Skip to main content

தேவேந்திரம் பிராமணம் அதர்மத் திராவிடம்

தேவேந்திரர் புராணத்தில் இரண்டு வரலாற்று மோதல்கள் அடையாளப்படுத்தப்படுகின்றன. ஒன்று, நெல் வேளாண்மைக்குத் தேவையான காளைகளை வைதீக வேள்வி வன்முறையிலிருந்து காப்பாற்றும் முகமாக உருவாகிய முரண்; மற்றொன்று, பாரம்பரிய நிலங்களையும் நீர் நிலைகளையும் பறிகொடுத்த போது எழுந்த முரண்.

*

முதல் முரண் வரலாற்றில் பெளத்த - வைதீக முரண் என்று அழைக்கப்படுகிறது. இந்த முரணில், அரசியல் படுத்தப்பட்ட தன்னிலையே ‘தேவேந்திரன்’. அதன் எதிர்நிலை ‘பிராமணம்’. அந்த வகையில், தேவேந்திரத் தன்னிலையின் இன்றியமையாத ஒரு பகுதி, ‘அபிராமணம்’. வாய்மொழி மற்றும் எழுத்து மரபுகள் தேவேந்திரன் என்ற பெயரை பெளத்தத்தோடும், நெல் விவசாயத்தோடும், தீண்டாமையோடும் தொடர்பு படுத்துவதைக் கொண்டே நாம் இந்த முடிவிற்கு வருகிறோம். கால் நடைச் சமூக வாழ்விலிருந்து கிளைத்திருக்கக்கூடிய வேள்வி மரபு, வீணே கொல்லும் விலங்குகள் வேளாண் சமூகத்திற்கான உயிர் நாடியாக மாறும் பொழுது, அதை எதிர்த்து வெகுஜனக் கொந்தளிப்பொன்ரு உருவாகியிருக்க வேண்டும்.

இந்தக் கொந்தளிப்பை எதிர்கொள்ள முடியாத பிராமணர்கள் வேள்வி உயிர்க்கொலையை நிறுத்தினார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அநாவசியமாக உயிர்களைக் கொன்றதையும் அதற்கு எதிராக ஒட்டுமொத்த வெகுஜனமும் கிளர்ந்தது என்ற வரலாற்று துர்ஞாபகத்தையும் புலால் மறுப்பின் மூலமாகவே பிராமணர்கள் கடந்து வருகிறார்கள். ஏறக்குறைய, இது அயோத்திதாசர் சொல்லும் வேஷ பிராமணத்திற்கு இணையானது.

*

எப்படி என்று பார்க்கலாம். அநாவசிய உயிர்வதையைக் ‘கொல்லாமை’ என்று விளக்குவதில் ஒரு அரசியல் கருத்தாக்கம் இருந்தது. அதுவொரு தத்துவார்த்த நிலைப்பாடு. பெளத்தம் இதை மிகச் சாதுர்யமாக விளக்குகிறது. அநாவசிய உயிர்வதை வேறு உணவுக்கான வேட்டை என்பது வேறு. இந்த இடத்திலேயே பெளத்தம் காரணம் வேறு காரியம் வேறு என்று வாதிடுகிறது. வேள்வியின் போது செய்யப்படும் கொலை காரணங்கள் அற்றது, அதாவது ‘இல்காரியம்’. ஆனால், உணவுக்காகச் செய்யப்படும் கொலை காரண காரியம் உடையது. எனவே, அது கொல்லாமையின் கீழ் வராது என்பதே பெளத்தத்தின் வாதம்.

ஆனால், பிராமணம் புலாலுண்ணாமையை புலால்மறுப்பாகவே கொண்டாட விரும்புகிறது. தத்துவார்த்த உரையாடலை பகட்டாக மாற்றும் தருணம் இது. இதுவே பிராமணத்தின் வறட்டுத்தனம். இந்திய சமூக வரலாற்றில், இது போன்று பகட்டான வறட்டுத்தனம் வெளிப்படும் தருணங்களை நாம் தொடர்ச்சியாகச் சுட்டிக் காட்ட முடியும். இதன் அடிப்படை வெகுஜனத் தளத்தில் மாயத்தை தோற்றுவிப்பது. உண்ணாமையை மறுப்பாக மாற்றிக் காட்டுவது போல. அறம் அல்லது ஒழுக்கத்தை சடங்காக மாற்றியமைப்பது போல.

இதையே, அயோத்திதாசர் இலட்சணத்தை இலக்கணமாக மாற்றுதல் என்கிறார். இங்கே, இலட்சணமே யதார்த்தம்; இலக்கணமோ வேஷம். 

இந்திய வரலாற்றின் ஒவ்வொரு தருணத்திலும், பிராமணர்களின் கோபம் தம்மைத்தாமே கணித சூத்திரங்களாக மாற்றிக் கொள்வதில் தான் வெளிப்படுகிறது. இதற்கு ஏராளமான உதாரணங்களை நம்மால் சொல்ல முடியும் - புலால் மறுப்பு, சமஸ்கிருத மேன்மை, சடங்கியல் தூய்மை, பரதக்கலை, சிற்றிதழ் இலக்கியம், இன்னபிற.

*

‘கொல்லாமை’ குறித்து வரலாற்றில் முகிழ்க்கக்கூடிய இத்தகைய விரோதத்தை ‘பிராமணர் - தேவேந்திரர் முரணாக’ வளர்த்தெடுப்பதே தேவேந்திரர் புராணத்தின் மையச் சரடு. கவனித்துப்பார்த்தால், இதில் வெளித்தெரியும் படியான தர்க்கக் கேடுகள் இருப்பது விளங்கும். 

கால்நடைகளை வேள்விப்பலி கொடுப்பது குறித்து தேவேந்திரர் மட்டுமே அக்கறை கொண்டிருந்தார்கள் என்று சொல்வதற்கில்லை. அதுவொரு பெருந்திரள் கலகம். பெளத்தம் போன்ற மதங்கள் அதைப் பிரதிபலிக்கின்றன என்பதே அக்கலகத்தின் வீரியத்தை நமக்கு விளக்குகிறது. இந்த இடத்தில் தான் ‘தேவேந்திரர்’ என்பது இன்றைக்கு அதை புராண ஞாபகமாகக் கொண்டிருக்கும் ஒரு சாதியின் அடையாளமாக மட்டுமே இருந்திருக்க அவசியமில்லை என்றும், அது தோன்றிய காலத்தில் வேள்விப் பிராமணியத்தை எதிர்த்த அத்தனை பெளத்தர்களின் (ஏறக்குறைய அனைத்து தமிழர்களின்) அரசியல் தன்னிலையாக இருந்திருக்கவே வாய்ப்புகள் உள்ளன என்பது நமக்கு விளங்குகிறது. ஒருவர் ஒரு விஷயத்தை ஞாபகம் வைத்திருக்கிறார் என்பதால் அது அவருக்கு மட்டுமானது என்று அர்த்தம் இல்லை. ஞாபகமும் மறதியும் மற்றவர்களுக்கானது மற்றவர்களால் ஆனது.

*

அதே வேளை, வேள்விகளில் ஈடுபட்டிருந்த பிராமணர்கள் அந்த வெகுஜன எதிர்ப்பிற்கு உடனடியாக அடிபணிந்தார்கள் என்பதும் உண்மை. பின் அக்கருத்தை உட்செரித்தார்கள் என்பதும் உண்மை. இதுவே வேஷ பிராமண தந்திரம். வெகுஜன நிர்பந்தங்களுக்கு கண்மூடித்தனமாய் அடிபணிவது. உயிர்வதை கூடாது என்றால், கொல்லாமை என்பது; மொழிப்பற்று என்றால், மொழித்தூய்மை என்பது; உண்ணாமை என்றால் மறுத்தல் என்பது. இதையெல்லாம் யோசிக்கும் பொழுது, தேவேந்திரர் - பிராமணர் பகைக்கும் அயோத்திதாசர் கற்பனை செய்யும் பறையர் - பிராமணர் பகைக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன என்பது விளங்கும். 

தேவேந்திரர் - பிராமணர் முரணில், இரண்டுமே சாதியைக் குறிப்பன அல்ல; அவை, முரண்பட்ட இரு வேறு அரசியல் தன்னிலைகள் என்பது முக்கியம். எவ்வாறு தேவேந்திரர் என்பது வேள்விப் படுகொலைகளை எதிர்த்த பெளத்த வெகுஜனத் தன்னிலையோ அதே போல, பிராமணர் என்பது அவ்வெகுஜன அரசியலுக்கு அடிபணிந்து பகட்டான வறட்டுத்தனத்தை உணவு முறையாக அறிவிக்கும் அத்தனை சமூகக் குழுக்களின் தன்னிலையுமாகும். புலால் மறுத்த சைவ உணவைப் பண்பாடு என்று சொல்லும் அத்தனை பேரும் பிராமணத்தன்னிலை உடையவர்கள் என்றே பொருள்.

இன்னொரு கோணத்தில், தேவேந்திரத்தோடு பகையொன்றை நீடிப்பதற்கான நிர்பந்தம் எதுவும் பிராமணத்திற்கு இருக்கவில்லை. ஏனெனில், தங்கு தடையற்ற வேளாண் உற்பத்தி பிராமண வாழ்வாதாரங்களைச் செழிப்போடு வைத்திருக்கத் தேவை என்பதையும், அது தேவேந்திரர்களால் மட்டுமே சாத்தியம் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தனர். எனவே, இந்திர தேச சரித்திரத்தில் அயோத்திதாசர் கற்பனை செய்வது போன்ற நேரடியான தொழில் மோதல்களை தேவேந்திரர் புராணத்தில் நம்மால் கற்பனை செய்ய முடியவில்லை.

ஆனால், அதே நேரம், தேவேந்திரர்களின் விவசாய நிலங்களை தந்திரமாய் கோவில் என்ற அமைப்புகளுக்குள் கொண்டு வந்த செயலில் பிராமணத் தன்னிலைக்குக் கணிசமான பங்கிருந்தது. அது புராணக்கதைகளில் போல ஒற்றை சூழ்சியால் நிகழ்ந்திருக்க வாய்ப்பில்லை. அதாவது, காரணங்களற்ற காரியங்களாக இருந்திருக்க சாத்தியமில்லை. 

பொன்னையும் மண்ணையும் பெண்ணையும் கூட கோவில்களுக்குச் சொந்தமாக்கிய திட்டம் எங்கே முகிழ்த்திருக்க முடியும், அவற்றிற்கான சமூகத் தேவைகள் என்னவாக இருந்திருக்கும், அத்தேவைகள் கரைந்த பின்பும் அக்காரியங்களைத் தொடரச் செய்வதில் யார் யாருடைய நலன்கள் பாதுக்கப்பட்டன என்பதை விவரிப்பதே சரியான மாற்று வரலாற்றுவரைவியலாக இருக்க முடியும்.

*

எந்தவொரு சமூகத் திட்டமும் முகிழ்க்கும் பொழுது ‘தந்திரம்’ இல்லை. அவற்றிற்கான சமூக நியாயங்கள் நிச்சயமாய் இருக்கின்றன. இந்தியா மாதிரியான பெருஞ்சமூக அமைப்பில் நியாயங்களற்ற எதையும் யாரும் அறிமுகம் செய்துவிடவும் முடிவதில்லை. நியாயங்களின் தராதரத்தில் வேண்டுமானால் வேறுபாடுகள் இருக்க முடியும்.

ஆனால், சமூகச் செயல்பாட்டின் நியாயங்களை காலத்தால் அதர்மம் நோக்கி அழைத்துச் செல்ல முடியும். அறிமுகமாகும் பொழுது தர்மமாகவே அறிமுகமாகிற சமூக ஒழுங்கை, உற்சாகம் தரும் நவீனமாகவும், நம்பிக்கை தரும் வளர்ச்சியாகவுமே சமூகம் கொண்டாடுகிறது. ஏனெனில், நல்மாற்றத்தை அது உறுதியளிக்கிறது.

எல்லா வெகுஜன மாற்றங்களும் நியாயதர்மக் கடப்பாடுகளை உடையவை. அந்த மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பழகி, நிலைபெறத்தொடங்கும் பொழுதே அதனுள் தூயதந்திரங்களும் சூழ்ச்சிகளும் குடிபுகத் தொடங்குகின்றன. அதாவது, மாற்றங்களுக்கான காரணங்கள் வலுவிழந்து போகின்றன என்ற அறிகுறி இது.

நியமப்பப்படி, காரணங்கள் அழிந்தன என்றால் காரியங்களும் அழிந்துபட்டிருக்கவேண்டும். ஆனால், சாதாரணமாக அப்படி நிகழ்வது இல்லை. காரணங்களற்ற காரியங்கள் பழக்கவழக்கங்களாகவும், மரபாகவும், வழக்காறுகளாகவும், பாரம்பரியமாகவும், ஐதீகமாகவும் தொடர்ந்து கடைபிடிக்கப்படுகின்றன. பூர்வீகக் காரணங்களை இழந்த காரியங்கள் இடுகுறித்தன்மையப் பெறத் தொடங்கும் புள்ளி இது.

இதுவொரு வெகுஜனச் செயல்பாடு. ஏனெனில், வெகுஜனம் இடுகுறி போதை நிரம்பியது. எந்தவொரு மாற்றத்தையும் வழக்கமாக்கியே அது பழகியிருக்கிறது. இதனால் அது என்றைக்குமே இடுகுறியை ‘இடுகுறி’ என்று ஒத்துக் கொண்டதில்லை. பெயருக்காகவாவது ஒரு காரணத்தைக் கற்பனை செய்து கொள்கிறது - அது பொய் என்று தெரிந்தாலும். இதையே நான் ‘பாசாங்கின் பாசாங்கு’ என்று பெயரில் அழைக்கிறேன்.

விளைநிலங்களை கோவில்களுடன் பிணைத்த காரியம் ஆரம்பத்தில் தர்மமாகவும் காரணம் மருவிய காலத்தில் (இல்காரியமாக மாறும் பொழுது) அதர்மமாகவும் மாறுகிறது என்றே சொல்ல வேண்டும். எல்லா நவீனமும் அடிப்படையில் தர்மமே; அது மரபாகக் கொண்டாடப்படும் பொழுதே அதர்மமாக மாறுகிறது. பின்னைநவீனமே அந்த அதர்மத்தை விவாதத்திற்கு உட்படுத்துகிறது.

*

இதன் சமீபத்திய அரசியல் உதாரனம் திராவிட இயக்கங்களின் பிராமண எதிர்ப்பு. ஆரம்பத்தில் அதுவொரு நவீன அரசியல் கோட்பாடு. அதற்கான நியாய தர்மங்கள் தெளிவாக இருந்தன. அது, பிராமணிய மேலாண்மையை எதிர்த்த மிகச் சிறந்த செயல்திட்டமாக இருந்தது. இந்த இடத்திலேயே பெரியாரின் பங்களிப்பு மிகச்சிறப்பானது என்று பாராட்டுகிறோம். 

ஆனால், திராவிட இயக்கங்களின் தோற்றக் காரணங்கள் அழிந்த பின்பும், அதை இல்காரியமாக தொடர்ந்து கொண்டிருப்பதை தமிழ்ச் சிந்தனை மரபு ‘அதர்மம்’ என்றும் மாற்றத்தை மறுக்கும் நிலைத்தன்மை என்றுமே விமர்சிக்கிறது. அதனுள் தூயதந்திரங்களும் சூழ்ச்சிகளும் இடம்பெறத் தொடங்குகின்றன. 

இன்றைக்கு அந்த 'அதர்மத் திராவிட இயக்கங்கள்' முன்னிறுத்தும் பெரியார் என்ற பிம்பம் உறை நிலையில் தோன்றுவதும் இதனால் தான். வாழ்ந்த காலமெல்லாம் மாற்றத்தை ஆதரித்து மட்டுமே பேசிக் கொண்டிருந்த நபரின் கருத்துக்கள் பின்னாளில் மாற்றத்தை மறுப்பவையாக மாறுவதே இயல்பு. 

ஏனெனில், நவீனம் என்பதும் மாற்றம் என்பதும் சிந்தனையோ பொருளோ அல்ல, அதுவொரு தத்துவார்த்த நிலை. கடலில் மிதக்கும் கப்பலே ஆகி வந்த உதாரணம். கப்பல் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகரலாம். நீரோட்டமும் மாறலாம். கடலில் வீசும் காற்று ஓங்கலாம், தாழலாம். ஆனால், இதில் எதுவும் மாற்றத்தைத் தீர்மானிப்பது இல்லை. 

மாறாக, மாற்றம் என்பது கடலின் நீர்மை. அந்த வளவளப்பும் அடர்த்தியும் ததும்பலுமே எல்லா மாற்றத்தையும் சாத்தியப்படுத்துகிறது. நீர்மையே மாற்றம். நீர்மையே தர்மம். திராவிட இயக்கங்கள் இந்த நீர்மையையே இழந்து விட்டன.

Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக