Skip to main content

தமிழ் Name of the Rose

முதல் பகுதி



போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் படி, ஓரியூர் சார்லஸ் பின்னைநவீன முறையில் இறந்து போயிருந்தார். 
தீயினால் சுட்ட உடலாகவே சார்லஸைக் கண்டெடுத்தனர்.  ஊரை அடுத்திருந்த முள்ளுக்காட்டினுள் கிடந்தார்.   அதிர்ஷ்டவசமாக தற்கொலைக் குறிப்பு எதையும் அவர் விட்டுச் செல்லவில்லை.  தீக்குளிப்பவர்கள் நான்கு பேர் மத்தியிலே, பொதுஇடத்தில் வைத்துக் குளிப்பது தான் தமிழர் பண்பாடு.  இவரென்னவென்றால் ரகசியமாய் போய் குளித்திருக்கிறார்.
எனவே, அது தற்கொலையாகவும் இருக்கலாம், கொலையாகவும் இருக்கலாம்  (இந்தியாவில் இவ்விரண்டிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் கூட…).  இல்லையென்றால் வேறு அமானுஷ்ய காரணமாகக் கூட இருக்கலாம்.  மொத்தத்தில் ஆசிரியன் இறந்து போனான்!  எனவே, அது தற்கொலையா, கொலையா, இல்லை வேறு ஏதேனுமா என்று முடிவு செய்யும் பழிபாவத்தை தமிழ் வாசகர்களுக்கே தந்து விடலாம்.  
இதனாலெல்லாம் குழம்பிவிட வேண்டாம்!  இது அசாதாரணமான சூழல் ஒன்றும் இல்லை.  மிக மிக இயல்பான ஒன்று தான்.  
தமிழ்ப் பண்பாட்டு அசைவுகளைக் கூர்ந்து கவனித்து வருபவர்களுக்கு இது வழக்கமானது தான் என்பது விளங்கும்.  1999 ஆம் வருடம், ஜீலை மாதம், 23 ஆம் நாள், மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கூலி உயர்வுப் போராட்டத்தில் கலந்து கொண்ட 17 பேர், போலிசுக்கு பயந்து தாமிரபரணியில் குதித்த போது அமேசான் நதியில் வசிக்கும் பிராஹ்னா மீன்கள் அவர்களைக் கடித்துக் குதறிக் கொன்ற சம்பவம் ஞாபகமிருக்கிறதா?  அப்படியொரு சம்பவம் தான் இது.  
*************** 
ஓரியூர் சார்லஸை உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.  ஆனால் தீக்குளிப்பதைப் பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்.  'தீக்குளித்தல்...' தான் என்ன ஒரு அழகான கற்பனை! இல்லை?
கிறிஸ்தவ சமயத்தில் தீண்டாமை இருக்கிறது என்று சொல்லி 2015, ஆகஸ்ட் 31ம் தேதி சார்லஸ் தீக்குளித்தார்.  
தீக்குளித்து தற்கொலை செய்கிற அளவுக்கு சார்லஸ் பலவீனமானவர் இல்லை என்று அவரது உறவினர்கள் சொல்கிறார்கள்.  (இதென்ன வேடிக்கை? பலவீனர்கள் தான் தீக்குளிப்பார்களா?)
'சார்லஸ் தீண்டாமைக்கு எதிராகக் குரல் எழுப்பியவர்.  அதனால் சாதி வெறிபிடித்த பாதிரியார்கள் அவரைப் படுகொலை செய்து விட்டனர்' என்று தலித் அமைப்புகள் சந்தேகப்படுகின்றன.  
கிறிஸ்தவ மதத்திலா இப்படி?  பாதிரியார்கள் படுகொலைகள் எல்லாம் செய்வார்களா? என்று கேட்டால் நீங்கள் உலகம் அறியாதவர் என்று அர்த்தம்.  பொதுவில் சித்தரிக்கப்பட்டிருப்பதைப் போல கிறிஸ்தவம் அன்னை தெரசாவெல்லாம் இல்லை.  எல்லா மதங்களைப் போலவே லாப நஷ்டங்களை கணக்கு பார்த்து செயல்படும் ஒரு பன்னாட்டு நிறுவனம், அவ்வளவு தான்.  இந்தியக் கிறிஸ்தவம் இன்னும் ஒருபடி மேலே போய் சாதிய நலன்களை தந்திரமாகக் கையாளும் நரியும் கூட.  
ஆமாம், தந்திரமாக!


*******************
ஓரியூர் புனித அருளானந்தர் கோவிலின் வருடாந்திர திருவிழாவில் கொடி ஏற்றப்படுவது சம்பிரதாயம். அக்கொடியை ஊர்வலத்தில் சுமந்துவருவதற்கு 'நான்', 'நீ' என்று போட்டி போடுவார்கள். இது கௌரவமாம். சேவல் சண்டை, ஜல்லிக்கட்டு போன்றவற்றில் வெற்றி பெறுகிறவருக்குக் கிடைக்கும் சமூக அந்தஸ்தைப் போல.
இந்தக் கௌரவத்தை அப்போதைக்கப்போது தலித் கிறிஸ்தவர்களுக்கும் தாருங்கள் என்பது தான் சார்லஸின் கோரிக்கை.  அது உடனடியாக மறுக்கப்பட்டது.  இந்த அவமானம் தாளாமலேயே சார்லஸ் தீக்குளித்து விட்டார் என்று சொல்கிறார்கள்.  தலித்துகள் தற்கொலை செய்து கொள்வதற்கு இந்த சமூகத்தில் தான் எத்தனையெத்தனை வாய்ப்புகள்! 
கௌரவத் தற்கொலை! கிறிஸ்தவராக இருந்தாலும், ‘மயிர் நீப்பின் உயிர் வாழா கவரிமான்' என்ற தமிழ் மரபில் சார்லஸ் தோய்ந்து போயிருக்க வேண்டும். 
ஆனால், கௌரவத்தைக் காப்பாற்றுவதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணத்தை தலித் கிறிஸ்தவர்கள் நம்பவே இல்லை. அவர்களுக்குத் தெரியாதா என்ன?  கெளரவத்திற்காகவெல்லாம் தற்கொலை செய்வது என்றால் ஒரு தலித் கிறிஸ்தவர் கூட இங்கு உயிரோடு மிஞ்ச முடியாது!
அதிலும் கொடியைத் தொடாதே என்று சொல்வதெல்லாம் ஒரு கெளரவப் பிரச்சினையா?  இதை விட பெரிய அவமானங்களையெல்லாம் தாங்கிக்கொண்டு தலித் கிறிஸ்தவர்கள் இன்னமும் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கையில் இதை நம்மாலும் நம்ப முடியவில்லை.  அப்படியானால், சார்லஸிற்கு என்ன தான் நடந்தது?
***********
சார்லஸின் மரணம் தொடர்பாக ஒரு சிறு முன்கதையை நான் உங்களுக்குச் சொல்ல வேண்டும். 
***********
2011 ஆம் ஆண்டு, ஜூலை மாதம், ‘தாமிரபரணி படுகொலை’ நினைவு நாளுக்கு முந்தைய தினம், அதாவது 22ம் தேதி, திருச்சியிலுள்ள தூய பவுல் குருமடத்து ஒலிபெருக்கிகளும் ஒலி வாங்கிகளும் மாயமாய் மறைந்து போயின.  மாய யதார்த்தவாதத்தின் மீது சுத்தமாய் நம்பிக்கையிராத பாதிரியார்கள் யாரோ திருடியிருக்க வேண்டும் என்று முடிவு செய்தனர்.  
வழக்கம் போல மூத்த பாதிரியார்களுக்கு பணிபுரியும் வேலையாட்கள் மீது தான் சந்தேகம் வந்தது.  ஆனால், கொஞ்ச நேரத்திலேயே ஒலிவாங்கிகளும்  பெருக்கிகளும் மீன் தொட்டியில் கிடந்து கண்டுபிடிக்கப்பட்டன.  இப்பொழுதும் அவர்கள் மீன்கள் தான் எடுத்துச் சென்றிருக்க வேண்டும் என்று நம்பவே மாட்டோம் என்றார்கள்.  கற்பனை வளத்தில் சுத்தம்.  அவர்களது யோசனையே வேறு மாதிரி இருந்தது.  ‘நடந்தது திருட்டு இல்லை; யாரோ வேண்டுமென்றே வீசியிருக்கிறார்கள்.  அதாவது, நடந்திருப்பது திருட்டு இல்லை, விஷமம்!’  இப்படித்தான் ஒரு நல்ல மேஜிக்கல் ரியலிஸக் கதை துப்பறியும் கதையாக மாறியது.  
