முன் எச்சரிக்கை:
(இதை யாரும் புனைவாக நம்பப் போவதில்லை என்றாலும், இதை எழுதியவன் என்ற
முறையில் 'இது முழுக்க முழுக்க கற்பனை!
இதில் வரும் பெயர்கள் எந்தவொரு தனிநபரையோ, நிறுவனத்தையோ குறிப்பிடுவன அல்ல! சொல்லப்போனால் இதில் வரும் மாடு, பசு மாடு
அல்ல; ஏன் மாடே இல்லை' என்று சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.)
1
1994ல்,
ஜேயென்யுவில் (Jawaharlal Nehru University) தமிழ் ஆய்வாளர் மன்றம் ஆரம்பித்த
பொழுது, மாட்டுக்கறி சாப்பாட்டோடு தான் ஆரம்பித்தோம். (இந்த
'......தோம்' யார் என்பதற்கான விளக்கம் பின்னால் வந்து கொண்டிருக்கிறது.)
அந்நாட்களில்
எங்களுக்குள்
(அதாவது
'....தோம்') ஒரு
கலந்து கட்டிய ஆக்ரோஷம் இருந்தது.
அம்பேத்கரின் மறு பிரவேசம், தலித் அரசியல், பாபர் மசூதி இடிப்பு, அதிலும் டிசம்பர்
ஆறாம் தேதி அதைச் செய்தது, மண்டல் கமிஷனுக்கு எழுந்த எதிர்ப்புகள், ஜவஹர்லால்
நேருவின் கனவு என்று சொல்லி ஜேயென்யுவிற்கு மட்டும் வழங்கப்பட்டு வந்த பல்வேறு
சலுகைகள் தந்த அதிர்ச்சி என்று ஒரு வித நிலைகொள்ளாமை எங்களை ஆக்கிரமித்திருந்தது. அது ஒரு கொந்தளிப்பான மனநிலைகளின் காலம்.
தமிழ்
ஆய்வாளர் மன்றக் கூட்டங்களை மாட்டுக்கறியோடு ஏற்பாடு செய்ய அது தான் எங்களைத்
தூண்டியிருக்க வேண்டும்.
ஜேயென்யூவில்
மாட்டுக்கறிக்கு நாங்கள் பெரிதாக எதையும் மெனக்கிடவில்லை. பல்கலைக்கழகத்திற்குள்ளேயே ஓரிடத்தில்
ரகசியமாய் மாட்டுக்கறி சோற்று வியாபாரம் நடந்து கொண்டிருந்தது.
இந்த
ரகசியத்தை முதலில் பெர்ஸி பெர்னாண்டெஸ் தான் கண்டு பிடித்து வந்தார்.
யார் இந்த பெர்ஸி?
பெர்ஸி
அதீதங்களின் ரசிகர். அற்புதமான
சமையல்காரர். வாழ்க்கையின் அத்தனை
சாகசங்களையும் செய்யத் துடிப்பவர். தமிழ்
திரைப்படங்கள் குறித்து முனைவர் பட்ட ஆய்வு செய்தவர் இப்பொழுது இமயமலைச் சிகரங்களில்
பனிச்சறுக்கு விளையாடுவதே
தொழிலாக இருக்கிறார் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.
கதை தொடர்கிறது.....
அவர்
தான் அந்த ரகசியக்கடையைக் கண்டுபிடித்து வந்தார்.
ஆனால், அந்த ரகசியம் கொஞ்ச நேரத்திற்குக் கூட நீடிக்கவில்லை. எங்களில் ஒரு சிலர் அந்த ரகசியக் கடைக்கு வாடிக்கையாளர்களாகவே இருந்த்தை அதன் பின்பே வெளியே
சொன்னார்கள். அதனால் ரகசியம் அக்கணமே
ஆவியானது.
அந்தக்
கடை, 'ஃப்ரான்சிஸ் தாபா' என்று செல்லமாக
அழைக்கப்பட்டு வந்தது. (உலகப்புகழ் பெற்ற
'கங்கா தாபா' வின் இரவு நேர வசீகரத்தின் முன் ஒன்றுமேயில்லை என்றாலும் நமது கதை ஃப்ரான்சிஸ்
தாபாவில் தான் நடக்கிறது.)
பெரும்
பேராசிரியர்கள் பணியாற்றிய சமூக அறிவியல் பள்ளிக் கட்டிடத்தில் (School
of Social Sciences)
தான் அந்த தாபா இருந்தது.
ஃப்ரான்சிஸ், கேரளர். கூடவே கிறிஸ்தவர். ரகசியமாய் மாட்டுக்கறிச் சோறு விற்க வேறு என்ன
காரணங்கள் வேண்டும்?
ஆனால்,
சனிக்கிழமைகளில் மட்டும் தான் அந்த வியாபாரம்.
காலையிலேயே ஃப்ரான்சிஸிடம் சொல்லி வைத்தால் மதியம் ஒரு மணிக்குப் போய்
சாப்பிட்டுக் கொள்ளலாம். சனிக்கிழமை விடுமுறை
தினம். அதனால் ஜேயென்யூவின்
மார்க்சியர்கள், லிபரல்கள், சபால்டர்ன் ஆய்வாளர்கள் தொந்தரவின்றி அன்றைய தினம் நீங்கள்
மாட்டுக்கறி சாப்பிட முடியும்.
ஆய்வரங்கம்
நடத்த இதை விடவும் வாய்ப்பான சூழல் கிடைக்குமா என்ன?
ஒவ்வொரு
மாதமும் இரண்டாவது சனிக்கிழமைகளில் காலை பத்து மணி முதல் ஒரு மணி வரை தமிழ்
ஆய்வாளர் மன்றக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானம் செய்தோம். ஃப்ரான்சிஸ் தாபாவின் மொட்டமாடி தான் எங்களின் திறந்தவெளி
அரங்கம்.
மொட்டைமாடியில்
பேசிக் களைத்து இறங்கினால் மாட்டுக்கறி!
மாட்டுக்கறியினால் விளையும் நன்மைகள் யாவை?
'ஒரு
மணிக்கு கறிச்சோறு ரெடியாகிவிடும்' என்ற செய்தி ஒரு கைதேர்ந்த நிகழ்ச்சி
ஒருங்கிணைப்பாளர் போல செயல்பட்டது.
ஒரு
மணிக்கு கறிச்சோறு என்பதால் யாருமே அனாவசியமாய் பேச விரும்புவதில்லை; கச்சிதமாய்
விஷயத்தை மட்டுமே பேசினார்கள்; வீண் வாக்குவாதங்கள் கூட இல்லை (ஒரு மணி ஆகிவிட்டால்?);
அப்படியே வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும், யாரும் கைகலப்பில் ஈடுபடுவதில்லை; அப்படியே கைகலப்பு ஏற்பட்டாலும் யாரும் வெளிநடப்பு
செய்வதில்லை; பின்னே வெளிநடப்பு என்றால்
மாட்டுக்கறிச்சோறும் அல்லவா போச்சு! கருத்து
மோதல்கள் வேறு நட்பு வேறு என்ற நியதியையும், ஒழுக்கத்தையும் மாட்டுக்கறி தான் எங்களுக்குக்
கற்றுத்தந்தது.
முதலில் சொன்ன '....தோம்'
ற்கான விளக்கம்:
மிகச்சிறப்பான
உரைகள் அங்கே நிகழ்த்தப்பட்டன. வெவ்வேறு கல்விப்புலங்களிலிருந்து தமிழ் சமூகத்தை
அணுகும் ஒரு புதிய அனுபவமாக அக்கூட்டங்கள் அமைந்திருந்தன. அப்பொழுது தான் 'அயோத்திதாசர் சிந்தனைகள்' ஞான.
அலாய்சியஸ் தேசமற்ற தேசியம் குறித்து பேசிக்கொண்டிருந்தார்; நான், ஃப்ரென்ஞ்ச்
குறியியல் மரபையும் தமிழ் உரையாசிரியர் மரபையும் வாசித்துக் கொண்டிருந்தேன்; 'அயோத்திதாசரின்
பௌத்தம்' குறித்து கொலம்பியா பல்கலைக் கழகத்தில் ஆய்வு செய்திருக்கும் கஜேந்திரன்
அய்யாதுரை, நீலகிரி வாழ் பழங்குடியினங்களைப் பற்றி ஆய்வு செய்து கொண்டிருந்தார்;
சாமுவேல் ஆசிர்ராஜ் வலிந்த இடப்பெயர்வுகள் பற்றியும், நக்கீரன் தமிழர்களின்
ஆரோக்கியம் குறித்தும், சி. லட்சுமணன் ரசிகர் மன்றங்கள் பற்றியும், பெர்ஸி தமிழ்த்
திரைப்படங்கள் பற்றியும், பவணந்தி பன்னாட்டு உறவுகள் குறித்தும், ரமேஷ்பாபு
அறிவொளி இயக்கங்கள் குறித்தும், திருநாவுக்கரசு தேசிய இனங்கள் குறித்தும் என்று அந்த
சனிக்கிழமைகள் மகிழ்ச்சியான நாட்களாக இருந்தன.
ஐந்து
அல்லது ஆறு நபர்களோடு தொடங்கிய மன்றக்கூட்டம், சிக்கிரமே முப்பது நாற்பது பேர்
கலந்து கொள்கிற அரங்கமாக மாறியது. இதற்கு
இரண்டே இரண்டு காரணங்கள் தான் - ஒன்று, அதில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள்;
இரண்டாவது, ஃப்ரான்சிஸ் தாபாவின் மாட்டுக்கறிச் சோறு!
இரண்டு
வருடங்கள் வரையிலும் மாட்டுக்கறிச் சோறு ஆய்வரங்கம் தங்கு தடையின்றி நடைபெற்றது. அதன் பின், இந்த ரகசியம் கொஞ்சம் கொஞ்சமாக இடதுசாரிகளின்
கோட்டையான ஜேயென்யூவிற்குள் கசிந்து, ஃப்ரான்சிஸிற்கு நெருக்கடிகள் வரத்
தொடங்கின.
முதலில்
அவர் வித விதமான பொய்களைச் சொல்லிப் பார்த்தார். 'அப்படியெல்லாம் இல்லவே இல்லை' என்றார்.
பின்னர்
தன்னைத் தற்காத்துக் கொள்ள பெரிதும் பிரயாசைப்பட்டு, 'அய்யோ! அது, நாங்க (கடை ஊழியர்கள்)
சாப்பிடுவதற்கு செய்ததாக்கும். விற்கவெல்லாம் இல்லை' என்று சொன்னார்.
இதில்
எதையுமே, ஜேயென்யுவின் மாட்டுக்கறி விரோதிகள் நம்பத்தயாராயில்லை. எனவே அவர் தனது ரகசிய வியாபாரத்தை உடனடியாய்
நிறுத்தும் படி ஆயிற்று.
கேரளர்கள்
தான் ஆடிப்போனார்கள். மாட்டுக்கறி சாப்பிடாமல்
உயிரோடு இருப்பது பற்றி அவர்கள் கலாச்சாரத்தில் எதுவுமே சொல்லப்பட்டிருக்கவில்லை. எனவே கதியற்று நின்றார்கள். 'தமிழ்க்கார்ர்கள் போட்ட அரவத்தில் தான்
ரகசியம் அம்பலமாயிட்டு!' என்றொரு பேச்சு கூட கேரளர்கள் மத்தியிலிருந்து அப்போது
வந்த்து. எப்ப பார்த்தாலும் தமிழர்களுக்கு தேள் கொட்டினால் கேரளர்களுக்கு தான்
நெறி கட்ட வேண்டுமா என்ன?
நாங்கள்
அதைக் கண்டு கொள்ளவில்லை. மாட்டுக்கறி
இல்லாத பட்சத்தில் ஃப்ரான்சிஸ் தாபாவில் கூட்டம் நடத்த வேண்டிய தேவை என்ன என்று நாங்கள்
இடத்தை மட்டும் மாற்றிக் கொண்டோம்.
அதன்
பின்பு, எங்களுக்கும் கூட தெரியாமல், கேரளர்கள் மட்டுமே வந்து சாப்பிட்டுச்
செல்லும் வகையில் ஃப்ரான்சிஸ் மாட்டுக்கறிச் சோற்றுக்கடையை நடத்துவதாய் தகவல்கள்
வந்தன. ஆனால், எங்களுக்கு அதில் உடன்பாடு
இல்லை. மாட்டுக்கறியை ரகசிமாய்
சாப்பிட்டாக வேண்டிய நெருக்கடி என்ன?
நாங்கள் தான் மாட்டுக்கறி வெறியர்கள் இல்லையே!
மாட்டுக்கறியை
ரகசியமாய் சாப்பிடுகையில் ஏற்படும் அசௌகரியங்களை நாங்கள் ஏற்கனவே
அனுபவித்திருந்தோம். ரகசியம் காப்பதற்காக
செய்யப்படும் நடவடிக்கைகள் நிச்சயமாய் கறியின் சுவையை கெடுக்கின்றன. அதையும் மீறி யாராவது எதிர்பட்டு விட்டால்,
அந்தச் சூழல் நம்மை கையும் களவுமாய் மாட்டிக்கொண்ட திருடர்களாக மாற்றி விடுகிறது.
ரகசியமாய்
சாப்பிடுகையில், 'ஆமாம். மாட்டுக்கறி தான் சாப்பிட்டேன்' என்று சொல்லக்கூடிய
துணிவு இல்லாமல் போகிறது. 'அதை நீ எப்படி கேட்க
போச்சு?' என்று எதிர்க்க்கூடிய திமிரும் இல்லாமல் போகிறது.
எனவே
அதன் பின் நாங்கள் ஃப்ரான்சிஸ் தாபாவில் மாட்டுக்கறி புரட்சி பண்ண
முயற்சிக்கவில்லை. கேரளர்கள் மட்டும் ரகசியமாய்
தங்கள் புரட்சியைத் தொடர்ந்தார்கள்.
எங்களது
மாட்டுக்கறி பரிசோதனைகளின் போது தமிழர்கள் மத்தியில் சின்ன அசூயையோ நெருடலோ உருவாகி
நான் பார்க்கவில்லை. சந்தோசமாகவே சாப்பிட்டார்கள். எனக்குத் தெரிந்து ஜேயென்யூவில் நடைபெற்ற
எந்தவொரு தமிழ் விருந்திலும் மாட்டுக்கறி முக்கிய பதார்த்தமாகவே தான் இருந்திருக்கிறது.
கலந்து கொண்ட யாரும் சாப்பிட மறுத்ததில்லை. 'என்னய விட்டுட்டீல்ல?' என்பது தான் மிகப்பெரிய
ஆவலாதியாக இருந்தது.
இந்தியாவின்
பிற மாநிலத்தவர்களைக் காட்டிலும் தமிழ்க்காரர்கள் எப்பவுமே கொஞ்சம் உசத்தியாக்கும்
என்று சொல்லிக் கொள்வதற்கு எங்களுக்குக் கூடுதலாக ஒரு காரணம் கிடைத்துவிட்டது. ஜேயென்யூ விடுதிகளின்
சாப்பாட்டறைகளில் இது போன்ற மொழிவாரிக் காய்ச்சல்கள் எக்கச்சக்கமாய் பறிமாறப்படும்.
பிறிதொன்று மொழிதல்.....கிளைக்கதை
ஒரு முறை இப்படித்தான், எந்த மொழி சிறந்தது என்ற
அக்கப்போர் நடந்து கொண்டிருந்த்து. ஆந்திரரொருவர்
உணர்ச்சிவசப்பட்டு, 'தெலுகு இசைக்கான மொழியாக்கும்! வேறெந்த மொழியாச்சும் இப்படி சொல்ல முடியுமா?'
என்று முழங்கிக் கொண்டு இருந்தார்.
அவரை என்ன தான் சொல்லி சமாதானப்படுத்த முடியும்? உலகின் முதல் இசைக் குறிப்பு 'ரா...ரா...' வோ
'லூ....லூ...'வோ தான் என்று சொல்கிற வரை அவர் அடங்க மாட்டார் போலத்
தோன்றியது.
சிலர் இப்படித்தான், தங்களுக்கான போட்டியாளரை தாங்களே
உருவாக்கிக் கொள்வார்கள். இறுதியில்
பரிதாபமாய் வீர மரணமும் அடைவார்கள்.
அன்றைக்கும் அப்படித் தான் ஆனது.
தெலுகு முழக்கத்தை கேட்டுக்கொண்டிருந்த ஒரான் பழங்குடியைச்
சார்ந்த ராஜ்குமார் மெல்ல எழுந்து வந்தார்.
ஒரு ஆர்கஸ்ட்ராவை வழி நடத்தும் இசைக்கலைஞரைப் போல சபைக்கு வணக்கம்
வைத்தார். ஆந்திரருக்கு ஒரு ஸ்பெசல்
வணக்கமும் வைத்தார். பின்பு, யானியின்
சேட்டைகளையொத்த பாவனையைச் செய்து,
'இசைக்கு மொழி இல்லை!' என்றார். சாப்பாட்டறையே எழுந்து நின்று கைதட்டியது. 'வாரே.. வா..' என்று கூவியது. ஆந்திரர் கூட ரௌத்திரம் தணிந்து வெகுளியாய்
சிரித்தார்..
மீண்டும் மூலக்கதை....
'மாட்டுக்கறியை
சாப்பிடுவதில், அதுவும் தைரியமாய், வெளிப்படையாய் சாப்பிடுவதில் தமிழர்களான
எங்களுக்கு எந்தக் குழப்பங்களும் இல்லை.
உணவை உணவாக மட்டுமே பார்க்கிற மனப்பக்குவம் எங்களுக்கு இருக்கிறது' என்று
சாத்தியப்பட்ட அரங்குகளிலெல்லாம் நாங்கள் சொல்லத் தொடங்கினோம்.
பதிலுக்கு
'நான்-தமிழர்கள்', 'பின்ன? பெரியார் மாதிரியான சிந்தனையாளர் உங்களுக்குக்
கிடைத்தது வரம் இல்லையா? திராவிட
இயக்கங்களின் பங்களிப்புன்னா சும்மாவா?' என்றார்கள்.
தமிழ்க்கார்ர்கள்
மத்தியில் இது போன்ற விஷயங்கள் நடக்கும் போதெல்லாம் அதற்காகப் பெரியாரையும்,
திராவிட இயக்கங்களையும் காரணம் காட்டி புகழ்கிற சம்பிரதாயம் சபால்டனால்
பீடிக்கப்பட்டிருந்த 'நான்-தமிழர்களுக்கு' உண்டு.
பெரியாருக்கும் திராவிட இயக்கங்களுக்கும் முன்பே இது போன்ற மரபு எங்களிடம்
உண்டு என்று அந்நாட்களில் எங்களுக்குச் சொல்லத் தோன்றவில்லை. நம்ம ஆட்களைத் தானே புகழ்கிறார்கள்! தப்பும் தவறுமாக இருந்தால் தான் என்ன என்ரு
விட்டு விட்டோம்.
90களில்
ஜேயென்யூவில் நிகழ்ந்த இந்த மாட்டுக்கறி சம்பவம் தற்செயலாக நடந்ததல்ல என்பதை
என்னால் சொல்ல முடியும். 90களுக்கு
முன்பும் ஜேயென்யூவில் தமிழ்க்காரர்கள் இருந்தார்கள். ஆனாலும், அந்த வருடங்களில் தான்
பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த தமிழ்க்காரர்கள் தலையெடுக்கத் தொடங்கினார்கள். (கவனிக்க:
நன்-பிராமின் / நான்-பிராமின்
/ நாண்-பிராமின் இல்லை)
அதுவரையில்
தயிர்சாதமும், பரத நாட்டியமுமாக இருந்த தமிழ் அடையாளத்தை முதன்முறையாக நாங்கள் மாற்றத்
தொடங்கினோம். தயிர்சாதத்திலிருந்து
மாட்டுக்கறிச்சோறு என்பது கொஞ்சம் பெரிய பாய்ச்சல் தான்! ஆனால், அது எங்களுக்கு சாத்தியமாயிற்று. எளிதாக சாத்தியமாயிற்று.
தாழ்த்தப்பட்டவர்களை
முன்னிலைப்படுத்திய தமிழ் அடையாளமொன்றை கட்டமைக்க முடியுமா என்று நாங்கள் சோதித்துப்
பார்த்தோம். பொங்கலும் தீபாவளியும்
கொண்டாடிக் கொண்டிருந்த தமிழ் மன்றத்தை தூசி தட்டி, ஆய்வரங்கமாகவும் மாட்டுக்கறிச்சோறாகவும்
மாற்றியமைக்க எங்களால் முடிந்தது.
தமிழ்
மன்றத்திற்கான புதிய தலைமைகளைத் தேர்ந்தெடுத்தோம். அவர்கள் தாழ்த்தப்பட்ட பிரிவுகளைச்
சார்ந்தவர்களாக இருக்கும் படி பார்த்துக் கொண்டோம். படிக்கும் போதே காதலில் கசிந்துருகிக் கொண்டிருந்த
கோபிநாத்தும் புவனாவும் தான் அந்த பொறுப்பை ஏற்றுக் கொண்டார்கள்.
அது
ஒரு புதிய, வெற்றிகரமான அனுபவமாக இருந்த்து.
தாழ்த்தப்பட்டவர்களின் கையில் தலைமை வந்து சேர்ந்தால், அது எவ்வளவு ஜனநாயக
பூர்வமாக இருக்கிறது என்பதை எங்களால் நேரடியாக உணர முடிந்த்து. அதே நேரம் தாழ்த்தப்பட்டவர்களைத் தலைமையாக
ஏற்றுக் கொண்டு செயல்படுவதற்கான மனப்பக்குவமும் எங்களுக்கு இருந்த்து.
எளியவர்கள்
தலைமைப் பொறுப்புக்கு வருகையில் அவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் அவர்களை விடவும்
எளிமையான விஷயங்களாகவே இருக்கின்றன. அவர்கள்
விரும்புவதெல்லாம் ஒன்றே ஒன்று தான் - எந்தவொரு திட்டமிடுதலும் தங்களைப் போன்ற
எளியவர்களை முன்வைத்தே நடைபெற வேண்டும்.
இது
தான் அவர்களது ஆகப்பெரிய ஆசையாக இருக்கிறது.
இந்த விஷயத்தை, தலைமைக்கு சுற்றியிருக்கிற ஒவ்வொருவரும் இயல்பாக செய்யத்
தொடங்குகையில் - அதாவது, ஒவ்வொரு பிற்படுத்தப்பட்டவரும், முற்படுத்தப்பட்டவரும்
தாழ்த்தப்பட்டவர்களைப் போல யோசிக்கத் தொடங்கி விட்டால் - தலைமையின் அதிகாரம்
சகலருக்கும் பகிர்ந்தளிக்கப்படுகிறது.
இலட்சிய ஜனநாயகமொன்று அங்கே நடைமுறைப்படுத்தப்படுகிறது.
90களின்
ஆரம்ப வருடங்களில் தமிழகத்தில் தலித் கட்சிகளின் எழுச்சியையும், திராவிட
இயக்கங்களின் பின்னடைவையும் கண்கொட்டாது கவனித்துக் கொண்டிருந்த நாங்கள், ஜேயென்யூ தமிழ்க்கார்ர்கள் மத்தியில் இதை ஒரு
சோதனை போலவே தான் செய்து பார்த்தோம். அந்த
முயற்சிக்கு இவ்வளவு பரந்த வரவேற்பு இருக்குமென்று நாங்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
தொடர்ச்சியாக
பொங்கல் விழாவைக் கொண்டாட நாங்கள் முடிவு செய்தோம். தீபாவளி கொண்டாடிய தமிழ் மன்ற மரபை நாங்கள்
மரியாதைக்குக்கூட ஏனென்று கேட்கவில்லை.
பொங்கலை மட்டும் கொண்டாட முடிவு செய்தோம்.
ரெண்டு தமிழர்கள்
இதற்காக,
தில்லி வாழ் தமிழர்களை தொடர்பு கொள்ள ஆசைப்பட்டோம்.
எல்லா
இடத்தையும் போல, தில்லியிலும் இரண்டு வகையான தமிழ் குடியிருப்புகள் உண்டு. தில்லியின் புறநகர் பகுதியான ரோகிணியில்
தமிழர்களின் குடியிருப்பு ஒன்று இருந்தது.
ஜேயென்யு அருகிலேயே முனிர்கா, ஆர். கே. புரம் என்று 'சங்கமெல்லாம்' வைத்து
வாழும் தமிழ் குடியிருப்புகள் உண்டு. தயிர்சாதமும்,
பரதநாட்டியமும் அந்த வருடத்திற்கு வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததால் நாங்கள்
ரோகிணி பக்கம் போய் வந்தோம்.
ரோகிணியில்
வசித்த தமிழர்கள் சேலம், தருமபுரி பகுதியைச் சார்ந்தவர்கள். தில்லியில் ஆசிய விளையாட்டுப் போட்டிகள்
நடைபெற்ற போது அதற்கான கட்டுமானப் பணிக்காக இடம்பெயர்த்து வரப்பட்டவர்கள். வந்த வேலை முடிந்த பின்பும் கூட அவர்கள்
தமிழகம் திரும்ப முயற்சிக்கவில்லை. சேலம்,
தருமபுரி பகுதியில் தாய்மொழி பேசி ஒடுக்கிறவர்களை விடவும், தில்லியில் இந்தி பேசி
ஒடுக்குவது அவர்களுக்கு பரவாயில்லை என்று தோன்றியிருக்க வேண்டும். தில்லியிலேயே தங்கி விட்டார்கள். அவ்வளவு பெரிய தில்லிக்கும் புறநகர்களில்
வசிக்கக்கூடிய கூலியாட்கள் தேவையாகத் தானே இருக்கிறது!
ரோகிணித்
தமிழர்கள் கலைக்குழுவொன்றை வைத்து பராமரித்து வந்தார்கள். கரகாட்டம், சிலம்பாட்டம், புலிவேசம் தான்
அக்குழுவின் சிறப்பம்சம். ஜேயென்யு
பொங்கல் விழாவிற்கு அவர்கள் தான் சிறப்பு அழைப்பாளர்கள் என்று முடிவு செய்தோம்.
ஜேயென்யூவின்
திறந்தவெளி கலையரங்கில் மூன்று மணி நேரம் போல இவர்களின் கலை நிகழ்ச்சிகள்
நடைபெற்றன.
நாங்கள் ஏற்படுத்திய களேபரத்தில்
என்னமோ ஏதோவென்று நிகழ்ச்சியைப் பார்க்க வந்திருந்த பிற மாநிலத்தவர்களின்
எண்ணிக்கை அதிகமோ அதிகம். அந்த வளாகத்தில்
இவ்வளவு பரபரப்பாக, அதற்கு முன்பும் சரி பின்பும் சரி, எந்தவொரு திருவிழாவும்
கொண்டாடப்பட்டிருக்கவில்லை. கலைநிகழ்ச்சிகளைப்
பார்க்க வந்தவர்களிடம் தமிழ்ச் சமூகத்தின் சிறப்பியல்புகள் குறித்து ஏறக்குறைய ஒரு
நீண்ட உரையை ஞான. அலாய்சியஸ் நிகழ்த்தினார்.
அது கிட்டதட்ட ஒரு அரசியல் பிரகடனம் போலவே இருந்தது. அந்த உரையின் நீளம் குறித்து சிலர்
நெளிந்தார்கள் என்றாலும், தமிழர்கள் பேசாமலிருந்தால் தான் ஆச்சரியம் என்று தங்களுக்குள்ளே
சமாதானமும் சொல்லிக்கொண்டார்கள்.
ஞான. அலாய்சியஸ்
கலை
நிகழ்ச்சிகளெல்லாம் முடிந்த பின்பு, பொங்கல் விருந்தும் இருந்தது. சுமார் நானூறு பேரை அந்த விருந்திற்கு
அழைத்திருந்தோம்.
சொன்னால்
நம்ப மாட்டீர்கள், அது சைவ விருந்தாகத்தான் இருந்தது.
பொங்கல்
விருந்தில் மாட்டுக்கறியோ அல்லது வேறெந்த அசைவமோ போடலாம் என்ற யோசனை எங்களில்
யாருக்குமே தோன்றியிருக்கவில்லை.
இப்பொழுது
யோசித்துப் பார்த்தால், அப்படியொரு தாராள மனப்பான்மையோடு தான் அப்பொழுதும்
இருந்தோம் என்று சொல்லத் தோன்றுகிறது. என்
கறிச்சோறை நான் உன் தட்டில் வைக்க மாட்டேன் என்ற நாகரீகம் இருந்த்து. காலமும் இடமும் தான் உணவின் வகையைத்
தீர்மானிக்கிறது; மனித உடலோ, தத்துவமோ,
மதமோ, பண்பாடோ அல்ல என்பதையும் நாங்கள் நம்பினோம்.
இதனாலும்
கூட, அன்றைக்கு மாட்டுக்கறி யோசனை எங்களுக்கு வந்திருக்கவில்லை. மேலும், ஒடுக்கப்பட்டவர்களிலிருந்து உருவாகும்
தலைமை எத்தனை அணுசரனையோடு நடந்து கொள்கிறது என்பதற்கு இது மேலுமொரு உதாரணமாக
இருந்த்து.
தமிழகத்தில்
திராவிட இயக்கங்களுக்குப் பிந்தைய சமூக அசைவியக்கம் என்பது தாழ்த்தப்பட்டவர்களை
முன்னிலைப்படுத்தி மீள் வரையறை செய்யப்படுகின்ற தமிழ் அடையாள உருவாக்கம் மட்டுமே என்பதில்
நாங்கள் தெளிவாகவே இருந்தோம்.
தலித் என்ற
உணர்வெழுச்சியை முன்வைத்து தமிழ் சமூகம் தனது பண்பாட்டை, அரசியலை, பொருளாதாரத்தை,
அன்றாட வாழ்க்கையை சோதனைக்கு உட்படுத்தி, தன்னை ஒரு முறை புதுப்பித்துக் கொள்ள
வேண்டும் என்பதே அன்றைக்கு எங்களின் நோக்கமாக இருந்தது.
தாழ்த்தப்பட்டவர்களின் உரிமைக்குரலை
முன்வைத்து, தமிழ் சமூகம் நவீனத்தை நோக்கிய பயணத்தை விரைவு படுத்த முடியும்
என்றும் நாங்கள் நம்பினோம்.
இந்தப்
பெருங்கனவின் சோதனையோட்டமாகவே ஜேயென்யூ தமிழ் மன்றச் செயல்பாடுகளை நான் எனக்குள்
கணித்து வைத்திருக்கிறேன். ஆனால், அதே
நேரத்தில் ஜேயென்யு மாதிரியான கல்வி நிலையங்கள் ஒரு மாயை என்பதையும், அவை பெருஞ்சமூகத்தின்
அன்றாட வாழ்க்கைக்குப் புறம்பான மாற்று வாழ்க்கையை நமக்கு போக்கு காட்டுகின்றன
என்பதையும் நான் அறிந்தே இருந்தேன்.
பெருஞ்சமூகத்தில்
மத அடிப்படைவாதம் வாழ்க்கையாக இருக்கிறது என்றால், அதற்கு எதிரான வாழ்கையை வாழ வாய்ப்புகளை
வழங்குவதே கல்வி நிலையங்களின் பணியாக இருக்கிறது. அதே போல், சாதிப் பாகுபாடுகளற்ற கற்பனையான சூழலை
உருவாக்கி காட்டுவதும் அதன் பணியே., மனிதர்களை அவர்களது சிந்தனையாலும் செயலாலும்
மட்டுமே அடையாளப்படுத்துகிற வாழ்க்கையொன்றை நிர்மாணிப்பது,
பொருளாதாரக் காரணிகள் வலுவிழந்த சமூக உறவுகளை
கட்டமைப்பது போன்றவையும் கல்வி நிலையங்களின் வேலை தான். நேரடியாய் உணவு உற்பத்தியால் பாதிக்கப்படாத வாழ்க்கைச்
சூழலை கல்வி நிலையங்களே ஏற்படுத்தித் தரமுடியும்.
இந்தச்
சூழல்கள் அனைத்தும் கற்பனையானவை தான்!
நிஜமல்ல தான்! ஏட்டுச் சுரைக்காய்
தான்! விளைச்சல் வீடு வந்து சேராத வெள்ளாமை
தான்! ஆனால், ஒரு நல்ல பள்ளிக்கூடம் இதைச்
செய்வது தான் நியாயம்.
JNU
அதைச் செய்திருந்தது.
(தொடரும்)
Comments
கருணாகரன் ஜம்புநாதன், சிட்னி.