மதுரை காமராசர் பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் மற்றும் பண்பாட்டு ஆய்வுகள் துறை நடத்தும் ‘பெருந்தொற்றுச் சூழலில் நாட்டுப்புற ஆய்வுகள்’ என்ற கருத்தரங்கு எனது தொடக்கவுரையோடு நேற்று 9-11-2020 ஆரம்பித்தது.
‘திருவிழாவின் இறுதி தினங்கள்’ என்ற தலைப்பில் பேசினேன். கோவிட்-19 ஏற்படுத்தியிருக்கும் புதிய வழக்கச் சூழல் அடிப்படையான விழுப்பொருட்களை எவ்வாறு உருமாற்றத் தொடங்குகிறது என்பதே எனது உரையின் மையம்.
தனித்திருத்தல் மற்றும் சமூக இடைவெளி பேணுதல் என்ற உயிர் தப்பி வாழ்வதற்கான இரு உத்திகளும், மெய் நிகர் வாழ்க்கை என்ற மாற்றுப் பரிந்துரையுமே இப் ‘புதிய வழக்கத்தை’ கட்டமைக்கின்றன. பாரம்பரிய சமூக வழக்கத்தின் விழுப்பொருட்களான கூட்டு அடையாள உருவாக்கம், ஜனநாயக உணர்வு, தனித்துவ வெளிப்பாடு, நகைச்சுவை உணர்வு, தலைகீழாக்கும் உத்தி, தொடர்ச்சியான புதுப்பித்தல் போன்ற அனைத்தையும் இழந்து விடுவோமோ என்ற அச்சம் எல்லோரையும் வதைக்கிறது. விழுப்பொருட்களை இழப்பதை விடவும், இழந்து விடுவோமோ என்ற பயம் கொடூரமானது.
வழக்கமாய், சடங்குகளையும் சம்பிரதாயங்களையும் ஆராய்ந்து, அவற்றின் பின்னுள்ள யதார்த்தத்தை விளங்கிக் கொள்ள முயலும் பண்பாட்டு ஆய்வுகள் முதன்முறையாக, ‘யதார்த்தத்தை’ எதிர் கொள்ள ஆரம்பிக்கும் போது அடையக்கூடிய தடுமாற்றம் இது. தடுமாற்றம் கூட அல்ல, தள்ளாட்டம். கப்பலிலோ அல்லது புகைவண்டியிலோ பயணம் செய்கையில் அதன் ஆட்டத்திற்கு ஏற்ப நாமும் போடத் தொடங்கும் தள்ளாட்டம். மிக முக்கியமான சந்தியில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். பழசும், வரப்போகும் புதுசும் சந்தித்துக் கொள்கிற இடைவெளி இது.
Comments