தங்களது வேலையாட்கள் இது போன்ற விஷமங்களில் ஈடுபடுவது இல்லை என்று மூத்த குருக்களுக்கு நன்றாகவே தெரியும்.  வறுமை காரணமாக ஒன்றிரண்டு திருட்டு வேலைகளைச் செய்வார்கள்.  அதுவும் அபூர்வமாகத்தான்!  மற்றபடி விஷமக் காரியங்களிலெல்லாம் இறங்கவே மாட்டார்கள்.  கடவுள் மீதும் திருச்சபை மீதும் தீவிர விசுவாசம் கொண்டவர்கள்.  அப்படியானால், இதைச் செய்த அந்த விஷமி யார்?
விஷமி வெளியிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை என்று மூத்த பாதிரியார்கள் நம்பினர்.  அத்தனைக் கட்டுக்காவல் நிரம்பியது குருமடம்.  மூத்த பாதிரியார்கள், வளரும் பாதிரியார்கள், வேலையாட்கள் - இவர்களைத் தவிர வேறு யாரும் உள்ளே நுழைந்து விட முடியாது.  
இப்பொழுது சந்தேகத்தின் நிழல் வளரும் பாதிரியார்கள் மீது விழுந்தது.  அத்தனை பேரும் இளைஞர்கள்.  பாதிரியார் பட்டம் பெறுவதற்காகக் காத்துக் கொண்டிருப்பவர்கள்.  இன்னும் ஓரிரு மாதங்களிலோ அல்லது வருடங்களிலோ குருவாக மாறப்போகிறவர்கள்.  அவர்களின் மீது தான் சந்தேகம் வந்தது.
பிரச்சினை சாதாரணமானது அல்ல.  ஏதோவொரு கறுப்பு ஆடு மந்தைக்குள் புகுந்து விட்டது என்ற எல்லைக்கு அதை யோசித்தார்கள் (நமக்குத் தேவைப்படுகிற அத்தனை உவமானங்களும் எப்படிக் கச்சிதமாக ஏற்கனவே செய்யப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள்).  அதன் பின் நடந்தது அனைத்தும் விறுவிறுப்பான க்ரைம் கதை தான்.  
துப்பறியும் குழு அமைத்தார்கள். பல கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டன. நிகழ்ந்த பாவத்தின் விகாசத்தை வளரும் பாதிரியார்களுக்கு எடுத்துச் சொன்னார்கள்.  'ஒழுங்கீனமே பாவத்திற்கெல்லாம் பாவம், சாவான பாவம்!'  அது, ஏவாள் தின்ற ஆப்பிள்.  
‘குற்றவாளி மாணவர் முதலில் தவறை ஒத்துக்கொள்ள வேண்டும்.  பகிரங்கமாய் ஒப்புக் கொள்ள வேண்டும் என்று கூட அவசியமில்லை.  ரகசியமாய் வந்து சொன்னாலே போதும். அவ்வாறு செய்தால் அவர் தண்டனையிலிருந்து விடுவிக்கப்படுவார்.  அதாவது, மன்னிக்கப்படுவார்!’ என்று மூத்த பாதிரியார்கள் உறுதிமொழி வழங்கினர்.  ஆனால், குருமாணவர்கள் யாரும் ஒத்துக்கொள்வதாகத் தெரியவில்லை.  கிறிஸ்தவம் மன்னிக்கிற லட்சணத்தை நம்மை விட அவர்கள் தானே நன்றாக அறிவார்கள்!
இதனிடையே, துப்பறியும்குழு ஆறு குரு மாணவர்களைத் தனது சந்தேக வலைக்குள் கொண்டு வந்தது.  ஆனால், அவர்கள் தங்களை நிரபராதி என்றார்கள்.  ஆறு பேரிடமும் தனித்தனியாக, விதவிதமாகப் பேசிப்பார்த்தார்கள்.  ’உண்மை உங்களை விடுதலை செய்யும்' என்று கூட சொல்லிப் பார்த்தார்கள். அவர்கள் எதற்கும் மசியவில்லை.
இப்பொழுது குற்றத்தின் கனப் பரிமாணம் கூடத் தொடங்கியது.  இது இனிமேலும் ஒழுங்கீனமோ, விஷமத்தனமோ மட்டும் அல்ல,  இது கலகம்.  குருமடத்தின் அதிகாரத்திற்கு எதிரான கலகம்!  திருச்சபைக்கு எதிரான கலகம்!  
கலகம், கிறிஸ்தவத்தில் பெரிய கெட்டவார்த்தை.  அதனைப் பொறுத்தவரை உலகில் ஒரே ஒரு கலகக்காரன் தான் உண்டு.  அவனையும் கொன்று கடவுளாக்கிய பின்பு வேறு கலகக்காரர்களுக்கு கிறிஸ்தவத்தில் இடமில்லை.  எனவே கலகத்திற்கு எதிரான அதிரடி நடவடிக்கைக்காக குரு மடம் தயாரானது.  
2011 ஆகஸ்ட் 13ம் நாள், அக்குருமடத்தின் அதிபர், சந்தேகத்தின் பேரில் அந்த ஆறு மாணவர்களையும் குருமடத்திலிருந்து வெளியேற்றி உத்தரவிட்டார்.  ஏறக்குறைய பதிமூன்று வருடங்கள் வெவ்வேறு சமய வல்லுனர்களிடமும், அறிஞர்களிடமும் பயிற்சி பெற்று, வெகுவிரைவில் குருப்பட்டமும் பெறவிருந்த அந்த ஆறு குருமாணவர்களும் உடனடியாக வெளியேற்றப்பட்டனர்.    
ஆறு பேரும் நிலைகுலைந்து போனார்கள் என்று சொல்ல வேண்டும்.  அவர்கள் இவ்வளவு அதிரடியான முரட்டுத்தனத்தை நிர்வாகத்திடமிருந்து எதிர்பார்க்கவில்லை.  ஒலிவாங்கியை யாரோ மீன் தொட்டியில் வீசியிருக்கிறான் என்பதற்காக இவ்வளவு பெரிய தண்டனையா?  இப்படியொரு சமூக விலக்கமா?
******************
வரலாறு என்று சொல்லத்தக்க பழைய கதைகளை நான் உங்களுக்குச் சொல்லப் போகிறேன்.
*******************
கிறிஸ்தவம் என்பது பொதுவான பெயர் என்றாலும், கத்தோலிக்க கிறிஸ்தவம் (Roman Catholic) வேறு, சீர்திருத்த கிறிஸ்தவம் (புராட்டஸ்டாண்ட்) வேறு.  இவ்விரண்டு மதத்திற்கும் ஆகப்பெரிய வித்தியாசம், யார் கடவுள், யார் பூசாரி என்பது தான்.
கத்தோலிக்க கிறிஸ்தவம் பூசாரிகளின் மதம். உலகளாவிய குருமார்களின் வலைப்பின்னலைக் (போப் முதல் பங்குச் சாமியார் வரை) கொண்டது. கத்தோலிக்க கிறிஸ்தவத்தில் சந்நியாசிகளுக்கு மட்டுமே அதிகாரம் வழங்கப்படுகிறது. குடும்பஸ்தர்கள் சகல பலவீனங்களையும் உடையவர்கள் என்பது அதன் பலமான நம்பிக்கை. பாலியல் வேட்கை அப்படியொரு பலவீனம்.
