கேள்வி:
பாபர் மஸ்ஜித்தை இடித்து விட்டு, ராமருக்குக் கோவில் கட்டுவதை எப்படி அணுகுவது?
பதில்:
அந்த விஷயத்திலிருந்து தொலைதூரம் விலகி வந்து விடுவது தான் நமது அணுகுமுறையாக இருக்க வேண்டும்.
காலம்காலமாகத் தமிழகம், இது போன்ற இந்திய வெறித்தனங்களிடமிருந்து தப்பித்து வருவது இந்த விலகல் மனப்பான்மை மூலம் மட்டுமே. தென்னிந்தியாவிற்கென்று தனி மொழிக்குடும்பம், தனி வரலாறு, தனி பண்பாடு, தனி நிலப்பரப்பு, தனி யோசனை என்று வலியுறுத்தி வருவதற்கான முக்கியமான காரணம் இது. வட இந்தியா என்று அழைக்கப்படும் கங்கைச் சமவெளி குரோதம் நிரம்பிய சிதறல்களால் செய்யப்பட்டிருக்கிறது. அவர்கள் நமக்குச் சொல்வது போல, மொழி அடிப்படையில் கூட அங்கே ஒருங்கிணைப்பு சுத்தமாகக் கிடையாது. சமூக நீதியை வட இந்திய சமூகங்கள் ஒரு பேச்சுக்குக் கூட இன்னமும் கையிலெடுக்கவில்லை. அம்பேத்கர் என்ற ஒரு நபர் வரலாற்றில் இல்லையென்றால், வட இந்தியாவை நாம் மிகத் தாராளமாக ‘காட்டுமிராண்டி நிலம்’ என்று சொல்லிவிடமுடியும். மத அபிமானத்தை வெறியாக வளர்த்து வந்த வரலாறு அவற்றிற்கு உண்டு.
தமிழகத்தின் மிகப்பெரிய சிக்கல், இந்த வெறித்தனத்திலிருந்து கவனமாக விலகி நிற்பது தான். வரலாறு நெடுக நாம் இதைத்தான் செய்து வந்திருக்கிறோம். அதனாலே கூட, எந்தவொரு வெறிக்கும் எதிரான குண இயல்புகளை தமிழ் கொண்டிருக்கிறது. மத வியாபாரத்திற்கு எதிரான குரல்கள் தமிழகத்தில் தொடர்ந்து பிரபலமாக இருந்து வருவதன் சூட்சுமமும் இதுவே.
‘தமிழ் தேசியம்’ என்ற பெயரில் பேசப்படும் அத்தனை விஷயங்களும் அரசியல் அதிகாரம் சார்ந்த முன்னெடுப்புகள் என்பதை விடவும், ‘இந்தியப் பைத்தியக்காரத்’ தனத்திலிருந்து’ விலகி நிற்பதற்கான முயற்சிகள் என்பதே உண்மை. பாப்ரி மஸ்ஜித் போன்ற சிக்கல்கள் தமிழகத்திற்குள்ளும் நுழைய முயற்சிக்கும் பொழுது, நமது எல்லையை மூடி விடுவதே சிறந்த முடிவு. அவர்கள், அவர்களுக்குள்ளே அடித்துக் கொண்டு ஒரு முடிவை எட்டட்டும் என்று சொல்வதே புத்திசாலித்தனம். பாண்டவர் ஐவரும், கெளரவர் நூற்று சொச்சமும் பெரும் போரில் ஈடுபட்டு, உயிர்களைப் பலி கொண்ட போது கூட, நம்மவர்கள் அவர்களுக்குக் கஞ்சி காய்ச்சி ஊற்றினார்களே தவிர, எந்தத் தரப்பிலும் வாள் சுழற்றவில்லை.
இன்றைக்கும், இந்த இந்தியப் பைத்தியக்காரத்தனத்தில் கலந்து கொள்ளச் சொல்லி நமக்குள்ளேயே குரல்கள் கேட்கின்றன. ராமர் என்றும், ஆண்டாள் என்றும், முருகன் என்றும் இங்கும் பரபரப்புகள் உருவாக்க முயற்சிகள் நடக்கின்றன. இதன் மறுபுறம், இஸ்லாமின் காருண்யம் குறித்த சங்கதிகளும் பரப்பப்படுகின்றன. பாப்ரி மஸ்ஜித்திற்கு மாற்றாக தரப்பட்ட நிலத்தில் மருத்துவமனை கட்டப்போகிறார்கள் என்ற செய்தி அப்படியொன்று. இதில், தமிழ் நியாயம் என்று ஒன்று உண்டு என்றால், அது இவ்விரண்டு தரப்பையும் சரிசமமாய் கரித்துக் கொட்டுவது!
இருபதாம் நூற்றாண்டில், பெரியார் இந்த நிலைப்பாட்டையே ‘நாத்திகம்’ என்ற பெயரில் செய்து காட்டினார். எல்லாவித மத அபிமானங்களையும் பாரபட்சமின்றி மறுத்தல். காலம்காலமாக தமிழ்ச் சித்தர் மரபு இதைத்தான் செய்து வந்திருக்கிறது. சித்தர்களின் கேள்விகளிலும் பெரியாரின் கேள்விகளிலும் தத்துவார்த்த நியாயங்களைத் தேடக் கூடாது. அவை, வடக்கிலிருந்து கிளம்பும் அடிப்படைவாத சிந்தனைகளிலிருந்து தமிழகத்தைக் காக்கும் அரண். எல்லைகளை மூடும் செயல். பெரியாரின் நாத்திகம், பிராமண எதிர்ப்பையும் வலுவாகக் கொண்டிருப்பதற்கானக் காரணம், தமிழகத்து பிராமணர்களே இந்தியத் தூதர்களாக இங்கே பணியாற்றுகிறார்கள் என்பது தான். அது, காங்கிரஸாக இருக்கட்டும், பாரதிய ஜனதாவாக இருக்கட்டும், இந்திய மதவெறித்தனத்தை ‘தேசியம்’ என்ற பெயரில் தமிழகத்தில் விநியோகிக்கிற வேலையை பிராமணர்களே முன்னின்று செய்கிறார்கள்.
இந்தச் சூழலில், தமிழகத்தில் புத்திசாலித்தனமாக செய்ய வேண்டிய காரியம் ஒன்றே ஒன்று தான் - தமிழக எல்லைக் கதவுகளைப் பெரியார் பூட்டு கொண்டு இழுத்து மூடுவது!
Comments