மூணாறிலிருந்து எழும் அழுகுரல்கள் பதட்டத்தை உருவாக்குகின்றன.
நல்ல வேளையாக மண்ணுக்குள் புதையுண்டு இறந்தவர்களின் குரல்கள் நமக்குக் கேட்பதில்லை. அவற்றையும் நம்மால் கேட்க முடிந்திருந்தால் இந்த உலகமே நரமாகியிருக்கும்.
மூணாறில் உயிரோடு மிஞ்சியவர்கள் கலங்குகிறார்கள். மண்சரிவு ஏற்பட்ட லயன் வீடுகளிலிருந்து 25 கிலோமீட்டர் தள்ளி வாழும் லயன் வீட்டுக்காரர்கள் மூணாறிலிருந்தும் இடுக்கியிலிருந்தும் அனாதரவாய் பேசுகிறார்கள்.
இதே குரலை, மாஞ்சோலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் நான் கேட்டிருக்கிறேன். இலங்கை, மலையகத் தோட்டத் தொழிலாளிகளிடம் கேட்டிருக்கிறேன்.
வால்பாறை, அக்காமலைத் தோட்டத் தொழிலாளர்களிடம் பலமுறை கேட்டிருக்கிறேன்.
இன்னும், மலேசியாவில், தென்னாப்பிரிக்காவில் என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டேயிருக்கிறேன்.
இது, தமிழகத்திற்கு எப்பொழுதுமே பெரிய பிரச்சினையாக இருந்தது இல்லை. இந்தத் தேயிலைத் தோட்டங்களும் அங்கு வாழும் தமிழர்களும் குறித்து நமக்குச் சொல்லப்பட்டதெல்லாம் மிகச் சொற்பமான விஷயங்கள் மட்டுமே. அந்த சொற்பமான தகவல்களையும் நாம் தமிழ் விசேஷ குணத்தின் படி திருகி முருகியே விளங்கிக் கொண்டிருக்கிறோம்.
இத்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் பற்றி எழுதப்பட்ட இலக்கியப் பிரதியான Red Tea யை நாம் உள்வாங்கிக் கொண்ட லட்சணம் ‘பரதேசி’யாக இருந்தது. அல்லது, இலங்கையின் தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தில் ஈடுபாடு காட்டாத மலையகத் தமிழர்கள் என்ற சித்திரமாக இருந்தது. அற்ப லாபங்களுக்காக கிறிஸ்தவத்தைத் தழுவியவர்கள் என்ற இழிவாக இருந்தது. ‘தோட்டக் கொத்தடிமைகள்’ என்ற சித்திரமே இங்கே வலுவாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது.
மொழிவாரி மா நில எல்லைப் பிரச்சினைகளின் போது, இந்தத் தேயிலைத் தோட்டப்பகுதிகள் தமிழகத்தோடு இணைக்கப்படவில்லை என்பதே, இம்மக்கள் குறித்து தமிழக வெகுஜனம் அறிவிலியாக இருக்கிறது என்பதற்கு ஆதாரம். தேயிலைத் தோட்டங்களும் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளும் ஒரு சுற்றுலாப்பயணியின் கண் கொண்டே நமக்குச் சொல்லித் தரப்பட்டுள்ளன. இதனால் தான், தாமிரபரணியில் மாஞ்சோலைத் தொழிலாளர்கள் கொல்லப்பட்ட போதும், இப்பொழுது மூணாறில் தோட்டத்தொழிலாளர்கள் கேரள அரசின் பாராமுகத்தால் கொல்லப்பட்ட போதும், நமது வெகுஜனத்திற்கு அது உறைக்க மறுக்கிறது.
18ம் நூற்றாண்டிலிருந்து தொடங்கிய இந்த தேயிலைத் தோட்ட புலப்பெயர்வுகள் எத்தனை கொடூரமானவை என்பதை நேர்க் கதைகளில் தான் நீங்கள் விளங்கிக் கொள்ள முடியும். புதுமைப்பித்தன் கொஞ்சம் முயன்றார் என்றாலும், அதிலும் அவரது இலக்கிய மேதமை தான் வெளிப்படுகிறதேயொழிய அம்மக்களின் வேதனைகள் இல்லை. கடந்த முப்பது நாற்பது வருடங்களாக இந்தத் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மிகச் சிக்கலான வாழ்க்கைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள். மாஞ்சோலையில் வெடித்த கூலிப்பிரச்சினை, மூணாறிலும், வண்டிப்பெரியாரிலும், வால்பாறையிலும் கூட உண்டு. அங்கு கூலிகளாக வாழும் தமிழர்கள் வாழ்வாதாரம் இழந்து, திருநெல்வேலிக்கும் தேனிக்கும் திருப்பூருக்கும் கீழிறக்கப்பட்ட வரலாறு இன்னும் கொடூரமானது.
தமிழகத்தின் ஒரு கணிசமான மக்கள் தொகை இவ்வாறு தோட்டக்காடுகளில் அடிமைகளைப் போல வசித்து வருகிறது என்ற நினைப்பே வெகுஜன சமூகத்திற்கு இல்லை என்பது தான் விசித்திரம். இவ்வாறு புறக்கணிக்கப்பட்ட மக்கள் அட்டவணைச்சாதிகளைச் சார்ந்தவர்கள் என்ற தகவல், வெகுஜனத் தமிழர்களை சாதி வெறியர்கள் என்று சித்தரிக்கப் போதுமானது. ஆனால், நான் உடனடியாக அந்த முடிவிற்கு வரவிரும்பவில்லை. ஏனெனில், தமிழர்களின் சுரணை பற்றி எனக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் பொதுவாகவே ஒரு ஜடம்; அசமந்தம்; கேளிக்கையில் மூழ்கி அழிபவர்கள். இது, வெகுஜனங்களின் பொதுவான குணம் தான் என்றாலும், தமிழ் வெகுஜனம் இதன் செம்மாதிரி.
இன்றைக்கு, மூணாறில் நிகழ்ந்த கோர மரணங்கள், நாளையே மாஞ்சோலையிலும், மலையகத்திலும், வால்பாறையிலும் நடப்பதற்கான நூறு சதவீத சாத்தியத்தோடே அங்கெல்லாம் இன்னமும் தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். இவர்களை பொது விவாதப்பொருளாக மாற்ற வேண்டிய கடமை, எல்லாரையும் விட, தலித் கட்சிகளுக்கே உண்டு. அவையே, தங்களது பரப்புரைகள் மூலமாக இம்மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.
இந்த விழிப்புணர்வு ஒரு அறிக்கையை வெளியிடுவது மூலம் நடந்து விடப் போவது இல்லை. தமிழக கிராமங்களில் நகரங்களில் வாழும் அட்டவணைச்சாதிகளின் பிரச்சினைகளை ஆராயவும், அவற்றிற்கான தீர்வுகளை முன்மொழியவும் செய்வது போல, இத்தோட்டத்தொழிலாளர்களின் பிரச்சினைகளையும் தலித் அமைப்புகள் முன்னெடுக்க வேண்டும். விவாதிக்க வேண்டும். புலப்பெயர்வு, அதிலும் குறிப்பாக வல்லந்த புலப்பெயர்வு தமிழர்களின் நெடு நாளைய பிரச்சினை. இதே போல், பொருள்வயின் பிரிந்து அரபு நாடுகளில் பிரம்மச்சாரிகளாய் வாழ நிர்பந்திக்கப்பட்ட தமிழ் ஆண்களின் பிரச்சினை இன்னொரு கோரமுகம்.
இதையெல்லாம் விவாதிக்க நேரமில்லாத அட்டவணைச்சாதி மக்களும் அவர்களது தலைவர்களும், பெயர் மாற்றத்திற்காகவும், வெற்று மரியாதைக்காகவும், சுயநலன்களுக்காகவும் தங்களை இழந்து நிற்பது வரலாற்றில் மன்னிக்க முடியாத பிழையாக மாறப்போகிறது.
இதையெல்லாம் ஒரு செய்தி போலக் கடந்து சென்று கொண்டிருக்கும்,
‘அந்த’ மக்களோடு பிரச்சினை என்று தங்களுக்குள் பேசிக் கொண்டிருக்கும்,
இந்த மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினையில் உணர்ச்சிகரமான அரசியல் எதுவுமில்லையே என்று அங்கலாய்த்துக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கும் திராவிடர்களுக்கும் இதுவொரு எச்சரிக்கை மணி.
‘தமிழ் இறந்து விட்டது!’ என்று எழுதுவதற்கான தருணம் வந்து கொண்டிருக்கிறது.
Comments