Skip to main content

அயோத்திதாசரும் இளையராஜாவும்

கோட்டிங்கன் வந்ததிலிருந்தே கஜீ (கஜேந்திரன் அய்யாதுரை), 

‘Trou வுக்கு போக வேண்டும் தர்மு.  உனக்கு அது பிடிக்கும்’ என்று சொல்லிக் கொண்டே இருந்தார்.  

Trou ஒரு மதுக்கூடம்.  ஜெர்மன் மொழியில் ‘துளை’ என்று அர்த்தம்.  நேற்று அங்கே போயே விட்டோம்.




அது ஒரு நிலவறை.  தரையிலிருந்து கீழிறங்கிய ஒரு துளையின் வழியாக அதற்குள் நுழைய வேண்டியிருந்தது.   கருங்கற்களால் அமைக்கப்பட்ட சுரங்கப்பாதைகள் நாலாபக்கமும் விரிந்து செல்கின்றன.   

‘இரண்டாம் உலகப் போரின் போது, நேச நாடுகளின் விமானத் தாக்குதலிலிருந்து தப்பிக்க, கோட்டிங்கன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் பதுங்கியிருந்த இடம் இது’ என்று உள்ளூர் வரலாறு சொன்னார்கள்.  

ஜெர்மனியெங்கும் பியர் வெள்ளமாய் பாய்கிறது.  நேற்றைக்கு கோதுமையிலிருந்து வடிக்கப்பட்ட பியரை (weisenbier) வாங்கி வாங்கி குடித்துக் கொண்டிருந்தோம்.

பேச்சு அங்கே இங்கே சுத்தி விட்டு, அயோத்திதாசரில் வந்து நிலைகொண்டது.  

கஜீ, அயோத்திதாசரின் தமிழ் பெளத்தம் என்ற அவரது நூலை எழுதிக் கொண்டிருக்கிறார்.  நானும் அயோத்திதாசர் பற்றிய எனது அடுத்த நூலை எழுதிக் கொண்டிருக்கிறேன்.  ஒரே நேரத்தில் இப்படி இருவர், அயோத்திதாசர் பற்றி, கோட்டிங்கன் பல்கலைக்கழகத்தில் அமர்ந்து கொண்டு, ஆய்வுகளை செய்து கொண்டிருக்கிறோம் என்ற விஷயமே ஒரு வித மனக் கிளர்ச்சியை எங்களுக்கு ஏற்படுத்தியிருந்தது.  போதாக்குறைக்கு அந்த நிலவறை மதுக்கூடத்தின் ரம்மியம்

அயோத்திதாசர் மாதிரியான நபர்களை அவர்கள் வாழ்ந்த காலகட்டத்தின் வரலாற்று நிகழ்வுகளோடு, அரசியல் சூழலோடு, சமூக ஒழுங்கமைப்புகளோடு விளங்கிக் கொள்வதற்கு ஏராளமான முறையியல்கள் உள்ளன.  ஆனால், இவையனைத்தையும் தாண்டி, ஏழு முழு வருடங்கள் ‘தமிழன்’ என்ற பத்திரிகை மூலம் தொடர்ச்சியாகக் கட்டுரைகளை எழுதி எழுதி மேற்சென்ற அந்தக் கையைக் கற்பனை செய்வது எப்படி?  அந்த மனிதர் எப்படிப்பட்டவர் என்பதை அவருடைய எழுத்துகளிலிருந்து யூகிக்க முடியுமா?  அந்த ஒவ்வொரு கட்டுரையும் எழுதப்பட்ட சம்பவத்தை மனதளவில் திரும்ப நிகழ்த்திப் பார்க்க முடியுமா?  ஒரு மனிதரின் எழுத்துகளின் வழியே அவருடைய மூளைக்குள் குதித்து விடுவது எப்படி?  

எந்தவொரு பனுவலையும் இப்படி வாசிப்பதையே நான் எனது முறையியலாகக் கொண்டிருக்கிறேன்.  