கிறிஸ்தவ குரு பாலியல் வேட்கையை தியாகம் செய்தவர். பத்துப் பதினைந்து வருடங்கள் முறையான சமயப் பயிற்சியையும் பெற்றவர்.  இந்தத் தனிமனித ஒழுக்கம், நிறுவன ஒழுக்கம் - இவை கலந்த கலவையே கிறிஸ்தவ சந்நியாசம்.  ஆனாலும் இவையெல்லாம் மானுட முயற்சிகள் மட்டுமே. குருவாக மாறுவதற்கு மானுட யத்தனங்கள் மட்டும் போதுவதில்லை.
இதற்கெல்லாம் அப்பால், தேவனின் சித்தமும் வேண்டும் என்கிறார்கள்.  இதற்கு  'தேவ அழைத்தல்' என்று பெயர் வைத்திருக்கிறார்கள்.  அதாவது, கடவுள் வெகு சிலரை மட்டும் தேர்ந்தெடுத்து தன் பின்னால் வருமாறு அழைக்கிறார்.  
'மீன் பிடிக்கிற உன்னை, மனிதர்களை பிடிப்பவனாக மாற்றுவேன்.  என் பின்னால் வா!'  
'எத்தனை ராஜ்ஜியங்களை வென்று தான் என்ன பயன்? ஒரு மனிதனைக் கூட உன்னால் வெல்ல முடியவில்லையே!  போ. போய் மனிதர்களின் ஆன்மாவை வெல்!'
இப்படி உதாரணத்திற்கு நிறைய கதைகளைச் சொல்கிறார்கள்.  
இது போல கடவுள் ஒவ்வொரு குருவானவரிடமும் வந்து பேசுகிறார்.  'என் பணிக்கு வா',  என்று அழைக்கிறார்.  அதற்குப் பெயர் தான் தேவ அழைத்தல்.  
அந்த ஆறு பேருக்கும் இந்தக் கொடுப்பினை இல்லை.  கடவுள் அவர்களை 'வா' என்று சொல்வதற்குப் பதில், 'வெளியே போ' என்று விரட்டினார்.  அதாவது, தேவ விரட்டல்!  
**********************
மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வசித்து வரும் பழங்குடியினம், காணிக்காரர்.  அவர்கள் பூசாரியை ‘பிலாத்தி' என்று அழைக்கிறார்கள்.  ஒவ்வொரு குடியிருப்பிற்கும் ஒரு பிலாத்தி உண்டு.  பூசாரி என்றால், கடவுள் காரியங்கள் மட்டும் அல்ல, அந்தப் பழங்குடியின் மருத்துவரும் அவர் தான்.  அதனால், பிலாத்திக்கு தனி மரியாதை உண்டு.  பிலாத்தியாக மாறுவது ரொம்ப சிரமம்.  சடங்கு, சம்பிரதாயம், மருத்துவம் தெரிந்திருந்தால் மட்டும் போதாது.  தெய்வத்தின் அனுக்கிரகமும் வேண்டும்.  தெய்வம்…
‘கனவுல வந்து கூப்பிடும்.  ‘வந்துரு. என்கிட்ட வந்துரு.’ அப்படியே எந்திரிச்சி போறது தான்.  ‘எங்க போறம், எதுக்கு போறம், எப்ப வருவோம்’ எதுவுமே தெரியாது.  அது நம்மள கூட்டிட்டு போகும்.  அப்படி சமயத்துல கண்ணு தெரியாதும்பாங்க.  கூட்டிட்டு போயி காட்டுல உள்ள எல்லாத்தயும் காட்டித் தரும்.  ஒரு மாதிரி பித்து புடிச்ச மாதிரி இருக்கும்.  நினவு இருக்காது.  யாரு என்னங்கிற நிதானம் தெரியாது.  எந்த லெக்குன்னும் கூட புரியாது.  சுத்தி காடு தான்.  தண்ணிக்குள்ள முங்கிட்ட மாதிரி காட்டுக்குள்ள முங்கிறது.  எத்தன நாளு இப்படி திரிவாங்கனு தெரியாது.  மேலெல்லாம் பாசி படந்து, ஒரு மாதிரி பச்ச வாசம் அடிக்கும்.  அட்ட கூட கடிக்காது.  மரம் விழப்போகுது போலனு அவசர அவசரமா ஒத்த காலால நொண்டி அடிச்சு எறங்கிரும்.  எப்ப நினவு திரும்புமோ தெரியாது.  ஆறு மாசமோ ஒரு வருசமோ… மொத்த காணியும் அந்த ஆளையே மறந்தாமாதி இருக்கும் போது, வந்து நிப்பாரு!  பாத்தோன்னயே புரிஞ்சிரும், புது பெலாத்தினு.  அதுக்கப்புறம், சாமி, சடங்கு, நோவு, நொடி… எல்லாத்துக்கும் அவரு தான்.  அந்த ஆறு மாசமோ ஒரு வருசமோ எங்க போனோம், எங்க வந்தோம், யாரு கூட்டிட்டு போனா… எதுவுமே அவுருக்கும் தெரியாது, எங்களுக்கும் தெரியாது.  இந்தப் பொதிக மலையில ஆயிரத்தெட்டு தெய்வம் இருக்கு.  யாரு பெலாத்தினு அதுக தான் முடிவு பண்ணனும்.’
****************
குருமடத்திலிருந்து வெளியேற்றப்பட்ட ஆறு மாணவர்களும் இனி கேலிக்கான பொருளாகி விடுவார்கள்.  சக கிறிஸ்தவர்களின் ஏளனத்தையும், எகத்தாளத்தையும் எதிர்கொண்டே இனி அவர்கள் வாழ வேண்டும்.  இதை விடவும் முக்கியமாக, இனி அவர்களால் கத்தோலிக்க கிறிஸ்தவத்தின் பொருளாதார அதிகாரத்தை கொஞ்சம் கூட நெருங்க முடியாது.  அந்தப் பதவிக்காக ஏறக்குறைய தங்களது இளமைப்பருவத்தையே அவர்கள் செலவிட்டிருக்கிறார்கள்.  அவர்கள் கற்ற கல்வி (ஆங்கிலம், தத்துவம், கிறிஸ்தவ சட்டம்) வெளி உலகில் எந்தக் காசுக்கும் பிரயோஜனமில்லை.  வெளியேற்றப்பட்ட அவமானமும், எதிர்காலம் குறித்த பயமும் மட்டுமே அவர்களிடம் மிச்சம் இருந்தன.  
நிச்சயமாய் அது கொடூரமான தண்டனை தான்.  எவ்வளவு தூரம் கொடுமையானது என்றால், உண்மையான குற்றவாளியை அது வெற்றிகரமாக வெளியே கொண்டு வந்தது.  எப்பொழுதுமே தண்டனை தான் உண்மைக்கு நெருக்கமாக இருக்கிறது; மன்னிப்பு, கற்பனைகளின் தோட்டம். 
அந்த ஆறு பேரில் ஒருவர் ‘நான் தான் அந்தக் குற்றவாளி’ என்றார்.  அவர் பெயர்  ரெக்ஸ்டன்.  தனது தவறுக்காக ஐந்து நிரபராதிகள் பலியாவது குற்றவுணர்வுக்குள் தள்ளியதாய் அவர் வாக்குமூலம் கொடுத்தார். குற்றவுணர்வின் பளுவைத் தாங்கமுடியாமலேயே அவர் உண்மையை ஒப்புக்கொள்ள முன்வந்தாராம்.  
அவரது வாக்குமூலத்தை மூத்த பாதிரியார்கள் வெற்றிப்புன்னகையோடு ஏற்றுக்கொண்டனர்.  கூடவே, காலாவதியான உண்மை என்றைக்குமே காப்பாற்றாது என்றும் தெரிவித்தார்கள்.  மன்னிப்பதற்கான பொழுது கடந்து விட்டது.  ரெக்ஸ்டன் கவலைப்படவில்லை; தண்டனையை முழு மனதாக ஏற்றுக்கொண்டு குரு மடத்திலிருந்து வெளியேறினார்.
'உண்மையான குற்றவாளி கண்டுபிடிக்கப்பட்டார்; இனி தாங்கள் நிரபராதி' என்றே மீதமிருந்த ஐந்து மாணவர்களும் நினைத்தார்கள்.  ஆனால், மடம் வேறு மாதிரியாய் யோசித்தது.
கறந்த பால் மடி புகாது!   நிரபராதிகள் என்றாலும், குற்றவாளியைக் காட்டித்தராததும் ஒரு குற்றமே என்றார்கள்.  எனவே அவர்களை மீண்டும் குருமடத்தில் சேர்த்துக் கொள்ள முடியாது என்றனர்.  
இப்பொழுது நிரபராதிகளுக்கு ஆதரவாய் மடத்திலிருந்தே சில குரல்கள் ஒலிக்கத் தொடங்கின.  ‘அவர்களை மன்னித்து ஏற்றுக்கொள்ளலாம்.  எல்லா பாவங்களுக்கும் கிறிஸ்தவத்தில் மன்னிப்பு உண்டு.’  
இந்தச்சூழலில் ஒரு மாற்றுத் திட்டம் முன்வைக்கப்பட்டது.  ‘அந்த ஐவரும் விரும்புகிற பட்சத்தில், அவர்கள் வேறு குருமடங்களிலோ அல்லது வேறு சபைகளிலோ சேர்ந்து கொள்ள ஆவண செய்யப்படும்!’  அதாவது, வெளியேற்றப்பட்டது இந்த குருமடத்திலிருந்து மட்டும் தான்; கருணையின் அடிப்படையில் அவர்கள் விரும்புகிற வேறு குருமடங்களில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்.
உண்மையில் சொல்லப்போனால், இந்த மாற்றுத் திட்டம் பரவலான வரவேற்பையே பெற்றது.  வெளியேற்றப்பட்ட குரு மாணவர்கள் அவசர அவசரமாய் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டு, வேறு மடங்களிலும், சபைகளிலும் போய் சேர்ந்து கொண்டனர்.  
ஒரே ஒருவரைத் தவிர!
அந்த ஒரே ஒருவரின் பெயர் மைக்கேல் ராஜ்! அவர் ஒரு தலித் கிறிஸ்தவர்!  ராமநாதபுர மாவட்டத்திலுள்ள ஓரியூரைச் சார்ந்தவர். நம்ம சார்லஸின் ஊர். 

அவர், 'இந்த மாற்றுத் திட்டம் சூழ்ச்சியானது' என்றார்.  'குற்றமற்ற எனக்கு அநீதி இழைக்கப்பட்டது;  அதற்குத் தகுந்த நீதி வழங்க வேண்டும்', என்றார். மேலும், தன்னைப் பழிவாங்கியதில் வரலாற்றுக் காரணம் இருப்பதாகவும் சொன்னார்.  சமய அதிகாரிகள் தனது சுயமரியாதையை கொச்சைப்படுத்தினார்கள் என்றார்.  தன் மீது சுமத்தப்பட்ட பழி, ஒட்டுமொத்த தலித் கிறிஸ்தவர்கள் மீது உயர் சாதி கிறிஸ்தவர்கள் கொண்டிருக்கும் காழ்ப்புணர்விலிருந்தும், விரோதத்திலிருந்தும் உருவானது என்றார்.  இந்த அவமானத்திற்கு மூத்த பாதிரியார்கள் பதில் சொல்லவே வேண்டும் என்றார்.  தலித் கிறிஸ்தவர்களின் சுயமரியாதை மீட்கப்பட வேண்டுமென்றால், தன்னை மீண்டும் அதே குருமடத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று போராடத் தொடங்கினார்.
(தொடரும்)

Comments

Anonymous said…
மிக அற்புதமான எழுது உங்களுக்கு தருமராஜ். ஆனால், வீணடிக்கிறீர்களோ என்று நினைக்கிறேன். இந்த வகை எழுத்தை என்னவென்று அழைப்பது என்று தெரியவில்லை. கதையா கட்டுரையா அல்லது அனுபவமா அல்லது மெட்டாபிக்சன் வகையா அல்லது ஆட்டோபிக்சனா? இரண்டு ஜானர்களைக் கலக்கும் போது என்ன நடக்கும் என்பதை யாராலும் சொல்ல் முடியாது. இரண்டு வேறு உயிர்கள் கூடிவதனால் போல. கிறிஸ்தவம் பற்றி இன்னும் நிறைய எழுதுங்கள்.

-செல்வா ஜாண்

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக