Skip to main content

சினிமா சிந்திக்கிறது - தொடரும் கபாலி உரையாடல்


(கபாலி திரைப்படம் பற்றி எழுதியிருந்த மூன்று கட்டுரைகள் தொடர்பாக எழுத்தாளர் மருதனோடு நடைபெற்ற முகநூல் உரையாடல்)


மருதன்:

டி. தருமராஜின் கபாலி கட்டுரையை இன்றுதான் வாசித்தேன். உண்மையில் கபாலியை ஒரு சாக்காக வைத்து கனமான ஒரு நீண்ட உரையாடலை அவர் நிகழ்த்தியிருக்கிறார். திரைப்படத்தின் கதை, திரைப்படத்துக்கு வெளியில் பின்னப்படும் கதை என்று இரண்டாகப் பிரித்து அவர் கபாலியை ஆராய்வதைப் போல் கபாலி பற்றிய தருமராஜின் பார்வை, கபாலிக்கு வெளியில் நீளும் அவருடைய பார்வை என்று இரண்டாக இந்தக் கட்டுரையைப் பிரித்து ஆராய்ந்து, ரசிக்கலாம்.
மூன்று பாகங்களில் நீளும் கட்டுரைகளின் தலைப்புகளை அவர் பின்வருமாறும் வைத்திருக்கலாம். நான் ஏன் ரஜினி அல்ல? நான் ஏன் ரஞ்சித் அல்ல? நான் ஏன் நானே அல்ல






டி. தருமராஜ்:

எனக்குப் போலவே இல்லாததெல்லாம் உங்கள் கண்களுக்கும் தென்பட ஆரம்பித்திருக்கிறது, மருதன்இது ஒரு ஸோம்பி விளைவு.

அந்தக் கட்டுரைகள் சில முக்கியமான விஷயங்களைப் பேசுவதை நீங்கள் கவனித்திருக்கலாம்

1. ரஞ்சித் மாதிரியான கலைஞர்கள், திரையுலகில் அரசியல்வாதிகளைப் போலவும் செயல்பட வேண்டிய தேவை எவ்வாறு உருவாகிறது என்பது

2. இதையே, வேறு மாதிரியாகவும் யோசிக்க வேண்டும் என்று நினைக்கிறேன். சினிமா, வணிகமாகவும் இருப்பதால் அதன் கலைஞர்கள் வியாபார நுணுக்கங்களையும் அறிந்தவர்களாக இருக்க வேண்டியுள்ளது. அந்த வகையில், தனது இருப்பை தக்க வைத்துக் கொள்ள ரஞ்சித் கலைஞனாக மட்டும் இருந்தால் போதாமல் ஆகிறது. இந்தத் தருணத்தை நாம் எவ்வாறு விளங்கிக் கொள்வது? சினிமா தனது கலைத்தன்மையை இழக்கிறது என்று சொல்லலாமா? சினிமாவும் அரசியலும் வேறு வேறு அல்ல என்று சொல்லலாமா

3. சினிமா மாதிரியான கலை வடிவங்களில் தலித் உணர்வுகள் வெளிப்படும் பொழுது இவ்வளவு கொந்தளிப்புகள் இரண்டு தரப்பிலும் ஏற்படுவது ஏன்? தலித் இலக்கிய உருவாக்கத்தின் போது நடக்காத விஷயங்கள் இப்பொழுது நடைபெறுகிறதே ஏன்

4. கலைகள் ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதங்களாக அமைய முடியும் என்ற கருதுகோளில் எனக்கு நம்பிக்கையில்லை. அதை நாம தவறுதலாகப் புரிந்து கொண்டிருக்கிறோம் என்றே நினைக்கிறேன். ஒடுக்கப்பட்டவர்களின் ஆயுதங்களாக கலைகள் செயல்படுவதற்கு, அக்கலைகளிலிருந்து அந்நியமாகிற உணர்வை பெற்றாக வேண்டுமென்று சொல்லப்படுகிறது.  இதை நாம் கவனத்திலேயே கொள்வதில்லை. அதாவது, கலைகள் உருவாக்கும் உணர்வெழுச்சியிலிருந்து விடுபடுகிற (பெர்டோல்ட் பெர்க்ட்) உத்தியை 'கலைகள் ஆயுதங்கள்!' என்ற கோட்பாடு திரும்பத் திரும்ப வலியுறுத்துகிறது. உணர்வுக் கொதிப்பிலிருந்து விடுபடாத நபர்கள் கலைகளை ஆயுதங்களாக பயன்படுத்த முடியாது என்பதைத் தான் சமீபமாக கபாலியும் நமக்கு உணர்த்துகிறது. அப்படியானால், கலைகளின் மூலம் என்ன தான் சாதிக்கப்படுகிறது என்ற கேள்வி இந்த நேரத்தில் முக்கியம்

5. அதே போல, imagetrap என்ற யோசனையின் மூலம் சினிமாவை விளக்க முற்படும் போக்கு எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது என்பதையும் நாம் கபாலியைக் கொண்டு விளங்கிக் கொள்ளலாம்

இப்படி நிறைய விஷயங்கள் இருக்கிறது, பேச. அந்த கட்டுரைத் தொடருக்கு முதலில் நினைத்த தலைப்பு என்ன தெரியுமா? 'நான் ஏன் தலித்தும் அல்ல? பாகம் இரண்டு'.



மருதன்: 

நீங்கள் குறிப்பிட்டிருக்கும் விஷயங்கள் எல்லாவற்றையும் மிகவும் ரசித்துப் படித்தேன். மேலே நீங்கள் சொல்லியிருப்பதைப் போல் ஒவ்வொரு திரியாகப் பிரித்துப் பார்த்து விவாதிக்க நிறைய வாய்ப்புகள் கொடுத்திருக்கிறீர்கள். ஒரு திரைப்படத்தை இந்த உயரத்துக்கு விவாதத்தின்மூலம் கொண்டுசெல்லமுடியுமா என்று ஆச்சரியமாக இருக்கிறது.


ஒரு சந்தேகம். கலைகளை ஆயுதங்களாகப் பாவிப்பது குறித்து. உங்கள் கட்டுரையில் நீங்கள் காட்சிபடுத்திருக்கும் கூத்து என்பது கலையின் வடிவம். அதை அவர்கள் ஆயுதமாகவே பாவித்திருக்கிறார்கள், ரசித்திருக்கிறார்கள், மீண்டும் மீண்டும் பாடச் சொல்லி கேட்டிருக்கிறார்கள். அவர்களுடைய உணர்வெழுச்சிக்குக் காரணம் அந்தப் பாடலை அவர்கள் ஓர் ஆயுதமாகப் பாவித்ததுதானே? தெருக்கூத்து கலைஞர்கள் உயர்த்திப் பிடித்த ஆயுதத்தை, திரண்டிருந்த மக்கள் அடையாளம் கண்டுகொண்டு, தாமும் முன்வந்து அதைச் சுமந்ததால்தானே அந்த ரசவாதம் நடைபெற்றது?


டி. தருமராஜ்:

அன்றைய தினம் நடந்த நிகழ்வை நானும் சில வருடங்களுக்கு நாட்டுப்புறக்கலைகளின் கலக குணத்திற்கான உதாரணமாகவே சொல்லி வந்தேன். ஆனால், அந்த நிகழ்வை மீண்டும் யோசிக்கும் பொழுது தான், அது கலகமாக இல்லை, மிக வெற்றிகரமான சமாளிப்பாக இருக்கிறது என்பதை உணர முடிந்தது. ஏன், அதில் எதிர்ப்புணர்வு கூட இல்லை

அவர்கள் அன்றைய தினம் ஒரே பாடலைத் திரும்பத் திரும்ப பாடிக் கேட்டதன் மூலமும், வழக்கத்தை விட மித மிஞ்சிய அளவில் பாலியல் சேட்டைகளை ரசித்ததன் மூலமும் தங்களைத் தாங்களே மனிதர்களாக அடையாளம் கண்டு கொண்டதைத் தவிர வேறு எதையும் சாதித்திருக்கவில்லை. உண்மையில், அன்றைய தினம் அவர்கள் மீது நடத்தப்பட்ட வன்முறையில் மிக முக்கியமாக தகர்த்தெறியப்பட்டது - ‘அவர்களும் மனிதர்கள் தான்’ என்ற உண்மை மட்டுமே! மனித உரிமை மீறல், வன்கொடுமை, சாதி அடக்குமுறை.... போன்றவையெல்லாம் அதற்கப்புறம் தான்

அதனால், அவர்கள், நாங்களும் மனிதர்கள் தான் என்ற செய்தியை மட்டுமே உரக்க, மற்றவர்களுக்கும் தங்களுக்குமே சொல்லிக்கொள்ள விரும்பினார்கள். அன்றையக் கூத்து நிகழ்வல் அரசியல் மூலமும் பாலியல் மூலமும் அவர்கள் வலியுறுத்தியது அந்த மனித உணர்வை மட்டுமே

எல்லா நாட்டுப்புறக் கலை வடிவங்களும் இந்த அளவோடு நின்று விடுகின்றன. அதற்கு மேல் அவற்றால் ஆகக் கூடியது ஒன்றுமில்லை. மனதளவில் மாக்களாக உணர்த்தப்பட்ட மக்களுக்கு, மனித உணர்வை மீட்டுத்தருவதோடு அக்கலைகளின் பங்கு முடிவுக்கு வருகிறது. ஆனால், இலக்கியம், சினிமா போன்ற கலைகள் இதைக் கடந்தும் செயல்பட முடியும் என்று நினைக்கிறேன். அதற்கான சக்தி இவற்றிற்கு உண்டு. ஆனால், கபாலி இந்தத் தன்மையை வீணடித்து விடுகிறது. ஒரு நாட்டுப்புறக்கலை போலவே அதுவும் தன்னை சுருக்கிக் கொள்கிறது என்பது தான் என் ஆதங்கம்.

நீங்கள் ஆச்சரியமாகக் குறிப்பிடும் விஷயத்தையே நிறைய பேர் சலிப்பாகக் குறிப்பிட்டார்கள் - ஒரு திரைப்படத்திற்கு இது அவசியமா? அதுவும் அந்தத் திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய கட்டுரை அவசியமா என்று கேட்டார்கள். இந்த ஆச்சரியம், சினிமாவை நாம் குறைத்து மதிப்பிடுவதால் தோன்றுகிறது. சினிமாவை முன் வைத்து இன்னும் அதிகமாக நாம் பேச முடியும். இலக்கியத்தைப் பேசுவதை விடவும் அதிகமாக சினிமாவைப் பேச முடியும். பேசவும் வேண்டும்.



மருதன்:

உண்மைதான், இப்போதுதான் புரிகிறது. நான் சினிமா அதிகம் பார்ப்பதில்லை. குறிப்பாக, தமிழ்த் திரைப்படங்கள். படிப்பதற்கு நிறைய இருக்கும்போது, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியாக எடுக்கப்படும் படங்களிலிருந்து என்ன பெரிதாகக் கற்றுவிடப்போகிறோம் என்னும் அலட்சியம் ஒரு காரணம். ஆர்வமின்மை இன்னொரு காரணம். புதிய படங்கள், பெரிய எதிர்பார்ப்புகளைக் கிளப்பும் படங்கள் (கபாலி போல) வெளிவந்தால் விமரிசனங்களை மட்டும் படிப்பேன். பல சமயங்களில் படங்களைவிட விமரிசனங்கள் அதிக வழவழாவென்று இருக்கும். உங்கள் விமரிசனம் பலவித ஜன்னல்களையும் கதவுகளையும் படபடவென்று திறந்து காட்டுவதால் வியப்பு ஏற்படுகிறதும்.


டி. தருமராஜ்:

நம் மத்தியில் எழுதப்படுவத சினிமா விமர்சனம் அல்ல; சினிமா பொறணி என்று வேண்டுமானால் சொல்லலாம். ஆனால், சினிமாவை தீவிரமாக விவாதிப்பதற்கான தேவைகள் நமக்குத் தான் இருக்கின்றனஅரசியலும் சினிமாவும் வேறெந்த சமூகத்தை விடவும் நமது சமூகத்திற்கான தலையாயப் பிரச்சினை.  அது உருவாக்கும் மயக்கத்தை விளங்கிக் கொள்வது மட்டுமே அதை வெல்வதற்கான உத்தியாக எனக்குப் படுகிறது

சினிமாவை ஒரு மொழியைப் போல கற்பனை செய்கிறவர்கள் இருக்கிறார்கள். காட்சி மொழி அல்ல நான் சொல்ல வருவது. இதில், சினிமாவே ஒரு மொழி தான் என்கிறார்கள். எனவே, சினிமா தனியாக சிந்திக்கக் கூடியது என்றும் சொல்கிறார்கள். அதாவது, நமக்குப் பதில் அது யோசிக்கிறேன் என்கிறதுArtificial Intelligence மாதிரி.  நாம் யோசிக்கிற அதே வேகத்தில், நம்மை விட துல்லியமாக அது யோசிக்கிறது. இது தான் அது நம்மை மயக்கும் ரகசியம் என்கிறார்கள். இப்படி நிறைய இருக்கிறது.


மருதன்:

மானுடவியல், நாட்டுப்புறவியல் என்றில்லை; சினிமா தவிர்த்த ஏதேனும் ஒரு துறை சார்ந்த நுட்பமான அறிவும் புரிதலும் இருந்தால்தான் ஒரு நல்ல சினிமா விமரிசனம் எழுதமுடியும் என்பதும் புரிகிறது. அரசியல், உளவியல், சமூகவியல் என்று அது எந்தத் துறையாக வேண்டுமானாலும் இருக்கலாம். அப்போதுதான் போதுமான அளவுக்கு சினிமாவைவிட்டு வெளியில் வந்தும் சிந்திக்கமுடியும். இப்படி வெளியில் வந்தும் எழுதினால்தான் அந்த விமரிசனம் செழுமையடையும்.



தமிழ் டிவி சிரீயல்களையும் இதேபோல் அணுகி எழுதுவது சாத்தியம் என்று நினைக்கிறீர்களாஇந்த சீரியல்கள் பற்றி ஏதேனும் சீரியஸ் விவாதங்கள் நடைபெற்றிருக்கின்றனவா?


டி. தருமராஜ்:


நிச்சயமாக சாத்தியம்.   சீரியல்கள் என்ற வரையறையையும் கடந்து ஒவ்வொரு தொலைக்காட்சியும் ஒரு பிரத்யோக மனநிலையை உருவாக்கக் கூடியதாக இருக்கிறது. இந்த மன நிலையை ஆராய்வது முதலில் அவசியம். சீரியல்கள், Pulp fiction தன்மையைக் கொண்டவை என்றாலும், அது தருகிற விளைவிற்காக நிச்சயமாகப் பேசப்பட வேண்டியவை தான். சீரியல்கள் பற்றி தமிழில் . ராமசாமி சில கட்டுரைகள் எழுதியிருக்கிறார். ஆனால், முழுமையான ஆய்வுகள் நம்மிடம் இல்லை. அது பெண்களின் ராஜ்ஜியம் என்று சொல்லியே தவிர்க்கப்படுகிறது என்று நினைக்கிறேன். ஆண்களிலும சீரியல் வெறியர்கள் உண்டு.   ரகசியக் குடிகாரர்களைப் போல.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக