Skip to main content

கரகாட்டம், ஜல்லிக்கட்டு, மகாபாரதம்

அன்புள்ள தர்மா,
நீங்கள் எழுதிவரும் கட்டுரைகளைத் தொடர்ந்து பார்த்து வருகிறேன்.  அந்தச் சின்னப் பெண் கெளசல்யா பற்றி எழுதியிருந்த கட்டுரை அற்புதமாக இருந்தது.  நல்ல கட்டுரைகளை வாசித்து முடித்ததும் ஒரு கர்வம் வருமே அது எனக்கு இந்தக் கட்டுரையை வாசித்ததும் ஏற்பட்டது.  இந்த வகையாய் எழுதுகிறவர்கள் தமிழில் அருகிப் போய்விட்டார்கள்.  அதனால் நீங்கள் தொடர்ந்து எழுத வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அந்தக் கட்டுரையில், கலை வடிவங்கள் எப்படி தொடர்ச்சியான மாற்றத்திற்கு உள்ளாகி வந்திருக்கின்றன என்பதை இயல்பானக் காரியம் போல விவரித்த தொனி என்னை ஆச்சரியப்படுத்தியது.  உடனே, இதை, எளிதில் உணர்ச்சிவசப்படும் தமிழ் மனம் எப்படி எதிர்கொள்ளும் என்று அறிவதற்கும் ஆசையாக இருந்தது.  குறிப்பாக, தமிழ் மொழி பற்றியும், அதன் தூய்மை பற்றியும், ஒரிஜினாலிட்டி பற்றியும் அலட்டிக்கொள்ளும் தமிழ் மனம் இது கண்டு பதறாதா என்று நினைத்தேன்.

இதே காலகட்டத்தில், ஜல்லிக்கட்டு நடத்துவது பற்றியும், பொங்கல் கொண்டாடுவது பற்றியும், தமிழ் புத்தாண்டு எது என்பது பற்றியும் உருவான கொந்தளிப்புகள் கண்டு நான் மன உளைச்சலுக்கே ஆளானேன்.  எல்லாவற்றையும் பண்பாட்டின் பேரால் காப்பாற்றும் நடவடிக்கை தமிழர்களுக்கு மட்டுமே சொந்தமானதா அல்லது உலகின் பல்வேறு பகுதிகளிலும் மக்கள் இப்படித்தான் கொடி பிடிக்கிறார்களா?   ஜல்லிக்கட்டு விவாத சமயத்தில் ஏதாவது எழுதுவீர்கள் என்று நினைத்து ஏமாந்தேன்.  என் இந்தக் கேள்விக்கு பதில் சொல்லும் வகையில் நீங்கள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் ஒரு கட்டுரை எழுத வேண்டும்.

இப்படிக்கு 
அபர்ணா ஶ்ரீனிவாசன்


அன்பு அபர்ணா,

0.
உங்களைப் போல பலரும் இப்பொழுது எனது கட்டுரைகளைத் தொடர்ந்து படிக்கிறீர்கள் என்று தெரிகிறது.  தமிழில் வாசிப்புப் பழக்கம் ரொம்பவே குறைவு.  அதிலும் கவனத்தைக் கோருகிற கட்டுரைகளை வாசிக்கும் பழக்கம் அரிதோ அரிது.  கடினமான விஷயங்களைத் தமிழில் எழுதவே முடியாதோ என்ற மயக்கம் வருகிற அளவுக்கு இது அரிது.  ஆனாலும், ஒவ்வொரு காலகட்டத்திலும் யாராவது ஒரு சிலர், தமிழில் இந்த முயற்சிகளை தொடர்ந்து செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.  எனது எழுத்தையும் நான் அப்படியே கணிக்கிறேன்.

1.
கெளசல்யா கட்டுரை இன்றைக்கு, இன்றைக்கு என்று தள்ளிப்போய் ஒரு வருடம் கழித்து எழுதியிருக்கிறேன்.  அந்தப் பெண்ணை, வைகையாற்றின் வடகரைச் சேரியொன்றில் சந்தித்து ஒரு வருடம் ஆகிவிட்டது.   அவளை அப்படியே விட்டு வந்த குற்றவுணர்ச்சியிலிருந்து தப்பிப்பதே எனக்குப் பெரிய சவாலாக இருந்தது.  

உண்மையாகச் சொன்னால் எனக்கு அவர்களைப் பார்க்க பயமாக இருந்தது.  அந்தப் பெண் இன்னும் சில வருடங்களில் நாமெல்லாம் கதைகளில் மட்டுமே கேட்டிருக்கக்கூடிய வாழ்க்கையை வாழப் போகிறாள் என்று நினைக்கையில் மனதைப் பிசைகிற ஒரு அச்சம்.  அவளுக்கு முறையான திருமணம் சாத்தியமில்லாமல் போகும்; சக கலைஞர்களில் யாரோடாவது மாறி மாறி வாழ்ந்து கொண்டிருக்கப் போகிறாள்;  அவளோட தங்கப் போகிற ஒவ்வொரு ஆணும் அவளது பாலியல் நடத்தை குறித்த சந்தேகத்தை வெளிக்காட்டியபடியே இருப்பான்; அவள் குழந்தைகளை பெற்றுக்கொள்ளலாம் அல்லது தொடர்ந்து கலைத்துக் கொண்டிருக்கலாம்; சில நேரங்களில் அவள் தனது பணத்தேவைக்காக…….



நாமெல்லாம் கதையாய் கேட்பதற்குக் கூட அச்சப்படுகிற பாதையில் அவள் துணிந்து போய்க் கொண்டிருக்கிறாள்.  திரும்பி வந்துவிடு என்று சொல்வதற்கு எனக்கு வார்த்தைகள் இல்லை.  கனவுகளில், ஏதாவது சொல்ல விரும்பினால் தொண்டை அடைத்துக் கொண்டு சப்தம் வராதே அது போல.  நிஜத்தையே கனவு போல வாழ்வது எவ்வளவு பெரிய அவமானம்!

அவர்களுக்கு பொருளாதார உதவி செய்யக்கூடிய தொண்டு நிறுவனங்களை தொடர்பு கொள்ளலாமா என்று கூட யோசித்தேன்.  ஆனால், இது ஒரு சிலர் மட்டுமே பாதிக்கப்படுகிற பிரச்சினையில்லை.  இது போல ஆயிரமாயிரம் பேர்; இன்னும் கூட வந்து கொண்டே இருப்பார்கள்.  அதே போல இது ஓரிரு வேளை சாப்பாட்டுப் பிரச்சினையும் இல்லை, நிவாரணம் மட்டும் வழங்குவதற்கு.   அத்தனை பேரின் வாழ்க்கை முழுவதற்குமான பிரச்சினை இது.

2.
இந்தியா போன்ற நாடுகளில், நாட்டுப்புறவியல் ஆய்வுகளைச் செய்வது தன்னையே ஒருவன் மனதளவில் வதைத்துக் கொள்வதற்குச் சமம்.   ஏனென்றால், இங்கே வழக்காறுகளைக் காட்டிலும் நாட்டுப்புறத்தவரே முதலில் காப்பாற்றப்பட வேண்டியவர்.  ஐரோப்பிய நாடுகளில் நாட்டுப்புறத்தவர்கள் கொஞ்சம் கொஞ்சமாய் உருமாறிக்கொண்டிருந்தார்கள் என்றால்,  இந்தியாவில் நாட்டுப்புறத்தவர் கொஞ்சம் கொஞ்சமாய் உருக்குலைந்து கொண்டிருக்கிறார்.

இது நிச்சயமாய் நமது அரசாங்கங்களின் கடமை தான்.  ஒட்டு மொத்த சமூகச் சூழலையும் மாற்றியமைக்கக்கூடிய திராணி அரசாங்கத்தைத் தவிர இங்கு வேறு யாருக்கும் இல்லை;  முக்கியமாய் தொண்டு நிறுவனங்களுக்கு இல்லை.  ஆனால், நமது துரதிர்ஷ்டம், தன்னை நெருங்கி வருகிற அனைவரையும் பிச்சைக்காரர்களாகப் பார்க்கும் அரசாங்கம் தான் நமக்கு வாய்த்திருக்கிறது.  அப்படிப் பட்டவர்களைத் தான் நாம் தொடர்ந்தும் தேர்ந்தெடுக்கிறோம்.

3.
நம்மிடம் சில அடிப்படையானக் கோளாறுகள் இருக்கின்றன.  இப்படியான அடிப்படைக் கோளாறுகளில் ஒன்று தான் நமது பண்பாடு பற்றிய பார்வை.  அதாவது எல்லாம் இங்கிருக்கிறது என்ற தோரணையும், அதனால் அத்தனையும் காப்பாற்றப்பட வேண்டியவை என்ற மூடத்தனமும்!  தமிழ்ச் சமூகம் ஒரு வித ‘மூல நோயினால்' பாதிக்கப்பட்டிருக்கிறது என்றால் தயவு செய்து சிரிக்காதீர்கள்.  மூல நோய் தான்.  இதையே ஆதி நோய் என்றும் சிலர் அழைக்கக்கூடும்.

ஆனால், இதில் வேடிக்கை என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஆதி இங்கே தான் இருக்கிறது என்று நாம் பிடிவாதம் பண்ணுவது உண்மையில் நமது ஆதி குணமே அல்ல.  அது ஒரு இரவல் கற்பனை.  மறுமலர்ச்சி காலத்தின் விளைவாக, முதல் உண்மையை (அதாவது நம்ம வார்த்தையில் ‘பரம்பொருளை’) அறிவியல்பூர்வமாகக் கண்டறியப் புறப்பட்ட ஐரோப்பியர்களே இந்த மூலத்தைத் தேடும் பழக்கத்தை உலகமெங்கும் பரப்பி வைத்தார்கள்.  

மூலப்பிரதியே சரியானது என்றும், அதிலிருந்து பெறப்படுவதே ‘முழு உண்மை’ என்றும் நம்பிய ஐரோப்பியர்கள் அதை இந்திய சமஸ்கிருத பிரதிகளில் கண்டுபிடித்தது தான் காலனியம் நம்மை முழுதாய் விழுங்கிய தருணம்.  நம்மை பற்றிய அவர்களது கற்பனையின் மீது அவர்களுக்கு அவ்வளவு நம்பிக்கை!  ஒரு உதாரணத்திற்குச் சொல்வதென்றால், 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜெர்மானியக் கவிஞர் கார்ல் வில்ஹெம் ப்ரடெரிக் ஸ்லீகல் ‘எல்லாமும், ஆமா எல்லாமும் இந்தியாவில் தான் தோன்றியிருக்கிறது’ என்ற புலம்புகிற நிலைக்கெல்லாம் சென்றிருக்கிறார்.  இது ஒரு சோறுதான்;  அண்டா அண்டாவாக பொங்கியிருக்கிறார்கள்.





4.
ஐரோப்பியர்கள் நடத்திய, சமஸ்கிருதமா தமிழா என்ற பட்டிமன்றத்தில் மாட்டிக்கொண்டு அவஸ்தை படுகிறோம் என்பதை விட, ‘ஆதி' குறித்த மயக்கத்தில் ஆழ்ந்திருக்கிறோம் என்று சொல்லலாம்.  அது ஒரு நீண்ட கொடிய துயில்.

இதிலிருந்து நம்மால் பொற்காலங்களைக் கற்பனை செய்ய முடிந்தது.  சங்க காலம் பொற்காலம்;  சோழர் காலம் பொற்காலம்;  சங்க இலக்கியத்தை விஞ்சக்கூடிய இலக்கியங்கள் உலகில் இல்லை;  உலகிற்கே திருக்குறள் என்ற பொதுமறையைத் தந்தவர்கள் தமிழர்கள்; மிக நீண்ட எழுத்துப் பாரம்பரியம் தமிழுக்கே உண்டு;  முதன் முதலில் இலக்கணம் எழுதப்பட்டது தமிழுக்குத் தான்; தமிழ் செம்மொழி; தமிழ் நாகரீகமே உலகின் முதல் நாகரீகம்; சிந்து சமவெளி எழுத்துகள் தமிழ் தான்; இப்படியே இன்னும் ஜல்லிக்கட்டு, தாய்த்தெய்வ வழிபாடு வரைக்கும் சொல்லிக்கொண்டே போகலாம். 

இப்படி ஒன்று இருந்தால் அதற்கு எதிர் லாவணி பாடுவதற்கும் ஆட்கள் இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம்?  சங்க காலத்திலேயே சாதிப் பாகுபாடுகள் இருந்தன; சோழன் தான் ‘தேவதாசி' வழக்கத்தைத் தோற்றுவித்தவன்; சங்க இலக்கியம், சம்ஸ்கிருத காவிய மரபிலிருந்து தோன்றியது; திருக்குறள், வேதத்தின் மொழிபெயர்ப்பு; மொழிகளுக்கெல்லாம் தாய் சமஸ்கிருதம் தான்; அகத்தியருக்கே சமஸ்கிருதம் தெரிந்திருந்தது; தமிழ் நாகரீகம் என்று ஒன்றுமில்லை; ஆரிய வருகைக்குப் பின்பே இங்கு நாகரீகம் தளைத்தோங்கியது; தமிழ்ப் பண்பாடு சாதியப் பண்பாடு;  ஜல்லிக்கட்டு போன்ற கொடூரங்களைக் கொண்ட காட்டுமிராண்டி பண்பாடு.

5.
தமிழில் விவாதிக்கப்படும் அத்தனை விஷயங்களையும் இந்த இரண்டு வாதப்பிரதிவாதங்களுக்குள் அடக்கி விடலாம்.  அதாவது, எல்லா சண்டைகளிலும் கேட்கப்படும் ஒரே கேள்வி - இது ‘ஒரிஜினலா’ நம்மளோடது தானா?

அச்சு அசல் நம்ம விஷயம் தான் என்றால், உயிரைக் கொடுத்தாவது காப்பாற்று;  இல்லையென்றால், சனியன் சாகட்டும் விடு.  இதைத் தவிர தமிழில் வேறு சிறப்பான அரசியல் நிலைப்பாடு எதுவும் நம்மிடம் இல்லை.

இந்தக் கோளாறை காலனியம் தான் நமக்குக் கற்றுத் தந்தது.  ஐரோப்பியர்களும் நம்ம ஊர் சிந்தனையாளர்களுமாக சேர்ந்து தான் இதற்கு முழு வடிவம் கொடுத்தார்கள்.  தமிழையோ சமஸ்கிருதத்தையோ மூல மொழியாக நம்ப விரும்புகிறவர்கள், அதன் காரணமாக அம்மொழிகளில் எழுதப்பட்டுள்ள அனைத்தையும் நம்ப விரும்புகிறார்கள்.  அது மட்டுமே உண்மை என்று உருண்டு புரண்டு அழ ஆரம்பிக்கிறார்கள்.  அந்த மொழிக்கோ அல்லது அந்த பண்பாட்டிற்கோ ஏதாவது நடந்தால், ‘நாங்கள் உயிரோடே இருக்க மாட்டோம்' என்று கொதிப்படைகிறார்கள்.  மொழி பற்றியோ பண்பாடு பற்றியோ யாராவது எதையாவது சொல்லப் போனால் அது தங்கள் வாழ்வின் அர்த்தத்தையே கேள்வி கேட்பதாக உணர்ந்தார்கள்.

மொழி பற்றியும் பண்பாடு பற்றியும் தோற்றுவிக்கப்பட்ட இந்த மாயை, கொஞ்சம் கொஞ்சமாய் பயமாக மாறத் தொடங்குகிறது.  இந்த பயத்தை அதிகரித்ததில் இந்திய தேசியத்திற்கும் கணிசமான பங்கு இருக்கிறது.  ஏதாவதொரு ஒருமித்த காரணத்தைக் கொண்டே (பெரும்பாலும் ‘மொழி’) மற்ற தேசியங்கள் அனைத்தும் கட்டப்பட்டிருக்கின்றன.   ஆனால், தன்னையும் தேசியம் என்று அறிவித்துக் கொண்ட இந்தியா,  அந்த ஒருமித்த காரணம் ‘சாதி தான்' என்று சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் பண்ணுகிற அட்டகாசத்தில் இந்த வடமொழி அரசியல் தான் ரொம்ப கொடூரம்.  அவர்கள் காட்டுகிற பூச்சாண்டிக்கு பயந்து அழும் முதல் குழந்தை ‘மூத்த தமிழினம்' தான்.

நமது 19ம் நூற்றாண்டும் சரி, 20ம் நூற்றாண்டும் சரி இந்த இரு காலனிய அடிமைகளின் (இந்திய தேசியம், தமிழ் தேசியம்) நாடகத்தில் தான் கழிந்திருக்கிறது.  எந்தவொரு சிக்கலையும் பகுத்தறிவோடு அணுகுவதற்குப் பதிலாக உணர்ச்சிவசப்பட்டு வசனங்களைப் பேசிக் கொண்டிருந்ததைத் தவிர நாம் வேறொன்றையும் செய்திருக்கவில்லை.

6.
உதாரணத்திற்கு, இந்த ஜல்லிக்கட்டு பிரச்சினையையே எடுத்துக் கொள்வோம்.  விலங்குகளின் நலனைப் பாதுகாக்க விரும்புவதாகச் சொல்லும் ஒரு குழு ஜல்லிக்கட்டை நிறுத்தவேண்டும் என்கிறது;  தமிழ்ப் பண்பாட்டைக் காப்பாற்றுவதாகச் சொல்லும் ஒரு குழு நடத்தியே தீருவேன் என்கிறது.  




இதில், ஜீவகாருண்யம், உயர் நாகரீகம், மனிதாபிமானம், அனைத்து உயிர்களுக்கும் வாழும் உரிமை, காட்டுமிராண்டித்தனம், மனிதன் - வீட்டுப்பிராணி ஒட்டுறவு, பாரம்பரியம், வீரம், பண்பாடு, மரபான விலங்கு வகைகளைக் காப்பாற்றும் பாரம்பரிய நடைமுறை, வரலாற்று எச்சம், புனிதமான கிராம வாழ்க்கை, தமிழ் ஆண்களின் வெறியாட்டம், உயர்சாதியினரின் போலியான கருணை, மேல்சாதியினரின் பண்பாட்டு விழா, மரபான அறிவியலை அழிக்கும் சதி என்று பயன்படுத்தப்பட்ட அத்தனை வார்த்தைகளையும் உற்று கவனியுங்கள்.  இந்த விவாதங்கள் நம்மை எங்காவது எடுத்துச் சென்றிருக்கிறதா?  அல்லது அடுத்த வருடம் மீண்டுமொருமுறை அத்தனையையும் முதலிலிருந்து ஆரம்பிக்கலாம் என்று கலைந்து சென்றிருக்கிறார்களா?

கொஞ்சம் நிதானமாக இந்தப் பிரச்சினையை யோசித்துப் பார்ப்போம்.  ஜல்லிக்கட்டு நமக்கு ஞாபகம் தெரிந்த நாட்களிலிருந்து நடந்து கொண்டிருக்கிறது.  வரலாற்றிலிருந்தோ, ஏன் சிந்துச் சமவெளி அகழ்வாய்வுகளிலிருந்தோ இதன் புராதனத்தை சொல்லக்கூடிய சான்றுகளை ஆராய்ச்சியாளர்கள் காட்ட முடியும்.  ஜல்லிக்கட்டு பாரம்பரியமானது என்று சொல்வதன் மூலம் நாம் என்ன நிரூபிக்க விரும்புகிறோம் - இது மிகச்சிறப்பான பண்பாட்டு நடவடிக்கை என்றா?  இந்த ‘மூல’ அல்லது ‘ஆதி’ மயக்கத்தைத் தவிர இதில் வேறு ஏதேனும் இருக்கிறதா?  

இந்த விவாதத்தில் கொஞ்சம் பொருட்படுத்தத்தக்க ஒரு வாதம் உண்டென்றால் அது, காளை வகைகளைப் பாதுகாக்கும் மரபான அறிவியல் தொழில் நுட்பம் என்பது தான்.  அப்படி உண்மையிலேயே நடக்கிறதா என்பதை விசாரிக்கக்கூட வேண்டாம்.  இந்த செய்தி முக்கியமானது; எனவே அப்படியே ஏற்றுக் கொள்ளலாம்.  

