Skip to main content

தமிழரவம் - ஜல்லிக்கட்டுக் கொந்தளிப்பின் அரசியல்


(விரைவில் வெளிவரவிருக்கும் 'ஜல்லிக்கட்டு: கொந்தளிப்பின் அரசியல்' என்ற நூலின் ஒரு அத்தியாயம் இந்தக் கட்டுரை.  நவம்பர் 7ம் தேதி, இந்து தமிழ் திசையில் வெளியானது.  அதன் முழுமையான வடிவம் இங்கே.)

புதுமைப்பித்தன் கேலி பேசிய ‘தமிழ்க் குரங்கு’ போல இது என்ன ‘தமிழ் அரவம்’ என்று பயப்பட வேண்டாம். அரவம், உண்மையாய்ச் சொல்லுகிறேன், ரொம்ப நல்ல வார்த்தை.  ‘அரவம் நல்லது’ என்று கூட நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். 

அரவம் என்றால் பாம்பு; அரவம் என்றால் ஆரவாரம் (அரவம் ஜாஸ்தியா இருக்கே!); அரவம் என்றால் மெல்லிய ஓசை என்றும் பொருள் (வந்து போன அரவமே இல்லை); பேச்சுவழக்கில் அரவம், அருவமாகியும் விடுகிறது (அருவமில்லாம வந்துட்டு போயிட்டான்!); சமஸ்கிருதத்தில் அரவம் என்றால் ஓசையின்மை என்று அர்த்தம். எல்லாவற்றிற்கும் மேலே, அரவம் என்றால் தமிழர் என்றும் பொருள்.  

தமிழர் என்ற அடையாளத்தை மொழி கொண்டு மட்டுமே தீர்மானித்துக் கொண்டிருக்கும் தம்பிகளுக்கும் தங்கைகளுக்கும் அதற்கு இன்னொரு பக்கமும் இருக்கிறது என்று சொல்வதற்காக இந்தக் கட்டுரை எழுதப்படுகிறது.  

‘எனக்கு இன்னொரு பேர் இருக்கு, அது அரவம்!’ என்று தமிழ் சொல்வதாகக் கூட எடுத்துக் கொள்ளலாம்.

*

தமிழ்ச் சமூகத்தின் ‘வெகுஜன’ அடையாளங்களை, மக்கள் தொகையில் அதிகமான உழவர்களே தீர்மானிக்கிறார்கள். உழவர்களின் அச்சமே ஒட்டுமொத்த சமூகத்தின் அச்சமாக உருமாற்றப்பட்டிருக்கிறது.  அவர்களின் நம்பிக்கைகளே ஒட்டுமொத்த சமூகத்தின் நம்பிக்கையாகக் கடைபிடிக்கப்படுகிறது. அவர்களின் சடங்குகளே, வெகுஜன சடங்குகளாகக் கருதப்படுகின்றன.  

சேகரித்தலும் வேட்டையாடுதலும் என்ற உணவு உற்பத்தி முறைக்குப் பின் மனித சமூகம் கண்டடைந்த வேளாண்மை என்ற உற்பத்தி முறையின் கவர்ச்சி ஒட்டுமொத்த சமூகச் சித்திரத்தையும் மாற்றி அமைத்தது என்பதை நாம் ஞாபகத்தில் கொள்ள வேண்டும்.  பழங்குடியின வாழ்க்கை முறையிலிருந்து நகர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கால்நடை பராமரிப்பிற்கு வந்து, பின்னொரு பெரும் எழுச்சியாக, முற்றிலும் மாறுபட்ட கிராம வாழ்க்கையை எட்டிய தருணத்தை விடவும் சிறந்த ‘நவீன’ தருணமொன்றை தமிழ்ச் சமூகம் அனுபவித்திருக்கவில்லை.

சமவெளியை (இங்கே ‘கட்டாந்தரை’ என்று வாசிக்க வேண்டும்) வாழிடமாகக் கொள்ள முடியும் என்ற யோசனை பழங்குடிகளுக்கும், கானகவாசிகளுக்கும் எத்தனை தூரம் குதர்க்கமாக இருந்திருக்கும் என்பதை கற்பனை செய்ய முடிந்தால் நான் சொல்வதை விளங்கிக் கொள்ள முடியும்.  

ஒரு முறை, அகத்தியர் மலை பழங்குடிப் பெரியவர் சங்கரன் காணியிடம் பேசிக்கொண்டிருந்த போது அவர் இந்த விஷயத்தை இப்படிச் சொன்னார்: ‘மண்ணுல ரெண்டு வகை இருக்கு - பச்ச மண்ணு, வெந்த மண்ணு!  நம்ம அகத்திய மலை பச்ச மண்ணு; மலையை விட்டு இறங்கியாச்சுன்னா வெந்த மண்ணு தான் கிடைக்கும்.  பச்ச மண்ணுல கரையான் இருக்காது.  அதே மாதிரி வாதைகளும் கிடையாது.  அகத்திய மலை முழுக்கவே தெய்வங்கள் தான்.’

வாழத்தகுதியற்றது என்று பழங்குடியினம் புறந்தள்ளிய நிலப்பரப்பை உருமாற்றியது தான் வேளாண் சமூகத்தின் ஆகப்பெரிய புரட்சி.  நீரையும் நிலத்தையும் ஒரு சேர பிசைய உணவு உற்பத்தியாகும் என்ற யோசனை ஆரம்ப காலங்களில் மாயமந்திரம் போலவே பார்க்கப்பட்டிருக்கிறது. 

‘…நீரும் நிலனும் புணரியோர் ஈண்டு
உடம்பும் உயிரும் படைத்திசினோரே…’  (புற நானூறு - 18: 22, 23 வது வரிகள்)

அதே போல, பழங்குடியின வாழ்க்கையில் கேள்வியேபட்டிராத வகைக்கு, வைகறையிலும் விடியலிலும் உழைக்கச் செல்லும் உழவர்களைப் பார்த்து தொல்காப்பியத்திலிருந்து சங்க இலக்கியம் வரைக்கும் அத்தனை பேரும் வியந்து வியந்து பேசுகிறார்கள் (நற்றிணை 60 வது பாடல்).   இதன் விளைவாகவே, திருக்குறள் ஒரு படி மேலே சென்று, ‘ஏர் பின்னது உலகம்’ (குறள் - 1031) என்றும் அறிவிக்கிறது.

வரலாற்றுப் பதிவுகளும் சரி, இலக்கியப் பதிவுகளும் சரி, தமிழ்ச் சமூகத்தை வேளாண்மை எவ்வாறு ஒருமுகப்படுத்தியது என்பதையே நமக்குத் திரும்பத் திரும்ப சுட்டிக் கொண்டிருக்கின்றன.  புதிய வாழிட நிர்மாணம், புதிய அரசியல் அமைப்பின் வருகை, புதிய உணவுப் பழக்க வழக்கம், புதிய சமூக உறவுகள், புதிய நம்பிக்கைகள், புதிய விழுமியங்கள் என்று வரிசை கட்டி வந்ததைப் போலவே, புதிய உளச்சிக்கல்களும் பொதுமைப்படுத்தப்பட்டன.  

விவசாயத்திற்காக காளைகளோடு புழங்க நேர்ந்த உழவர்களின் மனச்சித்திரங்களும், அதனிலிருந்து தோற்றம் பெற்ற சடங்கு முறைகளும், விலக்குகளும், குறியீடுகளும் ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டுக் கூறுகளாக நிலைப்படுத்தப்படுகின்றன.

காளைகளோடோ அல்லது பசுக்களோடோ நேரடியாக எந்தவிதத் தொடர்பும் இல்லாத நபர்களும், காளை குறித்த சமூக உளவியக்கத்தைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், ‘தமிழர்’ என்று ஒன்றிணையக்கூடிய வாய்ப்பை ‘ஏறு’ என்ற காலிக்குறிப்பான் (Ernesto Laclav பயன்படுத்தும் ‘Empty Signifier’ என்ற கருத்தாக்கத்தை நான் இப்படி மொழிபெயர்த்துக் கொள்கிறேன்.) வழங்கி விடுகிறது. பாம்பின் நடமாட்டத்தையும், பிசாசின் நடமாட்டத்தையும் கிளர்ச்சியோடு பேசத்தொடங்குவது போலவே ஏறு தழுவுதலையும் கிளர்ச்சியோடு அணுகுதல் தமிழ்த் தன்மையாக உருவகிக்கப்படுகிறது.  

காலிக் குறிப்பான்கள், நிகழ்வுகளின் மூலமே தங்களை வெளிப்படுத்திக் கொள்கின்றன. தன்னளவில் அவற்றிற்கு எந்த இருப்பும் இல்லை.  அவை, அரவம் போலவோ பேய் போலவோ ஜல்லிக்கட்டுக் காளை போலவோ கட்புலன்களுக்கு புலப்படாமல் இருக்கின்றன.  நிகழ்வுகளின் போது அவற்றிற்கு எவ்வாறு பொருண்மை இல்லையோ, அது போலவே, பிற சமயங்களில் அவற்றிற்கு பருண்மையும் இல்லை.   

அவற்றிற்குப் பெயர் இல்லை. அப்படி ஏதாவது இருந்தாலும் அப்பெயர்களை உச்சரிப்பது விலக்கப்பட்டிருக்கிறது.  இதையே, லாக்லவ், காலிக் குறிப்பான்கள் விலக்கின் மூலமே வெளிப்படுகின்றன என்கிறார்.  அரவமும் பேயும் எவ்வாறு தமிழ்ச் சமூகத்தை ஒன்றிணைக்கின்றன என்பதை விளக்குவதற்கு வண்ணதாசனை துணைக்கு அழைக்கப் போகிறேன்.
*
வண்ணதாசனின் முகநூல் பதிவு:
எல்லாப் பெட்டிக் கடைகளிலும் வாழைப் பழத்தார் தொங்கிக் கொண்டு இருக்கும். எங்கள் பக்கத்தில் அதிகம் தொங்குகிற தார் ‘மொந்தாம் பழம்’ என்று சொல்லப்படும் மொந்தன் பழம் அல்லது நாட்டுப் பழம். மோரிஸ் என்கிற பச்சை நாடான், கோழிக்கோடு என்கிற ரஸ்தாளி, செவ்வாழை எல்லாம் பிற்பாடு வந்தவை.
கொஞ்சம் கனிந்த தாராக இருக்கிறதே என்று அந்தக் கடைக்குப் போய் இருந்தேன். வழக்கமாக வாங்குகிற கடை இல்லை. புதியது. தாரிலிருந்து நாமாகப் பிய்த்து எடுத்துக் கொள்வதில் நமக்கும் அந்த வாழைத்தாருக்கும் ஒரு ‘உருத்து’ வந்துவிடும். அந்த வளைந்த அடிக்காம்பின் குளிர்ந்த பருமன் உங்களிடம் அப்படியே இருக்கும்.
கடையில் இருந்தவருக்கு ‘என்னை எங்கேயோ பார்த்திருப்பது போல’ இருந்திருக்கிறது. கொஞ்சம் கரிசனத்தோடு பார்த்தால். எல்லா முகங்களுமே அப்படி ஏற்கனவே பார்த்ததாகவே தோன்றும்.
‘எங்கே இருக்கியோ?’ என்று கேட்டார். ‘அந்தக் கல்வெட்டாங்குழிப் பக்கம் தெற்கே பார்த்த மூணு வீடுகளில் ஒன்று’ என்றேன்.
‘இந்த சர்ச்சிற்குத்தான் வருவீர்களா?’ என்றார். பதில் சொன்னேன். ‘இதுக்கு முந்திப் பாளையாங்கோட்டையிலே இருந்தேளோ?’ என்பதற்கு, ‘இல்லை . எனக்கு டவுண். மேல ரதவீதி சுடலமாடன் கோவில் தெரு. சந்திப் பிள்ளையார் முக்குப் பக்கம்’ என்று விவரம் சொன்னேன்.
அவருக்கு விடை கண்டு பிடித்துவிட்ட சந்தோஷ முகம். இதுவரை தோலுக்கு அடியில் இருந்த சிரிப்பு மேலே வந்து, ஒட்டின கன்னத்தில் படர்ந்துவிட்டது. கண்களின் ஓரத்தில் சதை திரண்டு இடுங்கிப் பார்வையில் ஈரப்பூச்சு மினுங்கியது. ‘சரிதான். நான் டி.ப்பி.ட்டியிலே கண்டக்டரா ஓடிக்கிட்டு இருந்தேன்’. என்று சிரித்தார். சற்று உட்புறமாகச் சரிந்திருந்த புகையடித்த பற்கள்.
தனபேரின்பம் என்று எனக்குள் இருந்த பெயரை அவர் டி.ப்பி.ட்டி என்று உச்சரித்த விதத்தில் அவர் எனக்கும் தெரிந்தவர் ஆகிவிட்டார். அவரை நான் பார்த்ததே இல்லை. அவரும் என்னைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை.
‘இங்கே குடி வந்து எத்தனை வருஷம் இருக்கும்?’ என்றார். இதற்குள் பழங்களுக்குரிய தொகையைக் கொடுத்திருந்தேன். ‘இருவது ரூவா தான் போட்டிருக்கேன்’ என்ற சலுகையுடன், இந்தக் கேள்வி அவரிடம்.
‘பத்துப் பதினஞ்சு வருஷம் இருக்கும்’ என்று என் பைக் பக்கம் வர, அவரும் சற்று நகர்ந்து வெளியே வருகிறார். உள்ளே நிழலில் இருந்து வியாபாரப் பேச்சுக்கொடுத்த போது இருந்ததை விட, வெயிலில் ஒல்லியாகவும் தளர்ந்தவராகவும் தெரிகிறார். அதிகம் குடித்து ஓய்ந்த ஒருவராக இருக்கலாம்.
‘கல்வெட்டாங் குழிப்பக்கம் வீடுண்ணு தானே சொன்னிய?’ முகம் இளகி இரண்டு புருவங்களுக்கு மத்தியில் மட்டும் கொம்பு மாதிரி இரண்டு பள்ளம்.
‘ஆமா’ நான் அந்தப் பள்ளங்களில் இருந்து அவரை வெளியேற்றிக்கொண்டு இருந்தேன். என் பைக் சீட்டை அவர் துடைப்பது போலத் தடவிக்கொண்டு இருந்தார்.
‘இப்போ அங்கே பூச்சி நடமாட்டம் இருக்கா?’ என்றார். அவர் சொல்லியது நெளிந்து என்னைத் தாண்டிச் செல்வதற்குள், அவரே, ’முன்னால எல்லாம் அந்தப் பக்கம் அது ஜாஸ்தி’ என்றார்.
அவர் ஏதோ ஒரு புதிய திசையை எனக்கும் அவருக்கும் இடையில் உண்டாக்கியிருந்தார். அதில் ’பூச்சிகள்’ சதா ஊர்ந்து நெளிந்து போனபடி இருந்தன. என் பாதையின் குறுக்கே எந்த அவசரமும் இன்றிப் போகிற ஒரு வால் சுழிப்பின் பளபளப்புத் தென்பட்டது.
‘முன்ன மாதிரி இல்லை. இப்ப ஒண்ணும் கண்ணுல தட்டுப்படக் காணும். கீரிப் பிள்ளை நடமாட்டம் எப்பமாவது இருக்கு’ – இப்படிச் சொல்லும் போது எனக்கும் வேறு வேறு நினைவுகள் வராமல் இல்லை.  ஒரு வெள்ளிக்கிழமை வாசலுக்குள் ஏறி வந்த ஒன்று எந்தப் புடைக்குள் போய் ஒளிந்தது என்று இன்றுவரை தெரியாது. பைக் முன் சக்கரத்துக்குள் ஒன்று நசுங்காமல் தப்பித்திருக்கிறது. பக்கத்து வீடு கட்டுமானம் நடக்கும் போது மணல் அம்பாரத்தில் படுத்திருந்த கருப்பு நாய் விடாமல் ‘குலைத்து’ விரைப்பாக எச்சரிக்கை செய்ய, மழைத்தண்ணீர் போலத் தன்போக்கில் ஒன்று அதன் வலசையில் போய்க்கொண்டு இருந்தது.
அவர் இன்னும் அதே திசையில் தான் பார்த்துக்கொண்டு இருந்தார்.  கை தன் தடவலை நிறுத்தி பைக் சீட்டின் மத்தியில் அப்படியே படர்ந்திருந்தது.
‘சொல்லி வச்சது மாதிரி, டாண்ணு விடியக்காலம் வடக்கே இருந்து தெக்கே போகும். அதே மாதிரி சாயுங்காலம் டாண்ணு தெக்கே இருந்து வடக்கே திலும்பி வரும். மாயம் மாதிரி இருக்கும். ஒண்ணும் செய்ய ஓடாது. கன்னத்துல போட்டுக்கிட்டுக் கும்பிடுகிறதோடு சரி’ – அவர் குறுக்குக் கை போட்டு இரண்டு கன்னங்களிலும் போட்டுக் கொண்டார்.
‘பால் காய்ச்சி வந்த புதுசில நாங்களும் பார்த்திருக்கோம்’ நான் அவரிடம் சொன்ன போது, அவர் என் கைகளைப் பிடித்துக்கொண்டார். ‘ நல்லா இம்புட்டு நீளம், இரு பாகம் சைஸுக்கு இருக்கும்’ அவர் இரண்டு கைகளையும் அகலமாக விரித்திருந்தார்.
‘ஆமா. பார்த்திருக்கேன்’ என்றேன்.
‘அப்படியா. சார்வாளும் பாத்திருக்கேளா?’
கண்ணெதிரே அது மீண்டும் தெரிவது போல, நான் தலையை மட்டும் அசைத்தேன்.
அவர் வேறு ஒன்றும் சொல்லவில்லை. ‘இப்போ சரியாப் போச்சா?’ என்றார். ‘‘எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே, இருக்கேண்ணு அதான் முதல்லே இருந்தே தோணிக்கிட்டு இருந்தது’ என்று பைக்கின் மேல் வைத்திருந்த கையை எடுத்து விலகிக் கொண்டார்.
*
இரண்டு அந்நியர்கள் தங்களுக்குள் பரிச்சயத்தை ஏற்படுத்திக் கொள்வதற்கு எப்படி முயற்சி செய்கிறார்கள் என்பதற்கான உதாரண சம்பவம் இது.
அந்த இரண்டு பேரும் ஒருவருக்கொருவர் அந்நியர்கள் இல்லை;  அவர்களுக்குள் நேரடிப் பழக்கமில்லை என்று வேண்டுமானால் சொல்லிக் கொள்ளலாம். 

பழக்கம், உண்மையாகவே கடினமான வார்த்தை. இடத்திற்கேற்றார் போலும், ஆட்களுக்கு ஏற்றார் போலும் அதன் கனம் கூடுகிறது.  

இரண்டு பேர் பழக முயற்சிக்கிறார்கள் என்று சொல்லலாமா? ஆனால், அதுவும் முழுக்க சரி இல்லை. 

கதைசொல்லியை விடவும் பழக்கடைக்காரர் தான் பழகிக் கொள்ள பெரிதும் விரும்புகிறார். இதற்கு நிறையக் காரணங்கள் சொல்ல முடியும்.  ஆனால், நான் அதற்குள் செல்ல விரும்பவில்லை. அந்தப் பழக்கம் எவ்வாறு நிகழ்கிறது என்று அறிவதே என் நோக்கம்.

தமிழ்ச் சூழலில் அந்நியரல்லாத இரண்டு புதியவர்கள் எவ்வாறு சந்தித்துக் கொள்கிறார்கள் என்பது தான் விஷயம்.

அந்தப் பழக்கடைக்காரர், கதைசொல்லியைப் பார்த்ததுமே ஒரு வினோத உணர்வால் தாக்கப்படுகிறார். 

‘இன்றைக்குத் தான் முதன்முதலாகப் பார்க்கிற இந்த ஆளை, நான் ஏற்கனவே பார்த்திருக்கிறேன்’.   

இதற்கு, பாரம்பரிய அறிவியல் ‘பூர்வ ஜென்ம பந்தம்’ என்ற பதிலைச் சொல்கிறது. காவியங்களில் பெரும்பாலும் இப்படித் தான் நடக்கிறது. பழக்கடைக்காரர் போலவே திகைக்கிற நபர்களிடம், ‘முந்தைய ஜென்மத்தில் பழகிய பழக்கம், இந்த ஜென்மத்தில் மிச்ச சொச்சமாகத் தொடர்கிறது’ என்று தான் காப்பியங்கள் கதை கட்டுகின்றன.  இப்படிச் சொல்வதன் மூலம் அந்த வினோத உணர்வை கொன்றும் தின்று விடுகின்றன.

இதே போல, ‘பூர்வ ஜென்மக் கதை’களின் நலிந்த வடிவம் ஒன்றும் நம்மிடம் இருக்கிறது. அந்த இரண்டு பேரின் மூதாதையரை விசாரித்து, அக்குடும்பங்களுக்கு இடையே ஏதாவது ஒரு பந்தத்தை உருவாக்க முடிந்தால், அது தான் அந்த நலிந்த வடிவம்.  அதன் பின், ’ஓ… இன்னார் பேரனா? அதானே பாக்கேன்!  சரி தானே!’ என்று அசுவராஸ்யமாக அந்த வினோத உணர்வைக் கடந்து சென்று விட முடிகிறது. ஆனால், பழக்கடைக்காரர் இப்படியெல்லாம் செய்யவில்லை.    

அந்தக் கதையும் கூட அப்படியெல்லாம் செய்யவில்லை.  பூர்வ ஜென்ம பந்தமோ, மூதாதை பரிச்சயமோ இல்லாத இரண்டு புதியவர்கள் ஒருவருக்கொருவர் எவ்வாறு நெருங்கி வருகிறார்கள் என்பதையே அந்தக் கதை பேசத் தொடங்குகிறது.  அந்தக் கதையில் ஏதோ புதுசாய் இருக்கிறது என்று நாம் உணர்வது இது தான்.

நான் ஏற்கனவே குறிப்பிட்டது போல, அந்த வினோத உணர்வு பழக்கடைக்காரருக்கு சொந்தமானது. புராணியத்தின் மூலமோ அல்லது வரலாற்றின் மூலமோ அதை அவர் சிதைக்க விரும்பவில்லை.   இதனால், அவ்வினோத உணர்வைப் பின்தொடரும் சாகசத்தை அவர் தனியாகவே ஆரம்பிக்கிறார்.

கதைசொல்லிக்கோ இந்த சுவராஸ்யம் முதலில் பிடிபடவில்லை. அவர் பழுத்த வாழைப்பழம் வாங்க மட்டுமே வந்தவர்.  வியாபாரத்தையும் கடந்து ஒரு பரிச்சய உணர்வு அங்கே தொழிற்படுகிறது என்று தெரிந்தாலும் கூட, ‘கரிசனத்தோடு யார் ஒருவரைப் பார்த்தாலும் அந்த முகம் தெரிந்த முகமாகி விடும்’ என்ற பிரபஞ்சவிதி அவரிடம் இருப்பதால் அவர் நிறைய பதில்களோடு காணப்படுகிறார். தமிழில் நவீனக் கலைஞர்கள் பெரும்பாலும் இப்படித்தான் - வினோதத்தை முதல்  பார்வையில் தவறவிடுகிறார்கள்.  

தனியன்களை விடவும் அவர்களுக்குப் பொதுமைகள் தான் நிஜமானவை.  எனவே, இவ்வுலகிலுள்ள மனிதர்கள் அனைவரும் ஏதோவொரு வகையில் எல்லோருக்குமே பரிச்சயமானவர்கள் தான் என்று அவர்களின் மனம் கெட்டி தட்டிப் போயிருக்கிறது. எனவே, தெரிந்தவர் - தெரியாதவர் என்ற பாகுபாடெல்லாம் அவர்களிடம் இல்லை. அந்த வகையில் பழக்கடைக்காரர், கதைசொல்லிக்குப் புதியவர் அல்ல; அல்லது, எல்லா வயோதிகர்களும் அன்பு செய்யப்பட வேண்டியவர்கள் தானே என்று கதைசொல்லி பதில் சொல்லக்கூடும்.  

இது போல, இன்னும் விதவிதமாகக் கூட அவர் பதில் சொல்லலாம் - எல்லா சிறுவணிகர்களும் நமது கரிசனத்திற்கு உரியவர்கள், இல்லையா?;  கிராமங்களை விட்டு இடம்பெயர்ந்து வந்து குறுநகரங்களில் வயிற்றுப்பாட்டிற்காக உழைக்கும் அத்தனை பேரும் நமக்கு வேண்டிவர்கள் தான்; அப்படித்தானே?

தமிழில் கலைஞர்கள் பிரஸ்தாபிக்கும் இத்தகைய பிரபஞ்ச உணர்வை அடைவதற்கும் சில பயிற்சிகள் தேவைப்படுகின்றன.  இதற்காக, ஆன்மீக பாய்ச்சல் ஒன்றை அவர்கள் நிகழ்த்த வேண்டியிருக்கிறது. நமது கதைசொல்லி இத்தகைய பயிற்சிகள் நிரம்பியவர். அதனாலேயே அந்த வினோத உணர்விற்கு (எங்கியோ பாத்துருக்கமா?) அவர் தாமதமாய் வந்து சேர்கிறார்.  வந்து சேர்ந்த பின்பும் அதை விலகி நின்று பார்த்துப் பார்த்து வியந்து போகிறார்.

உண்மையில், அந்த வினோதப் பிரச்சினை பழக்கடைக்காரருடையது.  அதைக் கடக்கும் சாகச பயணத்தில் அவர் கதைசொல்லியையும் வழித் துணைக்கு அழைத்துக் கொள்கிறார், அவ்வளவு தான். ஏனெனில், வினோத சாகசம் கூட்டாகச் செய்ய வேண்டிய பயணம்.  

இதுவொரு முரண். ஆன்மீகத் தேடலில் உலகப்பொதுவான விடைகளை தன்னந்தனியே அடைந்து விட முடிகிறது; ஆனால், தனிப்பட்ட விடைகளைக் கண்டடைய மட்டும் துணையாள் தேவைப்படுகிறது. குறைந்தபட்சம் இரண்டு பேராகவே அதைச் செய்ய முடியும் என்கிறார்கள். பழக்கடைக்காரர் தனது விடையையே தேடுகிறார்; ஆனால், அதை, கதைசொல்லி துணையின்றி அவரால் செய்ய முடிவதில்லை. பொதுமைகளைத் தனியாகவும், தனிமைகளை பொதுவாகவுமே எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

இரண்டு புதியவர்கள் அவர்களை இணைக்கக்கூடிய கண்ணியொன்றை தேடத் தொடங்குகிறார்கள். அந்தக் கண்ணி நிலவியல் சார்ந்ததாக இருக்க முடியுமா என்பது தான் அவர்களது முதல் கேள்வியாக இருக்கிறது. கல்வெட்டாங்குழி, பாளையங்கோட்டை, சந்திப் பிள்ளையார் கோவில் முக்கு என்று அவ்விருவருக்கும் பொதுவான இடங்களைப் பற்றி பேசிக் கொள்கிறார்கள்.  இதில், சந்திப் பிள்ளையார் கோவில் முக்கு ஒரு சாத்தியத்தை வழங்குகிறது. அந்த வெளியில் இரண்டு பேரும் வெவ்வேறு காரணங்களுக்காக புழங்கியிருக்கிறார்கள் - கதைசொல்லியின் வாழிடம் அது; பழக்கடைக்காரர் தொழில் நிமித்தம் அங்கே வளைய வந்திருக்கிறார்.  

ஆனால், நிலவெளி அத்தனை வலுவானக் காரணியாகவும் அவர்களுக்குத் தோன்றவில்லை. பழக்கடைக்காரரை அந்தக் காரணம் திருப்திப்படுத்தவில்லை. கதைசொல்லிக்கும் அதில் உடன்பாடில்லை.  பெளதீக வெளி ஆட்களை ஓரிடத்தில் சேர்க்கிறது; ஆனால், பிணைப்பதில்லை.  பழக்கடைக்காரர் தன் மனதில் வைத்து உதப்பிக் கொண்டிருக்கிற ‘தெரிஞ்ச முகமா இருக்கே!’ என்ற வினோத உணர்விற்கு இது அல்ல பதில்.  

பழக்கடைக்காரர் இப்பொழுது பாம்புகளின் நடமாட்டத்தைப் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார்.  அது வரை முகதாட்சண்யத்திற்காகப் பேசிக் கொண்டிருந்த கதைசொல்லி இப்பொழுது முழு மூச்சாய் அவ்வுரையாடலில் பங்கேற்கத் தொடங்குகிறார்.  ஏனெனில் பாம்புகள் பற்றிச் சொல்வதற்கு அவரிடமும் ஏராளமான அனுபவங்கள் உள்ளன.   

இப்பொழுது, பழக்கடைக்காரர் ஒரு குறிப்பிட்ட பாம்பைப் பற்றியும், அதன் நடமாட்டத்தைப் பற்றியும் விசாரிக்க ஆரம்பிக்கிறார். அந்த ‘நடமாட்டத்தை’ கதைசொல்லி தானும் கண்டிருப்பதாகச் சொன்னதும் இருவருக்கும் எல்லாமும் விளங்கி விடுகிறது.  

பழக்கடைக்காரர் தனது வினோத உணர்விற்கான காரணத்தைக் கடைசியில் கண்டுபிடித்து விடுகிறார்.  

அவரும் கதைசொல்லியும் ‘ஒரே பாம்பின் நடமாட்டத்தை’ பார்த்திருந்தவர்கள் என்ற தகவல் அவர்களுக்கிடையிலான இனந்தெரியா பிணைப்பை விளக்கி விடுகிறது.

இச்சம்பவத்தில் சிறுகதைக்கான கூறுகள் நிறைய இருக்கின்றன.  குறிப்பாக, அந்தக் கடைசிப்பகுதியின் மாயத்தன்மை இதை சிறுகதை என்றே நிறுவி விடுகிறது.  ஒருவரை ஒருவர் ‘தெரிஞ்ச முகம்’ என்று உணர்வதற்கு, நேரடியாய் பார்த்து பழகியிருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை என்று யோசிப்பது தான் இதில் மாயாஜாலம்.  

இரண்டு விதமான மனநிலைகள் அந்தக் கதையில் செயல்படுகின்றன: இரண்டு புதியவர்கள் சந்தித்துக் கொள்ளும் போது ஒருவர் ‘வினோத உணர்வை’ அடைவதும், இன்னொருவர் அது குறித்து விட்டேத்தியாக இருப்பதும்.  

அதே போல, ’நான்’ என்று ஒருமையில் சொல்லப்படும் இந்தக் கதைக்குள் செயல்படும் முரண், மாயத்திற்கும் யதார்த்தத்திற்குமானது.  பழக்கடைக்காரரின் மாயம், கதை சொல்லிக்கு ஆரம்பத்திலிருந்தே வித்தியாசமாகவே தெரிகிறது.  

பாம்பு பற்றி பேசுகிற வரைக்கும் கதை சொல்லியை யதார்த்தம் தான் வழி நடத்துகிறது. ‘அந்தப் பாம்பை நீங்களும் பார்த்திருக்கிறீர்களா? அது தானா விஷயம்?’ என்று பழக்கடைக்காரர் சமாதானமாகும் போது தான் கதைசொல்லிக்கும் அந்த மாயாவாதம் தொத்திக் கொள்கிறது.  அந்த கணத்தில் யதார்த்த கதை சொல்லலை நிறுத்தி விட்டு வினோதக் கதையாக அதை மாற்றி விடுகிறார். 

இப்பொழுது பழக்கடைக்காரரை கதை சொல்லியாலும் ‘தெரிஞ்ச முகமாக’ பார்க்க முடிகிறது.  

ஒரு மாயாஜாலத்தை எந்தவித விளக்கங்களும் இல்லாமல் பார்த்தவுடன் விளங்கிக் கொள்கிற பழக்கடைக்காரரும், அதற்கான காரண காரியங்களை விளக்கிய பின்பு அதனை மாயாஜாலம் தான் என்று ஒத்துக் கொள்கிற கதைசொல்லியும் நிஜமாகவே வேறு வேறு சிந்தனைப் போக்கை உடையவர்கள். பேச்சையும் எழுத்தையும் போல.  இடுகுறித்தன்மையையும் காரண காரியங்களையும் போல.  

பழக்கடைக்காரரின் வாழ்க்கை இது போல் தெரிஞ்ச முகம், தெரியாத முகம் என்றே ஒழுங்கு பட்டிருக்கிறது. இந்தத் தீர்மானத்தை அவர் எந்தத் தர்க்க அறிவோடும் செய்வது இல்லை. அது அவரால் உணரப்படுகிறது. 

அவர் பார்த்த பாம்பின் நடமாட்டத்தைப் பார்த்திருக்கிற ஆட்களை அவரால் எந்தக் கூட்டத்திலும் அடையாளம் கண்டுகொள்ள முடிகிறது. அவர்களது முகமோ, நடையோ, பேச்சோ, தொனியோ, சாயலோ அல்லது வேறு எதுவுமோ அவருக்கு ஒரு குறிப்பைக் காட்டிவிடுகிறது. இதைத் தான் நாம் வினோதம், மாயாஜாலம் என்கிறோம்.  

ஆனால், கதைசொல்லி, மனிதர்களை வேறு மாதிரியாக அணுகப் பயின்றிருக்கிறார். அவருக்குப் பொதுமைகள் மீது எல்லையில்லா பிரேமை. அதை மீறி நிற்கிற எந்தவொரு உணர்வையும் அவர் சந்தேகப்படுகிறார்.

‘இது மாய யதார்த்தவாதக் கதையா?’ என்றால், இந்தக் கதையில் மாயத்தன்மை இருக்கிறது; ஆனால், மாயயதார்த்தவாதம் இல்லை என்பேன். 

மாய யதார்த்தவாதக் கதைக்கான குரலை பழக்கடைக்காரரே வைத்திருக்கிறார். ஒரு கணம், இந்த நிகழ்வை பழக்கடைக்காரர் கோணத்தில் சொல்லிப் பாருங்கள். அதில், சிறுகதைக்கான முரண் இருக்காதாய் இருக்கும்; ஆனால் மாய யதார்த்தவாதம் இருக்கும்.  ஆனால், வண்ணதாசன் கதையிலோ யதார்த்தவாதமே மேலோங்கி  நிற்கிறது. அந்த யதார்த்தவாதமே ‘வினோத’ உணர்வை தோற்றுவிக்கிறது. 

இந்த இரண்டும் எந்தப் புள்ளியில் வேறுபடுகின்றன என்பது நமக்கு முக்கியம்.  

வண்ணதாசன் சொல்லக்கூடிய கதை, ‘மாய யதார்த்த பழக்கடைக்காரர்’, ‘யதார்த்தக் கதைசொல்லி’யைச் சந்தித்தது பற்றியது.  அந்த சந்திப்பில், தான் நம்பும் நியதிகளை மாயக்காரர் யதார்த்திக்கு சொல்லித் தருகிறார்.  யதார்த்தி அதைக் கண்டு வியக்கிறார். அந்த வியப்பையே நமக்கும் கடத்துகிறார்.  

சுருக்கமாகச் சொன்னால், மாயப் பழக்கடைக்காரர் ‘பரிச்சயம் - பரிச்சயமற்றது’ என்று எவ்வாறு வகைப்படுத்துகிறார் என்பதை  கதைக்காரர் நமக்குச் சொல்கிறார்.  மாயக்காரரின் உத்தியில் வினோதம் நிரம்பியிருப்பதால் அது நமக்குக் கலையாகத் தெரிகிறது. கலை என்றால் இங்கு புனைவு என்று பொருள்.  

மாயக்காரரின் யதார்த்தம் நமக்கு நாடகம். ஆனாலும், அதன் பின்னுள்ள கரிசனத்தை முன்னிட்டு நாம் அந்தப் புனைவிற்கு அதீத முக்கியத்துவம் தருகிறோம்.  ஆனாலும் நமக்கு அது புனைவு மட்டுமே. யதார்த்த வகையில் அடங்காது. அந்த வகையில், பழக்கடைக்காரரின் வாழ்க்கை நம்மைப் பொறுத்த வரையில் விளக்க முடியா பெரும் புதிர்.  

வண்ணதாசனின் எழுத்து முறையில் இப்படியானப் புதிர்களைக் கண்டு வந்து சொல்லுதல் மிக முக்கியமான உத்தியாக செயல்படுகிறது.  அந்தச் சம்பவத்தைக் கூட நாம் இப்படித் தான் புரிந்து கொள்ள வேண்டும் - ஒரு வெகுஜன மனதை, நவீன மனம் சந்திக்கும் போது நடக்கும் விந்தை இது!

அந்த இரண்டு பேரும் தங்களது பேச்சினூடாக ஒரு பாம்பு அனுபவத்தை பகிர்ந்து கொள்வது தான் அந்தக் கதையின் திருப்பு முனை.  சாலையின் ஒரு புறமிருந்து மறுபுறம், அதற்கென்றிருக்கிற ஏதோவொரு காரணத்திற்காக, தினசரி சென்று கொண்டிருந்த நாகத்தை ‘நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? நானும் பார்த்திருக்கிறேன்!’ என்று பழக்கடைக்காரர் கேட்டதும் எல்லாமே துலங்கி விடுகிறது. ‘பரிச்சயமான முகம்’ என்று தோன்றியதற்கானக் காரணம் அவருக்குக் கிடைத்து விடுகிறது.

நேரில் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை; பழகியிருக்க வேண்டிய அவசியமில்லை; தொன்மத் தொடர்போ, வரலாற்றுத் தொடர்போ கூட தேவையிருக்கவில்லை.  ஒருவர் இன்னொருவரை அறிந்திருப்பதற்கு, இரண்டு பேருக்கும் பொதுவான ஒரு நிகழ்வு போதுமாக இருக்கிறது.  

அந்த நிகழ்வைக் கூட அவர்கள் ஒரே சமயத்தில் எதிர்கொண்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அவர்களை இணைப்பது, பாம்பு குறித்த நிகழ்வும் அதையொட்டி அவர்கள் அடைந்த கிளர்ச்சியுமே. சொல்லப்போனால், அவர்கள் இருவரும் பரிமாறிக் கொண்டது ஒரே மாதிரியான கிளர்ச்சியை மட்டுமே.

தமிழ்ச் சூழலில் அரவம் ஏற்படுத்தும் இத்தகையக் கொந்தளிப்பு ஜனரஞ்சகத் தன்மை கொண்டது. அந்தப் பழக்கடைக்காரரும் கதைசொல்லியும் மட்டுமல்ல, அப்படியான சூழலில் எந்தவொரு தமிழரும் கூட அந்தப் பரிச்சய உணர்வில் கரைந்து போயிருக்க முடியும்.  நாக நடமாட்டம் குறித்த எந்தவொரு பேச்சும் தமிழர்களை இணைக்கக்கூடிய வல்லமை கொண்டது.  

இதே போன்ற பரிச்சய உணர்வை பேய்களைப் பற்றிய பேச்சும் ஏற்படுத்தி விடுகிறது. பாம்பு நடமாட்டம் என்று சொல்வதைப் போலவே பேயையும் நடமாட்டம் என்றே நாட்டுப்புறப் பேச்சில் சொல்லி வருகிறார்கள்.  

வண்ணதாசனின் அந்தக் கதையிலிருந்து மிக முக்கியமான சில விஷயங்களை நான் அடையாளப்படுத்த விரும்புகிறேன். தமிழ்ச் சமூகத்தின் சகோதர உணர்வென்பது மொழியால் நடைபெறுகிறது என்று மேம்போக்காய் சொல்லப்பட்டாலும், அதன் அடியாழத்தில் ஒரே மாதிரியான கிளர்ச்சிகளை / கொந்தளிப்புகளைப் பகிர்ந்து கொள்வதே தொடர்ந்து நடைபெற்று வருகிறது.  

பேயின் நடமாட்டம், பாம்பின் நடமாட்டம் போன்றவை இத்தகைய தமிழ்க் கொந்தளிப்புகளை வழங்கக்கூடியவை. எல்லா பண்பாடுகளும், மொழி என்ற எல்லையைக் கடந்து இது போன்ற மனக்கிளர்ச்சிகளையே தங்களது இணைப்புப் புள்ளிகளாகக் கொண்டிருக்கின்றன.  

இந்தக் கொந்தளிப்பான மனநிலையே பண்பாட்டின் சாராம்சமாகவும் செயல்படுகிறது. ‘சமூகவயமாதல்’ என்ற பெயரில் பண்பாட்டின் ஒவ்வொரு அங்கத்தினரும் இத்தகையக் கொந்தளிப்புகளையே பழகிக் கொள்கிறார்கள்; பகிர்ந்து கொள்கிறார்கள். இத்தகையக் கொந்தளிப்புகள் எந்தவொரு ஸ்தூலமான பொருளிலிருந்தும் பெறப்படுவது இல்லை.  அதாவது, பாம்போ அல்லது பேயோ இந்தக் கொந்தளிப்புகளை உருவாக்குவது இல்லை. அவற்றின் ‘நடமாட்டமே’ கொந்தளிப்பின் ஊற்றுக்கண்ணாக இருக்கிறது.  

பாம்பும் பேயும் உலகப்பொதுவான விஷயங்கள். ஆனால், அவற்றை ‘நடமாட்டம்’ என்று விளக்குவது தமிழ்த்தன்மை. 

பாம்பையும் பேயையும் நடமாட்டம் என்று சொல்லச் சொல்வது போலவே, அதனதன் பெயர் சொல்லி அழைப்பதை நாட்டுப்புறப் பேச்சு விலக்கி வைத்திருக்கிறது. அதனால் பாம்பை, பூச்சி என்று அழைப்பதையும், பேயை, கருப்பு என்று அழைப்பதையும் நீங்கள் கவனித்திருக்க முடியும்.  பூச்சி நமக்கு பொட்டு, காத்து ஒரு கருப்பு!


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக