Skip to main content

சங்கப் பேச்சு - நற்றிணையின் எருமை உழவன்



சங்கப்பனுவல்களில் கேட்கும் குரல்கள் யாருடையவை?

அவை ஏன் குரல்களாக மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன?

அக்குரல்கள் யாரிடம் பேசுகின்றனவோ அல்லது எதைப்பற்றி பேசுகின்றனவோ அவர்களை / அவைகளைப் பற்றிய விவரணைகளெல்லாம் துல்லியமாக வெளிப்படும் போது, குரல்களைப் பற்றிய விவரங்கள் மட்டும் பூடகமாக இருப்பது ஏன்?


இக்குரல்கள் இன்னொரு குறிப்பிட்ட மனிதரிடமே (தோழி, அம்ம, ஊரன்) பேசுகின்றனவே ஏன்? அதாவது, இன்றைய கவிதைகளில் காணப்படுவது போல் கற்பனையான வாசகரிடம் பேசாமல் நிஜமான மனிதரிடம் பேசுகிறதே ஏன்? சங்கப்பனுவல்களில் வெளிப்படுவது உரையாடலா?  அதில் பதிவு செய்யப்பட்டுள்ள குரலிற்கு முந்தைய பிந்தைய பேச்சுகளை நம்மால் கற்பனை செய்ய முடியுமா?

சங்கப்பனுவல்களில் உருவாகும் சூழல், பொதுவான பண்பாட்டுச் சூழல் (cultural context) என்றும் உரையாசிரியர்களே கூடுதல் விவரங்களை சேர்த்து அவற்றிற்கான தனித்த சூழ்நிலைகளை (துறை போன்ற) (context of situation) உருவாக்குகிறார்கள் என்று சொல்ல முடியுமா? அதாவது, உரையாசிரியர்களின் பங்களிப்பு,  பண்பாட்டுக் கதாபாத்திரங்களை கவித்துவ கதாபாத்திரங்களாக உருமாற்றியது என்று சொல்லலாமா?

உதாரணமாய்,
மலை கண்டன்ன நிலை புணர் நிவப்பின்
பெரு நெல் பல் கூட்டு எருமை உழவ
கண் படை பெறாஅது தண் புலர் விடியல்
கருங் கண் வராஅல் பெருந் தடி மிளிர்வையொடு
புகர்வை அரிசிப் பொம்மல் பெருஞ் சோறு
கவர் படு கையை கழும மாந்தி
நீர் உறு செறுவின் நாறு முடி அழுத்த நின்
நடுநரொடு சேறி ஆயின் அவண்
சாயும் நெய்தலும் ஓம்புமதி எம்மின்
மா இருங் கூந்தல் மடந்தை
ஆய் வளை கூட்டும் அணியுமார் அவையே. ( நற்றிணை 60, தூங்கலோரியார்)

என்ற நற்றிணை 60வது பாடலில், எருமை உழவரிடம் கோரையையும் நெய்தல் மலரையும் எடுத்து வரும் படி சொல்லும் குரலுக்கு எந்தவித தனித்த அடையாளங்களும் இல்லை; ‘எம்முடைய இல்லத்தின் மா இருங்கூந்தல் மடந்தை...என்ற வரிகளிலிருந்து அக்குரலின் பால் அடையாளமோ, மூப்படையாளமோ, சாதி-சமூக-சமய அடையாளமோ தெரிவிக்கப்படவில்லை;  மாறாக, அக்குரல், குடும்பம், இல்லம் என்ற சமூக அமைப்பினுள் வாழக்கூடியது என்பதும், கோரை மற்றும் நெய்தலின் பண்பாட்டுப் பயன்களை உணர்ந்தது என்பதுமே தெரியவருகின்றது.  ஆனால், இக்குரலை, வீட்டில் சிறைப்பட்டிருக்கும் தலைவியின் தோழியாக உரையாசிரியர்கள் விவரிக்கையில் இக்குரலுக்கான தனித்த அடையாளங்களை உருவாக்குகிறார்கள்.  அக்குரல், பெண் குரலாகிறது.  கோரையையும் நெய்தல் மலரையும் கொண்டு வரும்படி எருமை உழவனிடம் சொல்வதற்கு பண்பாட்டுக் காரணங்கள் இருக்கவில்லை; அவற்றை சேகரிப்பதற்கு வயல்பரப்பிற்கு வரும் சூழலில் தலைவி இல்லை என்று தலைவனிடம் சூசகமாய் சொல்கிறாள் என்ற தனிப்பட்ட சொந்தக் காரணம் உருவாகிறது.

 

விடிந்தும்  விடியாத பொழுதுகளில் உழவர்கள் கூட்டமாக நாற்று நடச் செல்வதும், அவ்வாறு செல்பவர்களிடம் கோரையையும் நெய்தலையும் எடுத்து வரும் படி பலரும் சொல்வதும் வழக்கமாய் நடைபெறக்கூடிய பண்பாட்டு நிகழ்வு போலத் தோன்றுகிறது.  இந்தவொரு பண்பாட்டுச் சூழலையே இப்பாடல் சித்தரிக்கிறது என்று நம்மால் சொல்ல முடியும்.  அதாவது, இப்பாடல் எழுதப்பட்ட தமிழ் சூழலில் பரவலாக அறியப்பட்ட பண்பாட்டு நிகழ்வொன்றை இப்பாடல் சித்தரிக்கிறது.  பண்பாட்டை சித்தரிப்பதனால் அதில் இடம் பெறக்கூடிய குரலுக்கு தனித்த அடையாளங்கள் தேவைப்பட்டிருக்கவில்லை; அது ஆணாகவும் இருக்கலாம், பெண்ணாகவும் இருக்கலாம்.

ஆனால், உரையாசிரியர்கள், திணைக் கோட்பாடு சார்ந்து கொடுக்கக்கூடிய விளக்கம், இப்பண்பாட்டு நிகழ்வை தனித்த ஒரு  நிகழ்வாக மாற்றிவிடுகிறது. பண்பாட்டு நிகழ்வில் முக்கியமான கதாபாத்திரமாகக் காட்டப்படுகிறஎருமை உழவர்’, திணைக் கோட்பாடு சார்ந்த உரையில், காட்சிக்கான பின்புலமாக சுருங்கிப் போகிறார்.

நற்றிணை 60 வது பாடலில், அக்குரல், நாற்று நடுவதற்காக கூட்டமாகச் செல்லும் விவசாயக்குடிகளுள் ஒருவரானஎருமை உழவரிடம்நேரடியாய் பேசுகிறது.  அந்தப் பேச்சு சடங்குகள் நிரம்பிய பேச்சாகக் காணப்படுகிறது.

 முதலில், எருமை உழவரின்விவசாயப் பெருமைகள்சொல்லி அவர் அழைக்கப்படுகிறார்.  இது அவரது பொது வெளி (public space) சார்ந்த விபரமாகக் காணப்படுகிறது.  அடுத்து, அவரது தனி வெளி (private space) சார்ந்த பெருமைகள் சொல்லப்படுகின்றன.  மூன்றாவதாக, அவ்வுழவர் ஈடுபட்டிருக்கும் செயல் விளக்கப்பட்டு, அக்குரல் தனது தேவையை முன்வைக்கிறது.
உழவரின் விவசாயப் பெருமைகள் - நெல் நிரப்பப்பட்ட, மலை போல் தோற்றமளிக்கின்ற நெற்கூடுகள் அவரிடம் ஏராளம் உண்டு.  அவர்எருமை உழவர்என்று அழைக்கப்படுகிறவர்.

உழவரின் சுயம் சார்ந்த பெருமைகள் - அதிகாலையில் எழுந்து வயலுக்குச் செல்பவர் அவர்; கண்களில் தூக்கக் கலக்கம் தெரிகிறது.  ஆனாலும் ஆட்களைக் கூட்டிக் கொண்டு வயலுக்குச் செல்கிறார்.  நேற்று இரவு அவர் உண்ட உணவின் மணம் அவர் கைகளில் இன்னமும் மணக்கிறது;  அது மீன் குழம்பை சோற்றில் பிசைந்து சாப்பிட்ட மணம் தான்.  அவரது வீட்டில் விரால் மீனைத் தான் அதிகமாய் சமைப்பார்கள்.  அவ்விரால் மீன்களைப் பெரிய துண்டுகளாக நறுக்கி குழம்பில் இடுவார்கள்;  அத்துண்டுகள் குழம்பில் மிளிரும்.  அதனை சோற்றோடு பிசைந்து அவர் சாப்பிட்டிருக்க வேண்டும்.  கைகழுவிய பின்பும் அதன் மணம் போகவில்லை.

நீர் நிரம்பிய சேற்று வயலில் நாற்று முடிகளை அழுத்தி நடுவதற்காக, ஆட்களை அழைத்துக் கொண்டு அவர் வயலுக்குச் செல்கிறார்.

நாற்று நடுகையில், கோரையையும் நெய்தல் மலரையும் பத்திரமாய் எடுத்து வாருங்கள்.  எங்கள் வீட்டிலுள்ள கரிய கூந்தல் கொண்ட பெண் அதனை வளையாகவும் அணிகலனாகவும் அணிந்து கொள்வாள்’.

நமக்கு வாசிக்கக் கிடைக்கிற சங்கப் பனுவலில் மேற்கூறப்பட்ட தகவல்கள் தவிர்த்து வேறொன்றும் இருக்கவில்லை.  மிக முக்கியமாக, திணைக் கோட்பாடு சொல்லக்கூடிய உரிப் பொருளோ, துறையோ, கதாமாந்தர்களோ அப்பனுவலில் இல்லை.  விடிந்தும் விடியாத பொழுதில், நாற்று நடுவதற்கு ஆட்களுடன் வயலுக்குச் செல்லும் எருமை உழவரும் அவருடன் பேசும் குரலும் தான் அக்காட்சியை நிறைக்கிறார்கள். இந்தக் காட்சியில், அதில் இடம்பெறும் சம்பவங்களில் அக்காலகட்டத்து பண்பாட்டுச் சூழல் தவிர்த்து வேறெதுவும் நமக்கு புலப்படுவது இல்லை.  சொல்லப் போனால் அதில் கவிதை என்று சொல்வதற்கான 'உணர்வு' எதுவும் இருக்கவில்லை.  இனவரைவியல் சார்ந்த தகவல்கள் மட்டுமே நமக்குக் கிடைக்கின்றன.

ஆனால், திணைக் கோட்பாடு, இப்பனுவலுக்குள் வேறொரு சித்திரத்தை உருவாக்குகிறது.  அந்தச் சித்திரத்தில் இன்னும் சில கதாபாத்திரங்கள் இடம்பெறத் தொடங்குகின்றன.  

முதலாவதாக, அப்பனுவலில் வெளிப்படும் குரலைதோழியின் குரலாகதிணைக் கோட்பாடு கற்பனை செய்கிறது.  தோழி, எருமை உழவரிடம் தலைவியின் பொருட்டு இதனைப் பேசுகிறாள் - அதாவது, அக்குரல்தோழிதான் என்றால், அக்குரல் சொல்லக்கூடியஎம் இல்லத்தின் கரிய கூந்தல் கொண்ட மடந்தை’, தலைவி என்று பொருள்.  இந்த இடத்தில், இப்பாடலில் பூடகங்கள் உருவாகத் தொடங்குகின்றன.  தலைவிக்காக தோழி ஏன் பேசுகிறாள்? தலைவிக்கு என்ன ஆனது? அவள் எங்கே?  வயலுக்கு செல்லும் உழவரை மறித்து, இவ்வளவு அவசரமாய், கோரையையும் நெய்தலையும் கொண்டு வரும்படி கேட்பது ஏன்?  அவள் உண்மையாகவே கோரையையும் நெய்தலையும் தான் கேட்கிறாளா அல்லது அதற்குப் பின்னால் வேறு அர்த்தங்கள் உள்ளனவா?  இன்னும் ஒரு படி மேலே போய், அவள் உண்மையிலேயே உழவரிடம் தான் பேசுகிறாளா அல்லது சாடை மாடையாய் வேறு யாருக்கோ குறிப்புகள் அனுப்புகிறாளா?  அடையாளங்கள் இல்லாதிருந்த  அக்குரலை, தோழி என்று அடையாளப் படுத்தியதும் அப்பாடலில் வேறொரு அர்த்தத் தளம் உருவாகத் தொடங்குகிறது.  வெளிப்படையாய்த் தெரிவது மீறி அதனுள் வேறு ஏதோவொரு பொருள் இருக்க வேண்டும் என்ற யோசனை எழுகிறது.  அடுக்கடுக்காய் அர்த்தங்கள் உருவாகத் தொடங்குகின்றன.

அப்பாடலின் பனுவல் வழங்கக்கூடிய அர்த்தம் இனவரைவியல் சார்ந்ததாக மட்டுமே இருந்தது.   தொல் சமூக தமிழ் வாழ்வின் வழக்கமான நடவடிக்கை என்பது மீறி அதில் குறிப்பிட்டு சொல்வதற்கு எதுவுமில்லை.  இது முதல் அடுக்கு அர்த்தம் என்று சொல்வோம்.

அக்குரலைத்தோழிஎன்று அடையாளம் கண்டதும், அவள் தோழிக்காக அவ்வாறு பேசுகிறாள் என்று வேறொரு அடுக்கு அர்த்தம் உருவாகத் தொடங்குகிறது. இதனை இரண்டாம் அடுக்கு அர்த்தம் என்று சொல்வோம்.  இந்த அர்த்தத்திலும் பூடகங்களுக்கு வழியில்லை.  மீண்டும் ஒரு தினசரி வாழ்க்கை சித்திரம் தான்.   

துறைஎன்ற பெயரில் திணைக் கோட்பாடு வேறொரு சூழ் நிலையை இப்பொழுது உருவாக்குகிறது.  அக்குரல், தோழியினுடையது தான்.  அங்கு செல்வதும் எருமை உழவர் தான்.  அவரிடம் கேட்டதும் நிஜம் தான்.  ஆனால், அது அவரிடம் பேசிய பேச்சு அல்ல, குறிப்பாக வேறொருவரிடம் தெரிவிக்கப்பட்ட கருத்து. அந்த வேறொருவர், தலைவியைக் காணவந்து இருளில் மறைந்து நிற்கும் தலைவன் தான்.  அவன் தேடி வந்த தலைவியை வீட்டில் சிறை வைத்திருக்கிறார்கள்.  அவளால் வெளிவர முடியாத சூழல்.  இதனை அறியாத தலைவன் மறைவில் காத்துக் கொண்டிருக்கிறான்.  தலைவியால் வரமுடியாது என்பதை அவனுக்குச் சொல்ல வேண்டும்.  எனவே, தோழி அப்பக்கமாக சென்று கொண்டிருக்கும் எருமை உழவரிடம்  ‘எம்முடைய தலைவி வளையாகவும் அணிகலனாகவும் அணிவதற்கு கோரையையும் நெய்தலையும் கொண்டு வந்து தாருங்கள்என்று சொல்வதன் மூலம், இருளில் மறைந்து நின்று கொண்டிருக்கும் தலைவனுக்கு தலைவி வெளியே வர முடியாத சூழலை விளக்குகிறாள்.  இதனை மூன்றாம் அடுக்கு அர்த்தம் என்று சொல்லலாம்.

இப்படி, திணைக் கோட்பாடு, ஒவ்வொரு சங்கப்பாடலுக்கும் ஒரு புதிய காட்சியமைப்பை உருவாக்கித் தருகிறது.  இப்புதிய காட்சியில், வயலுக்கு சென்று கொண்டிருக்கும் உழவரோடு, வீட்டிலிருந்து பேசும் தோழி, அருகிலேயே இருளில் மறைந்து நின்று கேட்டுக் கொண்டிருக்கும் தலைவன், வீட்டினுள் சிறைப்பட்டுள்ள தலைவி, அவளைச் சிறை வைத்துள்ள வீட்டார் என்று பல கதாபாத்திரங்கள் இடம் பெறுகின்றன.  இவ்வளவையும் சொன்னதன் பின்னால் அப்பாடலில் ஏராளமான பூடகங்கள் உருவாகி விட்டன.  முதலடுக்கு அர்த்தத்தில் முக்கியமான பாத்திரமாக விளங்கிய எருமை உழவர், இங்கு வெறும்கருப் பொருளாகசுருங்கிப் போனார்.  ஏராளமான வரிகளில், சமூகப் பெருமைகள், குடும்பப் பெருமைகள் என்று சிலாகிக்கப்பட்ட உழவர் அடுத்தடுத்த அடுக்கு அர்த்தங்களில் ஒரு பொருட்டாகவே இல்லாத நிலைக்கு கீழிறக்கப்படுகிறார். அவருக்கு அறியாமல் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கும் வேறொரு நாடகத்தின் காட்சிப்பொருளாக அவர் உருமாறியிருக்கிறார். பனுவலில் எந்தவித குறிப்புகளோ உணர்த்தல்களோ பெற்றிராத, தோழி - தலைவி - தலைவன் போன்ற வேறொரு பிரிவினர் அப்பாடலைத் தங்களுக்கானதாக சுவீகரித்துக்கொள்கிறார்கள்.

திணைக் கோட்பாடு என்பது கவிதையியலைப் பேசுகிறது என்றாலும், சங்கப்பனுவல்களின் வாசிப்பு மரபில் அது ஏற்படுத்திய மாற்றங்களை, குறிப்பாக பனுவல் தளத்தில் அது உருவாக்கிய மரபை இன்னும் ஆழமாக உற்றுப்பார்க்க வேண்டிய தேவை உள்ளது.  அது ஏற்படுத்தித் தந்துள்ள பொருள்கொள் மரபு, சங்கப்பாடல்களை வேறொரு தளத்திற்கு எடுத்துச் செல்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை; அடுக்கடுக்கான அர்த்த சாத்தியங்களை உருவாக்குகிறது என்பதை மறுப்பதற்கில்லை.  ஆனால், இத்தனையும் அப்பனுவல்களின் முதலடுக்கு அர்த்தங்களின் வீழ்ச்சியில் தான் சாத்தியமாகிறது என்பது தான் நமது விசாரணைக்கான மூலகாரணமாக அமைகிறது.


மொத்தத்தில் நாம் இன்றைக்கு திகைப்பது போல், சங்கப்பனுவல்களை தொகுத்த போதும் தமிழ் சமூகம் இப்படியே தான் திகைத்தது.  பொருளதிகாரத்திற்கு உரை சொல்லக்கூடியவர் யாருமில்லை என்பதை, சங்கப்பனுவல் தரக்கூடிய முதலடுக்கு அர்த்தம் தட்டையானதாக இருக்கிறது; அதாவது, அதில் பண்பாட்டுத் தகவல்கள் மட்டுமே காணப்படுகின்றன; கவிதையின் குணமென்று சொல்லப்படுகிற அடுத்தடுத்த அர்த்த வெளிகளுக்குள் பயணம் செய்வது சாத்தியப்படவில்லை, அதனை சாத்தியப்படுத்துவது திணைக்கோட்பாடு சார்ந்த உரையாசிரியர்களின் விளக்கங்களே என்று சொல்வதில், பனுவல் தரக்கூடிய அர்த்தம் தட்டையானதாக (இனவரைவியல் தகவல்களாக) இருக்கிறது என்பது எவ்வளவு தூரம் உண்மை?

அது நிஜமாகவே அடுத்தடுத்த பொருள்கொள்ளலுக்கு இடமளிக்கவில்லையா? அல்லது அது வழங்கக் கூடிய இடங்களை உணரக்கூடிய வாசிப்புப் பழக்கம், மரபு நமக்கு மறந்து போனதா?

அந்தப்பனுவல்களில் ஒரு கவித்துவ அனுபவம் இருந்து அதனை நாம் தவறவிடுகிறோமா?  கவித்துவ அனுபவம் என்பது, வாசிப்பில் ஏற்படும் பொருளில் உருவாகும் முரணிலிருந்து தான் கிளைக்கிறது.  உதாரணமாய், தோழி, எருமை உழவரிடம் சொல்வது போல் தலைவனிடம் சொல்கிறாள் எனும் பொழுது, அதிலொரு முரண் உருவாகிறது; அம்முரண் பூடகமான செயல்களை தோற்றுவிக்கிறது; அதில் பன்முக அர்த்தங்கள் உருவாகத் தொடங்குகின்றன.  சாதாரணம் என்று நினைத்துக் கொண்டிருந்த அத்தனைக்குப்பின்பும் அசாதாரண வாழ்க்கையும் ரகசியங்களும் நிரம்பியிருப்பதை உணரும் மனம் பனுவலிலிருந்து மேலெழுந்து வேறு வேறு தளங்களுக்கு பயணிக்கத் தொடங்குகிறது.  ஆனால், இப்பாடலில் நாம் பெறக்கூடிய முதற்கட்ட வாசிப்பு அனுபவம், அதாவது பனுவலில் விளக்கப்படும் காட்சியில் நாம் அடையும் அனுபவம் தகவல்களாக மட்டுமே நிற்கின்றனவேயொழிய, முரண்களாக பரிணமிக்கவில்லை.

இதனை விளக்கமாகச் சொல்வதானால், எருமை உழவரிடம் கோரையையும் நெய்தல் மலரையும் பத்திரமாய் எடுத்து வரும்படி சொல்வதில் என்ன பெரிய முரண் இருந்து விட முடியும்?  ஒரு வேளை அந்த எருமை உழவர் ஏதாவது பதில் சொல்லியிருந்தால் முரண்களுக்கு வாய்ப்புகள் இருந்திருக்க முடியும்.  ஆனால், பாடலின் தற்போதைய வடிவத்தில் எந்தவித சிக்கலும் உருவாகியிருக்கவில்லை.  அல்லது நம் வாசிப்பிற்கு அச்சிக்கல் பிடிபடவில்லை.  இதனாலேயே, சங்கப்பனுவல்களை திணைக்கோட்பாடிலிருந்து பிரித்தெடுத்து விட்டால் கவித்துவமற்ற பாடல்கள் மட்டுமே நமக்கு எஞ்சி நிற்கின்றன.  திணைக்கோட்பாடே அப்பனுவல்களுக்கு கவிதை என்ற தன்மையை வழங்குகிறது; மற்றபடிக்கு அவை பாடல்கள் மட்டுமே!

சங்கக் கவிதைகளை பனுவல் வாசிப்பிற்கு உட்படுத்தும் பொழுது நாம் கேட்கக்கூடிய இக்கேள்விகள் (திணைக்கோட்பாட்டைத் தாண்டி சங்கப் பனுவல்களுக்கு ஒரு மரியாதையும் இல்லையா? திணைக்கோட்பாடு சொல்லும் விளக்கங்கள் அனைத்தும் வலிந்து செய்தது போலவே இருக்கின்றனவே, இவற்றின் உண்மையான பொருள் தான் என்ன?  இவற்றின் பயன்பாடு என்னவாக இருந்திருக்கும்?  என்ன காரணத்திற்காக இவை எழுதப்பட்டன?  இவை எழுதப்பட்ட காலகட்டத்தின் முரண்கள் என்ன?) புதிய கேள்விகள் அல்ல.  ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விகள் தான்.  

மிகவும் குறிப்பாக, சங்கப்பனுவல்கள் எழுதப்பட்ட காலகட்டத்திற்குப் பின்பு நெடு நாள் மறந்திருந்து பின்பு அவை கண்டெடுக்கப்பட்டு, தொகுக்கப்பட்டு, வாசிக்கப்பட்ட 7 அல்லது 8 வது நூற்றாண்டுகளில் இதே போன்ற கேள்விகள் கேட்கப்பட்டன.  அதற்கான சான்றுகள் நம்மிடம் உண்டு.  

இறையனார்களவியல்நூலுக்கு உரை எழுதுகிற நக்கீரர், நூல் பிறந்த வரலாறு என்று சில விபரங்களைத் தருகிறார்.  அதில் முக்கியமான ஒன்று, பெரும் பஞ்சத்திற்குப் பின்பு, மதுரையை ஆண்ட பாண்டியன் தமிழறிஞர்களையெல்லாம் அழைத்து, தமிழிலக்கிய இலக்கணங்களை தொகுக்கவும் ஆய்வு செய்யவும் சொன்ன போது, தொல்காப்பியத்தின்பொருளதிகாரத்திற்குமட்டும் விளக்கமளிக்கும் அறிஞர் கிடைக்காமல் திண்டாட, மன்னனின் துயரத்தைப் போக்க, இறையனாரே முன் வந்து செய்து தந்த நூல் தான்களவியல்’.  அதாவது, பொருளதிகாரத்திற்கு விளக்க நூல் எழுதினார், இறையனார்.  இந்த நூலுக்கே நக்கீரர் உரை எழுதுகிறார்.  இறையனாருக்கும் நக்கீரருக்கும்அஞ்சிறைத் தும்பி...பாடல் காரணமாக எழுந்த முரணை ஞாபகத்தில் வைப்பது முக்கியம்.

அப்பாடல்களுக்கான விளக்கத்தை சொல்லக்கூடியவர் யாருமில்லை என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டும்.  அவற்றின் கவிப்பொருளைச் சொல்லுவார் யாருமில்லை.  அந்த நேரம் மதுரைப்பாண்டியன் சொல்வதாய் நக்கீரர் குறிப்பிடுவது இன்னும் சரியாக இருக்கும்.தமிழின் எழுத்திலக்கணமும், சொல்லிலக்கணமும் பொருளை உணர்வதற்குத் தானே! பொருள் தெரிந்தவர் யாருமில்லை என்றால்,  இலக்கணமறிந்து என்ன பயன்?’  மன்னனின் கவலையைப் போக்க இறையனார்களவியல்இயற்றினார்.  அதற்கு நக்கீரர் உரை எழுதினார்.  பொருள் விளங்கிற்று!! நக்கீரர் தான் தமிழின் முதல் உரையாசிரியர்.  இந்த உரையிலேயே அவர்முச்சங்கங்கள்பற்றியெல்லாம் புள்ளிவிபரக் கணக்குகளைச் சொல்கிறார்.

திணைக்கோட்பாட்டை நாம் 7 அல்லது 8வது நூற்றாண்டிற்கு கொண்டுவர வேண்டிவரலாம்.  வையாபுரிபிள்ளை போன்றார் வாதிடுவது போல்,  தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தை நாம் உரையாசிரியர் காலகட்டத்திற்கு கொண்டு வர வேண்டியதிருக்கும்.

சமண - பௌத்த சமயங்களின் நடவடிக்கைகள் மலிந்த, சேர சோழ பாண்டிய மன்னர்களை வீழ்த்திய களப்பிரர்களின் ஆட்சி நடைபெற்றசங்கம் மருவிய காலம்என்று அழைக்கப்படுகிற மூன்று நூற்றாண்டுகளைக் கடந்து, மீண்டுமொருமுறை மூவேந்தர்களின் ஆட்சி நிலபெற்ற காலகட்டத்தில், சைவ - வைணவ சமங்களின் செல்வாக்கு மேலோங்கிய, பார்ப்பன - வெள்ளாள சாதிகளின் மேலாண்மை வலுப்பட்ட காலகட்டத்தில் தான், ‘சங்க இலக்கியங்கள்என்ற பெயரில் இந்த பனுவல்கள் கண்டெடுக்கப்பட்டு, தொகுக்கப்படுகின்றன. இறையனார் களவியல் குறிப்பிடும் 'வற்கடகம்' (பஞ்சம்) களப்பிரர் கால ஆட்சி என்று நாம் புரிந்து கொள்ளலாம்.   இவ்வாறு, ஐந்தாறு நூற்றாண்டுகளுக்குப் பின்பு கண்டெடுக்கப்பட்ட இப்பனுவல்கள் அக்கால தமிழ் சமூகத்திற்கு விளங்கியிருக்கவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இன்றைக்கு நாம் சங்கக் கவிதைகளை பனுவல் வாசிப்பிற்கு உட்படுத்துகையில் அது வெளிப்படுத்துகிற பண்பாட்டு செய்திகளைத் தாண்டி வேறொன்றையும் விளங்கிக் கொள்ள முடியாமல் திணறுவதைப் போலவே தான் அன்றைக்கும் இப்பாடல்களை விளங்கிக் கொள்வதில் குழப்பங்கள் இருந்திருக்க வேண்டும்.  இதையே தான்பொருளதிகாரம் விளங்கவில்லைஎன்பதாக நக்கீரரின்களவியல்உரை சொல்லியிருக்க வேண்டும்.  

இவ்வாறு, சங்கப் பனுவல்களில் கவிதைக்கான குணத்தைக் கண்டுணர முடியாத 7 ஆம் நூற்றாண்டு தமிழ்ச் சமூகம் அப்பாடல்களில் கவித்துவத்தை ஏற்றிய நிகழ்வு தான்திணைக் கோட்பாடாகஇருக்க வேண்டும்.  அதாவது, திணைக் கோட்பாடு, சங்கப் பனுவல்களை இலக்கியமாக எவ்வாறு வாசிப்பது என்பதற்கான முறையியலை உருவாக்கித் தந்துள்ளது.  அதில் இடம்பெறும் கூற்றுகள் யாருடையவை?  யாரிடம் பேசுகிறார்கள்? எதற்காக பேசுகிறார்கள்? என்ன பேசுகிறார்கள் என்பதற்கு திணைக் கோட்பாடு இலக்கணம் போன்ற பொருள்கொள் முறையொன்றை கட்டியிருக்கிறது.  அதனடிப்படையில், இப்பனுவல்களுக்கெல்லாம் உரையாசிரியர்கள் உரைகளை எழுதியுள்ளனர்.

திணைக் கோட்பாடு, மிகத் தெளிவாக விளங்கும் வகையில் 7 அல்லது 8 வது நூற்றாண்டுத் தமிழகம், கி.மு. 2 ஆம் நூற்றாண்டில் மேற்கண்ட சங்கப்பாடல்கள் எழுதப்பட்ட காலத்தில் தமிழகம் இப்படித்தான் இருந்திருக்க வேண்டும் என்று செய்த கற்பனையின் விளைவு.  அப்பனுவல்களில் அவர்கள் அடைந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டும், தங்களுக்கு பத்து நூற்றாண்டுகள் முந்தைய சமூக நிலை குறித்து அவர்களிடம் வழங்கி வந்த தொன்மக் கதைகளைக் கொண்டும்,  வழி வழியாய் சொல்லப்பட்டு வந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டும், அவர்கள் காலத்தில் செல்வாக்கு பெற்றிருந்த பனுவல் வாசிப்பு முறையியல்கள் சார்ந்தும், அக்காலகட்டத்தில் நிலவிய சமூகப் பண்பாட்டு பொருளாதார அரசியல் சூழல்கள் சார்ந்தும், அச்சமயம் மேலோங்கியிருந்த சமயக் கருத்துகள் வழி நின்றும், அக்காலகட்டத்தில் அதிகாரம் பெற்று விளங்கிய கருத்தியல் சார்ந்தும், தங்களது 'மரபு' அல்லது 'பாரம்பரியம்' அல்லது 'வரலாறு' அல்லது 'பண்பாட்டுப் பெருமை' இப்படித்தான் இருந்தது என்று கட்டமைத்துக் கொண்ட சித்திரமேதிணைக் கோட்பாடுஆகும்.

இலக்கியம், அது உருவாக்கப்பட்ட காலகட்டத்தின் பண்பாட்டை, வரலாற்றை, கருத்தியலை தனது பனுவலுக்குள்ளே வைத்திருக்கிறது என்பதை நாம் நம்புகிறோம்; இதனை நம்மால் நிரூபிக்கவும் முடியும்.

இலக்கியத்தின் நோக்கம் பண்பாட்டை பிரதிபலிப்பது இல்லை என்பதால், அப்பனுவல்களிலிருந்து பண்பாட்டுத் தரவுகளை அடையாளம் காண்பதற்கான முறையியலொன்று நமக்குத் தேவை. அதாவது, இலக்கியத்திலிருந்து புனைவையும் நிஜத்தையும் தனித்தனியே பிரித்தெடுக்கும் முறையியல்.  இவ்வாறு பிரித்தெடுக்கப்பட்டநிஜம்’, பண்பாட்டுத் தரவு தான் என்று அறுதியிடுவதற்கு,  அந்த நிஜம் வேறு பிரதிகளிலும் இடம் பெற்றுள்ளதா என்ற சான்றுகளை வழங்கவேண்டும்.

நாம் ஆய்விற்கு எடுத்துக் கொண்ட பனுவல்கள், அவை உருவாக்கப்பட்ட காலகட்டத்தில் என்னமாதிரியான சமூகத்தேவையை முன்னிட்டு உருவாக்கப்பட்டது என்பதை நம்மால் சொல்லமுடிய வேண்டும்.  அதாவது, இப்பனுவல்கள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் அல்லது பயன்பாடு தெரியவரும் போதே அதன் புனைவு எல்லையை நம்மால் வரையறுக்க முடியும்.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக