நேற்று மதுரை, அரசரடி, தமிழ்நாடு இறையியல் கல்லூரியில் நடைபெற்ற 'கபாலி கொந்தளிப்பு விழா' விற்கு போயிருந்தேன். தலித் பெயரில் நடக்கும் இப்படியொரு எண்டர்டெய்னரை இத்தனை நாள் இழந்திருந்தேனே என்று பெரும் கழிவிரக்கம் என்னைச் சூழந்து கொண்டது.
பத்திரிகையாளர் சேது மலேசிய தமிழ் இனப்பிரச்சினை பற்றி ரொம்பவே உணர்ச்சிவசப்பட்டு பேசிக் கொண்டிருந்தார். மலேசிய தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கான அறைகூவலே கபாலி திரைப்படம் என்று அவர் முழங்கி அமர்ந்த போது நியாயமாய் அவருக்குத் தந்திருக்க வேண்டிய ஒரு பாட்டில் தண்ணீரை யாருமே வழங்கியிருக்கவில்லை.
அடுத்து பேசிய பேராசிரியர் பிரபாகர், ரொம்பவும் வெகுளியாய், ஏதோ இது சீரியஸான விவாதக்கூட்டம் என்று எண்ணி பேசிச் சென்றது ரொம்பவும் காமடியாய் இருந்தது.
அடுத்து பேசிய அஜயன் பாலாவும், இராமலிங்கமும் ஒட்டு மொத்த கூட்டத்தையும் தூக்கி நிறுத்தினார்கள். அஜயன் பாலா தனது பேச்சில், ரஜினி ரசிகனாக இருப்பது எப்படி ஒரு இண்டலெக்சுவல் நிலைப்பாடு என்பதை ஆணித்தரமாக நிறுவினார். அதிலும் முதல் ஷோ பார்ப்பதற்காக தான் மேற்கொண்ட அரசியல் தந்திரங்களை அவர் விவரித்த பாங்கு, ஒட்டுமொத்த அரங்கையும் பரவச நிலைக்கே இட்டுச் சென்றது.
இராமலிங்கம் (கபாலி படத்தின் கலை இயக்குநராம் - அவரே தான் சொன்னார்!), கபாலியை விமர்சிக்கத் துணிந்த பேராசிரியர் பிரபாகரை கந்தல் கந்தலாக பிரித்து மேய்ந்தார். ஆனால் அதற்காக, கபாலி குறித்து தமிழகத்தில் எழுந்த அத்தனை எதிர் வினைகளுக்கும், பிரபாகரையே சாடை மாடையாய் திட்டியிருக்க வேண்டாம். மற்றபடி, கபாலி எப்படி ஒரு ஒலகத் திரைப்படம் என்பதை படம் விளக்கி பாகம் குறித்தது அவரது ஆளுமையைக் காட்டியது. அப்படியே ஒரு உச்சத்திற்குப் போய், கபாலி - ஒரு தமிழ் தேசியத் திரைப்படம் என்று அவர் முழங்கியது தான் டாப்.
இது தான் இப்படியென்றால், இவற்றையெல்லாம் தூக்கிச் சாப்பிட்ட கூத்து விவாத அரங்கில் நடந்தது. பார்வையாளர்கள் அத்தனை பேரும், அவரவர் பொறுக்கி வந்த கபாலிக் குறியீடுகளை போட்டி போட்டு காட்டிக் கொண்டிருந்தனர். நீலம், கோட்டு, குமுதவல்லியின் தாவணி - சேலை என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்த வேளையில், ஒரு தலித் அன்பர், '43 என்ற எண் கெட்ட கேங்கிற்கு ஏன் வைக்கப்பட்டது? அதற்குப்பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது' என்று சொல்லி எல்லோரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார். ஆனால், அடுத்து அவர் சொன்ன விஷயம் தான் ஆட்டம்பாம் - 'நாலையும் மூணையும் கூட்டினால் ஏழு வருகிறது; ஏழு, பறையர்களுக்கான எண். அப்படியானால், ரஞ்சித் பறையர்களை கெட்ட கேங் என்று சொல்கிறாரா?' என்று கேட்டதும் அந்த அரங்கமே அதிர்ச்சியில் உறைந்தது.
இதற்கு மேல் எந்தவொரு அதிர்ச்சியையும் இறையியல் கல்லூரி தாங்காது என்று சொல்லி கூட்டத்தை அத்தோடு முடித்துக் கொண்டார்கள்.
பேச்சினூடே, கலை இயக்குனர் இராமலிங்கம், கபாலி நடத்தும் ஸ்கூல் என்ன ஸ்கூல் தெரியுமா? தெரியுமா? என்று மிரட்டிக் கேட்டு, அது ஒரு அஸைலம் என்று கூட்டத்திற்குப் பறைந்தார்.
கபாலியில் ரஜினி நடத்தியது, பைத்தியக்கார ஸ்கூலாம். இருக்கும் போலத்தான் தோன்றியது.
Comments