ஆனால், அதனால் என்ன சொல்ல வருகிறோம்?  இனிமேலும் நாங்கள் இப்படியே, மரபான முறையிலேயே, எங்களது காளை வகைகளைக் காப்பாற்றிக் கொள்கிறோம் என்று சொல்லப் போகிறோமா?  அல்லது இது நாள் வரையில் மரபாகக் காப்பாற்றி வரப்பட்ட காளை வகைகளை நவீன முறையில் காப்பாற்றுகிற முயற்சியை மேற்கொள்ளப் போகிறோமா?  இன்றைக்கு வாய்த்துள்ள வசதிகள் எவையும் கிடைத்திராத காலகட்டத்தில் வீரியக் காளை வகைகளைப் பாதுகாக்கும் நாட்டுப்புற வழக்காறாக வேண்டுமானால் ஜல்லிக்கட்டு இருந்திருக்க முடியும்.  ஆனால், இன்றைக்கும் நாங்கள் ஜல்லிக்கட்டு மூலமாகத்தான் காளை வகைகளைக் காப்பாற்றப் போகிறோம் என்று சொல்வது தான் நமது பிரச்சினையே.  

யாரோ வெளியிலிருந்து சிலர், ‘ஜல்லிக்கட்டை நிறுத்துங்கள்’ என்று சொன்னார்கள் என்பதற்காக, ‘அதெல்லாம் முடியாது' என்று வழக்கத்திற்கு மாறான வெறியோடு ஜல்லிக்கட்டை நடத்துவது மட்டுமே தான் நமது ஒரே அரசியல் நடவடிக்கை என்றால் நாம் நிறைய மாற வேண்டியிருக்கிறது என்று தான் சொல்வேன்.  மரபான நெல் வகைகளைக் காப்பாற்ற, விலங்கு வகைகளைக் காப்பாற்ற, இன்னபிற இயற்கை வளங்களைக் காப்பாற்ற இன்னமும் நாம் பாரம்பரிய வழிமுறைகளைத் தான் நம்பிக்கொண்டிருக்கிறோம்.  

வசதிக் குறைவான, தொழில் நுட்ப வளர்ச்சி குறைவான காலத்திலேயே ஒரு விலங்கினத்தின் வகைகளைக் காப்பாற்ற ‘ஜல்லிக்கட்டு' மாதிரியான கிராம விளையாட்டொன்றை கண்டுபிடிக்கத் தெரிந்த நமக்கு, அதற்கப்புறம் என்னவாயிற்று?  ஏன் பாரம்பரிய வகைகளைக் காப்பாற்ற புதிய, ஜனநாயகபூர்வ, பகுத்தறிவு சார்ந்த, இன்னும் கூடுதல் அறிவியல் நோக்குடனான வழிமுறைகளை நாம் முயற்சிக்கவில்லை?  

இதை காலனிய மயக்கம் என்று தான் நான் சொல்வேன்.  மரபையும், பாரம்பரியத்தையும் கண்ணை மூடிக்கொண்டு நம்புகிற பழக்கம் நம்மிடம் வேரூன்றியிருக்கிறது.  ‘அவை ‘புனிதமான கடந்த காலத்திலிருந்து' நம்மிடம் வந்து சேர்ந்த பொக்கிஷங்கள்; அதனால், கேள்விக்கு அப்பாற்பட்டவை.  இன்னும் சொல்லப் போனால் அவை தான் கச்சிதமானவை.’  இதனாலேயே நமக்கு அவற்றின் மீது எந்தவித சந்தேகமும் எழுவதில்லை.  மாறாக, அவற்றைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமையும் நமக்கிருப்பதாகக் கற்பனை செய்து கொள்கிறோம்.   ஆனால், ஆச்சரியப்படும் வகையில் நாட்டுப்புற மக்கள் இது போன்ற கற்பனை எதையும் வைத்திருக்கவில்லை.

7.
ஜல்லிக்கட்டு குறித்த ‘மிருக நலன் விரும்பிகளின்' விமர்சனத்தை விடவும், வேறு இரு தரப்பினரின் எதிர்வினைகள் முக்கியமானவை என்று நான் நினைக்கிறேன். முதலாவது, பெண்களின் தரப்பாக முன்வைக்கப்பட்ட கேள்வி - ஆண்மையும் வீரமும் ஒன்று என்ற மூட நம்பிக்கையை இன்னும் எத்தனை காலம் தான் நாம் பாதுகாக்க வேண்டும்?  இரண்டாவது, ஜல்லிக்கட்டு நிகழ்வுகளில் ‘சாதி' மேலாண்மையின் பங்கு பற்றி தலித்துகள் எழுப்பும் கேள்வி?

இங்கு கேள்விக்குட்படுத்தப்படும் ஆண்மை, சாதி இரண்டும் கூடுதலான கவனத்தோடு கையாளப்படவேண்டிய விஷயங்கள் என்று நினைக்கிறேன்.  இவை குறித்த கேள்விகளை எழுப்புகிற இரண்டு தரப்பினரும் நெடுங்காலமாக பொது வெளியை சுதந்திரமாய் புழங்குவதிலிருந்து விலக்கி வைக்கப்பட்டவர்கள்.  ‘பண்பாட்டு மேன்மை’ என்று உரக்க பேசப்படும் ஒவ்வொரு தருணமும் அவர்கள் தங்களை ஒதுக்கப்பட்டவர்களாக உணர்ந்து பதட்டம் கொள்கின்றனர்.

ஜல்லிக்கட்டோ, சேவல் சண்டையோ, ரேக்ளா ரேசோ, இளவட்டக்கல்லைத் தூக்குவதோ, பெரும் மீசை வளர்த்துக் கொள்வதோ எதுவாக இருந்தாலும் அதன் பின்னால் வலுவான சமூகப் பொருளாதாரக் காரணிகள் இருக்கின்றன.  மேற்கூறியவற்றுள் நிரூபிக்கப்படும் ஒவ்வொரு வீரமும்,  தொடர்ச்சியாக ஏதோவொரு ஆதாயமாக உருமாற்றப்படுகிறது.  இவை சமூக அந்தஸ்தாக இருக்கலாம்; திருமணமாக இருக்கலாம்; ஏலம் எடுப்பதாக இருக்கலாம்; அசையா சொத்துகளின் கைமாற்றமாக இருக்கலாம்.  எது வேண்டுமானாலும் நடக்கலாம் - உடனடியாகவோ அல்லது தாமதமாகவோ.

ஜல்லிக்கட்டு நடத்தத் தடை என்று அறிவிக்கப்பட்டதும் பெருஞ்சமூகம் பண்பாட்டு ஒடுக்குமுறைக்காக வருந்துகிறது என்றால், அதில் பங்கேற்பவர்கள் இது போன்ற தொடர் ஆதாயங்களுக்காகவும் சேர்த்து வருந்துகிறார்கள்.  பாலித் தீவுகளில் நடைபெறும் சேவல் சண்டைகள் குறித்து க்ளிப்போர்ட் கீர்ட்ஸ் என்பவர் எழுதியுள்ள கட்டுரையை ஆர்வம் உள்ளவர்கள் வாசித்துப் பார்க்கலாம்.  அப்படியொரு ஆய்வு ஜல்லிக்கட்டு பற்றி நடத்தப்பட்டால் சமூகம் ஏன் பதறுகிறது என்பதற்கு வேறு சில பதில்கள் கிடைக்கக்கூடும்.

8.
பண்பாட்டை மேன்மை என்று கற்பனை செய்கிறவர்கள், அதில் நடைபெறும் மாற்றங்களை சீரழிவுகளாகவே புரிந்து கொள்கிறார்கள்.  பண்பாட்டை அந்நியர்களிடம் இழந்து விடப் போகிறோம் என்று பதட்டமடையத் தொடங்குகிறார்கள்.  

ஜல்லிக்கட்டு போன்ற பண்பாட்டு மேன்மைகள் குறித்து பெண்களும், தலித்துகளும் கேட்கிற கேள்விகளை நியாயமாய் விவாதிப்பதே ஆரோக்கியமான சமூகத்தின் இயல்பாகும்.  ஆனால், தமிழர்களாகிய நமது காலனிய மயக்கம் இக்குரல்களை அந்நிய கைக்கூலிகளோ என்று சந்தேகப்பட வைக்கிறது.  இந்த சந்தேகம் நம்மை மீண்டும் மீண்டும் மனப்பிராந்திக்குள் தான் தள்ளுகிறது.   விளைவு, பண்பாட்டைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் ஆழ்ந்த உறக்கத்திற்கு சென்று விடுகிறோம்.

பண்பாட்டு மேன்மை என்ற பேச்சு மிகவும் ஆபத்தானது.  தொடர்ச்சியான விபத்துகளை ஏற்படுத்தக்கூடியது.  அப்படி நிகழ்ந்தவொரு சமீபத்திய விபத்து தான் தேசிய அடையாள உருவாக்கம் என்பது.  அது, இந்திய தேசியமாக இருந்தாலும் சரி, தமிழ் தேசியமாக இருந்தாலும் சரி, ஈழ தேசியமாக இருந்தாலும் சரி.  எல்லா தேசியங்களுக்கும் பண்பாட்டு மேன்மைவாதம் தான் ஆதாரம்.  இந்தப் பண்பாட்டு மேன்மையை ‘மொழியின்' பெயரால் செய்து வந்திருப்பதை நம்மால் பார்க்க முடியும்.

9.
இந்த இடத்தில் மொழி ஒரு உருவகம் மட்டும் தான்.  பண்பாட்டையும் வரலாற்றையும் அது தனக்குள்ளே ஒளித்து வைத்திருக்கிறது.  இதனால், எல்லா தேசிய விருப்பங்களும் வரலாற்றை எழுதுவதில் ஆர்வம் காட்டின.  தனது எழுத்து இலக்கியங்களை பண்பாட்டு அடையாளங்களாக முன்னிறுத்தத் தொடங்கின.  அவ்விலக்கியங்கள் ஒட்டு மொத்த சமூகத்தையும் பிரதிபலிக்கவில்லை என்ற போது, நாட்டுப்புற வழக்காறுகளை எழுத்து வடிவில் ஆவணப்படுத்தத் தொடங்கின.  அதாவது, கண்ணுக்குப் புலப்படாதிருந்த பாரம்பரியத்தை, மரபை, பண்பாட்டை எழுத்து வடிவில் பாதுகாக்கத் தொடங்கின.  அதாவது, ஆவணம்!

பண்பாட்டை ஆவணப்படுத்துதல் தேசியவாதத்தின் ஆணிவேர்.  ஆவணமற்ற தேசியமென்று எதையும் கற்பனை செய்யக்கூட முடியாது.  எதை ஆவணமாக்கலாம், எவ்வாறு ஆவணமாக்கலாம் என்பதெல்லாம் கறாரான சட்டதிட்டங்களுடன் ஒழுங்குபடுத்தப்பட்டிருக்கிறது.  பல்வேறு சோதனைகளைக் கடந்து, எந்தவொரு ‘நிகழ்வு' தனது வீரியத்தை நிரூபிக்கிறதோ அது மட்டுமே ஆவணமாக்கப்படுகிறது.  மற்றவை, மாற்று வடிவங்கள் அல்லது திரிபு வடிவங்கள் என்று பட்டியலிடப்படுகின்றன.

நாட்டுப்புறவியல் என்ற அறிவியல் தேசியவாதத்தின் உருவாக்கம்.  அதனால், வேறெந்தவொரு அறிவியலைக் காட்டிலும் நாட்டுப்புறவியலே ஆவணப்படுத்துவதிலும், மூலப் பிரதி உருவாக்கத்திலும் அதி வேக அக்கறை காட்டியது.  ‘எல்லாமே அழிந்து கொண்டிருக்கிறது;  எனவே ஆவணப்படுத்துவதே தலையாய கடமை!’ என்று நாட்டுப்புறவியல் புலம்பாத குறையாய் வேலை செய்ததை நாம் பார்க்க முடியும்.   எது சரியான பிரதி?  மூலப் பிரதிகளை அடையாளம் காண்பது எப்படி? என்பது போன்ற முறையியல் சிக்கல்களிலிருந்தே பெரும்பான்மையான நாட்டுப்புறவியல் கோட்பாடுகள் உருவாகியிருந்தன.

அதாவது, எல்லாருக்குமே ‘வீரிய மூலப் பிரதி’யை அடையாளம் கண்டு காப்பாற்றுவது தான் லட்சியமாக இருந்தது.    உ.வே. சாமிநாதனின் ‘என் சரித்திரத்தில்'  இந்த லட்சியத்திற்கான அலைச்சலை நீங்கள் கதையாகப் படிக்க முடியும்.  

பின்லாந்து நாட்டின் தேசிய அடையாளச் சிக்கலில் ‘காலேவாலா’ என்ற காப்பியம் செய்யப்பட்ட சம்பவம் இன்னும் வேடிக்கையானது.  பின்னிஷ் மொழியில் வழங்கப்பட்ட தங்களது ‘ஒரிஜினல்’ தொன்மத்தைத் தேடி  எலியாஸ் லோன்ரெட் என்ற ஆய்வாளர் பயணம் செய்த போது அவருக்குக் கிடைத்தது என்னவோ, அக்காப்பியத்தின் கந்தல்கள் மட்டுமே.  அவ்வளவு தூரம் காலத்தால் கிழித்து எறியப்பட்டிருந்தது அந்தத் தொன்மம்.  வெவ்வேறு இடங்களில் கிடைத்த ஒட்டுத் துணிகளைக் கொண்டு எலியாஸ் தோராயமாக ஒரு கதையைத் தைத்து முடித்த தினம் இன்றைக்கும் அவர்களுக்கு ‘தேசிய தினம்’!

10.
வீரிய மூலப்பிரதியின் உருவாக்கம் சமூகத்தையே வேறு மாதிரியாக மாற்றியமைக் தொடங்குகிறது.  இதை நான் உங்களுக்கு ‘பிராமணர்களைக்' கொண்டு விளக்க முடியும்.  சாதியமைப்பு இந்தியாவெங்கும் செயல்படுகிறது என்றால், அந்தந்த பகுதிகளில் அதனதன் நிலவியலுக்கும், அரசியலுக்கும் தகுந்த வகையில் வித விதமாகச் செயல்படுகிறது என்றால், இந்த அனைத்தையும் ஒழுங்குபடுத்தும் மூலப்பிரதி எது?  அதாவது, சாதி எந்தவொரு மையப்புள்ளியிலிருந்து கிளைவிட்டு பிரிகிறது?  அல்லது, எந்த யோசனையிலிருந்து இத்தனை நிகழ்வுகள் பிறக்கின்றன?  

நாட்டுப்புறக் கலைஞர்கள் ‘பாரம்பரிய நிகழ்த்துதல்' என்றொரு லட்சியக் கற்பனையிலிருந்தே ஒவ்வொரு முறையும் தங்களது கலைகளை நிகழ்த்துகிறார்கள் என்று பார்த்தோம் இல்லையா, ஏறக்குறைய அதே போன்றது தான் இதுவும்.

சாதியின் தோற்றுவாய் எது?  அல்லது சாதியை நிர்வகிப்பது எந்த யோசனை?  சாதியை ஒழுங்குபடுத்துவது யார்?  ஏறக்குறைய சாதியின் ‘மூலப்பிரதி' எது என்பது தான் இது.  இதற்கு ஐரோப்பிய ஆய்வாளர்களும், அவர்களது இந்திய உயர்சாதி உதவியாளர்களும் கண்டடைந்த பதில் தான் - வர்ணாஸ்ரம தர்மம் என்ற தொன்மக்கதையும், மனுஸ்மிருதி என்ற ஏடும்.  

அது நாள் வரையில் மிகக்குறுகிய வட்டத்திற்குள் மட்டுமே புழங்கி வந்த இவ்விரு பிரதிகளும் அவற்றின் ‘ஒருமித்த' பேச்சு முறையின் காரணமாக சாதி என்ற சமூகக் காரணியை நிர்வகிக்கும் மூலப் பிரதிகளாக அடையாளம் காணப்பட்டன.  இதற்கப்புறமாய் சாதியை ‘சாதியமைப்பு' என்று எழுதுவது எல்லோருக்கும் திருப்தியாய் இருந்தது.

ஆனால், பெரும்பான்மை இந்தியர்கள் அப்பொழுது தான் முதன் முறையாக இவ்விரு பிரதிகளைப் பற்றியும் கேள்விப்பட்டார்கள்.  ‘நம்மை பற்றி இவ்வளவு விரிவாய் பேசக்கூடிய பிரதிகளைப் பற்றி அறியாமல் இருந்தோமே’ என்று கூச்சமடைந்தார்கள்.   துரதிர்ஷ்டவசமாக, வேறு எந்தவொரு சமூகத்திடமும் இது போன்ற கற்பனைகள் எழுத்துப் பிரதிகளாக இல்லை;  அப்படியே இருந்தாலும், இது போல எல்லாரையும் இணைத்துக் கட்டுகிற கதம்ப குணம் அதற்கு இருக்கவில்லை.

சாதியை நிர்வகிக்கும் மூலப் பிரதிகள் இவை தான் என்பது நிரூபணமானதோடு இந்தப் பிரச்சினை நின்று விடவில்லை.  சொல்லப்போனால், அதற்குப் பின்பே இன்னுமொரு மூலப் பிரதி உருவாகத் தொடங்கியது.  வர்ணாஸ்ரம தர்மமும், மனுஸ்மிருதியும் திரும்பத் திரும்ப ஒரு விஷயத்தை வலியுறுத்திக் கொண்டே இருந்தன - அதாவது, ‘பிராமணர்களே இந்திய சமூகத்தின் வீரிய வித்துகள்!’ என்ற செய்தியை அவை மறைமுகமாகச் சொல்லிக் கொண்டே இருந்தன.  இந்த ‘வீரிய வித்து' பிரச்சினை தான் ஒரு தளத்தில் ‘பிராமண எதிர்ப்பாகவும்' இன்னொரு தளத்தில் ‘பிராமணர்களைப் போலி செய்வதாகவும்' வெளிப்படத் தொடங்கியது.

11.
‘மூலப்பிரதி’, ‘ஒரிஜினல்’, ‘வீரிய வித்து’ போன்ற பேச்சுகள் காலனியத்தின் வருகைக்குப் பின்பு தான் உருவாயின என்று ஒரேயடியாய் சொல்லி விடலாமா?  அப்படியும் இல்லை, இது காலனியத்தின் கண்டுபிடிப்பு மட்டுமே இல்லை;  காலங்காலமாக இது நடைமுறையில் இருந்து வருவது தான்.  ஜல்லிக்கட்டு ஒரு வகையில் வீரியக் காளை இனங்களைப் அடையாளப்படுத்தும், பாதுகாக்கும் பண்பாட்டு வழக்கம் தான்.  இதே நடைமுறை வேளாண்மையிலும் கடைபிடிக்கப்படுகிறது;  பாரம்பரியமாக வீரிய விதை ரகங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன.  ஆனால், பெருவாரியான இந்திய சமூகம் இந்த ‘வீரிய வித்து’ சாமாச்சாரத்தை மனிதர்களுக்குள் பயன்படுத்தியிருக்கவில்லை.

பெருவாரியான இந்திய சமூகம் தான் அப்படி.  மிகச்சிறிய பிராமணர்களும், ஷத்திரியர்களும் இந்த ‘வீரிய மனித வித்து' கதையை தொடர்ந்து நம்பியிருக்கிறார்கள்; அதற்காக இல்லாத பொல்லாத வேலைகளையெல்லாம் செய்தும் இருக்கிறார்கள்.  இந்தக் கதைகளுக்காக நீங்கள் பெரிய ஆராய்ச்சிகளையெல்லாம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.  இந்தியப் பண்பாட்டை விளக்கும் ‘மூலப் பிரதிகள்' என்று சொல்லக்கூடிய அத்தனையும் வெவ்வேறு காலகட்டங்களில் இந்த வீரிய மனித வித்து தொடர்பாக நடைபெற்ற போராட்டங்களைத் தான் சித்தரிக்கின்றன.  மகாபாரதம் அப்படி நடைபெற்ற போராட்டங்களை கதைகளாய்ச் சொல்லும் மூலப்பிரதி.

இந்திய தேசியம் இத்தகைய மகாபாரத, ராமாயணக் கதைகளைத் தான் தனது ‘மூலப்பிரதி'களில் ஒன்றாகக் கொண்டிருக்கிறது.  தொடர்ச்சியாக இப்பிரதிகளை வெவ்வேறு வடிவங்களில் போலி செய்வதன் வழி, தன்னைத் தக்கவைத்துக் கொள்ள முயற்சி செய்த படியே இருக்கிறது.  

ஜெயமோகன், ‘வெண்முரசு’ என்று மகாபாரதக் கதையை போலி செய்து எழுதுவதில் உற்சாகம் கொள்வதும், தனது பணியை மாபெரும் வேள்வியாகக் கற்பனை செய்வதும் இந்த காலனிய மயக்கத்தால் தான் என்று தெரியவந்தால் வருத்தப்படுவார் பாவம்!  பின்னைக் காலனிய விவாதங்களில் பயன்படுத்தப்படும் hybridity (வீரியம் என்று சொல்லலாமா?), திருப்பிச் சொல்லுதல், மொழிபெயர்த்தல் போன்ற கருத்தாக்கங்களை இதற்குப் பயன்படுத்திப் பார்க்கலாம்.  மகாபாரதத்தை திரும்ப எழுதுவது மூலம் இத்தகையவொரு காலனிய மயக்கத்தையே அவர் தமிழர்களுக்கு ஊட்ட நினைக்கிறார்.  கெளசல்யா மாதிரியான கரகாட்டக் கலைஞர்களுக்கு திரைப்படங்கள் என்றால், திராவிட இயக்கங்களுக்கு சிலப்பதிகாரமும் சங்க இலக்கியங்களும், இந்திய தேசியர்களுக்கு மகாபாரதமும் ராமாயணமும்.  

அதிர்ஷடவசமாக இந்தியப் பெருஞ்சமூகம் இந்த ‘வீரிய மனித வித்து' கற்பனையை செயல்படுத்திப் பார்க்க ஆசைப்படவில்லை.  ஆனால், நம்புகிறது; அவர்களை மீமனிதர்களாக நம்புகிறது;  சுத்த ரத்தம் ஓடுகிற வம்சத்தினர் என்று நம்புகிறது;  ‘சுத்த ரத்தம்’ என்ற ஒன்று இருக்க முடியும் என்று நம்புகிறது.  இதனாலேயே ’சாதி’, ஒரு நிறைவேறாத ஏக்கமாக நமக்குள் இன்னமும் தங்கியிருக்கிறது.

12.
‘வீரிய வித்து' கற்பனை ஒரு வகையில் சாதியைச் சுட்டுகிறது என்றால், இன்னொரு தளத்தில் இந்த உலகம் ஆண்களுக்காக செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் சுட்டி நிற்கிறது.  வித்து என்ற வார்த்தையே ஆண்களைக் குறிக்கிற வார்த்தை தான்.  அந்த வித்துகள் விளையும் நிலத்தை வீரிய நிலம், வீரியமற்ற நிலம் என்றெல்லாம் நாம் கற்பனை செய்யவில்லை.  வன் நிலம், மென் நிலம், புன் நிலம் தான்.  வன் நிலத்தையும் புன் நிலத்தையும் மென் நிலமாக மாற்றி விட முடியும்.  வித்தில் மாற்றத்தை செய்வதற்கு வழியில்லை; வித்து வீரியமாக இருப்பது தெய்வாதீனம்!

காளைகளில் வீரிய வகையைக் காப்பாற்றுவது தான் தமிழ்ப் பண்பாட்டின் அதிக பட்ச அக்கறையாக இருக்கிறது.  வீரிய பசு வகையைக் காப்பாற்றுவதற்கு ஜல்லிகட்டு போல இன்னொரு ‘கட்டு’ நம்மிடம் இல்லை.   ‘மூலப் பிரதி' சொல்லாடலில் பெண்களுக்கு எந்த வித பங்களிப்பும் இருக்கவில்லை.  சொல்லப்போனால், அப்பிரதிகளை வாசித்துப் படியெடுக்கிறவர்களே அவர்களாகத் தான் இருந்தார்கள்.  ஆனாலும், அவர்களுக்கு இந்த விவாதத்தில் பங்கு கொள்ளும் அனுமதி இல்லை.  ஜல்லிக்கட்டு தொடர்பான பிரச்சினையில், பெண்களும் தலித்துகளும் ஒரே மாதிரியாய், ‘அதை நிறுத்தித் தொலையுங்கள்' என்று இதனால் தான் சொன்னார்கள்.

13.
நாட்டுப்புற வழக்காறுகளுக்கு இது போன்ற எந்த மயக்கங்களும் இல்லை.  மயக்கங்கள் இல்லை என்றது போல அதற்கென்று பிரத்தியோக அரசியலும் இல்லை.  அது ஒரே குரலில் பேசுவதும் இல்லை;  மிகைல் பக்தின் உணர்ந்து சொன்னது போல அது பலகுரல்களில் பேசிக்கொண்டிருக்கிறது.  ஒரு தருணத்தில் அண்டோனியோ கிராம்சி நாட்டுப்புற வழக்காறுகளின் இந்த குணத்தையே வேறு மாதிரியாய் சொல்லிப் பார்த்திருந்தார்; என்னைப் பொறுத்த வரையில் அது ‘பலகுரல்’ என்பதை விடவும் இன்னும் பொருத்தமானது: ‘வழக்காறுகள், யோசனைகளின் அருங்காட்சியகம்’.  என்னவொரு கற்பனை?

தேசியத்தைக் கட்டமைப்பதில் வழக்காறுகளைப் பயன்படுத்தியது போலவே, அதனைக் கட்டுடைக்கவும் வழக்காறுகளைப் பயன்படுத்த முடியும்.  அதற்கான வழிமுறைகளையும் வழக்காறுகள் தங்களுக்குள் கொண்டுள்ளன.  யோசனைகளின் அருங்காட்சியகம் தானே அவை?

14.
தாவர வர்க்கங்களிலும், விலங்கு வகைகளிலும் வீரிய இனங்களை (ஆண், பெண் பேதங்களின்றி) உண்மையிலேயே நாம் பாதுகாக்க நினைத்தால், ‘ஜல்லிக்கட்டு' போன்ற மரபான வழிமுறைகளை விட்டுவிட்டு வேறு நவீன முறைகளை நாம் யோசிக்கப் பழக வேண்டும்.  மகாபாரத, ராமாயணக் கதைகளில் மானுட உணர்வுகள் ஒன்றையொன்று கொந்தளிப்புடன் சந்தித்துக் கொள்கிற வாய்ப்புகள் காணப்படுகின்றன என்று உண்மையாகவே நாம் நம்பினால், அதன் தொன்மக் கட்டமைப்பை கடந்து வந்து இன்றைய வாழ்க்கையை எழுத முயற்சி செய்ய வேண்டும்.  ஏனென்றால், இந்தப் பண்பாட்டு ‘மேன்மைகளில்' நாம் புளகாங்கிதம் அடைவதை விடவும் அருவருக்கிற சந்தர்ப்பங்களே அதிகமிருக்கின்றன.  பயணற்ற பண்பாட்டுக் கூறுகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒதுக்கித் தள்ளுகிற மனோபாவத்தை நாட்டுப்புற வழக்காறுகளில் கற்றுக் கொள்ள முடியும்.











  

Comments

Aranga said…
அன்புள்ள தர்மராஜ் ,

உங்கள் கட்டுரைகள் எனக்கு பிடிக்கும் , தமிழில் அபுனைவுக்கும் ஜெயமோகனை தவிர்த்து படிக்க எதுமில்லை என்ற மனநிலையை மாற்றியமைத்தவை .

அடிப்படையாக மொத்த ஜெயமோகனும் நிகழ்காலத்திலும் எதிர்காலத்தின் மேலான நம்பிக்கையிலும் எழுதுபவர், அதை தொடர்ந்து வலியுறுத்துபவர் ,

வெண்முரசின் வாசகனாக எனக்கு அது அளிப்பது நேற்றை அல்ல , இறந்த காலத்தின் கனவை அல்ல , இன்றைக்கு நான் வாழும் அல்லது வாழநேரப்போகும் வாழ்வின் நிதர்சனத்தை ,

கர்ணனை ஏன் பெரும்பாலோனோர் தன்னுடன் அடையாளம் காண்கின்றனர் என அறிந்தால் நான் சொல்வது என்ன என தெரியலாம் .

ஒரே ஏமாற்றம்தான் , ஆய்வாளரும் வாசகருமாகிய நீங்கள் வெண்முரசை படித்துவிட்டு வரவேண்டிய எண்ணத்தை அது மகாபாரதத்தின் நாவல் வடிவம் என்ற பிம்பத்தில் இருந்து வந்தடைந்துள்ளீர்கள் .
Aranga said…
// அதன் தொன்மக் கட்டமைப்பை கடந்து வந்து இன்றைய வாழ்க்கையை எழுத முயற்சி செய்ய வேண்டும். ஏனென்றால், இந்தப் பண்பாட்டு ‘மேன்மைகளில்' நாம் புளகாங்கிதம் அடைவதை விடவும் அருவருக்கிற சந்தர்ப்பங்களே அதிகமிருக்கின்றன. பயணற்ற பண்பாட்டுக் கூறுகளை எந்தவித தயக்கமும் இல்லாமல் ஒதுக்கித் தள்ளுகிற மனோபாவத்தை நாட்டுப்புற வழக்காறுகளில் கற்றுக் கொள்ள முடியும்.
//

கொடுமை , வெண்முரசு மொத்தமும் பேசுவது இதைத்தான் :(

இன்றைய வாழ்க்கை என்றால் மனித மனமா அல்லது சூழலா அல்லது நவீன கருவிகளா ? எதை இலக்கியம் காட்டவேண்டும் ? உங்கள் அளவுகோள் என்ன ?
அன்பு அரங்கா,

வெண்முரசை படித்து விட்டு எழுத 2024 வரை (என் கணக்கு சரி தானா?) காத்திருக்க வேண்டும். இந்தக் கட்டுரை வெண்முரசு பற்றியதும் இல்லை. மூலப்பிரதிகளின் சூட்சுமம், தந்திரம் குறித்தது. அந்த யோசனை எங்கிருந்து தொடங்குகிறது என்பதையே இக்கட்டுரையில் நான் சொல்ல விரும்பினேன்.

இறந்தகாலப் பிரதிகளின் வெற்றியே தங்களை அவை நிகழ்காலத்தவை என்று நம்ப வைப்பது தான். நீங்கள் குறிப்பிடும் கர்ணன் உதாரணத்தையே கூட யோசித்துப் பார்க்கலாம். தமிழகத்தின் ஆன்களெல்லாம் தங்களைக் கர்ணன் போலவும், பெண்களெல்லாம் நல்லதங்காள் போலவும் கற்பனை செய்து கொள்வது தான் நமது பிரச்சினையே. இந்தக் கற்பனைகளைக் குலைப்பது தான் நவீன எழுத்தின் பணியாக இருக்க முடியும். நீங்கள் சொல்வது சரி தான், 'வெண்முரசு இன்றைக்கு நீங்கள் வாழும் அல்லது வாழ நேரப்போகும் வாழ்வின் நிதர்சனத்தை' தான் அளிக்கிறது. அது தானே எனது கேள்வியும்.

உங்களது வரியிலிருந்து '...நிதர்சனம்' என்ற சொல்லை நீக்கி விட்டு யோசியுங்கள், நான் சொல்ல வருவது உங்களுக்கே விளங்கும்.

அரங்கா, 'வெண்முரசு' முதல் முயற்சி இல்லை; இது போல தொடர்ச்சியாக நிறைய சம்பவங்கள் வரலாற்றில் நிகழ்ந்திருக்கின்றன. அப்படியொரு காலனிய கால 'வீரிய..' யோசனையை விவரிக்கும் போது தற்கால வெண்முரசையும் பேச வந்தது.

இவ்வளவையும் சொன்ன பிறகு, எனக்கொரு சந்தேகம் வருகிறது. வெண்முரசை நாவல் என்றதற்குப் பதில் காவியம் என்று குறிப்பிட்டிருந்தால் உங்களுக்குக் கடிதம் எழுத வேண்டிய தேவையே வந்திருக்காதோ?
அன்பு அரங்கா,

//கொடுமை , வெண்முரசு மொத்தமும் பேசுவது இதைத்தான் :(// இது மிக எளிய 'மூலப்பிரதி' தந்திரம் தானே? நானே நண்பனும் நானே எதிரியும்! எல்லாம் தனக்குள் அடங்கியிருப்பதாய் யோசிப்பது அதன் கோளாறு. இந்த ஒற்றைக்குரலை மறுக்க வேண்டியவர்கள் தான் நீங்களும் நானும். பிரதிகளுக்குள் வாழ்க்கை அடங்கி விடுமானால், பின் வாழ்க்கைக்கு என்ன தான் அர்த்தம் இருக்க முடியும்?

எதை இலக்கியம் காட்ட வேண்டும் என்கிறீர்கள் - நான் பார்க்க மறந்ததை, மறுத்ததை, தவறியதை... நான் ஏற்கனவே நம்பிக் கொண்டிருப்பதை அல்லது எனது தனிப்பட்ட ரகசியங்களை ஒரு இலக்கியம் பேசி என்னவாகப் போகிறது? ஜெயமோகனின் எழுத்துகள் நிறைய நேரங்களில் இந்தத் தவறைத்தான் செய்கின்றன.

சமீபத்திய உதாரணம் ஒன்று சொல்கிறேன் கேளுங்கள். ஜெயமோகன் எழுதியுள்ள 'காலமின்மையின் கரையில்..' கட்டுரையை செல்வேந்திரன் பகிர்ந்திருக்கக் கண்டு, படித்தேன். 'அதில் மூக்குக் கண்ணாடி அணிந்த யானைப்பாகன்...' என்ற காட்சி ஒரு மின்னல். மற்ற அனைத்துமே கூறியது கூறல் தான். போகிற போக்கில் அந்தக் காட்சியையும் அம்போவென விட்டு விட்டு போகிறார். இது அவரது எல்லா எழுத்துகளிலும் நிகழ்கிறது.

ஜெயமோகனை வாசிக்கையில், தெருவில் விட்டேத்தியாய் சிறு கல்லையோ கட்டியையோ எத்தி எத்தி விளையாடிப் போகும் இளைஞனைத் தான் எனக்கு அடிக்கடி ஞாபகம் வருகிறது. நேற்று ஒரு நண்பர் ஜெயமோகனின் படைப்பிலக்கியம் குறித்து மின்னஞ்சலில் விளக்கம் கேட்ட போது ஒரு வரியாக இதைத் தான் எழுதினேன் - 'அவர் வாசகர்களின் எளிய சந்தோசங்களால் செய்யப்படுகிறார்'.

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக