Skip to main content

ஜெர்மனிக்குப் போ!!!



வருகிற 28-12-2015 முதல் 28-02-2016 வரை, ஜெர்மனியிலுள்ள ஜார்ஜ் - ஆகஸ்ட் கோட்டிங்கன் பல்கலைக்கழகத்திற்கு வருகைதரு பேராசிரியராக செல்கிறேன்.  

நாட்டுப்புறவியல் கல்விப்புலம் இந்த நகரிலிருந்தே தொடங்கியது.  ஜெர்மானிய நாட்டுப்புறக்கதைகளையும் தொன்மங்களையும் தொகுத்து வெளியிட்ட கிரிம் சகோதரர்கள் பேராசிரியர்களாக பணியாற்றிய பல்கலைக்கழகம் இது.  

இங்கு வாழ்ந்த காலத்திலேயே அவர்கள் தங்களது முதல் தொகுதியை வெளியிட்டார்கள்.  பின்னாட்களில் அரசை எதிர்த்து கலகம் விளைவித்த பேராசிரிய குழுவில் முக்கிய பங்கினை வகித்தார்கள் என்பதும் வரலாறு.  இந்தப் பல்கலைக்கழகத்திற்கே பணியாற்ற செல்கிறேன்.  

நாட்டுப்புறவியலின் தொடக்க புள்ளியை நோக்கி ஏதோ ‘யாத்திரை’ செல்வது போல இருக்கிறது!!!

கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தின் ‘நவீன இந்திய ஆய்வுகளுக்கான மையம்’ மூலமாக ‘ஒடுக்கப்பட்டவர்களின் சமயம்’ என்ற தலைப்பிலான பாடத்திட்டத்தை மாணவர்களுக்கு கற்பிக்க இருக்கிறேன்.  பெளத்தம் தொடங்கி நாட்டுப்புற தெய்வங்கள் ஈறாக ஒவ்வொரு சமயக்கூறுகளையும் சாமானியர்கள் எவ்வாறு விளங்கிக் கொண்டார்கள் என்பதை விளக்கும் பாடத்திட்டம் இது.  ஜெர்மனியின் குளிருக்கு இந்த சூடு சரியாக இருக்கும்.

எல்லாவற்றையும் தாண்டி, கோட்டிங்கனில் நண்பர்களை சந்திக்க முடியும் - 

அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் பற்றி ஆய்வு செய்த கஜேந்திரன் அய்யாதுரை (அமுதாவும் அறனும்) , 

The Pariah Problem எழுதிய ரூபா விஸ்வநாத் (நதானியேல் ராபர்ட்ஸ்), 

The Search of Authenticity எழுதிய ரெஜினா பென்டிக்ஸ் போன்றவர்களை சந்திக்க முடியும் என்பது கூடுதல் உற்சாகம்.

இடையில் ஒரு முறை டியுபிங்கன் பல்கலைக்கழக மானிடவியல் துறைக்கு செல்லவிருக்கிறேன்.  

கிழக்கு ஜெர்மனியிலுள்ள ஹல்லே ஆவணக்காப்பகத்தையும் பார்க்க வேண்டும்.  

சென்ற முறை ஜெர்மனியில் பயணம் செய்த போது அறிமுகமான நண்பர்களைச் சந்திக்க ஸ்டுட்கார்ட் வரைக்கும் கூட போகிறேன்.  

குக்கூ கடிகாரங்களையும், Dark Forest கேக்கையும், ஏராளமான தொன்மக் கதாபாத்திரங்களையும் உற்பத்தி செய்த ஜெர்மனியின் கருங்கானகத்திற்கு (Dark Forest) என்னை அழைத்துச் சென்று காட்டிய டேவிட்டையும் ச்வாஸ் தம்பதிகளையும் நிச்சயமாய் சந்திக்க வேண்டும்.



Comments

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...