இன்று காலையில் நான் யோசித்திருக்கக்கூடாது. பேசாமல் சென்னைப் புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கவேண்டும்.
வழக்கமாய் காலைகளில் நான் யோசிப்பது இல்லை. அந்நேரம் தான் எல்லோரும் யோசிக்கிறார்கள் என்பதால், ட்ராபிக் அதிகமாகவே இருக்கும். ஆளுக்கு ஆள் குறுக்க மறுக்க போய்க் கொண்டிருப்பார்கள். அதனால் எப்பொழுதும் தவிர்த்து விடுவேன். ஆனால், இன்றைக்கு என்னவோ இப்படி ஆகி விட்டது.
முதலில் இந்த வரி மட்டும் தான் தோன்றியது - ‘சாதி, ஒரு பேச்சு!’
என்னடா இது வம்பு என்று பார்த்துக் கொண்டிருக்கும் போதே அதன் அடுத்த வரி வந்து விழுந்தது - ‘சாதி எதிர்ப்பு, ஒரு இரைச்சல்!’
கூடவே மூன்றாவது வரியும் - ‘பிராமணியமோ காட்டுத்தனமான மெளனம்.’
மூன்றையும் சேர்த்துப் பார்க்கும் பொழுது பயம் வந்தது.
‘சாதி ஒரு பேச்சு; சாதி எதிர்ப்பு இரைச்சல்; பிராமணியம் மெளனம்.’
உடனே, ’இந்த நூற்றாண்டின் எதிர்ப்பு அரசியல், இரைச்சலுக்கு அர்த்தம் கண்டுபிடிப்பது தானா?’ என்றேன் நான்.
நான் கேட்டதைக் கண்டு கொள்ளாமல், ‘பிராமணியத்தின் மெளனமும், பேச்சிற்கிடையிலான மெளனம் இல்லை; அது இப்பொழுது எழுத்தில் உருவாகும் மெளனம்!’ என்றேன் நான்.
‘அப்படியானால் இந்த நூற்றாண்டின் அரசியலையும், மெளனத்தின் வரலாறாகத்தான் எழுத வேண்டுமா?’ என்றேன் நான் பதிலுக்கு.
மீண்டும் நான் பேசுவதைக் கவனிக்காதது போல், ‘மெளனத்தின் வரலாற்றை எழுதினாலும், எழுதியதில் இல்லை வரலாறு’ என்றேன் நான்.
எனக்குக் கோபம் தலைக்கேறியது. எத்தனை நேரம் தான் உதாசீனத்தைத் தாங்கிக் கொளவது? ’பேச்சில் உருவாகும் மெளனமும், எழுத்தில் உருவாகும் மெளனமும் வேறு வேறா?’ என்று மட்டும் சொல்லி விட்டு அந்த இடத்தை விட்டு விலகி ஓடி வந்தேன்.
ஆனாலும் என் பின்னால், ‘பேச்சின் மெளனம் ஓசைகளின் இடைவெளிகளில் உள்ளது; எழுத்தின் மெளனம், ஓசைகளைக் கொன்று விடுவதால் உருவாகிறது’ என்று நான் இன்னமும் சொல்லிக் கொண்டிருப்பது லேசாய் கேட்டது. நான் அதைக் கண்டு கொள்ளாமல் வந்து விட்டேன்.
நிஜமாகவே, காலை வேளையில் யோசிக்கக் கூடாது தான்!
பேசாமல், சென்னை புத்தகத் திருவிழாவிற்குப் போயிருக்கலாம். ஜாலியாக இருந்திருக்கும். அங்கே நண்பர்கள் இருக்கிறார்கள்.
Comments