Skip to main content

அயோத்திதாசர் ஆகி வந்த கதை

அயோத்திதாசரின் பெளத்தத்தை முழுமையாக விளங்கிக் கொள்வதற்கு இரண்டு நிகழ்வுகளைத் தெரிந்திருத்தல் அவசியம் - ஒன்று, அயோத்திதாசர் வரலாற்றில் செயல்பட ஆரம்பித்த தருணம்; இரண்டாவது, அயோத்திதாசர் ஆகி வந்த பின்புலம்.

இதில் இரண்டாவதான, அயோத்திதாசர் ஆகி வந்த கதையை முதலில் பார்க்கலாம்.  சும்மா ஒரு மாற்றத்திற்காகத் தான்.  எல்லாவற்றையும்  முதலிலிருந்தே தொடங்க வேண்டுமா என்ன?

அயோத்திதாசர் கொஞ்சம் பழைய காலத்து மனிதர்.  பழைய காலத்தின் கடைசி மனிதர் என்று கூட சொல்லலாம்.  கதை போலச் சொல்லி நாம் கேட்டிருந்த திண்ணைப் பள்ளிக்கூடத்தில் தான் அவர் கல்வி கற்றிருக்கிறார்.   அதாவது தமிழ்.

தமிழ் என்றதும் இலக்கியத்தை மட்டுமல்ல, வாழ்க்கையையும் சேர்த்தே கற்றுத் தந்திருக்கிறார்கள்.  மொழி வழி விரியும் வாழ்க்கையை.  தமிழ் எழுத்துக்களுக்குப் பின்னால் இலக்கணம் மட்டுமல்ல, ஒரு கச்சிதமான கருத்தியலே இருப்பதாக அக்காலங்களில் நம்பியிருக்கிறார்கள்.  பின்னாட்களில், அமுத எழுத்து - நச்சு எழுத்து என்று அயோத்திதாசர் பேசுவது அனைத்தும் அத்திண்ணைப் பள்ளிக்கூடத்தில் கற்றது தான்.  

இது ஒரு வேடிக்கையான மொழியியல்.   ‘சொற்கள் உருவாகும் போது தான் அர்த்தங்கள் உருவாகின்றன!’ என்று மொழியியல் சொல்லும் போது, ‘இல்லையில்லை, எழுத்துக்களுக்கும் அர்த்தங்கள் உண்டு!’ என்று நம்பும் மொழியறிவு.  இந்த வகை தர்க்கத்தை, அறிவியலுக்கு அப்பாற்பட்டது என்று சொல்லி இப்பொழுதெல்லாம் நாம் கற்றுக் கொள்வது இல்லை.  ‘இது என்னவொரு கட்டுப்பெட்டித்தனம்!’  என்பது நமது வாதம்.  ஆனால், இந்த மொழியியல் நம்பிக்கையை அப்படியே சமூக விமர்சனமாக அயோத்திதாசர் மாற்றிக் காட்டும் போது தான், அது வேடிக்கை மட்டுமே இல்லை என்று தெரிகிறது.  

அவர் நிறைய இடங்களில் நம்மை தான் ‘நூதனம்!’ என்று காட்டி சிரிக்கிறார்.  ‘எங்களுக்கெல்லாம் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் இப்படித்தான் சொல்லித் தந்தார்கள்’, ‘நாங்களெல்லாம் இப்படித்தான் படித்து வந்தோம்' என்பவை தான் அவரது முத்திரை வாக்கியங்கள்.  இலக்கியப் பனுவல்களுக்கு விளக்கம் சொல்லும் ஒவ்வொரு இடத்திலும் அவர் திரும்பத் திரும்ப இப்படிச் சொல்லிக் கொண்டே இருக்கிறார்.

மைஎன்றெல்லாம் நாங்கள் எழுதிப் படிக்கவில்லை; ‘…மெய்' என்று தான் எங்களுக்குச் சொல்லித் தந்தார்கள்.  ‘குழந்தை விளையாடுவது ‘பொம்மை’ இல்லை, அதைப் ’பொய்மெய்' என்று தான் சொல்லவேண்டும்.’  இப்படிச் சொல்லும் போது தான் அது வேடிக்கை மட்டும் இல்லை என்று தோன்றுகிறது.  அவர் சொன்னாரே என்று, எல்லா மையீற்று தமிழ்ச் சொற்களையும் மெய்யீற்றாக எழுதி வாசித்தால் மலைப்பாக இருக்கிறது.  இன்னும் இப்படியே அவர் ‘திரு'வை ‘திரி' என்றும், ‘சூடி'யை ‘…சுவடி' என்றும், ‘அறம்' மை ‘அறன்' என்றும் சொல்லும் போது அவர் பேசும் தமிழ் நாம் கேள்விப்பட்டிருக்காத வேற்று மொழி போலத் தெரிகிறது.  

‘எங்களுக்கெல்லாம் இப்படிச் சொல்லித் தரவில்லையே!’ என்று நாம் கேட்க வாயெடுப்பதற்கு முன் அவரே சொல்லி விடுகிறார் - ‘ஆனால், இப்படித்தான் எங்களுக்கு கற்றுத் தந்தார்கள்!’.  

‘அதெப்படி?  எங்கேயோ கோளாறு நடந்திருக்கிறது?  எங்கே நடந்தது இந்தக் கோளாறு?’ 
நம்முடைய இந்தக் கேள்விக்காகவே காத்துக் கொண்டிருந்தது போல ‘இந்திர தேச சரித்திரம்' என்று எழுத ஆரம்பித்து விடுகிறார்.  

அவருடைய இயல்பில் வலுவான ஒரு தர்க்கம் இருக்கிறது.  இந்த தர்க்கம் உதாசினப் படுத்தக்கூடியது இல்லை.  அவர் எழுதும் போது ஒரு சின்ன இடைவெளியில் மொழிக் காரணங்கள் சமூகக் காரணங்களாக மாறிவிடுகின்றன.  உருமாற்றம்.  அதன் பின், சமூகக் காரணங்கள் என்ற வலுவான அஸ்திவாரத்தின் மீது மொழிக் காரணங்கள் நிற்கத் தொடங்குகின்றன.

இதையே வேறு வார்த்தைகளில் இப்படிச் சொல்ல முயற்சிக்கலாம்.  மொழிக் காரணம் என்பது ஒரு யோசனை.   அதாவது, நஞ்செழுத்து, அமுத எழுத்து, ‘மை’யை ‘மெய்' என்று எழுது போன்ற அனைத்தும் யோசனைகள் மட்டுமே.  இந்த யோசனைகளை சமூகக் காரணம் என்ற நிகழ்வு தாங்கி நிற்கிறது.  நஞ்சைப் பார்த்த பிறர் அதைத் ‘தீரா(த) விடம்' என்றார்கள்,  அதன் அமிழ்தத்தை உணர்ந்த நாம் அதனைத் ‘தமிழ்' என்றோம்.  

ஆகவே சமூக நிகழ்வு தான் ‘மெய்’!  நிஜம், உண்மெய், ஸ்தூலம், துலக்கம், கட்புலன், பருப்பொருள், நிகழ் எப்படி வேண்டுமென்றாலும் சொல்லிக் கொள்ளலாம்.   இவை தான் அனைத்திற்கும் ஆதாரம்.  இவற்றிலிருந்தே மொழிக் காரணங்கள் தோன்றின.  அமுத எழுத்து - நஞ்சு எழுத்து என்ற யோசனை உலக நிகழ்வுகளிலிருந்தே தோன்றியது.

அப்படியானால், மொழி தீர்க்கமான ஞானத்திலிருந்து தோன்றியதா என்ற கேள்வி எழுவது இயல்பு.   மொழியைக் கடவுள் உருவாக்கினார் என்றே எல்லா மதங்களும் சொல்லிக் கொண்டிருக்கின்றன.   அந்த வாதத்திற்கும், இப்பொழுது ஞானிகள் உருவாக்கினர் என்று சொல்லும் வாதத்திற்கும் என்ன பெரிய வித்தியாசம்?  இரண்டுமே கதை தானே!   

திண்ணைப் பள்ளிக்கூட மொழியியல்களின் தெரிந்த குணம் தானே இது.  ஒரு பள்ளிக்கூடம் முருகன் தான் தமிழை உருவாக்கினான் என்று சொல்வது போல அயோத்திதாசர் படித்த பள்ளிக்கூடம், ‘இல்லை இல்லை, தமிழை உருவாக்கியது புத்தர்!’ என்கிறது.  

அடிப்படையில் இந்த வாதங்கள் எதிலுமே உண்மை இல்லை.   மொழி சாதாரண மனிதர்களால் உருவாக்கப்பட்டது.   அது தான் உண்மை அல்லது உண்மெய், எப்படி வேண்டும் என்றாலும் எழுதிக் கொள்ளுங்கள்.

இதைக் கிடிக்கிப்பிடி கேள்வியாகக் கருதினீர்களா?   ஆனால், அவர் மிக எளிதாக அதைத் தாண்டிச் சென்று விடுகிறார்.

‘மொழிக்காரணம் எழுத்துக்களுக்குத் தானே தவிர, சப்தங்களுக்கு அல்ல’, என்கிறார்.  அதாவது, அமுத எழுத்து, நஞ்சு எழுத்து தான் உண்டே தவிர, அமுத ஒலி, நச்சு ஒலி இல்லை என்கிறார்.   ஏனெனில் சப்தங்கள் சாமானியர்களால் தான் உருவாக்கப்பட்டன.  அவர்களுக்கு அமுதம் - நஞ்சு என்ற பாகுபாடுகள் இல்லை;  ஆனால், அட்சரங்களை உருவாக்கியவர்கள் ஞானிகள்.  அவர்களுக்குள் பாகுபாடுகள் இருந்தன’.

அயோத்திதாசரின் திண்ணைப்பள்ளிக்கூடம் ‘மொழி, மொழி’ என்று பேசுவது அனைத்தும் எழுத்து மொழியைப் பற்றி தானேயொழிய, பேச்சு மொழி பற்றியது அல்ல.  பேச்சு மொழி இயற்கையாய் தோன்றியது.   அதன் தேவைகள் கருத்துப் புலப்படுத்தம் சார்ந்தவை மட்டுமே.  ஆனால், எழுத்து மொழி அப்படி அல்ல;  அது திட்டமிட்டு உருவாக்கப்பட்டது.   

இந்தத் திட்டமிடலுக்கும் ஒரு சமூகக் காரணம் இருந்தது.  

புத்தர், தான் கண்டடைந்த ஞானத்தை உலகெங்கும் கொண்டு செல்ல விரும்பினார்.  வெவ்வேறு மொழி பேசும் சமூகங்களுக்கும் அதைக் கொண்டு செல்வது அவரது விருப்பம்.  ஆனால், அக்காலத்தில் எல்லா மொழிகளும் பேச்சு மொழிகளாகவே (எழுதாக் கிளவிகள்) இருந்தன.  இந்தக் கிளவிகளை மட்டும் நம்பவே முடியாது.  சதா பேசிக்கொண்டே இருக்கும்.  எவ்வளவு பெரிய விஷயத்தையும் அரைத்து மாவாக்கி விழுங்கி விடும்.  எனவே எளிதில் மாற்ற முடியாத வடிவத்தில் மொழி இருந்தால் உத்தமம்.   இப்படித்தான் ஒலிகளுக்கு வரி வடிவங்களை ஏற்படுத்து என்று தீர்மானித்தார்கள்.  

அயோத்திதாசரின் நம்பிக்கையின் படி இவை அனைத்தும் பெளத்த சங்கத்தில் நான் நடந்தன.   அப்படி முடிவு செய்து திட்டமிட்டு உருவாக்கப்பட்ட எழுத்துக்கள் மூன்று வகை: அவை, தமிழ்  என்ற திராவிட பாஷை, சமஸ்கிருதம் என்ற சகட பாஷை, பாலி என்ற மகட பாஷை.

இது அயோத்திதாசர் பள்ளி சொல்லும் எழுத்தைத் திட்டமிட்ட கதை.   மொழியும் தத்துவமும் ஒன்றை ஒன்று தழுவிக் கொண்ட கதை.  இதே போல் பல்வேறு கதைகள் இருக்கின்றன.  வேறு கதை ஒன்றையும் நான் கேட்டிருக்கிறேன்.

மொழியறிவையும் வான் அறிவையும் ஒரு கட்டத்தில் இணைக்க விரும்பினார்கள்.  இரண்டும் ஒன்றையொன்று ஆதரிக்க வேண்டுமென்பது அவர்களது ஆசை.  வானியல், கோள்கள் மொத்தம் பனிரெண்டு என்றது.  அதற்கு இணையாக, தமிழ் மொழியின் உயிரெழுத்துகள் இருந்தால் நல்லது என்று பட்டது.   ஆனால், ஆரம்பத்தில், உயிரெழுத்துகள் மொத்தம் பத்து தான் இருந்தன (குறில் ஐந்து, நெடில் ஐந்து).   இரண்டையும் இணைக்க வேண்டுமென்றால் இன்னும் இரண்டு எழுத்துக்களை உருவாக்க வேண்டும்.   அதையும் திட்டமிட்டு செய்தார்கள்.  அப்படி திட்டமிடப் பட்டவை தான் ‘ஐயும் ஓளவும்’.   இந்தக் காரியத்தை ஒரு தமிழ்க் கிழவியே செய்தார்.   அந்தக் கிழவிக்கு பின்னாளில் அதுவே பெயராகவும் மாறியது - ஓளவை!

இந்தக் கதைகளையெல்லாம் அப்படியே நம்ப வேண்டுமென்று அவசியம் இல்லை.  கதைகள் தானே!  ஆனால், அவற்றிற்கு உந்துதலாய் இருக்கக்கூடிய விஷயம் உண்மை.  எந்த அறிவும் இங்கு தனித்து இயங்கவில்லை.  ஒன்றையொன்று சார்ந்தே இருக்கின்றன அல்லது எப்பாடு பட்டேனும் தங்கள் கைகளை இணைத்துக் கொள்கின்றன.  மொழி, தத்துவம், வானியல், மருத்துவம், சிற்பவியல், கட்டிடவியல் என்று இன்னும் இருக்கிற அத்தனை வகை ஞானங்களும் ஒன்றோடு ஒன்று பிணைந்தவை.  

இந்த அடிப்படையில் அயோத்திதாசர் தமிழோடு மருத்துவத்தையும் சேர்த்தே கற்றிருந்தார்.  இப்படிக் கற்ற அறிவு தான் பின்னாளில் திருவிகாவின் காலையும், அம்மன் வழிபாட்டையும், தீபாவளி பண்டிகையையும், கார்த்திகை தீபத் திருவிழாவையும் ஒழுங்குபடுத்த அவருக்கு உதவியது.

அயோத்திதாசர் திண்ணைப்பள்ளியில் கற்றுக் கொண்ட மொழியறிவு முழுக்க முழுக்க எழுத்து சார்ந்தது.   அவர் எழுப்புகிற மொழிப் பிரச்சினைகள் அனைத்தும் எழுதுவது தொடர்பானவை.   ‘மை’ யென்று எழுதுவதா ‘மெய்' யென்று எழுதுவதா? ’திரு’ வா ‘திரி' யா?  ‘அறஞ் செய…’ என்று எழுதப்பட்டிருப்பதைஅறன் செயல்’ என்று வாசிப்பதாஅறம் செய்ய' என்று வாசிப்பதா?   அவ்வளவும் எழுதுவதால் வந்த சிக்கல்கள்.   புத்தர் பயந்தது நடந்து விட்டது.

எல்லாமே எழுத்துப் பிரதியில் நிகழ்ந்த கோளாறுகள் என்று தான் அயோத்திதாசர் நம்பினார்.  எனவே அவர் கடைசி வரை எழுத்துப் பிரதிகளை சந்தேகத்தோடே பார்த்துக் கொண்டிருந்தார்.  அதன் மீது நம்பிக்கை இல்லை என்பதை விடவும், அவற்றை எளிதில் திரித்து விட முடிகிறது என்று அவர் நம்பினார்.   ஆனால், அதே நேரத்தில் ஒவ்வொரு எழுத்திற்கு ஒரு ‘மெய்ப்பொருள்' உண்டு என்பதை அவர் பூரணமாக நம்பினார்.

‘எங்களுக்கு இப்படித்தான் சொல்லித் தந்தார்கள்' என்ற அவரது முத்திரை வாக்கியத்தை நான் இப்படித்தான் புரிந்து கொள்கிறேன்.  பிரதிகளை நம்பாதே!  அவற்றின் மெய்ப்பொருளை நம்பு!   பிரதிகளை விடவும், அவற்றிலிருந்து அர்த்தங்களை உருவாக்கும் நிகழ்விற்கே அதிக நம்பகத்தன்மை இருக்கிறது.   பிரதிகளில் ‘மெய்’ இல்லை என்பது அவரது கோட்பாடாகவே இருந்தது.   இதன் வெளிப்பாட்டை அவர் மேற்கொண்ட அனைத்து மாற்று விளக்க முயற்சிகளிலும் நாம் பார்க்க முடியும்.

பிரதிகளை விடவும் வாழ்க்கையை நம்புகிற அயோத்திதாசரின் குணத்திற்கு மிகச் சரியான உதாரணங்களாக அவரது அம்மன் வழிபாடு குறித்த விளக்கத்தைச் சொல்ல விரும்புகிறேன்.  

ஆடி மாதத்தில் செய்யப்படும் அம்மன் வழிபாட்டை ஆய்விற்கு எடுத்துக் கொள்கையில், அவரது பரிபூரண நம்பிக்கை அத் திருவிழா நிகழ்வுகளின் மீது தான் இருக்கிறது.  ஆடி மாதத்தில் நிகழ்த்துவது, பத்து நாள் நிகழ்த்துவது, ஊர்க் கட்டுப்பாடு விதிப்பது, காப்பு கட்டிக் கொள்வது, வேப்பிலைத் தோரணம் கட்டுவது, கூழ் காய்ச்சுவது என்று அத்திருவிழாவின் எந்தவொரு நிகழ்வையும் அவர் சந்தேகிக்கவில்லை.   ஏதாவது இடைச்செருகல் நடந்திருக்குமோ என்ற துளி குழப்பமும் அவரிடம் இல்லை.   வேப்பிலை வடிவில் அம்மன் தான் எழுந்தருளியிருக்கிறாள் என்பதைக் கூட நம்பி விடுகிறார்.  

ஆனால், அவர் சந்தேகமெல்லாம் அந்த அம்மனுக்குச் சொல்லப்படுகிற கதைகள் மீது தான்.  அந்தப் பிரதிகள் அனைத்தும் திரிக்கப்பட்டவை என்று அடியோடு மறுத்து விடுகிறார்.  இதே போன்ற தன்மையை தீபாவளிப் பண்டிகை குறித்த அவரது விளக்கத்திலும், கார்த்திகை தீபத் திருவிழா விளக்கத்திலும் நாம் பார்க்க முடியும்.  நிகழ்வுகள் நம்பகமானவை; எழுத்துப் பிரதிகள் திரிக்கப்பட்டுள்ளன.

எழுத்துப்பிரதிகளைப் பற்றிய ஆராய்ச்சியின் போது (ஆத்திச்சுவடி, திரிக்குறள் போன்றவை) இந்த நம்பிக்கை அவரை சந்தேகப்பிராணியாகவே மாற்றி விடுகிறது.   திருவள்ளுவர் குறித்த கதைகள் பிரதிகளில் எவ்வாறு தொடர்ந்து திரிக்கப்பட்டன என்பதை அவரால் ஆணித்தரமாக நிரூபிக்க முடிகிறது.  ஜி. யு. போப் மாதிரியான ஐரோப்பியர்கள் திரிக்குறள் பிரதிகளிலிருந்து எதையுமே கற்றுக் கொள்ள முடியாது என்ற முடிவிற்கும் அவர் இந்த அடிப்படையிலேயே வந்து சேர்கிறார்.




இந்த இடத்தில் அவர் பயன்படுத்தும் ‘இலக்கணம் - இலட்சணம்' என்ற கருத்தாக்கங்களையும் நாம் கணக்கிலெடுக்க வேண்டும்.   போப் ஐயருக்கு இலக்கணம் தெரியும், ஆனால், இலட்சணம் தெரியாது என்பது தான் அவரது விமர்சனம்.  

எழுத்துப் பிரதி இயந்திரத்தனமானது.  அதில் இலக்கணம் மட்டுமே இருக்கிறது.    இலக்கணம், என்றைக்கும் அர்த்தத்தை வாரி வழங்காது.  பிரதியை மனிதர்கள் வாசிக்க வேண்டியிருக்கிறது.   அப்பொழுதே (நிகழ்வு) அர்த்தம் உற்பத்தியாக முடியும்.   இந்த அர்த்த உற்பத்தியை அயோத்திதாசர், ‘இலட்சணம்' என்ற பெயரில் அழைக்கிறார்.

அவரது கணக்குப்படி  ஒரு பிரதிக்கு பல இலட்சணங்கள் இருக்க முடியும்.   ஆனால்,  ‘பெளத்த இலட்சணமே’ நேர்மையான இலட்சணம்; மற்ற அனைத்தும் அவலட்சணம். பெளத்த இலட்சணமே மெய்ப்பொருளை வெளிக்கொண்டு வருகிறது.   இந்த நேர்மையான வாசிப்பையே ஜி. யு. போப் மாதிரியான ஐரோப்பியர்கள் தொடர்ந்து தவற விடுகிறார்கள் என்பது தான் அவர் சொல்ல வருவது.


அயோத்திதாசர் மாதிரியானவர்கள் கற்று வந்த திண்ணைப் பள்ளிக் கல்வி முறையை வேண்டுமென்றே மிகைப்படுத்துகிறேனோ என்ற சந்தேகம் உங்களுக்குத் தோன்றலாம்.  அவர் மிக எளிமையான அர்த்தத்தில் பயன்படுத்திய சொற்களை நான் கருத்தாக்கங்களாக சித்தரிப்பது போலக்கூடத் தெரியலாம்.  ஆனால், பிரதிகள், இலக்கணம், இலட்சணம், பொருள்கொள்ளும் முறையியல், மெய்ப்பொருள் போன்ற கருத்தாக்கங்களை இணைக்கும் நீண்ட விவாதமொன்று தமிழ்ச் சூழலில் நடந்து வந்திருக்கிறது என்பதை நான் உங்களுக்கு நிரூபிக்க முடியும்.   அதாவது, அயோத்திதாசர் தனது கல்வி முறையைக் குறித்து நமக்கு சொல்லக்கூடிய விஷயங்கள் தமிழில் மரபாக இருந்து வந்த ஒன்று என்பதை என்னால் விளக்க முடியும்.  

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக