த ஆத்தியப்பன், தனது பதினைந்து வருட பணிக்காலத்தில், முதல் முறையாக இரண்டு நாட்கள் சேர்ந்தார் போல் விடுமுறை எடுத்து, வங்கிக் கடனுதவியுடன் கட்டியிருந்த ‘முகில் மகாலுக்கு (கடைசி பையன் பெயர் முகிலன்) புதுமனைப் புகுவிழா நடத்திய அன்று இரவு, மொட்டை மாடியில் நட்சத்திரங்கள் பார்க்க படுத்திருந்தபடி, ‘இந்த ஊர்லயே பெரிய வீடு நம்ம வீடு தாண்டி.  எவ்வளவு அவமானம்! எவ்வளவு சண்டித்தனம்! சாதிச்சிட்டேம்ல என்று சொல்லி, எதிரில் இல்லாத அத்தனை எதிரிகளுக்கும் வெற்றிக்களிப்பில் பொது மன்னிப்பு வழங்கிக் கொண்டிருந்தான்.  அவன் மனைவிக்கு, ஒதுக்குப்புறமாய் வீடு அமைந்து விட்டதில் கொஞ்சம் வருத்தம் இருந்தாலும், ஊருக்குள் முதல் காரை வீடு என்பதில் பெருமை தான்.  அதற்காக ஆத்தியப்பனைப் போல் ஊரின் பெரியதனக்காரர்களையெல்லாம் உடனடியாய் மன்னித்து விட அவள் தயாராயில்லை. ‘அவுகெல்லாம் பட்டு அழுந்துனா தான் சரி என்றே முடிவு சொன்னாள்.  ‘அந்தக் கண்றாவியப் போய் நாம ஏன் சொல்வானேன், அவரவர் செஞ்சது அவரவர் தலையில் விடியட்டும் என்றே ஆத்தியப்பன் அவளை சமாதானப்படுத்தினான்.

இரண்டு நாள் விடுமுறைக்குப் பின் குழந்தைகளை பள்ளிக்கூடம் அனுப்பி விட்டு, கணவனும் மனைவியும் தத்தம் அலுவலகத்திற்கு செல்வதற்கு முன் ஒன்றிற்கு இரண்டு முறை நன்றாய் பூட்டை இழுத்துப் பார்த்துப் பூட்டினார்கள்.  சாயங்காலம் யார் சீக்கிரம் வருகிறார்களோ அவர்கள் மாடியிலுள்ள தொட்டியில் நீர் நிரப்ப வேண்டுமென்று ஒப்பந்தம் செய்து கொண்டார்கள்.  சாயங்காலம் சீக்கிரமாய் வீட்டிற்கு வந்தது ஆத்தியப்பன் தான்.  வந்து பார்த்த ஆத்தியப்பன் உள்ளே நுழைந்த அதே வேகத்தில் பதறிப் பின்னால் ஓடினான்.  வீட்டைச் சுற்றிலும் யாரோ வெளிக்கியிருந்து வைத்திருந்தார்கள். சில இடங்களில் அதைப் புதுச்சுவரிலும் விசிறி வைத்திருந்தார்கள்.  

'தொண்டை மண்டல சுவரெழுத்துகளும் ஓவியங்களும்' என்ற தலைப்பில் ஆய்வு செய்து கொண்டிருக்கும் தனது மாணவர் ஒருவரை என்னிடம் ஆய்வு தொடர்பாக விவாதித்து வரும் படி ஒரு செவ்வாய்கிழமை மாலையில் கார்த்திகேயன் என்னிடம் அனுப்பி வைத்திருந்தார்.  மெலிந்த உருவத்துடன், மூக்காலேயே பேசிக்கொண்டிருந்த, தன்னை ஐராவதீஸ்வரன் என்று அறிமுகப்படுத்திக்கொண்ட அவ்விளைஞனுக்கு நவீன காலத்திலும் சுவரெழுத்துக்கள் இருக்கின்றனவா என்ற சந்தேகம் இருந்தது.  Latrinalia  என்று இதனைத் தனியாகவே இப்பொழுதெல்லாம் படிக்கிறார்கள் என்று நான் சொல்வதை அவன் எந்தவித ஆச்சரியமுமில்லாமல் கேட்டிருந்த பின்பு, தனது மூக்கொலியால், 'கொஞ்ச நாட்களாய் என்னை யாரோ கண்காணிக்கிறார்கள்' என்றான். 

இதற்கு நான் ஆச்சரியப்படுவேன் என்று அவன் நினைத்திருந்தால் ஏமாந்திருப்பான். 'யாரோ என் மின்னஞ்சல், அலைபேசி, முக நூல் என்று சாத்தியப்பட்ட அத்தனை வழியிலும் என்னைக் கண்காணிக்கிறார்கள்.  எத்தனை முறை என் கடவுச் சொல்லை மாற்றினாலும் அவர்களால் அதைத் திருடி விட முடிகிறது.  நான் யாரிடம் பேசுகிறேன், என்ன பேசுகிறேன், என்ன யோசிக்கிறேன் என்றெல்லாம் கூட அந்த யாரோவுக்கு தெரிகிறது. எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை', என்றான்.

இது ஒரு அதிகம் கவலைப்படத் தேவையில்லாத மனக்குழப்பம்.  ஆய்வின் அழுத்தத்தில் மனித சகவாசமே இல்லாமல் போய் விடும் சமயங்களில் இது போன்ற மயக்கங்கள் தோன்றுவது உண்டு.  ஒரு உள்ளுணர்வு போல முதுகுக்குப் பின் நிறைய நடப்பதாகத் தோன்றும்.  அதை நம்பாமலிருப்பது தான் சாமர்த்தியம்.  சாமர்த்தியசாலிகளை விட்டுவிட்டு அது விரைவில் அகன்று விடும்.  இதை நான் ஐராவதீஸ்வரனுக்குச் சொன்னதும், அவன் தன் பையிலிருந்து துண்டறிக்கை போலொன்றை என்னிடம் தந்து, 'அப்படியானால், என் அறைக்குள் வீசப்பட்ட இதையும் நம்பக் கூடாதா?' என்றான்.
அது ஒரு 1/4 டெமி அளவுள்ள அச்சிடப்பட்ட துண்டுச் சீட்டு. 

யாரோவின் பொன்மொழிகள்

·         யாரோ நிர்வாணத்தை அணிந்தவர். அவரது நிர்வாணம், நிஜம் இல்லை; அது, நிர்வாணத்தின் போலி.
·         யாரோவின் தத்துவங்கள், தத்துவத்தின் சாயலைக் கொண்டவையே தவிர, தத்துவங்கள் அல்ல.
·         யாரோ அனுபவங்கள் இல்லாதவர், அதே நேரம் கணக்கற்ற அனுபவங்கள் வாய்த்தவர்.
·         யாரோவை யாரோவுக்கு அடையாளம் தெரிவதில்லை.  அதாவது, அவர் யாரோ என்பதை அவர் அறிந்திருக்கவில்லை.  அதனால், தன்னை வெளிப்படுத்துவதுமில்லை.
·         அவரை எப்பொழுதுமே பிறர் தான் யாரோ என்று அடையாளம் காணுகிறார்கள். பின்பு, யாரோ பேசுகிறார், யாரோ சிரிக்கிறார், யாரோ அழுகிறார் என்று எடுத்துச் சொல்கிறார்கள்.
·         யாரோ 'நான்' என்ற அகந்தையைத் துறந்தவர்.  நான் யாரோ இல்லை; யாரோ நான் இல்லை.
·         யாரோவின் படைப்புகள் வெகுளித்தனமானவை.  பலகீனத்தால் செய்யப்பட்டவை.
·         யாரோ தத்துவமும் புராணமும் கலந்த கலவை.  புராணம், புனைவின் உச்சமென்றும், தத்துவம், அறிவியலின் உச்சமென்றும் கருதப்படுகிறது.  எனவே யாரோ, உன்னதங்களின் உன்னதம்.

படித்ததும் நான் சிரித்தேன்.  பொன்மொழிகளை உற்பத்தி செய்வது இந்தியாவில் குடிசைத் தொழில் போல.  வண்ண நாட்காட்டிகள் முதல் ஓஷோ வரை இது போன்ற பொன்மொழிகள் உதிர்ந்து கிடக்கும் புண்ணிய பூமி இது. இதற்கெல்லாம் கவலைப்பட ஒன்றுமில்லை.  இப்படி துண்டுக்காகிதங்கள் வராமல் போனால் தான் இந்த நாட்டைப் பற்றி நாம் கவலை கொள்ள வேண்டும் என்று ஐராவதீஸ்வரனிடம் சொன்னேன்.  அவன் இன்னும் கவலையை விடாத முகத்தைத் தான் வைத்துக் கொண்டிருந்தான். நான் எதையோ தவற விடுகிறேன் என்பது போல வேறு பார்த்தான்.  அதன் பின் அவன், 'அந்த யாரோ எஸ்கேயோ என்று எனக்கு சந்தேகமாயிருக்கிறது', என்று சொன்ன போது, நான் அவனைக் கூர்மையாய் கவனிக்கத் தொடங்கினேன்.  அவன் முகத்தில் பொய் போன்றோ அல்லது கள்ளத்தனம் போன்றோ எதையும் ஒளித்து வைக்கும் கண்களை நான் பார்க்கவில்லை.  அவன் கண்கள் தயங்கின.  தொட்டுச் சுருங்கிய மரவட்டை நிமிர்வதற்கு எடுத்துக் கொள்ளும் அவகாசத்தின் கூச்சம் அதில் இருந்தது.

'எஸ்கே மீது எழுதப்பட்டிருந்த மொட்டைக் கடிதம் முதல் இந்த யாரோவின் பொன்மொழிகள் வரைக்கும் எல்லாமும் அவரே தான் செய்கிறார்.  Legacy of Incognitos   வலைத்தளம் முழுக்க முழுக்க அவருடைய உருவாக்கம். அதை நான் கண்டுபிடித்த நாள் முதல் என் மின்னஞ்சல், முகநூல் அத்தனையையும் வேவு பார்க்க ஆரம்பித்து விட்டார்.  ஆத்தியப்பன் வீட்டு சம்பவத்தை இத்தோடு இணைத்ததும் அவர் தான்.  எனக்கு அவரைக் குறித்து பயமாக இருக்கிறது.  அவர் தன்னை எஸ்கேயாக நினைக்கவில்லை.  இப்பொழுதெல்லாம் யாரோவாக நினைத்துக் கொள்கிறார்'. 

'யாரோவாக என்றால்...?'

'யாரோ மரபின் தொடர்ச்சியாக.'

'அப்படியொரு மரபு இருந்ததாகவே இன்னும் முடிவாகவில்லை, என்றேன் நான்.  ‘இன்றைய சூழ்நிலைக்கு அது ஒரு கற்பனையாக இருப்பதற்குத்தான் சாத்தியங்கள் அதிகம்.  ஒரு வேளை, ஞாபகமிருக்கட்டும் ஒரு வேளை, அப்படியே அது நிஜமாக இருந்தாலும், யார் வேண்டுமானாலும் யாரோவாக இருக்க முடியும் என்பது தானே திட்டம்.  இந்த சந்தேகத்தை இப்படியே விட்டு விடுவது நல்லது ஐராவதீஸ்வரன். என்னிடம் சொன்ன மாதிரி யாரிடமும் போய் இதைச் சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்' என்று எச்சரித்து அவனை என் அறையிலிருந்து வெளியே அனுப்பி விட்டுத் திரும்பிப் பார்த்தால் கார்த்திகேயன் மீதான ஒரு சிறு சந்தேகம் எனக்குள் வந்து உட்கார்ந்து கொண்டது.  நேரமாக ஆக அந்த சந்தேகத்தின் புளிப்பு நெடி மூக்கு உள்ளறைகளில் ஏற்படுத்தும் காரத்தில் அத்தனை வருடத்து நல்லெண்ணமும் பொசுங்கி வழிகிறது.  நல்ல வேளையாக அன்று மாலையே கார்த்திகேயன் தொலைபேசியில் அழைத்தார். 
 
எடுத்த எடுப்பில், 'கவனித்தீர்களா? ஐராவதீ யாரோவாக மாறிக்கொண்டிருக்கிறான்' என்றார்.

'அவனுக்கு உங்கள் மீது தான் சந்தேகம். நீங்கள் தான் யாரோ என்று என்னிடம் சொல்ல வந்தான்'.

'யாரோக்கள் இப்படி தான் உருவாகுகிறார்கள்.  முதலில் ஒரு யாரோவை சந்திக்கிறார்கள். அதற்கப்புறம் யாரையாவது யாரோவா என்று சந்தேகப்படுகிறார்கள்.  இறுதியாய் தானே யாரோவாகிறார்கள்.'

கார்த்திகேயன் சொல்வது எனக்குப் புதுசாய் இருந்தது.  'இப்படி எங்கே சொல்லப்பட்டிருக்கிறது?  சரியாகச் சொன்னால், யாரோ மரபு பற்றி நமக்கு சந்தேகம் தான் இருக்கிறதே தவிர வேறொன்றும் தெரியாதே?'

'Legacy of Incognitos தளத்தைப் பார்த்தீர்களா இல்லையா?  அதில் தான் இவ்வளவும் போட்டிருந்ததே!  நான் தானே உங்களுக்கு லிங்க் அனுப்பினேன்.'

'அதில் குறுந்தொகைக்கு கொஞ்சம் மாற்றிப் போட்டு விளக்கம் சொன்னதைத் தவிர வேறு ஒன்றும் இல்லையே!' முகப்பு பக்கத்தை மட்டுமே தான் நான் பார்த்ததாய் ஞாபகம். அதைத் தான் கார்த்திகேயனிடம் சொன்னேன்.

'ஓ... அது என் தவறு தான்.  நீங்கள் மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு செய்தீர்களா?'

'ஆமாம். தளத்தைப் பார்க்க மின்னஞ்சல் கொடுத்து பதிவு செய்யச் சொன்னது.  அதற்கப்புறம் தான் முகப்பு பக்கத்தைக் காட்டியது'.

'இது அடையாளமற்ற யாரோக்களின் தளம்.  முகவரியுள்ளவர்களுக்கு முகப்பு வரை மட்டுமே அனுமதி.  மின்னஞ்சல் முகவரி இல்லை என்று சொல்லியிருந்தால் உங்களால் முழு தளத்தையும் பார்த்திருக்க முடியும்.

‘இவ்வளவு தீர்க்கமான கட்டமைப்பு கொண்டவர்களா யாரோக்கள்?

‘நான் சொல்லியிருக்க வேண்டும்.  தப்பு என் பக்கம் தான்.  இனி உங்களால் அதன் தளத்திற்குள் திரும்ப நுழையமுடியுமா என்று தெரியவில்லை.'

‘அப்படியொரு மரபு இருக்கிறது என்பதை நீங்கள் நம்புகிறீர்களா கார்த்திகேயன்?

‘யார் சொன்னால் நம்புவீர்கள்? வேதெபோதெகெம்? ஆனால் அவருக்குத் தான் தான் வேதெபோதெகெம் என்பதே ஞாபகத்தில் இல்லை.  தன்னை யாரோ என்கிறார்.

'சரி, ஐராவதீஸ்வரன் இதற்குள் எப்படி வருகிறான்? அவனுக்கு உங்கள் மீது ஏன் சந்தேகம் வர வேண்டும்?'

‘நமது உரையாடல்களிலிருந்து யாரோக்கள் பற்றி கேள்விப்பட்ட ஐராவதீ தற்செயலாய் அப்படி ஒருவரை சந்தித்திருக்கிறான்.  தனது அனுபவத்தை அந்தத் தளத்தில் பதியவும் செய்திருந்தான்.  அந்தத் தளம் யாரோக்கள் குழுமும் இடமாக இருக்கிறது.  கொஞ்சம் பொறுங்கள் அவன் யாரோவை சந்தித்த அனுபவத்தை நான் உங்களுக்கு மின்னஞ்சல் செய்கிறேன்' என்று கார்த்திகேயன் தொலைபேசியைத் துண்டித்தார்.  அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கார்த்திகேயனிடமிருந்து அந்த அஞ்சல் வந்தது.

யாரோவின் காட்சி

'ரகசியங்கள்  ததும்பும் பெருமூச்சுகளின் அழுக்கான உப்பு நுரைகளால் பின்னப்பட்டு, அதிகாலை நேரத்தை அங்கொன்றும் இங்கொன்றுமாய் கோர்த்து செய்யப்பட்ட நிர்வாணத்தை அந்த மனிதர் கழுத்திலிருந்து பாதம் வரை ஆடையாக போர்த்தியிருந்தார். அது அவரின் மீது வழிவதும் கலைவதுமாக இருந்தது. என் கைகளிலிருந்த சுருட்டை சுண்டியெறிந்து விட்டு நான் அவரைப் பார்த்த போது, அவரும் என்னைப் பார்த்தார். போலும் இருந்தது என் பின்னால் வேறு எதையோ பார்ப்பது போலும் இருந்தது.  அவருக்கு நேர்கொண்ட பார்வையாக இல்லை.  விலங்குகளைப் போல அவர் பின்னிருந்து முன்னாக உலகை இரண்டாக வகுந்து பார்ப்பது போல் பார்த்தார்.  நான் அவருக்கு வணக்கம் சொல்லி, 'யாரோ தானா நீங்கள்?' என்றேன்.

அவர் உடனடியாகப் புன்னகைத்தார்.  எட்டி என்னருகில் வந்து, தன் கைகளால் என் கைகளைப் பற்றிக் கொண்டார்.  எனக்கு அசௌகரியமாக இருந்தது.

என் உடல் எல்லைக்குள் அவ்வளவாக யாரையும் அனுமதிக்காத முசுடு நான்.  என் கைகளை விடுவேனா என்கிறார்.  அவரது வலது கை ஜில்லிட்டும் இடது கை வெதுவெதுப்பாகவும் இருந்தது வேறு என்னை குழப்பத்தின் உச்சிக்கே அழைத்துச் சென்றது. 

யாரோ தான்!

என் கைகளை அணைத்துக் கொண்டிருந்த அவர் கைகள் தள்ளாடுவது போல் நடுங்கின.

'நீங்கள் ஆரோக்கியமாய் இல்லை'.  என் குரல் தேவையின்றி கமறிச் சிதறி ஒலிப்பதை என்னால் பார்க்க முடிந்தது.

அதற்கு அவர் சிரித்தார்.  'யாரோ எப்பொழுதுமே பலவீனன்  தான்' .

'எனக்கு உங்களிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கிறது' ,  நான் சொன்னேன்.

'எல்லோருக்குமே யாரோவிடம் கேட்பதற்கு ஏதாவது இருக்கத்தானே செய்கிறது. கேள்.'  இந்த இடத்தில் யாரோ மீது எனக்கு எரிச்சல் வந்தது. இவ்வளவு சீக்கிரம் ஒரு அந்நியரை ஒருமையில் அழைக்க ஆரம்பிக்கலாமா?

'நீங்கள் அடையாளங்களை வெறுப்பதாய் சொல்லப்படுகிறது.  ஏன் அப்படி இருக்க வேண்டும்? அடையாளங்கள் தானே வாழ்க்கையை எளிமையாக்குகின்றன?'

யாரோ தனது வகிரும் கண்களால் என்னைப் பார்த்தார்.  இத்தனை நேரம் தன் கைகளுக்குள் வைத்திருந்த என் கைகளைத் திரும்பித்தந்தார்.  ஒரு வித நிம்மதியோடும் கூச்சத்துடனும் என் கைகளை நான் திரும்ப வாங்கிக் கொண்டேன். இப்பொழுது நினைத்தால் வெடுக்கென்று வாங்கி விட்டேனோ என்று கூட சந்தேகமாயிருக்கிறது.

அவர் என்னைப் பார்த்து, 'யாரோ அடையாளங்களைக் காதலிக்கிறாள்.  அவன் தான் என்னை விடுகிறான் இல்லை' என்று சொல்லி அங்கிருந்து நகர்ந்து போனார். 
 
நடந்து செல்லும் அவரைப் பார்க்கையில், அதுவரையில் நான் உணர்ந்திராத, பெண்ணிற்கான ஏதோவொரு சிறு சாயல் அவரிடம் இருப்பதாய் பட்டது.'  - ஐராவதீஸ்வரன்.

இதை வாசித்து முடித்ததும், Legacy of Incognitos தளத்திற்கு மீண்டும் சென்று பார்த்தேன்.  எடுத்த எடுப்பிலேயே அத்தளம் என்னைப் பெயர் சொல்லி அழைத்து, தன்னைத் திறந்து காட்டியது.  அதே முகப்பு, யாயும் ஞாயும்! அதில் இருப்பதாய் சொல்லப்படும் மீத பக்கங்களை என்னால் பார்க்க முடியவில்லை. 

அந்தப் பக்கங்களைக் கார்த்திகேயனை அனுப்ப சொல்லலாம் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டால், யாரோ ஒரு ஆண் தெலுங்கில் வருத்தம் தெரிவித்தார். அதன் பின் எஸ். கார்த்திகேயன் என் தொடர்பு எல்லையிலிருந்து அனைத்து இந்திய மொழிகளிலும் விலகியே சென்றார்.  இரண்டு மூன்று முறை ஐராவதீஸ்வரனை சந்திக்க நான் எடுத்த முயற்சிகள் கட்டிட வளைவுகளுக்கிடையிலான சிறு பிள்ளைகளின் விளையாட்டாய் மாறின. ஒரு கட்டத்தில் நான் அனாதரவாய் உணரத் தொடங்கினேன்.
   
காடு இருந்ததற்கான அடையாளம் போல் மரங்களின் கருகிய அடித்தூர்களை மட்டுமே தொலைதூரம் வரை கொண்டிருந்த, காற்றில் சாம்பல் நெடி ஏறியிருந்த வனாந்தரத்தில் திடீரென்று யாரோ என்னைத் தொலைத்து விட்டது போல் உணர்ந்தேன். அப்பொழுது தான் கரும்பப்பட்டதால் அறுக்கும் தாள்களைக் கொண்ட புல்தரையில் துடிக்கும் படி விடப்பட்ட, சிறு குழந்தையாய் விக்கிக்கொண்டிருக்கும் மீனைப் போல நான் இருப்பதாக உங்களைக் கற்பனை செய்யச்சொன்னால் நம்புவீர்களா என்று தெரியவில்லை, ஆனால் என் நிலை அதற்கும் ஒரு படி மேலே கவலைக்குறியதாக இருந்தது. யாரோ பற்றியும் அப்படியான மரபு பற்றியும் அறிந்து கொள்ள விரும்பும் மனிதன் முதலில் அவனது அடையாளத்தை அழித்துக் கொள்ள வேண்டும் என்றால், அதைத் தெரிந்து கொள்வதன் மூலம் இப்போதிருக்கும் அவனுக்கு என்ன கிடைத்துவிடப் போகிறது?

Comments

Suresh M said…
மெட்ராஸ் திரைப்படத்தின் விமர்சனத்தைப் படிக்க வந்த இடத்தில் 'யாரோ' என்ற கதையைப் படிக்க முடிந்தது. எந்தவித உணர்ச்சிக் கொந்தளிப்பும் இல்லாத கதையையும் கூட பதட்டத்தோடு வாசிக்கும் படி எழுதுவதை உங்களின் பாணியாக நினைக்கிறேன். துண்டு துண்டுகளாய் - இன்னும் சரியாகச் சொன்னால், பின்னமடையும் மனிதர்களா - என்னால் சரியாகச் சொல்லத் தெரியவில்லை, அடையாளங்களை இழந்து விடுதல் பற்றிய குழப்பம், அப்படியொரு நிலை பற்றிய ஏக்கம் - நல்ல கதையைப் படித்த அனுபவம்.

சுரேஷ் முத்துசாமி
Anonymous said…


ஜெயமோகனின் அனானிகளுக்கான பதிலா இந்த 'யாரோக்கள்'?

அரவேந்தன்
Anonymous said…
The short story (if I am right) that is named as 'YaarOO' has the tendency of subverting everything constructed in the process of narration to the extend of bullying the story itself in its last line. Brilliant piece with load of technical details. I don't know whether any one other than the academic system could understand the nuances of this story (like 'doctoral symptoms / syndrome). anyhow I am happy to read a post-modern short story in Tamil, which I never dreamed of. I would like to read your other fictional works. I enjoyed the game with names, VEDEPODEKEME, SK, Iraavatheeswaran, Athiappan and of course the nameless narrator.
- Siva Natesan, Bangalore
Anonymous said…
என்னுடைய அபிமான எழுத்தாளர் ஜெயமோகனுக்கு எழுதியிருந்த கடிதத்தின் மூலமாக உங்கள் பிலாக்கை நான் படிக்க ஆரம்பித்தேன். ஜெயமோகனின் 'யானை டாக்டர்' தான் முதலில் படித்த் இலக்கியம். அதற்கப்புரம் என்னுடைய அன்றாட சோத்துக்கு ஒரே ஆதாரமான பழக்கடையையும் கூட கவனிக்காமல் அவரது அத்தனை எழுத்துகளையும் படித்து முடித்தேன். இப்பொழுது, அவர் இறங்கியிருக்கும் பாரதத்தை எழுதும் தவத்தையும் - எங்களைப் பொறுத்த வரை அவர் தவம் தான் செய்கிறார். நான் கேட்டுக் கொள்வதெல்லாம் தயவு செய்து மகானுபவ காரியங்கள் நடக்கும் போது அதை வணங்குங்கள். அல்லது தடை செய்யாமலாவது இருங்கள். நான் இங்கு எழுத வந்தது, என்னையும் கிருஷ்ணமூர்த்தி, பெங்களூர் போன்ற எளிய வாசகர்களைப் பெற்ற ஜெயமோகன் எழுத்தையுன் இதோ நீங்கள் எழுதியுள்ள இந்த 'யாரோ' என்ற கதையையும் ஒப்பிட்டுப் பாருங்கள். இந்த எழுத்தில் என்னால் சற்றும் வாசிக்கமுடியவில்லை. பின்ன யாருக்குகாக எழுதுறீங்க தெரியவில்லை. கோணங்கி என்றொர் எழுத்தாளரைச் சொல்கிறார்கள் அவருக்குத் தம்பி போல் இருக்கிறது. தயவு செய்து என்னைப் போன்ற சாமானியர்களுக்காக எழுதும் ஜெயமோகனை அவமானம் செய்யாதீர்கள்.

பெருந்துறை கண்ணன்

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக