கற்பனையைத் திருடும் 'கத்தி'
கத்தி படத்தைப்
பார்த்த பின்பு பல்வேறு தரப்பினர் பல்வேறு விதமாய் எழுதியிருந்ததைப் படித்த
பின்பு, ஒரு விஷயம் எனக்குத் தெளிவாகியிருந்தது, படம் வெளியாவதற்கு முன்பு நடந்த அரசியலுக்குக்
கொஞ்சமும் சளைக்காத அரசியல் படத்திலும் இருக்கிறது!
1. படத்தில் இரண்டு காட்சிகள் முக்கியமானவை. தற்செயலாகவோ அல்லது திட்டமிட்டமிட்டபடியோ அவை
படத்தின் முதல் காட்சியாகவும், இறுதிக் காட்சியாகவும் இருக்கின்றன.
கொல்கத்தா
சிறையிலிருந்து விஜய் தப்பித்து ஓடுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றுமில்லை; விஜயை
சிறையிலடைத்தால், தப்பித்து ஓடிவிடுகிற திறமை அவருக்கு இருப்பதில் என்ன ஆச்சரியம்
இருக்கப் போகிறது?
ஆனால், அந்தத்
தப்பிக்கும் காட்சி, பாதியிலிருந்து மீண்டுமொரு முறை திரும்பிக்காட்டப்படும் போதும்,
தப்பிப்பதற்கான காரணமாகச் சொல்லப்படுவதும் நமக்கு சுவராஸ்யத்தை ஏற்படுத்துகிறது. விஜய், உண்மையில் தப்பித்து ஓடும் கைதி அல்ல;
தப்பித்து ஓடும் கைதியை விரட்டிச் சென்று போட்டுக் கொடுக்கும் 'மோப்ப நாய்'! தப்பித்துச் செல்லும் கைதியைக் காட்டித்
தருவதோடு, இடுப்பிற்குக் கீழ் சுட்டு பிடிக்கவும் ஏற்பாடு செய்து, இறுதியில் அந்த
கைதி அடைய விரும்பிய 'விடுதலை'யையும் விஜய் திருடிக்கொண்டு ஓடுகிறார். 'திருடிச் செல்லும் மோப்ப நாய்'!
2. படத்தின் இறுதிக் காட்சியில், தனது சாகசங்கள்
மூலம் கிடைக்கப் பெற்ற பாராட்டு, அனுதாபம், புகழ் அனைத்தையும் 'ஜீவா'விற்கு தாரை
வார்த்துவிட்டு, ஏதுமற்ற அனாதையாய், உடற்காயங்களோடு, தடுமாறியபடி 'கத்தி' நடந்து
செல்கையில், கொல்காத்தாவிலிருந்து வந்த கொலையாளிகள் ஏதாவதொரு தருணத்தில் கத்தியால்
குத்துவார்கள் என்று நாம் எதிர்பார்க்கிறோம்; யாரும் குத்தவில்லை! கத்தியின் காதலி
அவனை நோக்கி ஓடிப்போவாள் என்று எதிர்பார்க்கிறோம்; அவளும் ஓடவில்லை! நம்முடைய
எதிர்பார்ப்புகளுக்கு மாறாகக் கொல்கத்தா காவல்துறை அவனை கைப்பற்றிச் செல்கிறது.
பாவம்! எல்லாமே சுமுகமாக முடிந்திருந்த வேளையில் இவன் ஒருவன் மட்டும் காயங்களோடு
வெறுங்கையனாய் சென்று கொண்டிருக்கிறான். இந்த
இடத்தில் பார்வையாளர்களான நமது ஒட்டுமொத்த அனுதாபத்தையும் கத்தியே திருடிக் கொண்டு
போகிறான்!
என்னவொரு
துரதிர்ஷ்டம் பாருங்கள்! பன்னாட்டு
நிறுவனங்களின் சதியிலிருந்து கூட தமிழகம் விடுதலை பெற்று விட்டது! ஆனால், இதையெல்லாம் சாத்தியப்படுத்திய வீரபுருஷன் மட்டும் அனைத்தையும் இழந்து
அனாதையாய் நிற்கிறான்!
3. இந்த இரண்டு காட்சிகளுக்கு இடையே சொல்லப்பட்ட
கதை என்ன என்பதை நான் இப்படி சொல்ல முயற்சிக்கிறேன்: கத்தி ஒரு திருடன்; மோப்ப
நாயின் குணங்கள் வாய்த்தத் திருடன். அவன்
ஒரு முறை தன்னைப் போலவே இருக்கும் ஜீவாவை சந்திக்கும் பொழுது, தன்னிச்சையாய்
ஜீவாவின் வாழ்க்கையை மோப்பமிடத் தொடங்குகிறான்.
பன்னாட்டு நிறுவனங்களுக்கு எதிரான அரசியலை வாழ்க்கையாகக் கொண்ட ஜீவாவின் வாழ்க்கைப்
பாதையை முகர்ந்து கொண்டே செல்லும் அவனுக்கு, கோடி கோடியாய் பணம் கிடைக்கும்
வாய்ப்பு புலப்படுகிறது. அந்தப் பணத்தைத்
திருடிச்செல்லும் வழியில், கோடிப் பணம் கிடைத்தாலும் கிடைக்காத பெயரும் புகழும்
(ஜீவாவின் உயிருக்காக தங்களையே மாய்த்துக் கொள்ளும் வயோதிகர்கள்) கிடைக்கிற
வாய்ப்பை முகர்கிறான். பணத்தை விடவும்
இந்த மக்கள் பலம் கத்திக்கு பெரிதாகத் தெரிகிறது.
பணம் திருடும் திட்டத்தை கைவிட்டு, மக்களின் அபிமானம் திருடும் திட்டத்தை
மேற்கொள்கிறான்.
ஊடகத் துணையிலான
பன்னாட்டு நிறுவனங்களின் சூழ்ச்சிகளை கத்தி தனது இயல்பான மோப்ப சக்தியின் மூலமாக,
சூழ்ச்சிகளின் மூலமே வெற்றி கொள்கிறான். கழுத்தில்
கத்தி வைத்தால் பதிலுக்குக் கத்தி வைப்பது, நிலத்தடி நீரை உறிஞ்சினால், வீட்டிற்கு
வரும் குடி நீர்க் குழாய்களை அடைத்து விடுதல், நீதிபதியை பன்னாட்டு நிறுவனம்
மிரட்டுகிறது என்றால் தானும் மிரட்டுதல் என்று அவர்கள் வழியிலேயே சென்று அவர்களை
வெற்றி கொள்கிறான். இறுதியில், தனது மோப்ப நாய்த் திட்டம்
அம்பலமாகும் போது, தான் திருட நினைத்த மக்களின் அபிமானத்தையும், புகழையும்,
பாராட்டையும் பெருந்தன்மையாய், ஜீவாவிடமே தந்து விட்டு, சிறைச்சாலைக்கே
திரும்புகிறான்.
4. இந்தப் படத்தின் மையச் சிக்கல்
என்ன? பெரும்பாலோர் கருதுவது போல,
நிலத்தடி நீர் அல்ல. 'பூமிக்கடியில்
ஓடுகின்ற நீரோட்டத்தை உறிஞ்ச வரும் பன்னாட்டு நிறுவனங்களை எதிர்க்கும் விவசாயிகள்'
என்பது திரையில் கதை சொல்லப்பட்ட விதத்தைப் பொறுத்தவரையில் ஜீவா என்ற
கதாபாத்திரத்தின் பின்கதை தானேயொழிய, அதுவல்ல படத்தின் முரண்!
படம், ஒரு
திருடனைப் பற்றியே நம்மிடம் அதிகமும் பேசுகிறது. அவன் தான் கதாநாயகனும் கூட. தற்செயலாய் தன்னைப் போலவே இன்னொருவனைப்
பார்க்கையில், அந்த இன்னொருவனின் அடையாளத்தை (சமூகப் போராளி என்ற அடையாளத்தை)
திருடுவதற்குக் கதாநாயகன் தயாராகின்றான். இதற்கிடையே, போராளி என்ற புது
அடையாளத்தால் பெரும் பணம் கிடைக்கிறது என்று தெரிய வருகையில் அதையும் திருடத்
துணிகிறான். அதைத் திருடும் மறுகணமே,
சமூகப் போராளி கதாபாத்திரத்தின் 'நீர் அரசியல்' என்ற கற்பனை அவனுக்குச் சொல்லப்பட,
பணத்தை விடவும் இந்தக் கற்பனையைத் திருடுவது என்று கதா நாயகன் முடிவு
செய்கிறான். அதற்கப்புறமான கதையெல்லாம்,
ஜீவா என்ற சமூகப் போராளி கதாபாத்திரத்தின் கற்பனையை, கத்தி என்ற திருடன்
கதாபாத்திரம் எவ்வாறு திருடுகிறது என்று விளக்குவதாக அமைகிறது.
'கத்தி' என்ற
திரைப்படத்தின் எதிரும் புதிருமான கதாபாத்திரங்கள், வெளிப்பார்வைக்குத் தெரிவது
போல, விவசாயிகளும் பன்னாட்டு நிறுவனங்களும் அல்ல; உண்மையில், நீர் விடுதலை என்ற
கற்பனையை நடைமுறைப்படுத்த விரும்பும் ஜீவா என்ற கதாபாத்திரமும், அந்தக் கற்பனையைத்
திருட விரும்பும் கத்தி என்ற கதாபாத்திரமும் தான் எதிரெதிர் கதாபாத்திரங்கள்.
4. கிறிஸ்டோபர் நோலனின் படங்களின் ரகசியக்
காதலனாக அறியப்படும் 'கத்தி' படத்தின் இயக்குநர் முருகதாஸ், 'ஒரு மனிதனின்
கற்பனையை இன்னொரு மனிதன் திருடுகிறான்' என்பதைத் தனது படத்தின் மையச் சிக்கலாகக்
கொண்டிருப்பார் என்பதை நம்புவதற்கு பெரிதாய் மெனக்கிடத் தேவையில்லை. இதைப் பிரக்ஞையோடு முருகதாஸ் செய்திருப்பாரா
என்ற சந்தேகம் வேண்டுமானால் நமக்கு வரக்கூடும்.
ஆனால், inception
மாதிரியான படங்களைப் பார்க்கிற எவருக்கும் அதே சாயலில் ஒரு மசாலா தமிழ்ப்
படத்தைக் கற்பனை செய்வது சாத்தியம் தானே?
5. 'கதாநாயகன் கற்பனையைத்
திருடுகிறான்' என்று சொல்வதற்கு
படத்தில் ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
கதிரேசன் என்ற கதாபாத்திரம், நீர் அரசியலை கருத்தியலாக விளங்கிக் கொண்டோ
அல்லது அதன் யதார்த்ததை நேரடியாக அனுபவித்தோ அந்தப் போராட்டத்தில்
இறங்கியிருக்கவில்லை. அதற்காகப் போராடும்
ஜீவா என்ற கதாபாத்திரத்திற்காக உயிரையேத் தாரை வார்க்கும் அளவிற்கான மக்கள் ஆதரவு
இருப்பது தான் கதிரேசனை யோசிக்க வைக்கிறது.
இருபத்தைந்து கோடி ரூபாய் பணத்தைக் காட்டிலும் மக்களின் வெறித்தனமான,
கண்மூடித்தனமான பக்தி அவனுக்குக் கூடுதல் போதையாகத் தெரிகிறது. அந்த போதைக்காக, ஜீவாவின் கற்பனையைத் திருட
முடிவு செய்கிறான்.
6. நீர் அரசியலைத் திருடுகிறானா அல்லது நீர்
அரசியல் என்ற கற்பனையைத் திருடுகிறானா என்றால், கற்பனையைத் தான் திருடுகிறான்
என்றே நாம் சொல்ல வேண்டியிருக்கிறது. நீர்
அரசியல் என்பது அந்தப் படத்தின் கதை நிகழ்வதாக சொல்லப்படும் விரல் விட்டு
எண்ணக்கூடிய நாட்களில் நடந்து முடிந்து விடுவது இல்லை; அந்தக் கடைசி சில நாட்கள்
என்பது, ஜீவா போன்ற கதாபாத்திரங்கள் வருடக் கணக்காய் கிராமங்களில் பணி செய்த
பின்பு கிடைக்கவிருக்கின்ற ஒரு சிறு வெற்றி மட்டுமே. மற்றபடி எந்தவொரு அரசியலும் தொடர்ச்சியான
இழப்புகளால் மட்டுமே செய்யப்பட்டிருக்கிறது - உயிர் இழப்புகள், பொருளாதார
இழப்புகள் என்று பல.
கத்தி என்ற
கதிரேசன், நீர் அரசியலின், இழப்புகள் மலிந்த யதார்த்தத்தை, பார்வையாளர்களான
நம்மைப் போலவே, நாடகார்த்தமான ஒலி - ஒளி படக்காட்சி மூலமே சந்திக்கிறார். அந்தப் படக்காட்சி, மிகத்தெளிவாக, மொத்த
படத்தின் ஒலி, ஒளி அமைப்புகளிலிருந்தும், காட்சிப்படுத்தல்களிலிருந்தும் வேறுபட்டு
நிற்கிறது. ஆனால், இந்தப் படக்காட்சியும்
கூட, நீர அரசியலின் யதார்த்தத்தை, கதாநாயகனின் தியாகம், வீரம், அவன் மீது மக்கள்
காட்டுகிற பக்தி / வெறி என்று நாயக பாவத்தைக் கட்டியெழுப்பும் நோக்கமுடையதாகத்தான்
இருக்கிறதே தவிர, விவசாயிகளின் பிரச்சினையை விவரிப்பதாய் இல்லை. அந்த ஒலி - ஒளி காட்சியமைப்பும் கூட ஜீவாவின்
பணியை விளக்கும் காட்சியமைப்பாகத்தான் சொல்லப்படுகிறது என்பதால், கத்தி ஜீவாவின்
கற்பனையைத் தான் திருடினான் என்று சொல்லவேண்டியிருக்கிறது.
