Skip to main content

அயோத்திதாசர் நூலுக்கு அசுரா நாதனின் மதிப்புரை

உறங்கு நிலையில் ஒரு மாற்று வரலாறு: பூர்வ பெளத்தனின் கல்லறை

அசுரா நாதன்

(அகழ், செப்டம்பர் 2020, மின்னிதழில் வெளியானக் கட்டுரை)


நாட்டுப்புற பண்பாட்டுக் கலாசாரத் துறைசார்ந்த டி.தர்மராஜ் அவர்களின்பார்ப்பனர் முதல் பறையர் வரைஎனும் நூல் வாசிப்பின்ஞாபகம்இது. இவரின்நான் ஏன் தலித்தும் அல்லஎன்ற நூலையும் வாசித்த அனுபவத் தூண்டுதலும்பார்ப்பனர் முதல் பறையர் வரைஎனும்  பிரதியை கவனம் கெள்ள வைத்தது. இந்த நூலுக்காக எழுதப்பட்ட முன்னுரையைக் கடந்து, பிரதியின் முழுமையை தரிசிப்பதற்கு ஒரு வாசகன் தன்னை முதலில் தகவமைத்துக் கொள்ளவேண்டும். நான் யார்! யாராக இருந்தேன்! நான் யாராக இருக்கவேண்டும்என இந்த  நூலின் முன்னுரைக்கு நாம் வழங்கும் தார்மிக பதிலுரைப்பு அவசியமானது. நீ தலித்தாக இருக்கின்றாயா? தலித்தாக சிந்திக்கின்றாயா? தலித்துக்களுக்காக போராடுபவனா? எழுதுபவனா? ஆய்வாளனா? அறிஞனா? எந்த தோற்றத்தில், எந்த வடிவத்தில் நீ பதுங்கியிருக்கிறாய்! என தீண்டத்தகாதவன் எனும் சமூக வலியை வாழ்நாள் எல்லாம் சுமந்து கொண்டிருப்பவனின் ஆத்மாவையும் இந்த நூலின் முன்னுரையில் பேசவைக்கிறார் தருமராஜ்.




வரலாற்றில் நிகழ்ந்த இத்தகைய குழப்பங்களையெல்லாம் ஒதுக்கிவிட்டு குறைந்தபட்சம் சுய நலமற்ற தன்மையோடு நமது பண்பாட்டையும், அதில் நிலவும் சாதிய உணர்வுகளையும் நாம் அணுகவேண்டும் என்றே நான் விரும்புகிறேன்’. என்பதோடு தொடர்ச்சியாக நாட்டுப்புற தெய்வ வழிபாடுகள் இந்து மதத்தோடு கரைந்து போய்க்கொண்டிருக்கும் அவலத்தையும் அவதானித்து வருகின்றார். தனித்துவமாக மேற்கொள்ளப்பட்டு வந்த  நாட்டுப்புற வழிபாட்டு முறைகளுக்குள்ளும் சாதியப் பாகுபாடுகள் வலிமை பெற்றிருக்கும் ஆய்வுப் பார்வையையும் முன்வைக்கின்றார். ‘இந்தச் சூழலில் சுமார் நூறு வருடங்களுக்கு முன்பு அயோத்திதாசர் முன்வைத்த தமிழ் பௌத்தம் என்ற திட்டம் மிகச் சரியானதாக இருக்கமுடியும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறதுஎன்றுபார்ப்பனர் முதல் பறையர் வரைஎனும் பிரதியின் வாசலில் அயோத்திதாசர் நிறுத்தப்பட்டிருக்கிறார்.

இந்த நூலின் அரூபம் அயோத்திதாச பண்டிதர். ரூபமாக திகழ்பவர் டி. தர்மராஜ். எனவே இந்த நூல் எனக்கு ஒருஞாபகம்’. மறதி என்பது ஞாபகத்தின் எதிர்ப்பதம் அல்ல, மற்றமைகளின் ஞாபகங்களே மறதியை தோற்றுவிக்கின்றன. நினைவுகளின் இருப்பிடமே ஞாபகம். மறதிக்கும் தன்னிலைக்கும் சம்பந்தம் இல்லை. மறதியை மற்றமைதான் உருவாக்கிறது. இவ்வாறுஞாபகம்’ ‘மறதிஎனும் சொற்பொருளின் அறிமுகத்தோடுபூர்வ பௌத்தனின் கல்லறை’  எனும் பகுதி ஆரம்பமாகிறது.

இந்த நூலின் வாசிப்பு அறிமுகத்திற்கு முதலில் ஒன்றை நினைவு படுத்த வேண்டுமானால், தலித்-சாதிய வரலாற்றுத் தேடலும்-ஆர்வமும் அதன் அரசியல் நகர்வுகள் மீதான அவதானிப்புப் பயிற்சியும் அவசியமானதென்பதே. அதுமட்டும் போதாது. அயோத்திதாச பண்டிதரை அவரது கட்டுரைகளை படித்திருக்கவும் வேண்டும்.


நூறு ஆண்டுகளுக்கு பின்பான அயோத்திதாசரின் மீள்ஞாபகம்என்பது தமிழகத்தில் ஒரு   கலவரத்துடனேயே அறிமுகமாகியது. 1999 ம் ஆண்டு தலித் சாகித்ய அகாடமியினால் தொகுக்கப்பட்டு வெளிவந்த  அயோத்திதாசரின் பிரதிகளின் வாசிப்பின் வெளிப்பாடுகள் முதலில் அவ்வாறான கலவரத்தை தூண்டும் வகையில்தான் அமைந்ததை என்னாலும் அவதானிக்க முடிந்தது. எனது நினைவில் அதற்கு முதற்காரணமாக இருந்தவர் தோழர் ரவிக்குமார். இரண்டாவது ராஜ்கௌதவமன் எனலாம். காரணமாக இருந்தவர்கள் என்பது அவர்கள் மீதான குற்றச்சாட்டாக பொருள்கொள்ள வேண்டாம். அவர்கள், அயோத்திதாச பண்டிதரின் அறிமுகத்தையும், பண்டிதரின் சாதிய தீண்டாமை ஒடுக்குமுறைகளுக்கு எதிராக செயல்பட்ட காலத்தின் ஆதாரங்களை  கட்டுரைகளாகவும் நூலாகவும் வெளிக்கொண்டு வந்தபோது அதற்கான எதர்வினைகளே பெரும்விமர்சனக்-கலவரமாகமாறியது. இந்தகலவரத்தின்காயங்களோடு அயோத்திதாசரை வாசிக்கும் முறையையும் அயோத்திதாசரை அவரது காலோத்தோடு இன்று இணைத்து புரிந்து கொள்ளவேண்டிய அவசியத்தை முன்வைப்பவர்களாக ஸ்டாலின் ராஜாங்கமும், இந்த நூலின் ஆசிரியர் டி. தர்மராஜ் என்பவரும் மிக முக்கியமானவர்கள். இந்த விமர்சன கலவரச் சூழலை வேறு திசைக்கு மாற்றிச் சென்றதில் ஜெயமோகனின் பங்களிப்பும் மிக முக்கியமானதாகவே நான் கருதுகின்றேன். அனைத்துக்கும் முன்பாக 1997ல் வெளிவந்த மிகச் சிறிய தொகுப்பானதமிழகத்தின் தலித் அரசியல் முன்னோடிகள்எனும் நூல். வி.ரேவதி அவர்களால் எழுதப்பட்டது. அயோத்திதாச பண்டிதர், இரட்டைமலை சீனிவாசன், எம்.சி. ராஜா போன்ற தலித் சமூகப்  போராளிகளை அறிமுகப்படுத்துவதே அதன் உள்ளடக்கமாக கருத முடிகிறதுவி.ரேவதி அவர்கள் தனது பட்டப் படிப்பின் ஆய்விற்காக மேற்கொண்ட முயற்சியாக இருப்பினும் 1999 ல் வெளிவந்த அயோத்திதாசரின் தொகுப்புகளுக்கு முன்பாக தலித் அரசியலின் முன்னோடிகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்திய வகையில் இச்சிறு தொகுப்பும் முக்கியத்துவம் வாய்ந்ததே. தற்போது கௌதம சன்னா அவர்களால் தொகுக்கப்பட்ட நூல்களானஆதிதிராவிடர் வரலாறு’ ‘இரட்டைமலை சீனிவாசன் எழுத்துக்களும் ஆவணங்களும்எனும் நூல்களும் தமிழக தலித் சமூக போராளிகளின் வரலாற்றை புரிந்து கொள்வதற்கான மிகச்சிறந்த ஆவணங்களாகும்

மூன்று தலைப்புகளில் எழுதப்பட்ட தர்மராஜின் இத்தொகுப்பின் இறுதிப் பகுதியானபூர்வ பௌத்தனின் கல்லறைஎனும் கட்டுரையின் புரிதலின் ஊடாக எவ்வாறு அயோத்திதாசரின் பனுவலை என்னால் எதிர்கொள்ள முடிகிறது என்பதாகவே எனது விபரிப்பை புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அந்த கட்டுரைப்பகுதியில் முன்வைக்கப்பட்டிருக்கும் விபரிப்புக்களை, சொற்பிரயோகங்களை மீளவும் நான் விபரித்துச் செல்வதால் எளிமையான துரித வாசிப்பிற்கு அவை இடையூறாக இருக்கலாம். எனவே அக்கட்டுரையின் சாராம்சத்தை உள்வாங்கிய  புரிதலில் அயோத்திதாசரை எவ்வாறு நான் எதிர்கொள்கின்றேன், புரிந்துகொண்டேன் என்பதையே சுருக்கமாக எழுத முயற்சிக்கின்றேன்.

அயோத்திதாசரிடம் எதிர்பார்க்கும்முழுமைகிடைக்காது, அதைபிறிதொன்றிடம்கண்டுகொள்வதுடன் புத்தகம் நிறைவடைகிறது. இருப்பினும்பூர்வ பௌத்தனின் கல்லறைஎனும் தலைப்பில் விவாதிக்கப்பட்டிருக்கும் மொழி சார்ந்த ஞாபகம், மறதிமெய்நிகர் எனும் சொற்பொருள்களின் பிரயோகத்தன்மை என்பன எனது சுய வரிவாக்கத்திற்கு பயனுள்ளதாக   அமைந்ததுமிக அவதானமாக அத்தலைப்பின் உள்ளடக்கத்தை  சிறு சிறு பகுதிகளாக எழுதி வாசகர்களின் சிரமத்தை குறைப்பதற்கு முயற்சித்திருப்பதும் பாராட்டுக்குரியது.

அயோத்திதாசரின் மீள் வருகையோடு நிகழ்ந்தவிமர்சன கலவரத்துக்குகாரணமாக இருந்த அடிப்படை சொற்கள் என்பதுஞாபகம்’, ‘மறதிஎன்பதாகவே கருதவேண்டும். இந்த ஞாபகம் மறதி என்பதன் உட்கருத்தையே இக்கட்டுரையின் ஆதாராமாகவும் கொண்டு தொடருகின்றேன். அதற்கான உள்ளுனர்வின் சுய-விரிவை எனக்கு தந்ததும் டி. தர்மராஜ் அவர்களின் இந்த நூலின் இறுதிப்பகுதியானபூர்வ பௌத்தனின் கல்லறைஎனும் கட்டுரை என்பதையும் வாசகர்கள் மீண்டும் நினைவில் கொள்ள வேண்டுகின்றேன்.

திராவிட கழகத்தின் சாதிய தீண்டாமை ஒழிப்பு நடவடிக்கைகளுக்கு முன், இற்றைக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே சாதிய தீண்டாமைப் போராட்டங்களை மேற்கொண்ட ஒரு வரலாறு ஏன் மறைக்கப்பட்டது? 1999 ல் அயோத்திதாசர் தமிழகத்தில் மீள அறிமுகப்படுத்தப்பட்டபோது இவ்வாறு ஒரு கேள்வியும் எழுந்தது. இது திராவிட இயக்கத்தின் திட்டமிட்ட செயலா! என்பதான எதிர்மறைப் புரிதலின் பலவீனங்களாலும், அயோத்திதாசரின்  பிரதிகளில் காணப்படும் சொற்பொருள் மயக்கங்களுமே  இன்று இரு துருவங்களாக ஒன்றை ஒன்று மறுத்தும், எதிர்த்தும் வருவதற்கான  அடிப்படைக் காரணமாக கருத முடிகிறது.

அயோத்திதாசரை மீளக் கண்டெடுத்து உரையாட முற்பட்ட தருணத்தில் சாதிய தீண்டாமை போராட்டங்களை மேற்கொண்ட திராவிட பெரியாரிய சிந்தனைக்கு அவை எதிரானவை என்பதாகவும், அயோத்திதாசர் பறையர் எனும் ஒரு சாதியின் பிரதிநிதியாகவே தன்னை முன்னிறுத்தி செயல்பட்டவர் எனும் ஒரு பதட்டமான மனநிலையும் எழுந்தது. இது ஒரு வகையான அச்சம். எங்களுடைய நம்பிக்கை, எங்களுடைய உடைமைகளுக்கான அச்சுறுத்தல் எனும் மன நிலையின் ஒரு பதட்டமாகவே இதை கருத முடிகிறது. நினைவுகளின் தொடர்ச்சியான அடுக்குகளாக மனித மனம் தனக்குள் ஞாபகங்களை சேமித்து வருவதின் விளைவாகவே இவ்வாறான பதட்டம் நிலவக்காரணமாகிறது. சாதிய சமூக முரண்பாடுகளின் வரலாற்றை எவ்வகையான ஞாபகங்களால் எமது மனங்களில் நினைவுகளாக அடுக்கிக்கொண்டே இருக்கின்றோம்? வரலாறுகளால்.

சாதியின் இருப்பையும் அதன் தோற்றத்தையும் பார்ப்பன புராண வரலாறுகளால் உள்வாங்கிய வகையில் அதன் ஞாபகங்களே எம்மை தூண்டுகிறது. அதன் எதிர்வினைக்கான வழிமுறைக் கருத்தியலை நவீன சிந்தனைப் பயிற்சியின் ஊடாகவே எதிர்கொண்டு வருகின்றோம்.

பகுத்தறிவென்பது மிகவும் பொருள் பொதிந்த ஒரு சொல்லாகும். அதன் பயனையும் பயன்பாட்டையும் நாம் எவ்விதம் இனம் காணமுடியும்? பகுத்தறிவை பிரயோகிக்கும்போது அதன் விளைவு என்னவாக இருக்கின்றது என்பதை ஆய்வுக்குட்படுத்துவதன் மூலமாகவே பகுத்தறிவு என்பதன் சொல்லுக்கான பொருளின் பயனை நாம் புரிந்து கொள்ளலாம். சாதிய சமூக கருத்தியலுக்கு பின்புலமாக நிலைத்திருப்பதாக கருதும் பார்ப்பன புராண வரலாறுகளை எமது பகுத்தறிவுச் செயல்பாட்டினால் எதிர்கொள்வதாக இருந்தால், அவ்வாறான எமது பகுத்தறிவு செயல்பாடானது நாம் எதிர்கொள்ளும் பார்ப்பன புராண வரலாற்றை இல்லாமல் ஆக்கவேண்டும். நிலவும் பகுத்தறிவுச் செயல்பாடென்பதோ பார்ப்பன புராண வரலாற்றை தொடர்ந்தும் தக்கவைப்பதற்கானதாகவே இருக்கின்றது. எதிர்கொள்ளும் புராண வரலாற்றை தொடர்ந்து எதிர்த்துக்கொண்டே இருப்பதன் ஊடாக இருப்பும், எதிர்ப்புமே தொடர்ந்து வருகிறது. இவ்வாறாக தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கை என்பதை பகுத்தறிவு செயல்பாடென நாம் கூறிட முடியுமா? நிதானமாக சிந்திப்போமாயின் நாம் பார்ப்பன புராண வரலாற்றை தொடர்ந்து மீள் கட்டமைக்கும் பணிகளையே மறைமுகமாக செய்து வருகின்றோம் என புரிந்து கொள்ள முடியாதா? எதிர்ப்பதை மட்டுமே நவீன பகுத்தறிவின் அறிவியல் செயல்பாடாகவும்புராண வரலாற்றை மூட நம்பிக்கையாகவும் ஞாபகங்கள் நினைவுகளாக தேக்கி வைத்திருக்கிறது. புராண வரலாறென்பது ஒரு காலத்தில் கலை இலக்கியங்கள் வழி செழித்திருந்தது. அதை பிரஞ்சு, கிரேக்க, ஆபிரிக்க, அரேபிய படைப்பிலக்கியங்களிலும் நாம் காணமுடியும். அவை ஒரு காலத்தின் வரலாற்று     நிகழ்வாக கருதவேண்டும் அவ்வளவுதான்.  

அயோத்திதாசரின் புனைவுகளானமாற்று வரலாற்றையும்புராண புனைவுக்கு நிகரான மூட நம்பிக்கை என்பதாகவே நவீனத்தின் எதிர்மறை  சிந்தனையும் உள்வாங்கிக்கொண்டதுஎனவே நூறு வருடத்திற்கும் மேலான அயோத்திதாசரின் தமிழகத்துமறதிஎன்பது நவீன சிந்தனையின் தொடர்ச்சியானஞாபகங்களால்ஆனதாகவே கருதவேண்டும். எனவே ஞாபகங்களே மறதியை தோற்றுவிக்கின்றது எனும் டி. தருமராஜ் அவர்களின் வெளிச்சத்தில் அயோத்திதாசர் எனக்குள் மேலும் பிரகாசிக்கின்றார்

அயோத்திதாசரின் இந்திரதேச சரித்திரத்தில் பிரயோகிக்கப்படும் சொற்களுக்கான  பொருள் விளக்கங்களை தமிழ் பண்பாட்டு மரபுகளோடும் தமிழ்-இலக்கண இலக்கிய பிரதிகளிலும் பொருத்திப் பார்க்கும் ஆதாரங்களையும் நாம் கண்டு கொள்ளலாம். அவைகளில் சித்தர் பாடல்களும் துணைப் பலமாக அமைந்திருக்கிறது. இங்கே பலருக்கும் குழப்பமாக இருக்கும் விடயம் அயோத்திதாசர் பறையர் சமூகத்தை சேர்ந்தவர். அவர் அச்சமூகத்தின் மேம்பாட்டிற்காகவே பாடுபட்டார். பிற சமூகத்தவர்கள் பலரை (குறவர், வில்லியர், சக்கிலியர், தோட்டிகள்) தாழ்ந்த சாதிகளாக கருதினார். எனும் பார்வையில் அயோத்திதாசர் விமர்சிக்கப்பட்டார். எமது பழக்கத்தில் எமது ஞாபகங்களில் நிலைத்திருக்கும் சொற்பொருள் சார்பு நிலையே நாம் புதிதாக ஒருஞாபகத்தைஉள்வாங்க தடையாக அமைந்துவிடுகிறது. பறையர்கள் எனும் பூர்வ பௌத்தர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதற்கும் மற்றயவர்கள் தாழ்ந்து போனவர்கள் என்பதற்குமான பெருங்கதையாடல் ஒன்றை அவரது பிரதிகளுக்குள் நாம் கண்டெடுக்க முடியும். அந்தப் பெருங்கதையாடலை பின்-நவீன விசாரணைக்குள் விரித்துப்பார்த்தால் அவை மேலாதிக்க கருத்தியல் கொண்ட கதையாடல்கள் அல்ல என்பது புரியும். அதுவும்பெரியாரிய திராவிடம்’ (‘பெரியாரிச திராவிடம்அல்ல. இங்கு பெரியாரியம் என்பது அவரது தனித்துவமான கருத்தியலை, செயல்பாட்டை மதிப்பிடுவதாகவும், எமது சுயத்தை பிறிதொன்றுடன் முழுமையாக இழந்து நிற்பதை பெரியாரிசம் என்பதாக புரிந்து கொள்கின்றேன். மார்க்சியம், மாரக்சிசம் என்பதன் வேறுபாட்டையும் இவ்வாறாகவே புரிந்துகொண்டேன்).  விரும்பிய சமூக நீதியின் உள்ளடக்கமே அயோத்திதாசரின் பெருங்கதையாடலிலும் துலங்குவதை அவதானிக்க முடியும். பிராமணம் என்பதை இந்தியாவின் பூர்வீகம் என்கிறார். அந்த பிராமணம் என்பது ஒரு தகுதி. லௌகீக வாழ்க்கையை வென்று-கடந்து வரும் நிலை. அந்த பிராமணம் எனும் தகுதிக்கு எவராலும் வரமுடியும். அதாவது பௌத்தசீலமானபஞ்சீலங்களைப் பேணிக் கடந்து வருபவர்கள் எவருமே பிராமண தகுதி அடைந்தவர்களாக கருதப்படுவார்கள்.

மேலும் இந்திய செவ்வியல் மொழிப் பிரிவினர்களான பாலி மொழி பேசுபவர்கள், அனைத்தையும் கடந்த ஞான-நிலையை அடையும்போது அவர்களை அறஹத்துக்கள் என வகைப்படுத்துகின்றார். சமஸ்கிருத மொழிபேசுவர்கள் ஞானிகளாக தகுதி அடையும்போதே அவர்களை பிராமணர்கள் என்கிறார். திராவிட மொழியாம் தமிழை பேசுபவர்கள் அத்தகுதியை வந்தடையும்போது அவர்களே அந்தணர்களாகும் தகுதியுடையவர்களாகின்றனர், என்பதாகவே அயோத்திதாசரின் வகைப்படுத்தும் புனைவுகளை புரிந்து கொள்ள முடிகிறது. இவ்வாறான தகுதி நிலை அடைந்தவர்கள் சாதாரண மக்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும், தானமும் பெற்று வாழ்ந்தவர்களாக கூறுகிறார். இவ்வாறான நீட்சியில்தான்புருசீகர்கள்எனும் அன்னிய நாட்டினர் பிரவேசித்து சமூக நிலமையை அவதானிக்கின்றனர். சமஸ்கிருதம் பேசும் மக்களில் பிராமண தகுதிபடைத்தவர்கள் வேலை, உழைப்பு ஏதுமின்றி வசதியாக வாழ்ந்து வருவதைக் கண்டு அதுபோன்ற உழைப்பின்றி வாழ்வதற்காக மட்டுமே தம்மை பிராமணர்களாக வேசமிட்டனர். மக்கள் மத்தியிலும் அவதூறுகளையும் பரப்பி வந்தனர். இவ்வாறான வேஷப் பிராமணர்களின்  புரட்டுக்களைபறைந்து’ ‘பறைந்துஅம்பலப்படுத்தி வந்த யதார்த்த பிராமணர்களே பறையர்கள் என வேசப் பிராமணர்களால் பரப்பப்பட்டார்கள். எதிர்ப்பேதுமின்றி இவ் வேஷப்பிராமணர்களின் பொய் புரட்டுக்களை நம்பி தமது சுயத்தை இழந்த சாதாரண பொதுமக்களையே தாழ்ந்து போனவர்களாக அயோத்திதாசர் கட்டமைக்கின்றார். தொடர்ந்து வேஷப்பிராமணர்களின் மேலாதிக்க சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தியவர்களான யதார்த்த பிராமணர்கள் (பறையர்கள்) தாழ்த்தப்பட்டார்கள். அவர்கள் தமது சுயத்தை இழந்து தாமாகவே தாழ்ந்து போகவில்லை. பிறரால் தாழ்த்தப்பட்டார்கள்.

எமக்கு நேர்ந்த சிக்கல் யாதெனில் பறையர் எனும் எமது காலத்து சொற்பொருட்-சாய்வுடன் எமது சுயத்தையும் பொருத்தி நின்று சிந்திப்பதன் விளைவுதான் இதற்கு காரணம். உலக-மொழி-விளையாட்டின் இயல்பு இது. கௌதம சன்னா அவர்களால் அண்மையில் தொகுக்கப்பட்ட நூலானஆதி திராவிடர் வரலாறுஎனும் நூலை பார்த்தால் பல்வேறு சொற்பொருள்களின் ஏற்ற இறக்கங்களை புரிந்து கொள்ளலாம். திரிசிபுரம் . பெருமாள் பிள்ளை அவர்கள் 1922ல் எழுதிய கட்டுரையில் பல தகவல்களை நாம் அறியக்கூடியதாக உள்ளது. ‘பறையர்’, ‘இந்தியா’, ‘பிள்ளைஎனும் சொற்களுக்கான அர்த்தங்கள் அயோத்திதாசர் அர்த்தம் ஏற்றிய சொற்களிலிருந்து மாறுபட்டிருக்கின்றது. இதில் நாம் குழம்புவதற்கு ஏதுமில்லை. மொழி விளையாட்டின் இயல்பு இது. இந்த மொழி விளையாட்டில் எமது பங்களிப்பு எதுவாக இருக்கவேண்டும் என்பதே. சொற்பொருளின் சமூக விளைவுகளை அவதானித்து சிந்திக்க வேண்டும். இன்றைய திராவிடயிசம்’  ‘பொரியாரிசம்என்பது வேசப் பார்ப்பனியத்தின் புராண வரலாறுகளை தொடரந்தும் நிலைநிறுத்தும் பணிகளையே மறைமுகமாக செய்து வருகிறது. அவர்களால் புராண வரலாற்றுக்கு மாற்றாக ஒரு மெய்நிகரை (virtuel) முன்வைக்க முடியவில்லை. கார்த்திகை தீப புராணத்தை, தீபாவளி புராணத்தை, பூநூல் புராணத்தை, அம்மன் வழிபாட்டு புராணத்தைவர்ண சூத்திர சாதிய புராணத்தை என அனைத்து புராண வரலாற்றுச் சொற்களுக்கும் தனது சுயமான அர்த்தங்களை ஏற்றுவதனூடாக மாற்றுஞாபகம்’ (மாற்று வரலாறு) ஒன்றை முன்வைக்கின்றார் அயோத்திதாசர். இந்த ஞாபகமானது எம்மால் தொடர்ந்து மறக்கப்பட்டு வருவதற்கு பார்ப்பனிய ஞாபகங்கள் எமக்குள் நினைவுகளாக தொடர்ந்தும் மனங்களில் அடுக்கப்பட்டுக் கொண்டே வருகிறது. இந்த ஞாபகங்களை தூண்டுவதில் தமிழகத்துபெரியாரிசம்காத்திரமான பங்கை தொடர்ந்து செய்தும் வருகிறது.

பெரியாரியத்தையும் நவீன இந்தியாவின் சிந்தனையாளர்களையும் அவர்களது தனித்துவமான முக்கியத்துவங்களையும் அறியும் ஆவல் கொண்ட தலித்திய ஆர்வலர்களுக்கு நான் ராமச்சந்திர குஹா வின்நவீன இந்தியாவின் சிற்பிகள்எனும் நூலை அறிமுகப்படுத்துகின்றேன். அதில் புரட்சிகர சீர்திருத்தவாதி .வே.ராமசாமி எனும் தலைப்பில் 1927ல் திருநெல்வேலி மாவட்டத்தில் பெரியார் ஆற்றிய உரை பதிவாகியிருக்கிறது. அதில் ஒரு பகுதி இவ்வாறு அமைந்திருக்கும்: ”நான் சொல்லுவது உங்களுடைய அறிவு, ஆராய்ச்சி, யுக்தி, அனுபவம் இதுகளுக்கு ஒத்து வராவிட்டால் தள்ளிவிடுங்கள். ஒத்து வந்தால் காரியத்தில் கொஞ்சமாவது செய்ய முற்படுங்கள். உங்கள் சகோதரர்களுக்கும் இதைச்சொல்லி அவர்களையும் ஈடேற்றுங்கள் என்றுதான் நான் சொல்லுகிறேன். இப்படிச் சொல்லுவதனால் எனக்கு இதில் ஒரு சுயநல பலனும் இல்லை என்பதையும் அறியுங்கள். நான் எந்த மதக்காரனுக்காவது ஏஜெண்டு அல்ல, அல்லது நானும் எந்த மதக்காரனுக்காவது அடிமையும் அல்ல. அன்பு, அறிவு என்கிற இரண்டு தத்துவத்திற்குள் மாத்திரம் ஆட்பட்டவன். ஆதலால் எனக்கு பட்டதை உங்கள் முன் சொல்வதில் எனக்கு ஒரு கடமையும், ஆசையும், மகிழ்ச்சியும் இருப்பதால் சொல்லுகிறேன். மற்றபடி அதைப் பற்றிய உங்கள் கடமைகளை உங்கள் சுதந்திரத்திற்கே அதாவது உங்கள் பகுத்தறிவுக்கே விட்டு விடுகின்றேன்.

மதம் என்பது நாட்டிற்கோ ஒரு சமூகத்திற்கோ ஒரு தனி மனிதனுக்கோ எதற்காக இருக்க வேண்டியது? ஒரு தேசத்தையோ, சமூகத்தையோ கட்டுப்படுத்தி ஒற்றுமைப்படுத்துவதற்காகவா, பிரித்து வைப்பதற்காகவா? அது ஒரு மனிதனின் மனச்சாட்சிக்கு கட்டுப்பட்டதா? அல்லது ஒரு மனிதனின் மனச்சாட்சியை கட்டுப்படுத்தக்கூடியதா? மனிதனுக்காக மதமா அல்லது மதத்துக்காக மனிதனா? என்பவைகளை தயவு செய்து யோசித்துப் பாருங்கள்”.  எனும் பெரியார் உரை என்பது நாம் வாசிப்பதற்கு அல்ல. சிந்திப்பதற்கு. இதைப்போன்ற பெரியாரின் சிந்தனைக் கட்டுரைகளை தேர்வு செய்து தமிழகப்பெரியாரியம்தொகுத்திருக்கவேண்டும். துரதிருஸ்டவசமாக பெரியார் தனது சமகாலத்து நெருக்கடிகளை எதிர்கொண்டு பேசிய அனைத்தையும் தமிழகத்துபெரியாரிசம்புனிதமாக நிலைநிறுத்துவதோடு மட்டுமல்ல சாதாரண மக்களின் நம்பிக்கைகளுக்கு எதிரானவராகவும் பெரியாரை தமிழகத்து மண்ணில் மிக ஆழமாக ஊன்றிவிட்டது. பெரியார் சுய பிரக்ஞையில் ஒரு கடவுள் மறுப்பாளர் (Atheist) சமூகப் பிரக்ஞையில்மனித மன-அலைக்கழிப்புகளில்-நம்பிக்கைகளில்’ (Agnostic) இருந்தும் சிந்திக்கக்கூடியவர். இது குறித்த விபரத்தை இறுதியில் பார்க்கலாம்.

அயோத்திதாசரின்தாழ்ந்து போனவர்கள்’ ‘தாழ்த்தப் பட்டவர்கள்எனும் சொற்களின் புரிதலுக்கான எனது சுய அனுபவத்தையும் இங்கு நான் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். சோ.தர்மனின்கூகைநாவலின் கதைச் சித்தரிப்பில் உலாவும் பிரதான சமூகங்களாக பள்ளர், பறையர், அருந்ததியர் உள்ளனர். அவர்களின் வாழ்வியல் துயரங்களையும், சோகங்களையும்  எழுத்துக்களால் வாசக மனங்களுக்குள் செலுத்திவிடும் ஆற்றலைக் கொண்டிருக்கிறதுகூகைநாவல். நாவலின் காலமோ நிலவுடைமையின் பிற்-காலம். இதில் பள்ளர் சமூகமானது நிலவுடைமை ஆதிக்கத்தின் மீது தனது சுயத்தை இழக்காது ஜமீன் அதிகாரத்தை எதிர்த்து நின்று தன் பொருளாதார நிலையை மேம்படுத்திக் கொள்கிறது. அருந்ததிய சமூகமோ சாதிய சமூக ஒடுக்குமுறைக்குள் தனது சுயத்தை இழப்பதன் ஊடாக ஜமீன் அதிகாரத்தின் மீது தனது எதிர்ப்பை அதனால் செலுத்த முடியாதிருக்கிறது. எனவே அது தனது சுயத்தை ஜமீன் அதிகாரத்தின் மீது இழந்து நிற்கிறது. தன்னை தானே தாழ்த்திக் கொள்ளவும்; பழக்கப்படுத்தி வருகிறது. மாறாக பள்ளர் சமூகமானது தனது சுயத்தை இழக்காததால் தானாக அச்சமூகம் தாழ்ந்து நிற்கவில்லை. ஜமீன் மேலாதிக்க சமூகத்தாலுமே தாழ்த்தப்படுகிறது. எமது யாழ்ப்பாணத்திலும் இந்த மாறுதலை எனது சிறு வயதிலேயே அவதானித்திருக்கின்றேன். யாழ் நகரில் தோடம்பழ வியாபாரம் செய்பவர்கள் ஒரு சமூகத்தை சேர்ந்தவர்களாகவே அறியப்படவர்கள். அவர்களை உயர்-சாதியினர் எனப்படுவர்கள்; மிகவும் அச்சத்துடன்தான் எதிர் கொள்வார்கள். காரணம் தோடம்பழ வியாபாரம் செய்யும் சமூகத்தவர்கள் தம்மீது திணிக்கப்படும் சாதிய மேலாதிக்க ஒடுக்குமுறைகளை தமது வன்முறை எதிர்ப்பு நடவடிக்கைகளாலேயே எதிர்கொண்டு வந்தனர். இதனாலே அச்சமூகத்தின் மீது பிற மேலாதிக்க சாதிய சமூகத்தினர் அச்சம் கொண்டிருந்தனர். எனவே அவர்களும் தாழ்ந்து போனவர்கள் அல்ல. பிற சாதிய மேலாதிக்க சமூகங்களின் மனங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்களாக இருக்கிறார்கள்.

பார்ப்பனர் முதல் பறையர் வரைஎனும் நூலானது பிரஞ்சு பின்நவீன சிந்தனையாளர்களின் வாசிப்பும் அதனை உள்வாங்கிய சிந்தனைப் பரிமாணத்திலும் அயோத்திதாசரை அணுகியிருக்கும் விதம் புரிகிறது. தர்மராஜ் அவர்கள் ஒருவகையில் அயோத்திதாசரை ஏற்றுக்கொள்பவரரகவும், மறுப்பவராகுவம் இருப்பதை உணரமுடிகிறது. அதுவே ஒரு நிறைவான விமர்சனப் பக்குவம். இவ்வாறாகவே நாம் எதிர்கொள்ளும் அனைத்து சிந்தனையாளர்களையும் ஆய்வுக்குட்படுத்த வேண்டும். ஆயினும் மிக முக்கியத்துவம் வாய்ந்த இந்த நூலின் இறுதியான எதிர்பார்ப்பென்பது ஒரு ஆளுமையிடமிருந்து அனைத்துக்குமான ஒருமுழுமையைஎதிர்பார்த்த ஏமாற்றம்!

பிறதொன்றின் மீதான ஏற்பும், மறுப்பும் நிகழ்வதே எவ்வித சார்பு நிலையற்ற சுய சிந்தனைச் செயல்பாட்டு விமர்சனமாக கொள்ளலாம்.

இந்த நூலின் முற்பகுதியில் நான் கண்டுகொண்ட தர்மராஜ் அவர்களின்சுயம்தன்னை பிறிதொன்றோடு இணைக்கும் சார்புக் கருத்தியலுடன்  நிறைவடைகிறது இவ்வாறு:

அயோத்திதாசரின் பௌத்தத் திட்டத்தில் நாம் சந்திக்கக்கூடிய மிகப் பெரிய சிக்கல் இது தான். வெகுஜன மக்கள் திரள் பழக்கத்தின் காரணமாக பௌத்தர்களாக வாழ்கிறார்கள் என்று நிரூபிப்பது மட்டுமே அவருக்கு போதுமானதாக இருந்து விடுகிறது. நவீனத்துவ பயணத்தில் அவ்வெகுஜனம் என்ன செய்ய வேண்டும் என்ற கேள்விக்கு அவரிடம் எந்தப் பதிலும் இல்லை”. இவ்வாறு சொல்வதோடு: ”ஆடி மாதம் பொங்கி வரும் புதுப்புனல் கொண்டு வரும் நோய்களுக்கு வேப்பிலையே மருந்து என்றால் வெகுஜனங்களுக்கு நிச்சயமாய் விளங்கப்போவதில்லை என்று அவர் நம்புகிறார். அவர்களுக்கு வேப்பிலையில்அம்மாஉறைந்திருக்கிறாள் என்று சொல்வதே சாஸ்வதம். அவர்களை பழக்கப்படுத்துவதே மிகச் சரியான வழிமுறை. வேட பிராமணர்களுக்கும் பூர்வ பௌத்தவர்களுக்கும் இந்த விஷயத்தில் எந்தவொரு வேறுபாடும் இல்லை. இரண்டு பேரும் வெகுஜனங்களைப் பகுத்தறிவிற்கு அப்பாற்ப்பட்டவர்களாகவே கருதுகின்றனர். அவ்விருவரையும் பொறுத்தவரை இச்சமூகத்தின் மொத்த முரணும் பார்த்தலுக்கும் பறைதலுக்குமானது தான்”. எனும் புரிதலூடாக பார்ப்பனர்கள் எவ்வாறு விஷேடமானவர்களாக கட்டமைக்கப்பட்டிருக்கின்றார்களோ அவ்வாறாகவே பூர்வ பௌத்தர்கள் என்பவர்களையும் ஒரு விஷேடமானவர்களாக அயோத்திதாசர் கட்டமைத்திருக்கின்றார் என்பதான முடிவிற்கும் தர்மராஜ் வந்துவிட்டார். எனது வாசிப்பில் அயோத்திதாசர் பேசும் யதார்த்த பிராமணர்கள் எனப்படுவோர் சாதாரணமானவர்களுக்கு நேர் எதிரானவர்களோ அல்ல. சாதாரணமானவர்களும் பஞ்சசீல கொள்கையில் தேறி முதிர்ந்து வருபவர்களையே யதார்த்த பிரமாணர்கள் என்பதாக புரிந்து கொள்ள முடியும். அவர்களையே  பூர்வ பௌத்தர்களாகவும் கருதலாம்.


தர்மராஜ் அவர்கள் அயோத்திதாசர், அல்லது அவர்காலத்து பௌத்த சங்கங்களின் சமூக செயல்பாடுகளை மதங்களோடு இணைத்தும், திராவிட இயக்க காலத்து செயல்பாட்டை சமூக வடுதலை சார்ந்த செயல்பாடாகவும் இவ்வாறு காண்கிறார்: ”இருபதாம் நூற்றாண்டு பௌத்த சங்கங்கள் செய்யத் தவறியதை திராவிட இயக்கங்கள் செய்து காட்டின. மத அமைப்புக்களுக்கும் விடுதலை இயக்கங்களுக்குமான ஆதார வேறுபாடு இது தான்- வெகுஜனம் அசாதாரணமானது என்றும், பகுத்தறிவோடு செயல்படக்கூடியது என்றும் விடுதலை இயக்கங்கள் நம்பின. மதங்கள் அப்படி நம்புவதில்லை”. என்பதோடு இந்த பூர்வ பௌத்தனின் கல்லறைஎனும் பகுதியும், நூலும் நிறைவுபெறுகிறது. இது அயோத்திதாசர் மதத்தை முதன்மைப் படுத்துவதாகிய புரிதலால் விலக்கப்படுகிறாரா! திராவிடமும், பெரியாரிசமும் அதனிடத்தில் நிரப்பப்படுகிறதா! எனும் குழப்பம் வாசிப்பில் நிகழ்ந்து விடுவதை தவிர்க்க முடியவில்லை.

அயோத்திதாசரின் பிரதிகளில் அதிகமாக நான் கண்டுகொண்டது மதங்கள் மீதான கடும் விமர்சனங்களை இவ்வாறாக:  ”மதத்தைக்கொண்டுஞ் சாதியைக் கொண்டும் சீவனஞ்செய்யுங் கூட்டத்தார் பெருந்தொகையாய் இருக்கின்றபடியால் சாதிகளுஞ் சமயங்களுமற்று தேசஞ் சீர்பெறப்போகிறதில்லை. இத்தேசத்தோர் சாதியையுஞ் சமயத்தையும் எதுவரையில் துலைக்காமல் இருக்கின்றார்களோ அதுவரையில் தேசம் ஒற்றுமெய் அடையப்போகிறதும் இல்லை. இவர்களுக்கு சுயராட்சியங் கிடைக்கப்போகிறதும் இல்லை. சுயராட்சியமும் சுதேச சீர்திருத்தமும் அடையவேண்டுமானால் இத்தேசத்தின் சுயமார்க்கம் எவை என்றறிந்து அதன்மேறை நடப்பார்களாயின் சுதேச சீர்திருத்தம் உண்டாகி சுயராட்சியமுங் கிடைக்கும்”. (.சி.தொகுப்பு-1 பக்கம் 35) அயோத்திதாசர் சிந்தனைகள் தொகுப்பு மூன்றில் கேள்வி பதில் பகுதியில் கடவுள் மதம் என்பதற்கான பாகுபாட்டை இவ்வாறு விபரிக்கின்றார்:

வினா: மனிதனைக் கும்பிடுவோர் பௌத்தரும் சுவாமியைக் கும்பிடுவோர் யாங்களுமென்று கூறியதோர் மொழி என்னை சந்தேகத்திலாழ்த்தி யிருக்கின்றது. அவற்றை விளக்கி இவ்வடியேனை புனிதனாக்க வேண்டும்.-வீ. பாலசுந்திரம், மதுரை-

விடை: அன்பரே! தாம் வினாவிய சங்கைவீணரிடம் வாதிட்ட விழலாய சங்கையேயாம். அதாவது பன்றிகள் முன்னிலையில் முத்துக்களைப் போடாதீர்களென்னும் மகாஞானிகளின் நீதிமொழிகளை சற்று கவனித்தல் வேண்டும். குடியர்களும் விபச்சாரிகளுமானோர் முன்னிலையில் குடிக்கலாகாது, விபச்சாரஞ் செய்யலாகாது என்னும் முக்கிய போதனையாம் சத்திய தன்மத்தைப் போதிப்பதாயின் அவர்கள் செவியில் நுழையுமா, இதயத்தில் பதியுமா, ஒருக்காலும் பதியாவாம். ஏனென்பீரேல் சுவாமி சுவாமி என்னும் மொழியைச் சொல்லிக்கொண்டு பொய் சொல்லும்போது சுவாமி நம்மெப்பார்ப்பார், களவு செய்யும்போது சுவாமி நம்மெப்பாப்பார், விபச்சாரஞ் செய்யும்போது சுவாமி நம்மெப்பாப்பார், கள்ளுக்கடைக்குள் நுழையும்போது சுவாமி நம்மெப்பார்ப்பாரென்னும் உறுதியும் பயமுமின்றி வெறுமனே பொய்யைச் சொல்லித்திரியும் நம்பிக்கையற்ற மதங்களைச் சேர்ந்தவர்களாதலால் பொய்யைச் சொல்லி மெய்யை பிரழவைப்பது அவர்கள் சுவாபமாகும். மனிதனைத் தொழுவதும் சுவாமியைத் தொழுவது மாய வித்தியாசத்தை சற்று வினவுவீராயின் அவர்களது வீராப்பு தன்னிற்றானே அடங்கிப்போம். அதாவது இரிஷி பத்தினிகளைக் கற்பழித்து கோசமற்ற சுவாமியைக் கும்பிடுவதினும் விபச்சாரஞ் செய்யாதீர்களென்று போதித்த மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ, கோபிகாஸ்திரிகளின் கற்புகளை அழித்துவிட்டு யாமொன்றுமறியேனென்று பொய்யைச் சொன்ன சுவமியை கும்பிடுவதிலும் பொய்யை சொல்லாதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ, கோடி கோடியாக மக்களைக் கூட்டி கொல்லவைத்து தானுங் கொன்று தன் தம்பியைக் கொல்லுகின்றான் அவன் கையை வாங்கி கொல்லுமென்று கூறிய கொலைபாதக சுவாமியைக் கும்பிடுவதினும் சீவயிம்சை செய்யாதீர்கள், கொலைபாதமேற்கா தீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ அன்னமிட ஆரம்பித்த அன்னியன்  மனவியை பெண்டாள வாரம்பித்த சுவாமியைக் கும்பிடுவதிலும் அன்னியன் தாரத்தை இச்சியாதீர்கள், அன்னியன் தாரத்தையேறெடுத்தும் பாராதீர்களென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவதுமேலன்றோ. வீடுவீடாய்த் திருடித்தின்னும் சுவாமிகளைக் கும்பிடுவதிலும் திருட வேண்டாம், அன்னியர் பொருளை அபகரிக்கவேண்டாமென்று கூறியுள்ள மனிதனைக் கும்பிடுவது மேலன்றோ. இத்தகையப் பொய்யுங் களவும் விபச்சாரமும் நிறைந்த சுவாமிகளென்று கூறி மாடுகளையுங் குதிரைகளையும் மனிதர்களையும் கருணையின்றி நெருப்பிலிட்டுச் சுட்டுத்தின்ற படுபாவக் கூட்டத்தோர் மதத்திற் சேருவதுடன் சீவகாருண்ய பெருக்கத்தையும் அன்பின் வளர்த்தியுள்ள புத்த சங்கத்திற் சேருவது மேலன்றோ….”. (பக்கம்.93) இவ்வாறு பௌத்த பஞ்ச சீல ஜீவகாருண்ய நோக்கில்தான் மனிதர்களிடம் தெய்வைத்தை காணும் சாத்தியத்தை நம்புகின்றார். எனவேதான் ஜமீன்தார் காலத்து அதிகாரச் சமூகத்தில் நிலவிய சாதிய தீண்டாமை கொடூரங்களில் இருந்து தலித் சமூகத்தை குளிர்மைப்படுத்தும் மனித-தெய்வமாக எலிசெபத் மகாராணியை, ‘குயின் விக்டோரியாளம்மன்எனும் குறியீடாக வெகுஜன மக்கள் (சாதாரண மக்கள்) மத்தியில் அறிமுகப்படுத்துகிறார் என புரிந்து கொள்ள முடிகிறது

வேப்பிலையே மருந்து என்றால் வெகுஜனத்திற்கு நிச்சயமாய் விளங்கப் போவது இல்லை என்று அவர் நம்புகிறார். அவர்களுக்கு வேப்பிலையில்   ‘அம்மாஉறைந்திருக்கிறாள் என்று சொல்வதே சாஸ்வதம். வேட பிராமணர்களுக்கும் பூர்வ பௌத்தர்களுக்கும் இந்த விஷயத்தில் எந்தெவொரு வேறுபாடும் இல்லை. இரண்டு பேரும் வெகுஜனங்களை பகுத்தறிவிற்கு அப்பாற்பட்டவர்களாகவே கருதுகின்றனர்”.

இவ்வாறான முடிவுக்கு வரும் தர்மராஜ் அவர்களும்பொரியரிசம்பேசும் பகுத்தறிவுடன் நெருக்கமாயிருப்பதாகவே அறியமுடிகிறது. பெரியாரியத்திடமிருந்து நாம் எவ்வாறான பகுத்தறிவை பிரித்தறிவதென்பதற்கு நான் ராமச்சந்திர குஹா வின் தொகுப்பில் உள்ள பெரியாரின் கட்டுரையை முன்பே அறிமுகப்படுத்தியிருந்தேன். பெரியார் தனது சுய பிரக்ஞையில் கடவுள் மறுப்பாளராகவும் (Atheist) சமூகப் பிரக்ஞையில் மனிதமன அலைக்கழிப்புகளில்-நம்பிக்கைகளில்’ (Agnostic) இருந்தும் சிந்திக்கக்கூடியவர் ஆகவும் தெரிகிறார் என்பதை.

இந்த சுய பிரக்ஞை என்பதற்கும் சமூக பிரக்ஞை என்பதற்குமான அரிய சிந்தனையை  லியோ.டால்ஸ்டாயின்போரும் அமைதியும்’ (டி.எஸ்.சொக்கலிங்கம் மொழி பெயர்ப்பு) எனும்    நாவலின் தொகுப்பு இரண்டில் பார்க்கலாம். ஒரு தனி மனிதன் தனது சொந்த வாழ்க்கையில் மேற்கொள்ளும் காரியத்திற்கான தனது சுய பிரக்ஞையை எவ்வகையிலும் பிரயோகித்து சாதிக்கமுடியும். சமூகப் பிரக்ஞையில் அவ்வாறு சாத்தியமில்லை. நிரந்தரமானது, ஒன்றை ஒன்று சார்ந்திருப்பது, பிறருடைய அனுபவங்கள், அனுமானங்கள் என்பன தனி மனிதனின் சுய பிரக்ஞைக்கு அப்பாற்பட்டது. இதற்கான ஒரு உதாரணத்தைபோரும் அமைதியும்நாவல் இவ்வாறு முன்வைக்கிறது: ”ஒரு ஆப்பிள் பழுத்தவுடன் கீழே விழுகிறது. ஏன் அது கீழே   விழுகிறது? பூமியின் மீது அதற்குள்ள கவர்ச்சியா? அதன் தண்டு வாடிப்போன காரணமாகுமா? சூரிய வெப்பத்தால் அது காய்ந்து போயிற்றா? அதன் பளு அதிகமாயிற்றா? காற்று அதை ஆட்டியதா? அல்லது அதன் கீழே நிற்கும் பையன் அதைத் தின்ன வேண்டுமென்று விரும்பியது காரணமா?

இவை ஒன்றும் காரணமல்ல எல்லா முக்கியமான, ராசாயன, பஞ்ச பூத சமபவங்கள் நேரிடுவதற்கெல்லாம், பல நிலைமைகள் ஏக காலத்தில் ஒன்று சேருவதே காரணமாகும். ஜீவ அணுத் தசைகள் கெட்டுப்போனதாலேயே, ஆப்பிள் கீழே விழுந்தது என்று தாவர சாஸ்திரி சொல்லுகிறார். அவர் சொல்லுவதும் சரிதான். ஆனால், அதே மாதிரி தான் தின்பதற்காகவே அதை வேண்டுமென்று பிராத்தனை செய்ததனால்தான், அந்த ஆப்பிள் கீழே விழுந்தது என்று அந்த குழந்தை சொல்வதும் சரிதான்பெரிய மனிதர்கள் என்று சொல்லபடுகிறவர்கள், அந்தச் சம்பவங்களுக்கு பெயர்கள் கொடுக்கும் வெறும் அடையாளச் சீட்டுக்கள். அடையாளச் சீட்டுக்களைப்போலவே அந்தச் சம்பவத்திற்கும் அவர்களுக்கும் உள்ள தொடர்பு மிகுந்த அற்பமானதாகும்”.

நெப்போலியன் காலத்து ஐரோப்பிய யுத்தம் தொடர்பான செய்திகள் பல்வேறுவிதமாக பார்க்கப்பட்டது. ரசிய சக்கரவர்த்தி அலெக்சான்டர்அதைசெய்ததால்தால் யுத்தம் ஆரம்பமானது. இல்லை நெப்போலியன் ஆஸ்திரியாவை கைப்பற்றியதால்தான் யுத்தம் ஆரம்பமானது. இவ்வாறாக பல்வேறு சம்பவங்களை, காரண காரியங்களை  தொடர்பு படுத்திய வகையில் வரலாற்று ஆசிரியர்களும் பல விதமான மாறுபட்ட கருத்துக்களை முன்வைத்தார்கள். இதை சமூகப் பிரஜை ஒருவன்  எவ்வாறு எதிர்கொள்வான்? தனக்கு நெருக்கமான, ஏற்புடையதான, நம்பிக்கையான ஒரு தகவலையே ஆதாரமாக எடுத்துக்கொள்வான். இதில் பல்வேறு சமூக தரப்பினரும் தமது நம்பிக்கைக்கு நெருக்கமான கருத்தோடு இணைந்து கொள்கின்றனர். இதனையே சுய பிரக்ஞையில் தனித்துவமாக இருப்பவர் எவராயினும் சமூகப்பிரக்ஞை எனும்போது மேற்படியான சிக்கல்களை பல்வேறு நிலைகளோடும் பொருத்திப் பார்க்க வேண்டி வருகிறது. இதற்கான ஒரு உதாரணமாகவே ஆப்பிள் விழும் தகவலை லியோ. டாஸ்டாய் மிக தெளிவாக விபரிக்கின்றார்

இதனூடாக சமூகப் பிரக்ஞை என்பது சுய பிரக்ஞையில் இருந்து வேறுபட்டும், சிக்கலாகவும் தோன்றுகிறது. எனவே இவ்வாறான சமூகப் பிரக்ஞையை எதிர்கொள்ளும் வேறுபாடுகளையே நாம் சிந்தனையாளர்களிடமும் சமூக செயல்பாட்டாளர்களிடமும் தேட வேண்டியுள்ளது. ”வேப்பிலையில்அம்மாஉறைந்திருப்பதென அயோத்திதாசர் முன்வைப்பதும், மனிதனுக்காக மதமா அல்லது மதத்துக்காக மனிதனா? எனும் பெரியாரின் பார்வையும் அவர்களது சமூகப் பரக்ஞையோடு இணைந்தது. அந்தவகையில் இருவரும் ‘Agnostic’.   அவர்கள் இருவரதும் சுய பிரக்ஞை மட்டுமே  கடவுள் மறுப்பாகும். ‘பெரியாரிசமேதனது சுய பிரக்ஞையை, சமூகப்பிரக்ஞையோடு இணைத்து தொடர்ந்தும் சிக்கலாக்கி வருகிறது.

அயோத்திதாசரின் மாற்று வரலாற்றுப் புனைவின் தொடர்ச்சியின்மைக்கு பலவீனமாக, அது தன்னை பண்பாட்டு தளக்கிற்குள்ளாகவே மட்டுப்படுத்திக் கொண்டதும் ஒரு காரணமாக இருக்கலாம். அது தனது கருத்தை வெகுஜன மட்டத்தில் அரசியல் அமைப்பு வடிவத்தில் மேற்கொண்டதாகவும் அறியமுடியவில்லை. மாறாக திரவிடமானது தனது கருத்து வலிமையை அரசியல் அதிகார முனைப்போடும் வெகுஜன மக்களை உள்வாங்கும் வகையில் அமைத்துக் கொண்டது. இவ்வாறு அரசியல் மயப்படுத்தும் தன்மை இல்லாத அயோத்திதாசர் அவர்களின் செயல்பாடு காரணமாகவே தமிழகத்தில் இடஒதுக்கீடு எனும் கருத்தியலை பேசிய முன்னோடி எனும் வரலாற்றுஞாபகமும்இல்லாது போனது. 1909ம் ஆண்டே அவர் இட ஒதுக்கீடு சம்பந்தமாக முன்வைத்த கருத்தை நாம் இவ்வாறு காணமுடிகிறது: ”இவ்வகையான கோரிக்கையை சரிவர நிறைவேற்றி சகல குடிகளையும் சமரசமாக இப்பிரிட்டிஷ் ராஜரீகத்தில் சகத்திற்கும், ஆட்சிக்கும் கொண்டுவரும்படியான சட்டத்தை மகா கனந்தங்கிய மந்திரி லார்ட் மார்லியவர்கள் கொண்டு வந்திருக்கின்றார். அவற்றை நமது கருணைதங்கிய கவர்னரவர்கள் அடியில் குறித்துள்ளவாறு இராஜாங்க ஆலோசனை சங்கங்களிலும், முநிசபில் சங்கங்களிலும், ராஜாங்க உத்தியோக சாலைகளிலும், இராணுவ வகுப்பிலும், வைத்திய இலாகாக்களிலும்,போலீஸ் உத்தியோகங்களிலும், இரயில்வே இலாகாக்களிலும், கல்விலாக்காக்களிலும், அந்தந்த இலாக்காவின் மொத்தத் தொகைப்படிக்கு இவ்வகுப்பார் பிரிவனைப்படி சேர்த்து விடுவார்களானால் சகல சாதியோரும் சீரும் சிறப்பையும் அடைவார்கள். பிரிட்டிஷ் ஆட்சியும் நீடித்து சுகநிலைபெறும்.

இராஜாங்க ஆலோசனை சங்கத்துள் நூறு பெயர் நியமனமாக வேண்டுமானால் சாதிபேதமற்ற திராவிடர்களாம் இந்தியர்கள் 25-பெயரையும், சாதிபேதமுள்ள இந்தியர்கள் 25-பெயரையும், முகமதியர்கள் 25-பெயரையும், புருஷியர்கள் 13-பெயர்களையும் நேட்டிவ் கிறிஸ்டியன்ஸ்கள் 12-பெயர்களையும் நியமித்து ஆலோசனைகளை நிறைவேற்றுவதனால் சகல குடிகளும் சுகம் பெறுவார்கள்” (.சி.1-பக்கம்103). இவ்வாறான அயோத்திதாசரின் அபிப்பிராயத்தை நாம் இட ஒதுக்கிட்டிற்கான முன்மொழிவு அல்ல என மறுத்திட முடியுமா?

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அயோத்திதாசரால் பண்பாட்டுத்தளங்களில் ஏற்படுத்திய அதிர்வுகள் கண்டுகொள்ள முடியாதமைக்கு (மறதிக்கு) நிலைத்திருந்த ஞாபகங்களே (பார்ப்பன புராணப் புனைவுகள்) காரணமாக அமைந்திருக்கிறது. ‘இந்திரதேசம்எனும் மாற்றுப் புனைவை ஞாபகமாக நிலைநிறுத்த அயோத்திதாசர் மேற்கொண்ட முயற்சி பலனற்றுப் போனது.

நான் நினைக்கிறேன் ஸ்டாலின் ராஜங்கம், தர்மராஜ் போன்றவர்கள் அயோத்திதாசரை மாற்று வழியில் பொதுவெளிக்கு அழைத்து வருவதற்கு முன்பாக தகுதியான ஆளுமைகள் தமிழகத்தில் இருந்திருக்கிறார்கள். அயோத்திதாசரை இவ்வாறுமெய்நிகர்உலகில் அறிமுகப்படுத்தும் தகுதி உள்ளவர்களாக முன்பு தலித்தியம் பின்நவீனத்தும் குறித்து பேசியவர்களாகவும் அறியப்பட்டவர்கள்; அவர்கள். ஒரு சிந்தனையாளனாக தன்னை செழுமைப்படுத்திக் கொண்டிருக்கும் ஒருவர் நவீனத்துவத்திலிருந்து பின் நவீனத்தை மதிப்பிட்டு முன்னகர்பவராகவே இருப்பார்கள். அவ்வாறான பிரான்சின் சிந்தனையாளர்கள் பலர் உள்ளனர். தர்மராஜ் தனது நூலின் பகுதித் துணைச் சிந்தனைக்கு பயன்படுத்தியிருப்பவர்கள் அனைவருமே பிரான்ஸ் தேசத்தவர்கள். அதில் அலன் பாத்யோ (Alain Badiou) மார்க்சிய சிந்தனையில்  மிக வலுவாக ஊறியிருந்தவர். இருப்பினும் புதிய உலக ஒழுங்கிற்கான  கொம்யூனிசம் ஒன்றிற்காகமன்றாடிக்கொண்டிருந்தார்’.   இருப்பினும், ஒரு வருடத்திற்கும் மேலாக நடைபெற்ற மஞ்சள் அங்கி தரித்த அரச எதிர்ப்பு போராட்டத்தை இவ்வாறு நோக்கினார்: ‘Cette protestation, me semble-t-il à un orde ancien. Elle me parait marquée par la nostalgie d’un vieux monde’ (Alain Badiou) (‘என்னைப் பொறுத்தவரையில் இந்த எதிர்ப்பு நடவடிக்கையானது பழைய ஒழுங்கிற்கே திரும்பும் ஒரு நடவடிக்கையாகவே உள்ளதுஇது பழைய உலகின் ஏக்கத்திற்கான ஒரு அறிகுறியாகவும் தோன்றுகிறது’-அலன் பாத்யோ-). எனும் பார்வையில் தாராளவாத உலகை மாற்று வழியில் சிந்திப்பதற்கு தயாரானார். ஆனால் தமிழகத்தில் பின்-நவீனத்தை அறிமுகப்படுத்தியவர்கள் பின் நவீன சிந்தனையை உள்வாங்கி இணைந்து வாழும் (Coexistence) முன்னகர்வு சிந்தனைக்கு அவர்களால் நகரமுடியவில்லை. பின்-நவீனத்தை அறிமுகப்படுத்தியதோடு நிற்காது தமது பழய இருப்பிடத்திற்கே (முற்போக்கு-இடதுசாரி-முகாம்) மீண்டும் சென்று அமர்ந்து கொண்டனர்.

பார்ப்பனர் முதல் பறையவர் வரைஎனும் நூலானது அயோத்திதாசரை புரிந்து கொள்ளவும் அவரது சிந்தனைகளை அறிந்து கொள்ளவதற்குமான நூல் மட்டும் அல்ல. இந்திய-தமிழகத்து சாதிய இருப்பை உலுப்பிய சிந்தனையாளர்கள் அனைவரையும் ஒன்றுடன் ஒன்றாக  கைகோர்த்து நிற்கும் ஒரு காட்சியையே எனக்கு வழங்குகிறது. சங்கிலிக் கோர்வையாக அதன்கண்ணிகள்எப்போதும் ஒன்றை ஒன்று விலகாது இணைந்திருக்கும்

அயோத்திதாசரின் பூர்வ பௌத்தன் எனும் சொற்பொருளானது  ஒருமத கல்லறை’, அடக்கம் செய்யப்பட வேண்டியது எனும் முடிவிற்கு வந்தடைகிறது பார்ப்பனர் முதல் பறையர் வரை’. அதில் தான் தேடும்முழுமையானசிந்தனையை திராவிட இயகத்திடமும்  பெரியாரிடமும் மட்டுமே காண்பதாகவும் புலனாகிறது. ‘பூர்வ பௌத்தன்எனும் சொற்பொருளை ஒரு மிதக்கும் குறிப்பானாக உள்வாங்கி எம்மால் அதன் சொற்பொருளை பிறிதொரு அர்த்தத்திற்குள் ஏன் நகர்த்திச் சிந்திக்கமுடியாது? அதற்கான சான்றுகள் பல அயோத்திதாசர் சிந்தனைகளில் பதிவாகியும் இருக்கிறது! அந்த பூர்வ பௌத்தனின் கல்லறையில் ஒரு மாற்று வரலாறு உறங்கிக் கொண்டிருக்கிறது. அதை சமூகத்தின்ஞாபகங்களாகமக்கள் மனங்களில் உறைய வைப்பதற்கான புதிய சிந்தனையாளர்களை எதிர்பார்த்திருக்கிறதுகாலம்.

இந்திய சிந்தனையாளர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து நிற்பவர்கள். சில தருணங்களில் ஒருவர் மற்றவரிடமிருந்து மாறுபடுவர்களாகவும் பல தருணங்களில் இணைந்து

கைகோர்த்து நிற்பவர்களாகவுமே எம்மால் அவதானிக்க முடியும். பெரியார், ஆயோத்திதாசர், அம்பேத்கர், இரட்டைமலை சீனிவாசன், மோகன் கரம்சந்த் காந்தி, என பலரும் ஒருவரை ஒருவர் கைகோர்த்து நிற்பவர்கள்.

ஒரு சிந்தனையாளனிடமிருந்து நாம்முழுமையை எதிர்பார்த்தால்அவரிடமே நாம் எதிர்கொள்ளும் சிக்கலுக்கான தீர்வின்முழுமையை நாம்  கண்டுகொண்டால், அதன்பின் குறித்த சிக்கலுக்கான புதிய சிந்தனையாளர்கள் எமக்கு புலப்படப் போவதில்லைஅனைத்துக்குமான தீர்வை ஒருவர் வழங்கிவிட்டால் பின்வு வருபவர்களுக்கு சிந்திப்பதற்கு அவசியமில்லை. தங்கள் தங்கள் புரிதலுக்குமுழுமையாக சிந்தித்தவர்களை தொடர்ந்து பிரச்சாரம் செய்து கொண்டிருப்பதே போதுமானதாக இருக்கும். பெரியாரை, அயோத்திதாசரை, அம்பெத்கரை, கார்ல் மார்க்சை என எமக்குமுழுமையானவர்களாக கருதும் ஒவ்வொருவரையும் நாம் பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கமுடியும். மாறாக நாம் கடந்து வந்த சிந்தனையாளர்களின் தனித்துவங்களையும் முக்கியத்துவங்களையும் பிரித்தறிந்து எமக்கான சுய சிந்தனையை முன்வைப்பதன் ஊடாகவே புதிய சிந்தனை தோன்றமுடியும்.

 21ம் நூற்றிண்டில் நாம் யாரை இந்த சங்கிலிக் கோர்வையில் இணைக்கப் போகின்றோம். இல்லை ஒருவரின் பிரச்சாரராகவே நாம் தொடரப்போகின்றோமா?

பார்ப்பனர் முதல் பறையர் வரைஎனும் நூல் இவ்வாறான கேள்விகளை நோக்கி நகர வைப்பதில்தனது சக்தியைஎமக்குள் செலுத்துகிறது.

Comments

அருமையானப் பதிவு .. நன்றி !!

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக