Skip to main content

கபாலி பெயரில் பைத்தியக்கார ஸ்கூல்!


நேற்று மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நடைபெற்ற 'கபாலி கொந்தளிப்பு விழா' விற்கு போயிருந்தேன். தலித் பெயரில் நடக்கும் இப்படியொரு எண்டர்டெய்னரை இத்தனை நாள் இழந்திருந்தேனே என்று பெரும் கழிவிரக்கம் என்னைச் சூழந்து கொண்டது.


பத்திரிகையாளர் சேது மலேசிய தமிழ் இனப்பிரச்சினை பற்றி ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். மலேசிய தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அறைகூவலே கபாலி திரைப்படம் என்று அவர் முழங்கி அமர்ந்த போது நியாயமாய் அவருக்குத் தந்திருக்க வேண்டிய ஒரு பாட்டில் தண்ணீரை யாருமே வழங்கியிருக்கவில்லை.
அடுத்து பேசிய பேராசிரியர் பிரபாகர், ரொம்பவும் வெகுளியாய், ஏதோ இது சீரியஸான விவாதக்கூட்டம் என்று எண்ணி பேசிச் சென்றது ரொம்பவும் காமடியாய் இருந்தது.
அடுத்து பேசிய அஜயன் பாலாவும், இராமலிங்கமும் ஒட்டு மொத்த கூட்டத்தையும் தூக்கி நிறுத்தினார்கள். அஜயன் பாலா தனது பேச்சில், ரஜினி ரசிகனாக இருப்பது எப்படி ஒரு இண்டலெக்சுவல் நிலைப்பாடு என்பதை ஆணித்தரமாக நிறுவினார். அதிலும் முதல் ஷோ பார்ப்பதற்காக தான் மேற்கொண்ட அரசியல் தந்திரங்களை அவர் விவரித்த பாங்கு, ஒட்டுமொத்த அரங்கையும் பரவச நிலைக்கே இட்டுச் சென்றது.
இராமலிங்கம் (கபாலி படத்தின் கலை இயக்குநராம் - அவரே தான் சொன்னார்!), கபாலியை விமர்சிக்கத் துணிந்த பேராசிரியர் பிரபாகரை கந்தல் கந்தலாக பிரித்து மேய்ந்தார். ஆனால் அதற்காக, கபாலி குறித்து தமிழகத்தில் எழுந்த அத்தனை எதிர் வினைகளுக்கும், பிரபாகரையே சாடை மாடையாய் திட்டியிருக்க வேண்டாம். மற்றபடி, கபாலி எப்படி ஒரு ஒலகத் திரைப்படம் என்பதை படம் விளக்கி பாகம் குறித்தது அவரது ஆளுமையைக் காட்டியது. அப்படியே ஒரு உச்சத்திற்குப் போய், கபாலி - ஒரு தமிழ் தேசியத் திரைப்படம் என்று அவர் முழங்கியது தான் டாப்.
இது தான் இப்படியென்றால், இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட கூத்து விவாத அரங்கில் நடந்தது. பார்வையாளர்கள் அத்தனை பேரும், அவரவர் பொறுக்கி வந்த கபாலிக் குறியீடுகளை போட்டி போட்டு காட்டிக் கொண்டிருந்தனர். நீலம், கோட்டு, குமுதவல்லியின் தாவணி - சேலை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தலித் அன்பர், '43 என்ற எண் கெட்ட கேங்கிற்கு ஏன் வைக்கப்பட்டது? அதற்குப்பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது' என்று சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அடுத்து அவர் சொன்ன விஷயம் தான் ஆட்டம்பாம் - 'நாலையும் மூணையும் கூட்டினால் ஏழு வருகிறது; ஏழு, பறையர்களுக்கான எண். அப்படியானால், ரஞ்சித் பறையர்களை கெட்ட கேங் என்று சொல்கிறாரா?' என்று கேட்டதும் அந்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது.
இதற்கு மேல் எந்தவொரு அதிர்ச்சியையும் இறையியல் கல்லூரி தாங்காது என்று சொல்லி கூட்டத்தை அத்தோடு முடித்துக் கொண்டார்கள்.
பேச்சினூடே, கலை இயக்குனர் இராமலிங்கம், கபாலி நடத்தும் ஸ்கூல் என்ன ஸ்கூல் தெரியுமா? தெரியுமா? என்று மிரட்டிக் கேட்டு, அது ஒரு அஸைலம் என்று கூட்டத்திற்குப் பறைந்தார். 
கபாலியில் ரஜினி நடத்தியது, பைத்தியக்கார ஸ்கூலாம். இருக்கும் போலத்தான் தோன்றியது.

Comments

Interesting to read though not able to understand it was serious review of a comedy meeting or funny review of serious meeting

Popular posts from this blog

வேற்றுமெய்யும் வேற்றுமையும்

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வ...

அன்புள்ள ஜெயமோகன்

அன்புள்ள தர்மராஜ் அந்த ' நாலைந்துபேரில் ' நானும் ஒருவன் என அறிந்திருப்பீர்கள். ஆனால் அதில் எனக்குச் சொல்ல ஏதுமில்லை. எழுத்தாளனாகத் தெரிந்துகொள்வதோடு சரி. எங்காவது புனைவில் அவை என்னை பாதித்து வெளிப்பாடு கொள்ள்லாம்.   இப்போது தளம் சிறப்பாக இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.   அப்புறம் என் எழுத்து பற்றி. என்னுடையது கோணங்கியின் ' ஆட்டமாட்டிக் ' எழுத்து இல்லை. அது மொழிவழியாக வெளிப்படும் உள்ளம் , உணர்ச்சி மட்டுமே. கற்பனாவாதத்தின் ஒரு தளத்தில் அதற்கு இடமுண்டு. அது எழுத்தின் ஒரு சிறிய பகுதி என்று நான் அறிவேன் அதுவும் ஒரு மனஎழுச்சியின் கனத்தில் மட்டுமே அது சாத்தியம் என்றும் அதை ஒரு ' கிராஃப்ட் ' ஆக மாற்றமுடியாது என்றும் அறிவேன்.   மேலும் வெண்முரசின் எல்லா நாவல்களும் ஒரே தளத்தை , மொழியை சார்தவை அல்ல. மிக திட்டவட்டமான அரசியலும் , தத்துவமும் , உணர்ச்சிகளும் நாடகத்தருணங்களும் மட்டுமல்ல குழந்தைக்கதைகளும் சாகசக்கதைகளும் கொண்டது அது. இப்போது பிரயாகை மிக நேரடியான நடை கொன்டது இந்தியச் சமூகத்தின் சமூகவியல் -அழகியல் உள்ளடக்கம் பற்றிய என் பார்வை அதில் உ...