Skip to main content

சீனு ராமசாமி: தலைகீழ் பாரதிராஜா



சமீபத்திய திரைப்பட ஆச்சரியங்களில் ஒன்று, சீனு ராமசாமியின் தர்மதுரை.




நான் திரும்பத் திரும்ப பேசிக்கொண்டிருக்கிற ‘கிராமத்திலிருந்து தப்பித்தல்' தான் படத்தின் கதை!   அதாவது, பாரதிராஜா பாணி ‘கிராமப் புல்லரிப்புகளுக்கு' முற்றிலும் எதிரான கதை. 

கதை இவ்வளவு தான்.  பட்டறிவும் பகுத்தறிவும் பெற்று, கிராமத்திற்கு திரும்பி வருகிறான் ஒருவன்.   அவனை, ஊரும் உறவும் பிய்த்து எறிகின்றன .  உயிர் பிழைத்தால் போதும் என்று அவன் தப்பித்து ஓடுகிறான்.  இதை, சீனு ராமசாமி திகிலும் கருணையும் கலந்து சொல்லியிருக்கிறார்.  கிராமத்தில் திகில்; நகரத்தில் கருணை!

இன்னும் விளக்கமாகச் சொல்லப் போனால், 16 வயதினிலே படத்தில் ‘மயிலு, மயிலு’ என்று நாடகத்தனமாக சொல்லித் திரியும் ஒரு மருத்துவரை ஞாபகம் இருக்கிறதா? அந்தப் படத்தில் ஒரு அசட்டு வில்லனாக அவர் வந்து போயிருப்பார்.   நாகரீக நகரம், கிராமத்து வெகுளித்தனத்தை எவ்வாறு வஞ்சிக்கிறது என்று விளக்க அவரைக் காட்டியிருப்பார்கள்.

ஏறக்குறைய 40 வருடங்கள் கழித்து, மொத்தமும் தலைகீழாக மாறியிருக்கிறது.   இப்பொழுது நகரம் வெகுளி; கிராமம் வஞ்சனை!  

இந்த தலைகீழாக்கத்தின் அடிப்படையே தவறானது என்றாலும், அதன் காரணமாக கிராம வாழ்க்கை குறித்து முன்வைக்கப்படும் விமர்சனம் முக்கியமானது.  அந்த வகையில், சீனு ராமசாமியின் இந்தப் படம் அவசியமானது.  

பாரதிராஜாவில் தொடங்கிய புல்லரிப்பு, கொஞ்சம் கொஞ்சமாக சிலாகிப்பாக மாறி, சாதிப் பெருமையாக உறுதிப்பட்டிருக்கும் சூழலில் இந்தப் படம் ஆரோக்கியமாகப் பேசுகிறது.  

மதுரையை மையமாகக் கொண்டு, கிராம வன்முறையைக் கொண்டாடிய படங்களை நாம் அறிவோம்.  அவற்றின் சூத்திரம் எளிமையானது.   

எடுத்த எடுப்பில் அந்த முரட்டு கதாபாத்திரங்களை நம்மிடம் கிண்டலாக அறிமுகம் செய்வார்கள்.   ஆட்டுக்கறிக்காக சண்டையிட்டுக் கொள்கிறவர்கள், முதுகில் அருவாள் சொருகியிருப்பவர்கள், பட்டாபட்டி உள்ளாடை தெரிய திரிபவர்கள், முகம் முழுக்க மயிர் மண்டியிருப்பவர்கள்,  அதிகமாய் ‘சவுண்ட்' விடுகிறவர்கள், காதல் - கத்தரிக்காய் போன்றவற்றையெல்லாம் அறியாதவர்கள் - மொத்தத்தில் வேடிக்கையான முரடர்கள் என்றே நமக்கு அறிமுகம் செய்வார்கள்.  

இதிலுள்ள கேலியையும் கிண்டலையும் மனதிற்குள் நமட்டி சிரித்து முடிப்பதற்குள், அந்த கதாபாத்திரங்கள் பெரும் வன்முறையொன்றை நிகழ்த்தி (கழுத்தை அறுப்பதிலிருந்து அணுஅணுவாய் சித்திரவதை செய்வது வரை) திரையரங்கில் நம்மை கதிகலங்க வைத்திருக்கும்.   நாம் அரண்டு போய் உட்கார்ந்திருப்போம்.  ஆனால், மொத்த திரைப்படக் குழுவும் ’பைத்தியக்காரக் கூட்டம்! பாசத்திற்காக, மரியாதைக்காக, மானத்திற்காகத் தான் இத்தனை வன்முறையும்.  மற்றபடி  பாசக்கார பயல்கள் தான்!’ என்று நம்மிடம் சத்தியம் செய்யும். 

அவர்களின் சத்தியத்தை நாம் நம்ப வேண்டும் என்பதெல்லாம் கூட இல்லை.  அவர்கள் காட்டுகிற வாழ்க்கையைக் கண்டு நாம் பதற வேண்டும், அரள வேண்டும் என்பது தான் அவர்களது மொத்த நோக்கமும்.  

தர்மதுரை படத்தில், ஆச்சரியமாக, மதுரைக்கார கதாநாயகன் ஒருவன் நம்மைப் போலவே வன்முறைக்கு பயந்து ஊரை விட்டு தப்பித்து ஓடுகிறான்!  அரண்டு நிற்கிறான்!  நம்மைப் போலவே அவனுக்கும் உடம்பெல்லாம் நடுக்கம்.

ஆனாலும் படம் பார்க்கும் போது  எனக்கு நம்பிக்கையே இல்லை.  எங்கே, ராதிகா கொதித்தெழுந்து, விஜய் சேதுபதியிடம், ‘போடுடா, அத்தனை பேரையும்!’ என்று சொல்லி விடுவாரோ?  இல்லை, முந்தைய படத்தைப் போல, அந்தப் பெண் தெய்வமே எல்லோரையும் போடுவதற்குக் கிளம்பி விடுமோ என்ற பயம் ஒரு ஓரத்தில் உயிரோடு இருந்தது.   

தமிழ்த் திரைப்படங்களை பார்த்துத் திரும்புவதற்குள் தான் எத்தனை எத்தனை சோதனைகள்!

படம் முடியும் போது தான் அப்பாடா என்று இருந்தது.   ‘நல்ல வேளையாக மருத்துவர் கதாபாத்திரத்தில் விஜய் சேதுபதி நடித்தார்.  இதே வேடத்தில் சசிகுமார் மட்டும் நடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும்?’ என்று ஒரு ஆசுவாசம்.   


இதனாலேயே, இந்தப் படத்தில் ஒலிக்கும் சீனு ராமசாமியின் குரல் கவனிக்கப்பட வேண்டியது என்று சொல்கிறேன்.  அந்தக்கால பாரதிராஜாவிலிருந்து அவரது நிஜ வாரிசுகளான பாலா, சசிகுமார் வரை தொடர்ச்சியாகக் காட்டி வரும் ‘மதுரை கிராமங்களை’ இந்தப் படம் துணிச்சலாகக் கேள்வி கேட்கிறது.  அவற்றின் போலித்தனத்தை சுட்டிக் காட்டுகிறது.  வன்முறையைக் கொண்டாடும் சூழலிலிருந்து விலகி நிற்கிறது.

இதற்காகவே படத்தின் பின் பாதியில் செய்யப்பட்ட பல தவறுகளை மன்னித்து விடலாம் என்றிருக்கிறேன்.  கிராமங்கள் வன்முறையானவை என்று காட்டிய முன்பாதிக் கதையை வலுப்படுத்துவதற்காக, அடுத்த பாதியில் ‘நகரத்தில் அன்பு வழிந்தோடுகிறது’ என்று சொல்வதை இப்போதைக்கு மன்னித்து விடலாம்.  இப்போதைக்கு மட்டும்!

இந்த அன்பின் நீட்சியாக, கிராமத்து வன்முறையாளர்களை கதாநாயகன் காருண்யத்தோடு மன்னித்து விடுவதையும் இப்போதைக்கு மறந்து விட நினைக்கிறேன்.  

படத்தின் இறுதியில் ‘எல்லாம் சுபம்’ என்றே சொல்கிறார்கள்.   அதனால் இந்தப் படத்தை ’நல்லதையே நினைக்கும் படங்கள்’ (‘feel good movie’) என்று கூட நமது நண்பர்கள் பாராட்டுகிறார்கள்.  

ஆனால், இத்தனை வன்முறைக்கும் அப்பால் (ஒரு தற்கொலை, ஒரு கொலை முயற்சி) அகிம்சையை போதிப்பது ஒரு மாபெரும் தந்திரமில்லையா என்றே கேட்கத் தோன்றுகிறது. இது அறத்தில் நிகழும் ஊழல் இல்லையா?  

ஆனாலும், படத்தின் முதல் பாதி நேர்மைக்காக சீனு ராமசாமியை அறிவுறுத்தி விட்டு விடலாம் தான்.


கடைசியில் ஒரு சந்தேகம் மட்டும்.  துணிச்சலான இந்தப்  படத்தில் வைரமுத்துவுக்கு என்ன வேலை?  சாதி வெறியை நில வெறியாக சித்தரித்து (கள்ளிக்காட்டு, செவக்காட்டு, கரிசல்காட்டு…) தொடர்ந்து பாட்டு கட்டி வரும் வைரமுத்து, இந்தப் படத்திலும் தனக்குத் தெரிந்த பழைய குட்டிக்கரணங்களையே அடித்துக் கொண்டிருக்கிறார்.  எழுதுவதை நிறுத்துவது கூட ஒரு வகை புண்ணியம் தான் என்று அவருக்கு யாராவது சொல்லக்கூடாதா?  

Comments

Prem said…
“மதுரை கிராமங்களை’ இந்தப் படம் துணிச்சலாகக் கேள்வி கேட்கிறது. அவற்றின் போலித்தனத்தை சுட்டிக் காட்டுகிறது. வன்முறையைக் கொண்டாடும் சூழலிலிருந்து விலகி நிற்கிறது.” நவீன நிறுவனங்களும் வேண்டும் சாதி-சாதிவழிக் குடும்பம், மாற்றத்தை விரும்பாத ஊர் மரபு அனைத்தும் வேண்டும் என்ற நிலையில் உள்ள முரணை ஒரு பகுதி சுட்டிக்காட்டுகிறது. கிருஸ்தவ, இஸ்லாமிய பாத்திரங்களை புரிந்துகொள்வதில் சற்றே பின்தங்கியும் நிற்கிறது.என்றாலும் கவனத்திற்குரிய பகுதிகளைக் கொண்டது.
எதுசாதிவெறி ?தமிழகம்முழுவதும் எங்கும்சாதிஎதிலும்சாதி சாதிஇல்லைஎன்பவர்கள் முதலில் தன்சாதி மறந்துவாங்கபார்ப்போம்

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக