வெற்றிமாறன் இயக்கி, தனுஷ் நடித்து சமீபத்தில் வெளியாகியுள்ள ‘அசுரன்’ திரைப்படம் சில புதிய விவாதங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
அசுரன் ஒரு நவயுகப் படம். அண்மைக்காலமாக, சாதியால் ஒடுக்கப்பட்டவர்களைக் கதாநாயகர்களாகக் கொண்டு திரைப்படங்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. இதுவொரு பாராட்டத்தக்க முயற்சி. பா.ரஞ்சித்தின் திரைப்படங்கள் இதற்கானத் தொடக்கப்புள்ளி என்று சொல்ல முடியும்.
திரைப்பட வரலாற்றறிஞர்கள் இதை மறுக்கக்கூடும். ரொம்ப காலத்திற்கு முன்னாடியே இது ஆரம்பித்து விட்டது என்று ஆதாரங்களைக் காட்டக்கூடும். ஆனால், சாதியால் ஒடுக்கப்பட்டவன் கதாநாயகனாக மாறுவதற்கு முதலில் தான் ‘தாழ்த்தப்பட்டவனே’ என்பதை துணிவாகச் சொல்லத் தெரிந்திருக்க வேண்டும். அந்த வகையில், நான் அட்டவணைச் சாதி தான் என்று துணிந்து சொல்கிற, சாதி விடுதலைக்காகப் போராடுகிற நாயகத் தன்மையை ரஞ்சித்தே ஆரம்பித்து வைக்கிறார்.
அந்த ஆரம்பம், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் என்று தொடர்கிறது. இந்த வகைப் படங்களை ‘தலித் சினிமா’ என்று வகைப்படுத்தும் கட்டுரைகள் தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியாகத் தொடங்கியுள்ளன. பன்றி, சாய்ரத் போன்ற மராத்தி படங்களை இயக்கிய நாகராஜ் மஞ்சுளேயை முன்வைத்து தலித் சினிமா என்றொரு விவாதம் முன்வைக்கப்படுகிறது. ஆனால், இலக்கியத்தில் ‘தலித் இலக்கியம்’ என்று பேசிப் பார்த்த அனுபவத்தில் ‘தலித் சினிமா’ என்றொரு வகைப்பாடு இருக்க முடியும் என்று எனக்கு நம்பிக்கையில்லை. சினிமா, சினிமா தானே!
ஆனால், சாதியச் சிக்கல்களை முன்னிலைப்படுத்தும் சினிமாக்களை உங்களுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும் காட்சி மொழியில் சொல்லிவிட முடியாது என்பது மட்டும் இப்பொழுது விளங்குகிறது. ரஜினி நடித்து ஏற்கனவே வெளியான கபாலி, காலா மற்றும் தனுஷ் நடித்துள்ள அசுரன் தந்த அனுபவத்தில், தமிழ் சினிமா தனது திரைமொழியை பரிசீலினைக்கு உட்படுத்த வேண்டும் என்று நான் நினைக்கிறேன்.
முப்பது வருடங்களுக்கு முன்பு, இதே போல இலக்கிய வெளிப்பாட்டு மொழியில் சிக்கல் வந்தது. தலித் வாழ்க்கையை இலக்கியத்தில் பதிவு செய்ய புதிய வகைமை தேவையா (தன்வரலாறு கண்டுபிடிக்கப்பட்டது), புதிய சொல்முறை தேவையா (பேச்சு மொழியில் எழுதுவது), எழுதுகிற நபர் யாராக இருக்க வேண்டும் (பிறப்பால் தலித்) என்ற விவாதங்கள் நடைபெற்று, அப்படி எழுதுவது புதிய வகை இலக்கியம் என்று மயங்கிய வரலாறு நமக்கு உண்டு. இப்பொழுதும் அப்படியே மயங்கத் தேவையில்லை.
சாதியால் ஒடுக்கப்பட்டவர்களின் உணர்வுகளைச் சொல்ல முற்படுகையில் உருவாகும் இந்த சிக்கல் இலக்கியத்திலும் சினிமாவிலும் மட்டும் அல்ல, ஓவியத்திலும், இசையிலும், நாடகத்திலும் கூட உண்டு. இதை வெற்றிகரமாக எதிர்கொள்கிற கலை வடிவம் தனது மொழியை மேம்படுத்திக் கொள்கிறது. தலித் உரையாடலுக்குப் பின் தமிழ் இலக்கியத்தில் இது நடைபெற்றது. தற்போது, சினிமாவின் முறை.
ஒரு தலித்தின் கதையைச் சொல்ல முயலும் ஒவ்வொரு முறையும் சினிமாவில் நீங்கள் சந்திக்கும் முதற் சிக்கல் - அந்த நாயகன் எப்படிப்பட்டவன் என்பது தான்.
ஏனெனில், ஒடுக்கப்பட்டவன் குறித்து ஏற்கனவே ஒரு சித்திரம், புராணம் தொடங்கி சினிமா வரைக்கும் இங்கே சொல்லப்பட்டிருக்கிறது. ராவணன், கர்ணன், ஏகலைவன், முள்ளும் மலரும் ரஜினி, பாரதி கண்ணம்மா பார்த்திபன் (மரியாதையான உதாரணங்கள் இவ்வளவு தான்!) என்று வரிசையாக யோசித்துப் பாருங்கள். இந்தக் கற்பனைகளுக்குள் ஒரு ஒற்றுமையை உங்களால் உணர முடிகிறதா? இவர்களெல்லாம் முரடர்கள், அதே நேரம் வெகுளியும் கூட. சூழ்நிலைக்கைதிகள் என்று சொல்லலாமா? இந்தக் கற்பனை இன்றைக்கு உங்களுக்கு உதவுவதில்லை. ஏனென்றால், உங்களுடைய ஒடுக்கப்பட்டவன் வெகுளி தான், முரடன் தான், ஆனால் அரசியலும் தெரிந்தவன்.
அந்த அரசியல், சாதியால் ஒடுக்கப்பட்ட அத்தனை பேரின் நலன்களையும் இணைக்கிற அரசியலாக இருக்கிறது. இப்பொழுதே, அந்த நாயகனின் குணநலன்களை வடிவமைப்பதில் உங்களுக்குச் சிக்கல் வர ஆரம்பிக்கிறது. ஒடுக்கப்பட்ட நாயகன், நம்மிடம் ஏற்கனவே வழக்கத்திலிருக்கும் சாகச வீரபுருசன் இல்லை. ஏனெனில், அவன் கலை வடிவங்கள் நிர்பந்திக்கும் ஒற்றைப் பிரதிநிதி தானே தவிர ஆபத்பாந்தவன் இல்லை. எம்ஜியார் அல்லது ரஜினி வகை கதாநாயக பிம்பங்கள் ஒடுக்கப்பட்ட நாயகனாக முடியாமல போவதும் இதனால் தான்.
ஒரு தலித்தை நாயகனாக முன்னிறுத்துவதில் உள்ள அடிப்படையான சிக்கல் இது. ஏனெனில், அவன் விடுதலை அரசியலால் வடிவமைக்கப்பட்டவன் என்பதால் அவதார பிம்பத்திற்குள் அடைபட மாட்டேன் என்கிறான்.
உதாரணமாக, அசுரன் திரைப்படத்தில் வடக்கூரானை வெட்டுவதற்காக சிறுவன் முயற்சிக்கையில், அவனது தந்தை மின்சாரத்தைத் தடை செய்யும் காட்சியை நினைத்துப் பாருங்கள். தனுஷ், மிகச் சாதுர்யமாக, மின்னல் போல யோசித்து, சாகசம் செய்யும் காட்சி உங்களுக்கு ஞாபகம் வருகிறதா? ஆனால், இதே காட்சியை வெக்கையில் பூமணி இப்படி எழுதுகிறார் - ‘…சேவுக்கடைகு எதிர்ல போனா காரியம் கெட்ரும்னு சத்தரத்து மறவுல நின்னுக்கிட்டேன். வெளிச்சம் வேற மனசுல உறுத்துச்சு. ஒண்ணும் ஓடல். டிரான்ஸ்பாரத்துப்பக்கம் போயி தட்டுத் தடுமாறி பீஸப் புடுங்குறதுக்குள்ள பெரும்பாடாப் போச்சு’.
இது தான் யதார்த்தம். இதைத் தான் இலக்கிய மொழி என்றும் சொல்கிறோம். திரைமொழி கற்றுக் கொள்ள வேண்டியதும் இதைத் தான். அதற்குப் பெருந்தடையாக இருப்பது அதன் ஏற்கனவே வடிவமைக்கப்பட்ட நாயக பிம்பங்கள். அதை மீறுவது தான், அரசியல் படங்கள் செய்ய வேண்டிய முதல் வேலை. ரஜினி, தனுஷ் போன்றவர்களை வைத்துக் கொண்டு இதைச் செய்ய முடியுமா என்று எனக்குத் தெரியவில்லை.
இரண்டாவது சிக்கல், ஒடுக்கப்பட்ட அரசியல் கதைகளில் இடம்பெறும் வன்முறையை எவ்வாறு காட்சிப்படுத்துவது என்பது. வன்முறையைக் காட்சிப் படுத்துவதற்கும் தமிழ்த் திரைப்படங்கள் சில வாய்ப்பாடுகளை வைத்திருக்கின்றன. சண்டைக்காட்சி என்பது இதற்குப் பெயர். திரையில் நீங்கள் பார்ப்பது நிஜ வன்முறை அல்ல. அது ஜோடிக்கப்பட்டிருக்கிறது. ஒரு சாகசக் கலையைப்போல சிங்காரிக்கப்பட்டிருக்கிறது.
வழக்கமான தமிழ்த் திரைப்படங்கள் அவதாரக் கதைகளையே சொல்லிக் கொண்டிருப்பதால், அதில் இடம்பெறும் வன்முறைக் காட்சிகள் அந்த அவதாரங்களின் சகலகலாவல்லமையை பறைசாற்றுவது போலவே திட்டமிடப்படுகின்றன. இது, ஒரு மலினமான வன்முறையைக் கொண்டாடுதல். இந்த வழிமுறை, ஒடுக்கப்பட்ட அரசியல் படங்களில் பெரும் சேதத்தை ஏற்படுத்துகின்றன.
ஏனென்றால், ஒடுக்கப்பட்டோரின் வன்முறை என்பது சாகசம் அல்ல என்பதை முதலில் நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். அது உயிர் வாழ்வதற்காகச் செய்யப்படும் கடைசி யத்தனம். அவர்கள் அவதார புருசர்களைப் போல அந்த வன்முறைக்குப் பழகியவர்கள் இல்லை. அதனால், தப்பும் தவறுமாகவே வன்முறையைப் பிரயோகிக்கிறார்கள்.
வெக்கை நாவல் முழுக்க, அந்தச் சிறுவன் தான் பிரயோகிக்க நினைத்த வன்முறை தவறாகப் போனதே என்று குமைந்து கொண்டே இருக்கிறான். அவன் எதிரியின் வலது கையைத் துண்டித்து, ஒற்றைக் கையுடன் நடமாடுவதைப் பார்க்க விரும்பியவன். அவன் கொடுக்க விரும்பிய தண்டனை அது தான்.
ஆனால், தவறுதலாக எதிரி இறந்து போனதை அவனால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. இரக்கப்பட்டான் என்று தவறாகப் புரிந்து கொள்ள வேண்டாம். தான் வழங்க விரும்பிய தண்டனையை அனுபவிக்காமல் எதிரி இறந்து போனானே என்பது தான் அவனுடைய வருத்தமெல்லாம்.
இது தான் ஒரு இலக்கியப் பிரதி உங்களுக்கு ஏற்படுத்தும் சவாலும். சிறுவனின் இந்த மனநிலையை சித்தரிக்கும் திரைமொழி தமிழ் சினிமாவில் இருக்கிறதா என்று கலைஞர்கள் தங்களுக்குள் கேட்டுப் பார்த்துக் கொள்ளலாம்.
மற்றெல்லாப் பிரச்சினைகளுக்கும் திரைக்கலைஞர்கள் தீர்வு சொல்வதைப் போல இப்பொழுது சாதிப் பிரச்சினைக்கும் சொல்ல ஆரம்பிக்கிறார்கள். அந்தத் தீர்வு, வழக்கம் போல, ஒடுக்குகிற சாதியை அழித்து விடுவது என்று வெளிப்படும் போது தான் அவர்களது முட்டாள்தனம் சந்தி சிரிக்கிறது.
சாதியக் கொடுமைகளுக்கு எதிரான எந்தவொரு வன்முறையும் சினிமாக்களில் செய்வது போல ரசித்து ருசித்து செய்யப்படுவதல்ல. மனநிலைதவறியவன் அல்லது கண நேர உணர்ச்சிக்கு ஆளானவன் செய்யும் கொலைக்கும் சாதியால் துன்புறுத்தப்பட்டவன் செய்யும் கொலைக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. ஒடுக்கப்பட்டவனின் வன்முறை மனநோயாளியாக மாறிவிடாமல் இருப்பதற்கான முயற்சி என்று சாரத்தர் சொல்வது இந்த இடத்தில் ரொம்ப சரி.
ஒடுக்கப்பட்டவர்களின் வன்முறை குறித்து அல்ஜீரிய சிந்தனையாளரான ஃப்ரான்ஸ் பனான் ‘The Wretched of the Earth’ என்ற நூலில் எழுதுவதை நான் உங்களுக்குச் சொல்ல விரும்புகிறேன். அவர், ‘வன்முறை, தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் ஒடுக்கப்பட்டவர்களை விடுவிக்கிறது; அவர்களை பயமற்றவர்களாக மாற்றுகிறது; சுயமரியாதையை மீட்டெடுக்க உதவுகிறது’ என்று எழுதுகிறார். வன்முறையை இந்தக் கோணத்தில் சித்தரிக்கும் திரை மொழியைக் கண்டடையாத வரைக்கும் ஒடுக்கப்பட்டவனை சினிமாவிற்குள் நீங்கள் கொண்டு வரவே முடியாது.
மூன்றாவதாக நீங்கள் எதிர் கொள்ளும் சிக்கல், நீதி போதனை வழங்க விரும்பும் பாரம்பரிய தமிழ்ச் சினிமா மொழி என்று சொல்வேன். அசுரனில் இறுதியாய் சொல்லப்படும் முத்திரை வாக்கியம் அப்படியொரு அரைவேக்காட்டுத்தனம். ஒடுக்கப்பட்டவனை நாயகனாக முன்னெடுப்பதே ஒரு அரசியல் நடவடிக்கை என்றான பின்பு, அந்தப் படத்தில் சொல்லப்படும் ஒவ்வொரு விஷயமும் அரசியல் தான், போதனை தான் என்பதை நீங்கள் உணர வேண்டும்.
கலை, போதனைகளைப் பூடகமாகவே செய்து பழகியிருக்கிறது. அதனால் என்றைக்குமே தீர்வுகளைச் சொல்ல முடிவது இல்லை. சாதிக் கொடுமையை அம்பலப்படுத்தும் சினிமாக்கள் சாதிப் பிரச்சினைக்கு தீர்வு சொல்லிவிட முடியுமா என்றால் நிச்சயமாய் முடியாது என்று தான் சொல்ல வேண்டும். பின், கலை என்ன தான் செய்ய முடியும்? அது யாரை நோக்கி என்ன தான் பேச விரும்புகிறது என்ற கேள்வி எழலாம்.
சாதியப் பிரச்சினையைப் பேசுகிற கலை வடிவங்கள், சாதிக் கொடூரர்களை திருத்த முனைவது அல்ல. அக்கொடூரர்களை அரசும் நீதிமன்றங்களுமே தடுத்த நிறுத்த முடியும்.
ஆனால், மிகவும் சிக்கலான சாதி போன்ற பிரச்சினைகளை, எந்தவித நுண்ணுணர்வும் இல்லாமல், பழக்க தோசத்தால் செய்து கொண்டிருக்கும் வெகுஜனங்களை நோக்கியே ஒரு கலை வடிவம் பேச விரும்புகிறது. அவர்கள் தான்தோன்றித்தனமாய், மரபு, பாரம்பரியம் என்ற பெயரில் செய்து கொண்டிருக்கும் அநாகரீக வழக்கங்களின் கீழ்மையை அவர்களுக்கு உணர்த்த முடியும். அவ்வழக்கங்களின் காரணமாக ஒரு பகுதி மக்கள் எத்தனை தூரம் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை சுட்டிக் காட்ட முடியும். இவ்வளவு தான் கலையின் பங்கு. ஆனால், இது நடந்தாலே பெரிய விஷயம்.
அதே நேரம், இத்தகைய அரசியல் படங்கள், ஒடுக்கப்படுகிறவனுக்கு என்ன உணர்வை வழங்குகின்றன என்பதும் முக்கியம். அது, என்றைக்கும் ஒடுக்கப்பட்ட யதார்த்தத்தை ஒரு கொடுப்பினையாக அவன் உணரச் செய்து விடக்கூடாது. இத்தகைய கலைவடிவங்கள், அவன் வெகுஜன சமூகத்தோடு உரையாடுவதற்கான வாய்ப்பை மட்டுமே வழங்க முடியும்.
ஒரு சினிமாவை எடுப்பதம் மூலம், ஒடுக்கப்பட்டவன் தனது சுயமரியாதையை மீட்டெடுக்கிறான், தாழ்வு மனப்பான்மையிலிருந்தும் விரக்தியிலிருந்தும் விடுபடுகிறான், பயமற்றவனாக மாறுகிறான் என்று நீங்கள் சொல்ல விரும்பினால், மீண்டும் பனானைத் தான் நான் உதாரணம் காட்டுவேன் - சினிமா எடுப்பது வன்முறை அல்ல. ஏனென்றால், கலைஞன் வன்முறையாளன் அல்ல. ஒரு வேளை வியாபாரி அப்படி இருக்கலாம்.
Comments