மதுரை காமராசர் பல்கலைக்கழக
நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறையில், நாட்டுப்புறவியல்
முதுகலைப் (M.
A. in Folklore) பாடப்பிரிவிற்கான
2015-16ம் வருட மாணவர் சேர்க்கை நடந்து கொண்டிருக்கிறது.
நாட்டுப்புறவியலில் முதுகலை என்ற
பாடத்திட்டம் 1987ம் வருடம் பாளையங்கோட்டை, தூய சவேரியார் கல்லூரியில்
தொடங்கப்பட்ட போது தமிழ் நாட்டில் எல்லோருக்கும் ஆச்சரியம். இப்படியும் ஒரு படிப்பா?
ஏராளமான கேள்விகள், கிண்டல்கள், பொறாமை,
ஏச்சுகள் - எல்லாமே அதீத வகை தான்!
·
ஒரு கிறிஸ்தவ கல்வி நிறுவனம் நாட்டுப்புறவியலை முன்னிறுத்துவதில்
'பன்னாட்டு அரசியல்' இருப்பதாய் சொல்லிக்கொண்டிருக்கும் இந்துத்துவர்கள்...
·
அதையே இன்னொரு தொனியில் 'அய்யய்யோ கிறிஸ்தவ நிறுவனத்திற்குள்
பேய்களும் பிசாசுகளுமா?' என்று கூக்குரல் எழுப்பும், கழுத்தில் சிலுவை அணிந்த
கிறிஸ்தவ அடிப்படைவாதிகள்...
·
'இது எங்க ஏரியா உள்ள வராதே..' என்று மார்தட்டிய நாவாவினர்...
·
அதனாலேயே உள்ளே வர சங்கடப்பட்டு ரொம்ப வருடங்களுக்கு வாசலிலேயே நின்று
கொண்டிருந்த கலை இரவினர்...
·
இதற்கெல்லாம் உச்சம் போல, 'என்னது? திராவிட நாட்டில் மூடநம்பிக்கைகளைப்
படிப்பதற்கு ஒரு துறையா? அதுவும் பெரியார்
பிறந்த மண்ணிலா?' என்று கேட்டு வழக்கம் போல தங்களது அறியாமையை வீரத்தோடு முழங்கிய
கழகக் கண்மணிகள்...
இப்படி எல்லாவற்றையும் கடந்து நடைபெற்றுவரும்
நாட்டுப்புறவியல், 1992 முதல் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்திலும் தனித் துறையாக
செயல்படத் தொடங்கியது. இலக்கியத் துறைகளிலிருந்தே
நாட்டுப்புறவியல் உருவானது (...என்றாலும்
இலக்கியத்துறைகளின் கட்டுப்பெட்டித் தனத்திலிருந்து தன்னை விலக்கியே
வைத்திருந்தது); அதிலும் குறிப்பாக தமிழ் இலக்கியத் துறைகள் (எனக்குத் தெரிந்து, ஆங்கில இலக்கியம் பயின்று நாட்டுப்புறவியலுக்குள்
வந்து சேர்ந்தவர் M. D. Muthukumaraswamy மட்டுமே!).
நாட்டுப்புறவியல் முதுகலைப் பாடத்திட்டம்
அன்றைக்கும் சரி இன்றைக்கும் சரி ஒரு முன்மாதிரி பாடத்திட்டம் தான். அனைத்து அறிவுப் புலங்களின் நவீனப்
பார்வைகளையும் உள்வாங்கிக்கொள்ளும் வண்ணம் அது வடிவமைக்கப்பட்டிருந்தது. (என்னவொரு
முரண்! மரபையும் பழமையையும் கையாளும்
நாட்டுப்புறவியல் தான் அதி நவீன முறையியல்களை ஆய்வு உபகரணங்களாகக் கொண்டிருந்தது).
ஒரு சின்ன உதாரணமாக, நவீன மொழியியல் 'குறியியல்' என்று முளைத்த போது,
மொழியியல் துறைகள் அள்ளவோ கோர்க்கவோ என்று குழம்பிய போது, நாட்டுப்புறவியல் பாடத்திட்டம்
அதனை 'அமைப்பியல்வாதமும் குறியியலும்' என்று தனக்குள் செரித்துக் கொண்டது. இந்த வகையில், முதுகலை நாட்டுப்புறவியல் என்பது
இலக்கியம், மொழியியல், மானிடவியல், உளவியல், தத்துவம், சமயம், சமூகவியல்,
அரசியலியல், தொடர்பியல் போன்ற பிற துறைகளின் இணைப்பாக உருவான உயர் அறிவியல்.
இது தான் மதுரை
காமராசர் பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் முதுகலை நாட்டுப்புறவியலுக்கான
பாடத்திட்டம்:
1. நாட்டுப்புறவியல்
அறிமுகம் (Introduction to Folkloristics)
2. கள
ஆய்வும் ஆவணப்படுத்தலும் (Field Methods and Documentation
Techniques)
3. பண்பாட்டு
மானிடவியல் (Cultural Anthropology)
4. இந்திய
சமூக ஒழுங்கமைப்பு (Indian Social System)
5. இனவரைவியலும்
பண்பாட்டை எழுதுதலும் (Ethnography
and Writing Culture)
6. இனக்குழு
கவிதையியல் (Ethno Poetics)
7. நாட்டுப்புறவியல்
கோட்பாடுகள் I (Folklore
Theories I)
8. தொடர்பியல் கோட்பாடுகள் (Theories of Communication)
9. கதையாடலியல் (Narratology)
10. மின்
ஆவணப்படுத்தலும் புதிய அருங்காட்சியியலும் (Digital
Archiving and New Museology)
11. இனவரைவியல் ஆவணப்பட
உருவாக்கம் (Ethnographic Film making)
12. வழக்காறுகளும் தேசியவாதமும் (Nationalism and Folklore)
13. நாட்டுப்புறவியல்
கோட்பாடுகள் - II (Folklore Theories II )
14. நாட்டுப்புற சமயமும் சடங்குகளும் (Folk Religion
and Ritual)
15. பண்பாட்டுச்
சின்னங்கள் (Tangible Cultural Heritage)
16. அமைப்பியல்வாதமும்
குறியியலும் (Structuralism and Semiotics)
17. நிகழ்த்துதல்
ஆய்வுகள் (Performance Studies)
18. தமிழ்
நாட்டுப்புற அரங்கக் கலைகள் (Tamil
Folk Theater)
19. பயன்பாட்டு
நாட்டுப்புறவியல் (Applied Folklore)
20. வாய்மொழி
மரபும் வரலாற்றுருவாக்கமும் (Oral
Tradition and Historiography)
21. மரபான
அறிவுத் தொகுதிகள் (Indigenous Knowledge System)
22. நவீனச்
சூழலில் வழக்காறுகள் (Folklore in the Changing World)
23. மெய்
நிகர் நாட்டுப்புறவியல் (Virtual Folklore)
·
இரண்டு வருட
முதுகலைப் பாடத்திட்டம் இது.
·
எந்தவொரு
பாடப்பிரிவில் இளங்கலை பயின்றவர்களும்
முதுகலையில் சேரமுடியும் (நானே இளங்கலையில் வேதியியல் தான் படித்தேன்).
·
இலக்கிய
வாசனையும், சிற்றிதழ் அறிமுகமும் இருந்து பண்பாடு குறித்து ஒரு ஓரமாய் அக்கறையும்
இருக்கிறவர்கள் இந்த முதுகலையைக் கற்க வரலாம்.
·
இதைப்
படித்தால் அங்கே வேலைக்குப் போகலாம், இங்கே வேலைக்குப் போகலாம் என்று சொல்வதற்கு
வழியில்லை. ரொம்பவும் சொற்பமான அரசுப்
பணிகள் மட்டுமே உள்ளன. (அதுவும் மத்திய
அரசுப் பணி தான், மாநில அரசில் பண்பாட்டு விஷயங்களை பக்தியும் இலக்கியமும் கவனித்துக்
கொள்கின்றன). ஊடகங்களிலும்,
ஆய்வு மையங்களிலும், அருங்காட்சியகங்களிலும், பண்பாட்டு மையங்களிலும் முட்டி மோதுகிறவர்களுக்கு
வேலை கிடைக்கிறது.
·
ஆனால், மத்திய
அரசின் (பல்கலைக்கழக மானியக்குழு) ஆய்வு நிதியுதவிகளைப் பெற்று ஆய்வுகளை
மேற்கொள்வது நாட்டுப்புறவியலில் எல்லோருக்கும் வாய்க்கிறது. எனவே நாட்டுப்புறவியல் படிப்பதால்
உயிருக்கெல்லாம் ஆபத்தில்லை!
·
ஆடுகிறவர் - பாடுகிறவர்
பின்னால் திரிய வேண்டி வரும்; கிராமப்புறங்களில் ஆட்களற்ற பகல்களில் நிழல் போல
காத்திருக்க வேண்டி வரும்; 'பெரிசுகள்' சொல்லும் கதைகளையெல்லாம்
உம்...உம்...கொட்டி பொறுமையாய் கேட்க வேண்டியிருக்கும்; விடிய விடிய
தெருக்கூத்தைப் பார்க்க வேண்டி வரும்; கருப்பசாமி பற்றி யாரிடம், என்ன கேட்டாலும் சுற்று
வட்டாரத்தில் இருக்கிற அனைவருக்கும் சாமி வந்து விடுகிற அனுபவங்கள்
கிடைக்கும். இதையெல்லாம் கடந்து வந்த
பின்பு, 'ஏன் இப்படி?' என்றொரு கேள்வி வரும் பாருங்கள், அது தான்
நாட்டுப்புறவியலின் மாயச்சுழற்பாதை!
இந்தச் சுழலுக்குள் அகப்பட்டு, பின் வெளிப்பட விரும்புகிறவர்கள் யாராவது
இருந்தால், நாட்டுப்புறவியல் முதுகலை படிக்க வரலாம். 2015-2016ம் ஆண்டிற்கான சேர்க்கைப் படிவங்கள்
இணையத்தில் கிடைக்கின்றன www.mkuniversity.org.
முதுகலை நாட்டுப்புறவியல் (M. A. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: ஏதாவது ஒரு இளங்கலைப் பட்டம் (தமிழ் அல்லது ஆங்கிலம் மொழிப்பாடமாக படித்திருக்க வேண்டும்) - இளங்கலை மதிப்பெண் அடிப்படையில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள் - நுழைவுத் தேர்வு போன்ற எதுவும் இல்லை - இரண்டு ஆண்டுகள் படிப்பு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 10
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம்.
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015
இளமுனைவர் நாட்டுப்புறவியல் (M. Phil. Folklore) படிப்பு:
கல்வித்தகுதி: நாட்டுப்புறவியல் / மானிடவியல் / சமூகவியல் / தமிழ் / மொழியியல் / ஆங்கிலம் / தொடர்பியல் பாடப்பிரிவில் முதுகலைப் பட்டம் - நுழைவுத்தேர்வு உண்டு.
அனுமதிக்கப்பட்ட இடங்கள்: 15
தமிழ் வழி / ஆங்கில வழி என இரு மொழி வழியாகவும் பயிலலாம்.
ஆண், பெண் இருபாலருக்கும் தங்குமிட வசதி உண்டு.
ஆண்டுக்கட்டணம்: ரூ. 5000 - 6000 (பட்டியலினத்தவருக்கு ரூ.2500-3000) - தமிழக அரசு வழங்கும் கல்வி நிதி (பட்டியலினத்தவர் / பிற்படுத்தப்பட்டவர்) வழங்கப்படுகிறது.
விண்ணப்பங்கள் அனுப்ப கடைசி தேதி: 27-2-2015 (படிவத்தை இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளலாம்).
வகுப்புகள் ஆரம்பிக்கும் நாள்: 1-06-2015
மேலதிக
விபரங்களுக்கு இவர்களையும் தொடர்பு கொள்ளலாம்:
டி. தருமராஜ் (நான் தான்!) 9443554807
தி. கோபிநாத், உதவிப் பேராசிரியர் 9443113539
அ. கலையரசி, உதவிப் பேராசிரியர் 9698034145
ச. ஜஸ்டின் செல்வராஜ், உதவிப் பேராசிரியர் 8903228285
Comments