7. கற்பனையைத் திருடுவதில் தனி நபர்களைக்
காட்டிலும் நிறுவனங்களே நுட்பமானவை. அவை,
திருட்டு வேலையைச் செய்கின்றன என்று கண்டுபிடிப்பதே பிரம்மபிரயத்தனம்; அப்படியே கண்டுபிடித்தாலும் அவை
உங்களிடமிருந்தே கூட திருடுகின்றன என்று உணர்வது இன்னும் கடினம்; அப்படியே கண்டுபிடித்தாலும் அந்தத் திருட்டை
நிரூபிப்பது முடியவே முடியாத ஒன்று.
பெரும்பாலான 'கற்பனைத் திருட்டுகள்' ஆலோசனைக் கூட்டங்களிலும், குழு
விவாதங்களிலுமே நிகழ்கின்றன. இந்த
மாதிரியான கூட்டங்களில் பகிர்ந்து கொள்ளப்படும் யோசனைகளும், கற்பனைகளும், அவை
யாரால் முன் வைக்கப்பட்டவை என்றாலும், அக்கூட்டங்களின் தலைவர்களின் யோசனைகளாகவும்
கற்பனைகளாகவும் வரவு வைக்கப்படுகின்றன. அதாவது, சிப்பந்திகள், உதவியாளர்கள்
போன்றோரின் கற்பனைகள் அனைத்தும் மேலாளர்களின் மூளையில் உதித்தவை.
பன்னாட்டு
நிறுவனங்கள் தான் என்றில்லை அது எந்தவொரு நிறுவனமாக இருந்தாலும் இந்தக் கற்பனைத்
திருட்டு என்பது அதன் அடிப்படைக் குணமாக இருக்கிறது. Brain storming, group discussion, free discussion,
informal meeting என்ற பெயரில் சொல்லப்படும்
அனைத்தும் கற்பனைகளைத் திருடுவதற்கான வெவ்வேறு வழிமுறைகள் என்று யோசித்தால் நமக்கு
புரிபடும்.
8. தமிழ் திரைப்பட உருவாக்கத்தில்
அதி தீவிரமாகச் செயல்படுத்தப்படும் கதை விவாதத்தில், இயக்குநராகிவிடும்
லட்சியத்தோடு உட்கார்ந்திருக்கும் ஒவ்வொருவரும் பகிர்ந்து கொள்ளும் கற்பனைகள்
இறுதியில் யாருடைய சொத்தாக மாற்றம் பெறுகின்றன?
அந்த விவாதங்களில் உருவாக்கப்படும் கதாபாத்திரங்களும், காட்சியமைப்புகளும்,
உரையாடல்களும் யாருடைய கற்பனையாக கணக்கு வைக்கப்படுகின்றது? ஒரு பன்னாட்டு நிறுவனமோ அல்லது உள் நாட்டு
நிறுவனமோ தனது ஊழியர்களின் கற்பனையைக் கபளீகரம் செய்வதற்கும், கதை விவாதங்களை
நிகழ்த்தும் தமிழ்த் திரைப்படைப்பாளிகள் தங்களது உதவியாளர்களின் கற்பனையைத் திருடுவதற்கும்
என்ன பெரிய வித்தியாசம் இருக்கிறது?
9. தன்னுடைய கற்பனையை முருகதாஸ்
திருடி, 'கத்தி' என்ற படமாக எடுத்திருக்கிறார் என்று கோபி என்பவர் தொடர்ச்சியாகக்
குற்றம் சாட்டுவதோடு, நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்திருக்கிறார். அப்படி அவர் கை நீட்டி சுட்டுகிற படம்,
கற்பனையைத் திருடுகிற ஒருவனைப் பற்றிய படமாக இருப்பது தான் எனக்கு பெரிய
ஆச்சரியம். யாருக்குமே சொல்லக்கூடாதென்று
நீங்கள் அடிமனதில் பூட்டி வைக்கிற கள்ளத்தனங்கள் தான் உங்களது கலைப்படைப்பைத்
தீர்மானிக்கின்றனவா?
Comments