பனுவலின் மூலமாக அதை எழுதியவரின் மனதிற்குள் ஊடுறுவுவது.  ஒரு விதமான கூடு விட்டு கூடு பாயும் தந்திரம் இது.  ஊர்களில் சாமியாடுபவர்கள் இதைத் தன்னுணர்வின்றி செய்து கொண்டிருக்கிறார்கள்.  கொஞ்ச நேரத்திற்கு தங்கள் உடலை சாமி வந்து இறங்குவதற்கு வசதியாய் விட்டு விலகி நிற்பது.  நாடகக்காரர்களும் இதையே கொஞ்சம் போல மாற்றி, தத்தம் உடலை கதாபாத்திரங்களுக்காக விட்டுத் தருகிறார்கள்.  எந்தவொரு பனுவலை வாசிக்கும் போதும் நானும் இதையே தான் செய்ய விரும்புகிறேன்.

நேற்று முழுவதும், அயோத்திதாசர் எப்படிப்பட்ட மனிதராக இருந்திருப்பார் என்று கற்பனை செய்வதிலேயே எங்கள் பொழுது கழிந்தது.

************






விஜய் தொலைக்காட்சியில் வந்திருந்த இளையராஜா பேட்டியை இணையத்தில் தேடி இன்று பார்த்தேன்.  சென்னை வருவதற்கு முன்பான தனது வாழ்க்கையைப் பற்றி அவர் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்க பதட்டமாகவே இருந்தது.  எப்பொழுது வேண்டுமானாலும் உடைந்து சிதற, ததும்பிக் காத்து நிற்கும் குமிழி போல இருந்தார் இளையராஜா.

மாயாண்டி பாரதியுடன் அவருக்கு ஏற்பட்ட மதுரை அனுபவத்தை விவரித்தது அப்படியொரு உடைந்த தருணம்.   ‘கட்சியில் கேட்க வேண்டும்' என்பது நேர்மையாய் சொல்லப்பட்ட பதில் தான் என்பதில் எனக்கு சந்தேகமில்லை.  ஆனால்,  அந்தப் பதில் இளையராஜா சகோதரர்களால் எத்தனை வலி நிரம்பியதாகப் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது!

ஒடுக்கப்பட்ட அத்தனை பேரும் இந்த உள்ளுணர்வினாலேயே செய்யப்பட்டிருக்கிறார்கள்.  எந்தத் திசையிலிருந்து, எந்த வடிவத்தில் புறக்கணிப்புகளும், மறுதலிப்புகளும் வரும் என்று அறிந்திராத திகைப்பு அது.  தீண்டாமையை வித விதமான வடிவங்களில் சந்தித்ததனால் உண்டான இவ்வகைச் சுதாரிப்பு ஒடுக்கப்பட்ட அனைவருக்குள்ளும் சேகரமாகியிருக்கிறது.  புன்னகையும், அரவணைப்பும் கூட உதாசீனத்தின் வடிவங்களாக இருக்குமோ என்ற சந்தேகம் இருந்து கொண்டே இருக்கிறது.

ஒடுக்கப்பட்டவர்களின் survival instinct இது.  மேலும் மேலுமான அவமானங்களிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இந்த உள்ளுணர்வை அவர்கள் தொடர்ந்து வளர்த்துக் கொள்கிறார்கள்.  இது ஒரு வகையில் அனைத்தையும் சந்தேகப்படும் குணம்.  ‘அனைத்தையும் சந்தேகப்படுதல்' தத்துவார்த்த உரையாடலில் வேண்டுமானால் உன்னத நிலையாக இருக்க முடியும்.   ஆனால், அன்றாட வாழ்க்கையில் அது கொடூரம்.  எது நட்பு, எது பகை என்று அறிய முடியாத சகதி.
ஆனாலும், இந்த உள்ளுணர்விலிருந்து வெளி வருவதற்கே ஒவ்வொரு ஒடுக்கப்பட்டவனும் ஆசைப்படுகிறான்.  

இதற்கு அவன் முன்பு இரண்டு வழிகள் இருக்கின்றன.  ஒன்று, அவன் உங்களைப் போலத் தன்னையும் மாற்றிக்கொள்ளுதல்.  

இந்த வழிமுறையின் இருபதாம் நூற்றாண்டு வடிவம் தான் ‘தலித் அரசியல்’.  உங்களுக்கு சரிசமமாக தன்னையும் உயர்த்திக் கொள்வது தான் இதன் அடிப்படை நோக்கம்.  ஆனால், பாருங்கள், நீங்களொன்றும் அவ்வளவு உன்னதமான வாழ்க்கை வாழவில்லை என்பதால், உங்களைப் போலவே மாறுவது கூட அவனைச் சகதியிலிருந்து வெளியேற்றவில்லை.

இதன் அடுத்த வழிமுறை, தன்னை விடுவித்துக் கொள்வதோடு உங்களையும் அத்தனை கசடுகளிலிருந்தும் விடுவித்தல்.  இதற்காக அவன் தன்னை பொதுத் தளத்தில் இருத்திக் கொண்டு உங்களோடு உரையாடத் தொடங்குகிறான்.  இது அயோத்திதாசருக்கு ‘தமிழ் பெளத்தமாக’ இருந்தது;  இளையராஜாவிற்கு ‘திரையிசையாக' இருக்கிறது.

‘சாதி பேதங்களற்ற இசை’ என்பது தானே அவருடைய மொத்த செய்தியும்.  நீ என்னை வைகை அணையின் சுவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சும் குழந்தைத் தொழிலாளியாக அனுப்பினாலும், கருணை கொண்டு உன் அலுவலகத்தின் ஆபிஸ் பாயாக பதவி உயர்த்தினாலும், சென்னை பற்றிய பயத்தோடு மதுரை கம்யுனிஸ்ட் கட்சியில் அடைக்கலம் புகுந்தால் ‘கட்சியில் கேட்க வேண்டும்' என்று தூய்மைவாதம் பேசினாலும், இன்னும் இப்படியே மனதிற்குள் புதைந்து கிடக்கும் ஆயிரமாயிரம் அனுபவங்கள் இருந்தாலும்.

பதிலுக்கு நான் ‘சாதி பேதங்களற்ற இசை’யை மட்டுமே தானே உனக்குத் தந்தேன்.  

ஆனால், இந்தப் பெருந்தன்மைக்கு நாம் செய்த மரியாதை என்ன?  அவரைக் கடவுள் என்றது.

எவ்வளவு பெரிய அராஜகம் இது!  

‘நீ என்னை அவமானப்படுத்தினாய், ஆனால் நான் உனக்கு இசையை வழங்கினேன்’, என்று ஒருவர் சொன்னால், ‘அய்யயோ, நீங்களெல்லாம் கடவுளாக்கும்!’ என்று சொல்வது எவ்வளவு பெரிய அரசியல்?  

திருந்தவே மாட்டோமா நாம்?


Comments

gowthama sannah said…
நிச்சயம் திருந்த மாட்டோம்.. எங்களை திருந்து என்று சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது. எங்களுக்கு எந்த திறமை இல்லாவிட்டாலும் திருந்தக்கூடாது என்கிற தகுதியும், கேள்விக்கு அப்பாற்பட்ட தகுதியும் இருக்கிறது. எங்களைத் தவிர தூய்மைவாதம் பேசுவதற்கு தகுதியான ஆள் யார் இருக்கிறார்கள், தீட்டு, ஆச்சாரம் மட்டுமே ஒரு வாழ்க்கைமுறையாக இருக்கும் எங்களைப் பார்த்து இப்படி கேட்பதற்கு உங்களுக்கு என்ன தகுதி இருக்கிறது.. இப்படி ஒரு மனஓட்டம் இருக்கின்ற சமூகத்தில் இளையராசா நன்றியோடு நினைக்கப்படுவார் என்பது அவரது ரசிகர்களை தாண்டி சாத்தியமில்லை. அவரது இசை வெள்ளத்தில் நீந்திக்கொண்டிருப்பவர்களைப் பார்த்தால் ஓரளவிற்கு சுதந்திரமானவர்களாக இருப்பவர்களை பார்த்திருக்கிறேன். ஆனால் அவருக்கு இணையாக மற்றொருவரை முன்னிருத்தும் எல்லோரையும் பாருங்கள்.. நிச்சயம் திருந்தமாட்டார்கள். அவர்கள் கடவுள் மறுப்பாளர்களாக இருந்தாலும்

அன்புடன்
சன்னா
Unknown said…
‘கட்சியில் கேட்க வேண்டும்' என்பது நேர்மையாய் சொல்லப்பட்ட பதில்-என்னவொரு முரண், சொத்து தனிப்பட்டது கட்சி சார்பானது அல்ல, கேட்பவர் கட்சிக்காக உழைத்தவர், உழைப்பவர், உழைக்கப்போவவர், இல்லாதவர், கேட்பது இல்லாதவனுக்கே எல்லாம் என்று பொது உடமை பேசும் பெரியவர்களிடம் கட்சியில் கேட்கவேண்டும் என்று கூறுவது ஒரு சாக்கு, ஒன்று இவன் நாம் வீட்டில் நமக்கு சமமாகவா என்ற எண்ணமாக இருக்கலாம், அல்ல கட்சி வேலை செய்பவன் தனக்கு எப்படி வாடகை கொடுப்பான் என்ற எண்ணமாக இருக்கலாம் ஆக உழைப்பை உருஞ்சும் நவீன அட்டைகள் இந்த தோழர்கள் என்பதை உலகிற்கு உணர்த்தி உள்ளார்.
Kallodai said…
மாற்றுவடிவம் தேடுகிற நபர்களை நாம் அங்கீகரிக்காமல் புறந்தள்ளுவதற்கு சமம் கடவுள் என அழைப்பது. கடவுளை பயன்படுத்தி தானே பாகுபடுத்தினர் சமூகத்தினார்கள் என்பதை நினைவிற்கொள்ள வேண்டியுள்ளது. இளையராஜா அவர்களும் அடித்தட்டு சமூகத்திற்கு அப்பால் இருப்பதும் ஏனோ? மேலேகண்ட மரியாதைக்குரிய சன்னா அவர்கள் விமர்சனம் யாருக்கானதோ? போகிறபோக்கில் முன்மொழிந்துள்ளார்.
ஜெர்மன் சென்றாலும் வாசகர்களை நலன்கருதி எழுதுகிற பேராசிரியருக்கு நன்றி.
raghupathiv said…
அந்த சொத்து, தங்க கேட்ட இடம்,ஐ மா பா, கட்சிக்கு கொடுத்திருந்தாலும், குடும்ப பிரச்சினை, வழக்கு காரணமாக,( கட்சிக்கு, குடும்ப சொத்தை தந்ததை மற்றவர்கள் ஏற்காததால்) ஐ மா பா வால், கட்சியை கேட்க வேண்டும் என்ற பதிலையே தர இயன்றது. கட்சியை கேட்க வேண்டும் என்ற பதில் நேர்மையானது என்பதில் எவருக்கும் மாற்றுக கருத்து கிடையாது. நமக்கு சமமாகவே? வாடகை தர இயலுமா என்ற கேள்விகள் என்றோ நடந்து முடிந்த ஒன்றுக்கு உள்நோக்கம் கற்பிப்பதாகவே காணப்படும்.
அருமையான கட்டுரை, ஆழமான கருத்துகள், பகிர்வுக்கு நன்றி.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக