Skip to main content

பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை

பார்ப்பனர் - பிராமணர் பிரச்சினை:

(இதே விஷயங்களை எனது 'அயோத்திதாசர்: பார்ப்பனர் முதல் பறையர் வரை' புத்தகத்தில் விரிவாக எழுதியிருக்கிறேன். தமிழர்களுக்கு புத்தக வாசிப்பு அறிவு குறைவு என்பதால் அதை இங்கே திரும்ப எழுதுகிறேன். திரும்ப எழுதுவது தான் எனது முறையியலும் கூட.)

1
அயோத்திதாசரின் காலகட்டத்தில், வரலாறு மாபெரும் தொழிற்கூடமாக உருவாகிக் கொண்டிருந்தது. மொழியியல், அகழ்வாராய்ச்சி, மானிடவியல் என்று பல்வேறு புதிய தொழில்நுட்பவாதிகள் இணைந்து பணியாற்றிய தொழிற்கூடம் அது (Armenteros, Carolina, 2019, The Enlightened Conseratism of the Malabar Missions: Gaston-Laurent Coeurdoux (1691-1779) and the Making of an Anthropological Classic, in Journal of Jesuit Studies, Vol 6, Iss. 3, page 439-466).

ஒரு புறம் இந்தோ - ஐரோப்பிய மொழிக்குடும்ப ஆய்வுகள் நடைபெற்றன என்றால், இன்னொரு பக்கம் திராவிட மொழிக்குடும்ப ஆய்வுகள்; அதனருகிலேயே சிந்துச் சமவெளி அகழ்வாய்வுகளும், மத்திய ஆசிய அகழ்வாய்வுகளும்; போதாக்குறைக்கு வேத நாகரீக ஆய்வுகளும், பழங்குடியின ஆய்வுகளும் என்று வரலாறு வெவ்வேறு தாழிகளில் கடையப்பட்டுக் கொண்டிருந்தது. எதிரும் புதிருமாகத் தோன்றும் நிலைப்பாடுகள் ஆய்வுகளின் பாலபாடம். அந்த வகையில், ஆரியர் - திராவிடர் முரண், அக்காலத்தின் ஆகப்பெரிய கற்பனையாக இருந்தது.

அக்காலகட்ட வரலாறு எந்தவிதக் கூச்ச நாச்சமுமின்றி ஆரியர் பிம்பத்தை ஊதிப் பெருக்கி வந்ததை நிறைய புத்தகங்கள் சொல்கின்றன (Figueira, Dorothy M, 2002, Aryans, Jews, Brahmins. Theroizing Authority through Myths and Identity, State University of New York Press; Trautmann, Thomas R, 1997, Aryans and British India, University of California Press). காலனிய நலன்களைப் பேணுவதற்காக உருவாக்கப்பட்ட ஆரிய பிம்பத்திற்கான நியாயம் அதனை பிராமணர்களுடன் பங்கிட்டுக்கொள்வதன் மூலம் நேர் செய்யபப்ட்டது.

காலனியர்கள் இந்தியாவை எழுத்துப் பனுவல்களின் சுரங்கமாகவே கற்பனைச் செய்திருந்தனர். சமஸ்கிருத, பாலி, தமிழ் ஏடுகளை வாசித்து முடிப்பதற்காகவே நிறைய ஐரோப்பிய கனவான்கள் மறுபிறப்பில் நம்பிக்கை வைக்கத் தொடங்கினார்கள். மார்க்ஸ் முல்லர் மாதிரியான இந்தியவியல் ஆய்வாளர்கள், ஐரோப்பாவின் காலம், இந்தியாவில் உறைந்து நிற்பதாய் எழுத ஆரம்பித்தார்கள்.

இந்த வகைக் காலனிய வரலாற்றுவரைவியல் இந்தியாவில் வேடிக்கையான திருப்பங்களைக் கொண்டிருந்தது. எழுத்துப் பனுவல்களைப் பாதுகாத்து வைத்திப்பதும், அதிலிருந்து ஞானத்தை உருவாக்கிக் கொள்வதும் வேறு வேறான செயல்பாடுகள் என்ற இந்திய வகைப்பாட்டை காலனிய ஆய்வாளர்கள் அறிந்திருக்கவில்லை.

அவர்களைப் பொறுத்தவரை ஆவணக்காப்பாளர்களே அறிஞர்கள்; நூலகர்களே தத்துவ ஆசிரியர்கள். ஐரோப்பிய மொழியையும் பேசக்கூடியவர்கள், மடங்களில் கோவில்களில் ஏடுகளைப் பராமரிக்கும் பணியைச் செய்தவர்கள், ஏட்டுப் பிரதிகளை நாடெங்கும் அலைந்து திரிந்து சேகரித்தவர்கள், அதனைப் பிறருக்குக் கற்றுத்தரக் கூடியவர்கள் என்ற காரணங்களால், பிராமணர்களே இந்திய ஞான ஆசிரியர்கள் என்று காலனிய மூளைகள் நம்பத் தலைப்பட்டன.

இந்த வேடிக்கையை அயோத்திதாசரே முதலில் சுட்டிக்காட்டுகிறார். இலக்கண அறிவிற்கும், இலட்சண அறிவிற்குமான வேறுபாடுகளைச் சொல்லி பிராமணர்களை ஞானவான்களாகக் காணும் காலனிய மூடத்தனத்தை கேலி செய்ய ஆரம்பிக்கிறார். ஏறக்குறைய பூர்வபெளத்த காலத்தில் பிராமணர்களின் ஞான வேஷத்தை அம்பலப்படுத்திய அதே சூழல் வரலாற்றில் திரும்ப நிகழ்கிறது. காலனிய ஆட்சியாளர்களின், ஆய்வாளர்களின் துணையோடு பிராமணர்கள் மீண்டுமொரு ஞான நாடகத்தை நடத்த ஆரம்பித்தார்கள்.

இதைத் தொடர்ச்சியாக அவர் அம்பலப்படுத்தி எழுதியதால், ‘அயோத்திதாசர் பறையர், பறையர்’ என்று சொல்வதற்கு வசதியாக இருந்தது. ஆனால், அவர் சுட்டிக்காட்டியதைப் போல, நிலமெங்கும் அலைந்து திரிந்த ஞானவான்களே இந்திய இலட்சணங்களை உருவாக்கினர் என்பதை ஆய்வுகலம் வெகு தாமதமாகவே கண்டுணர்ந்தது (Balcerowicz, Piotr, 2016, Early Asceticism in India. Ajivikism and Jainism, Routledge, London and New York).

காலனியத்தின் ‘ஆரிய - திராவிட’ முரண் பொய்யான அடிப்படையில் கட்டப்பட்டிருக்கிறது என்பதை அயோத்திதாசரே முதலில் வெட்ட வெளிச்சமாக்கினார். இந்தியச் சிந்தனை மரபை, ஆரியம் - திராவிடம் என்ற இரட்டை எதிர்மறைகளின் பின்னணியில் விளக்கும் பொழுது அதன் செழுமையான மரபுகள் கறைபடுத்தப்படுகின்றன என்பதே அவரது குற்றச்சாட்டு.

உதாரணமாக, பிராமணர்கள் முன்னெடுத்த வேதமரபின் எதிர்வினையாகவே பெளத்தம் போன்ற அவைதீக மரபுகள் தோன்றின என்பதிலுள்ள ‘மறை மேலாண்மையை’ அவரால் துல்லியமாக விவரிக்க முடிந்தது. வேதவாதம் அல்லது மீமாம்சை இந்தியச் சிந்தனை மரபில் மிகத் தாமதமாகவே வந்து சேர்கிறது என்பது அவரது உள்ளுணர்வு.

இந்திய ஞான மரபில் நடைபெற்ற உருமாற்றங்களை ‘ஆரிய - திராவிட’ முரண் விளைவாக யோசிப்பதை விடவும் ‘வேஷ பிராமணிய’ விளைவாக யோசிப்பதே சரியாக இருக்கமுடியும் என்பதையே அவர் ஒரு கருதுகோளாக முன்மொழிகிறார். இதனை முன்னிட்டே, ‘வேஷ பிராமண எதிர்ப்பு’ என்ற அரசியல் பிரகடகனத்தையும் அவர் பேசத் தொடங்குகிறார்.

அந்த வகையில் ‘இந்திர தேச சரித்திரம்’, அரசியல் திட்ட வரைவிற்கான வாதப்பிரதிவாதங்களைக் கொண்ட நீண்ட வியாசம். காலனிய - வேஷ பிராமணியக் கூட்டால் கட்டமைக்கப்படும் இந்திய வரலாற்றிற்கான மாற்றாகவே அது முன்வைக்கப்படுகிறது.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக