அன்புள்ள எம். ராஜா, மாதொருபாகன் நிகழ்வு குறித்த உங்களது எதிர்வினைகளுக்கு நன்றி. நீங்கள் கவனப்படுத்தும் இரண்டு செய்திகளை நான் இப்படி புரிந்து கொள்கிறேன். 1. மாதொருபாகன், சாதியமைப்பு மீதான விமர்சனங்கள் கொண்ட படைப்பு. 2. நிலவுடமைச் சமூக மதிப்பீடுகளில் தோய்ந்திருக்கும் குடியானவனின் பார்வையை மாதொருபாகன் துல்லியமாகப் பதிவு செய்கிறது. பெருமாள்முருகனின் முந்தைய பிரதிகளை வாசித்திருக்கிற ஒருவருக்கு, மாதொருபாகனை இவ்வாறு சாதியமைப்பு குறித்த கண்டனங்கள் நிறைந்த பிரதியாக வாசிப்பதற்கான ஆவல் ஏற்படுவது இயல்பு தான். ஆனால், வாசக விருப்பத்தையும் தாண்டி, குறிப்பிட்ட பிரதி அப்படியொரு வாசிப்பிற்கான வாய்ப்புகளை வழங்குகிறதா என்பதைக் கவனிக்க வேண்டும். மாதொருபாகன் அப்படியான வாய்ப்புகளை வழங்கவில்லை என்பதே எனது முடிவு. திருவிழாக்களில் உருவாகும் சொற்ப நேர சமூக நெகிழ்வு சாதியால் ஒடுக்கப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, எல்லோருக்குமே சமமான வாய்ப்புகளை ஏற்படுத்தித் தருகிறது. அங்கொரு கட்டற்றத் தன்மை உருவாகிறது. அந்தக் கட்டற்ற சூழலில் இழப்பதற்கு எதுவுமற்றவனே பலசாலியாக இருக்கிறான்.