Skip to main content

1 பழமரபுக் கதைகள்: நலிந்தோரின் ஆயுதம்

1 பழமரபுக் கதைகள்: நலிந்தோரின் ஆயுதம்


. இருதயராஜ்


திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டையிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் செய்துங்கநல்லூர் என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ மீட்டர் தொலைவில் பற்பநாதபுரம் என்ற குக்கிராமம் உள்ளது. இந்தக் கிராமம் நெல்லை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் அமைந்துள்ளது. இப்படி மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் இருப்பதாலேயே பற்பநாதபுரத்திற்கு பல அடிப்படை வசதிகள் (நியாயவிலைக்கடை, சாலை வழி, பேருந்து வசதி, தொலைபேசி, ஆரம்ப சுகாதார மையம்) இன்னமும் வந்து சேராமல் இருக்கின்றன. 


இங்கு வாழும் மக்கள் ஐந்து பரம்பரைக்குச் சொந்தமானவர்கள். எல்லோருமே நெருங்கிய உறவினர்கள் என்பதால் இந்தக் கிராமம் ஒரு பெரிய குடும்பம் என்று சொல்லலாம். தேவேந்திரகுல வேளாளர் என்று இம்மக்கள் அழைக்கப்படுகிறார்கள். ஏறக்குறைய 116 குடும்பங்கள் உள்ளன. இதில் கத்தோலிக்கர் 30 குடும்பம், சி.எஸ்.ஐ. 80 குடும்பம், இந்து 6 குடும்பம். தொடக்க காலத்தில் எல்லோரும் சி.எஸ்.ஐ. கிறிஸ்த்தவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். 1954 ம் ஆண்டு தனிமனிதர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒரு பிரிவினர் கத்தோலிக்கர்களாக மாறினர். இப்போது இரண்டு கோவில்கள் எதிர் எதிரே உள்ளன. வெளிப்படையாக பிரச்சினை எதுவும் இல்லையென்றாலும் தனி மனித போட்டியும் பொறாமையும் மறைமுகமாக உள்ளன. எல்லோரும் உறவினர் என்பதால் மத அடிப்படையில் பெரிய சண்டைகள் வருவதில்லை. 


இந்த ஊரின் கூப்பிடு தூரத்தில், அய்யனார்குளம்பட்டி என்ற ஊர் உள்ளது. தேவர் சாதியினர் இங்கு வசிக்கிறார்கள். இவர்கள் தேவேந்திரகுல வேளாளர்களை விட பொருளாதாரத்திலும், சமூக அந்தஸ்திலும் உயர்நிலையைக் கோருகிறவர்கள். அவர்களுக்கு அடிப்படை வசதிகள் அனைத்தும் செய்து தரப்பட்டுள்ளன. பற்பநாதபுரம் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளுக்கு இந்தப் பகுதிக்கே வந்தாக வேண்டும். இந்த ஊரைக் கடந்தே பற்பநாதபுரத்திற்குச் செல்கிற வகையில் பொதுப் போக்குவரத்து அமைக்கப்பட்டுள்ளது. 


இதனால் தேவர்களின் ஆதிக்கத்திற்கும், கட்டுப்பாட்டிற்குள்ளும் தான் தேவேந்திரகுல வேளாளர்கள் இருந்தாக வேண்டிய கட்டாயம். தேவர் இளைஞர்கள் அத்துமீறி இங்கு நுழைந்து எந்த கொடூரத்தைச் செய்தாலும் வாய் பொத்தி அமைதியாக ஏற்றுக் கொள்ள வேண்டும். உதாரணமாக, தேவர் ஒருவர் வந்து ஒரு மூடை நெல் கேட்டால் கொடுக்க வேண்டும். அருவாளைக் காட்டி, ஆட்டை தூக்கிச் சென்றாலும் அமைதியாக வேடிக்கைதான் பார்க்க வேண்டும். இவ்வளவு மோசமான ஒடுக்குமுறைகளும் இப்பொழுது இல்லை; ஆனால், முன்னொரு காலத்தில் இருந்தன. இந்த ஒடுக்குமுறையிலிருந்து மீண்டெழுந்த கதை வித்தியாசமானது. 


கொடுமையான சாதிய ஒடுக்கு முறையை எதிர்க்க வழி தெரியாமல் தேவேந்திரகுல வேளாளர்கள் பல காலம் தத்தளித்தே வந்தார்கள். எண்ணிக்கையளவில் குறைவாக இருந்ததால் தேவர் சமூக ஆதிக்கத்தை எதிர்க்க இயலாமல் இருந்தது. ஆண்டுகள் உருண்டோட, இவர்கள் எண்ணிக்கையில் அதிகமாக அதிகமாக, நிலைமை மாற ஆரம்பித்தது. தேவேந்திரகுல வேளாளர்கள் தங்களது நிலத்தில் பயிரிட்டு அதன் மூலம் கிடைக்கிற வருவாயில் தன்னிறைவு பெற ஆரம்பித்தனர். இளைஞர்கள் அதிகமாக படிக்கவில்லை என்றாலும் விவரம் தெரிந்த பலசாலிகளாக வளர்ந்தார்கள். தேவர்களின் எல்லை மீறிய கொடூரத்தை இயல்பாக எதிர்க்க ஆரம்பித்தனர். 


ஆனால் இவர்கள் சார்ந்திருந்த கிறிஸ்துவ சமயமும், அதனுடைய போதனைகளும் சாதிய ஒடுக்கு முறையிலிருந்து வெளி வர வேண்டுமென்ற எண்ணத்தை இவர்களுக்கு ஊட்டவில்லை. பொறுமையோடு பணிந்து செல்லவே அது கற்பித்தது. ஆனால் கிறிஸ்தவ குழுக்கள் இந்த மக்களுக்கென்று பல வளர்ச்சிப் பணிகளைச் செய்தன. கோயில் கட்டுதல், கிணறு வெட்டுதல், வீடு கட்டுதல் போன்ற வளர்ச்சிப் பணிகளுக்கு நிதி உதவி அளித்தன. வளர்ச்சிப் பணிகள் நடந்த போதும், சாதிய ஒடுக்கு முறைகளிலிருந்து வெளிவர அவர்களின் பொருளாதார தன்னிறைவு, உறவினர்கள் என்ற ஒற்றுமை, இளைஞர்களின் பலம் போன்ற காரணிகளே அதிகம் உதவின. சாதிய ஒடுக்கு முறைக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த சான்றுகள் பழமரபுக் கதைகளாக இம்மக்களது வாய்மொழிப் பாரம்பரியத்தில் இன்றளவும் காணப்படுகின்றன. 


பலமுள்ள சாதியினரை நேரிடையாக எதிர்கொள்ள முடியாமல் பலமிழந்த சாதியினர் பயன்படுத்துகின்ற பல இலக்கிய வடிவங்களைத்தான் நலிந்தோரின் ஆயுதம் என்கிறோம். உயர்சாதியினரைக் கிண்டலடித்தும், நையாண்டி செய்தும் பாடல், நகைச்சுவை, சிறுகதைகள், கவிதை, பழமொழிகள், விடுகதைகள் போன்றவை உருவாக்கப்படுகின்றன. இந்த வடிவங்களில் உயர்சாதியினரை எதிர்க்கிற தொனி தூக்கலாகவே வெளிப்படுகிறது. இதன் மூலம் அவர்களை எதிர் கொண்டு விட்டது போல ஒரு கற்பனையான திருப்தியும் ஏற்படுகிறது. 


பற்பநாதபுரத்தின் பழமரபுக் கதைகள்: 


இங்கு வாழுகிற மக்கள் எல்லோரும் இந்தக் கதைகளைப் பற்றி பேசுவதில்லை. 60 வயதுக்கு மேலே உள்ள முதியவர்கள் மட்டுமே கேட்டால் இந்தக் கதைகளை விரிவாக எடுத்துச் சொல்கிறார்கள். 


ஊர்ப்பெயர் பிறந்த கதை: கேரள தேசத்திலிருந்து 'கட்டக்கிழவன் என்பவர் தலைமையில் நான்கு அல்லது ஐந்து பேர் முதன் முதலில் இந்தப் பகுதியில் வந்து குடியேறியிருக்கின்றனர். இவர்கள் ஏன் இங்கு வந்தனர் என்பதற்கு தகுந்த காரணங்கள் தெரியவில்லை. இவர்கள் அனைவரும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள். கட்டக்கிழவன் மாந்தரீகம் தெரிந்தவர். பலசாலி. குதிரையில் தான் பயணிப்பார். அவர் மலையாளத்திலிருந்து நிறைய மருந்து வகைகளைக் கொண்டு வந்திருக்கிறார். மலையாளத்திலிருந்து வந்ததால் இந்த ஊருக்கு மலையாள பற்பநாதபுரம் என்று பெயரும் சூட்டப்பட்டது. அந்தக் கட்டக்கிழவர் பரம்பரை சுத்தமாக மறைந்து விட்ட பிறகு, நாளடைவில் மலையாளம் போய் வெறும் பற்பநாதபுரம் என்ற பெயர் மட்டும் உள்ளது.

 

மிரட்டலை முறியடித்த கதை: கட்டக்கிழவனும் மற்ற நான்கு பேரும் குதிரையில் தேவர் கிராமத்து வழியாக தங்களின் குலதெய்வத்தை வழிபட போய்க் கொண்டிருந்தார்கள். அப்போது சில தேவர்கள் அவர்களை வழி மறித்தனர். எதற்கு வழி மறித்தீர்கள் என்று கேட்க, நாங்கள் உங்களை தட்டிப் பறிக்கப் போகிறோம் என்றனர். கோபமடைந்த கட்டக்கிழவன் தன்னுடைய மாந்தீகத்தைப் பயன்படுத்தி, கை கட்டி, கீழே பூமியை தொடர்ந்து கையால் பறிக்க சாபமிட்டான். தேவர்கள் உடனே பூமியை பறிக்கத் தொடங்கினார்கள். கட்டக்கிழவன் திரும்பி வரும் வரை பறித்ததால் தேவர்களின் கை விரல்கள் மொன்னையாயின. பின்பு தேவர்கள் மன்னிப்பு கேட்க, கட்டக்கிழவன் சாபத்தை நீக்கினார். 


பொருள் கேட்ட கதை: தேவர் ஒருவர் தேவேந்திர குல வேளாளர் பகுதிக்குள் ஒரு பொது இடத்தில் உட்கார்ந்து கொண்டு ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ‘நெல்லு கொண்டுவா, பணம்கொண்டு வா என்று மிரட்டினாராம். மக்கள் கொடுக்க முடியாத சூழலில் அவர் குடிதண்ணீர் கிணறுகளையெல்லாம் நாற்றமெடுக்கச் செய்தாராம். உடனே கோபம் அடைந்த கட்டக்கிழவன், தன்னுடைய மந்திரத்தின் மூலம், ஊரில் உள்ள உரல்களை எல்லாம் உருளச் செய்து தேவர் உடம்பில் ஏற வைத்தாராம். வலி தாங்க முடியாமல் சாகும் தருவாயில் கதறியிருக்கிறார். உடனே கட்டக்கிழவனிடம் மன்னிப்பும் கேட்டார். கட்டக்கிழவன் மன்னித்ததோடு தேவரை அரிசி, பருப்பு, பழம் எல்லாவற்றையும் கொடுக்குமாறு கட்டளையிட்டார். தேவரும் கொண்டு வந்து கொடுத்தார். உரல்கள் அனைத்தும் இருந்த இடத்திற்கு ஓடி விட்டன. 


எதிர்மாந்தரீகத்தை உடைத்த கதை: தேவர் வாழுகிற ஊரில் வெகு விமரிசையாக திருவிழா நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக வில்லுப்பாட்டுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். வில்லுப்பாட்டுக் குழுவினரை வெளியூரிலிருந்து அழைத்து வந்தனர். இவர்களும் மாந்தரீகம் தெரிந்தவர்களாய் வில்லுப்பாட்டு பாடிக்கொண்டே மந்திரத்தைப் பயன்படுத்தி காலனிப்பகுதிக்கு தவளைகளை அனுப்பினர். தவளைகளைப்பார்த்து மக்கள் பீதியடைந்தனர். உடனே கட்டக்கிழவன் தன்னுடைய மந்திரத்தை பயன்படுத்தி விழா மேடைக்கு சாபத்தை அனுப்பினார். உடனே வில்லுப்பாட்டு பாடிக் கொண்டிருந்த அந்த மேடையும். பந்தலும் தீப்பற்றி எரிந்தது. திருவிழா மகிழ்ச்சி மறைந்து அவலம், பயம் நீடித்தது. உடனே தேவர்கள் ஓடி வந்து கட்டக் கிழவனிடம் மன்னிப்புக் கேட்டனர். சாபத்தை நீக்குமாறு கேட்டனர். கட்டக்கிழவன் அரிசி, பருப்பு, பழம் கொண்டு வரக்கட்டளையிட்டார். அவர்கள் கொண்டு வந்து கொடுக்க, சாபம் நீங்கியது. 


இகழ்ச்சிக்குத் தண்டனை கொடுத்த கதை: ஒரு முறை கட்டக்கிழவன் தனியாக நடந்து சென்ற போது. ஒரு பிள்ளைமார் வீட்டு இளம்பெண் தூ.... என்று துப்பினாளாம். அந்தப் பெண்ணின் மீது கட்டக்கிழவன் சாபமிட்டார். உடனே அவளுடைய இரண்டு கொங்கைகளும் ஒன்றாக ஒட்டிக் கொண்டன. இதனால் அந்தப் பெண் அவஸ்தைப் பட்டாள். பின்பு கட்டக்கிழவனிடம் மன்னிப்பு கேட்டு, அரிசி, பழம், பருப்பு எல்லாம் கொடுத்து சாபத்தை நீக்கிக் கொண்டாள். 


தாழ்த்தப்பட்ட தேவேந்திரகுல வேளாளர்கள், தேவர்களின் ஆதிக்கத்திலிருந்து விடுபட இது போன்ற கதைகள் தேவைப்படுகின்றன. இழந்து போன தங்களின் அடையாளத்தை நிலை நிறுத்திக் கொள்ள இவை உதவுகின்றன. இந்தக் கதைகளை அடிக்கடி ஞாபகப்படுத்திக் கொள்வதன் மூலம், நம் முன்னோர் எவ்வளவு வீரமுள்ளவர்கள் என்பதை அறிகிறார்கள். நாமும் அவர்களைப் போல அடக்குமுறைக்கு பதிலடி கொடுக்க வேண்டுமென்ற உந்து சக்தியைப் பெறுகிறார்கள். உளவியல் ரீதியாக, கதைகளில் வரும் கதாநாயகன் இந்த மக்களுக்கு தெம்பையும் உறுதிப்பாட்டையும் கொடுக்கிறார். 


சாதிய அடக்குமுறைக்கு எதிர்ப்புக் குரல் கொடுக்கும் கதைகள் சந்ததி விட்டு சந்ததி மாறும் போது கொஞ்சம் கொஞ்சமாக மறையத் தொடங்குகின்றன. ஏனெனில், அதற்கான தேவையும் குறைந்து விடுகிறது. பற்பநாதபுரம் கிராமத்தில் சுமார் பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு தேவர் இளைஞன் தாழ்த்தப்பட்ட இளம் பெண் மேல் பாலியல் வன்முறையை நிகழ்த்தியிருக்கிறான். உடனே கோபம் கொண்ட தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் அவ்விளைஞனைக் கட்டி வைத்து தண்டித்தனர். தேவர் கிராமத்து பெரியவர்கள் வந்து செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு இளைஞனை கூட்டிச் சென்றனர். இந்த நிகழ்விற்கு பிறகு தேவேந்திரகுல வேளாளர்களுக்கு தேவர்கள் கொஞ்சம் பயப்படுகிறார்கள். 


கதைகளில் மட்டும் வெளிப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களின் கோபமும், எதிர்ப்பும் இப்போது நடைமுறை வாழ்வியல் சூழலிலும் வெளிப்பட்டிருக்கிறது. ஆனால் இந்த எதிர்ப்புணர்வின் வேர் பழமரபுக் கதைகளில் உள்ளது. தாழ்த்தப்பட்ட இளைஞர்கள் தங்களுடைய தாத்தாக்கள் கூறிய கதைகளிலிருந்து தங்களின் எதிர்ப்புணர்வைப் பெற்றிருக்கலாம். கட்டக்கிழவன் போல் மாந்தீகம் தெரியாமல் போனாலும், 'நாமும் மனிதர்கள், மாண்போடு வாழ் வேண்டியவர்கள்' என்ற சிந்தனை இவர்களுக்கு பலத்தையும், தைரியத்தையும் கொடுக்கின்றது. எனவே விழிப்புணர்வு அதிகமாக அதிகமாக கதைகளின் தேவை இயல்பாகவே குறைந்து விடுகிறது. 


பற்பநாதபுரத்தில் வாழுகிற மக்கள் வழிபடுகிற கிறிஸ்தவ தெய்வங்களும், வழிபாட்டு முறைகளும் இந்த பழமரபுக்கதைகளை நினைபடுத்துகிற வகையில் இல்லை. இதனால் இந்தக் கதைகளை நினைவில் வைத்திருக்கிற தாத்தாக்கள் சாகிற போது அவர்களோடு இக்கதைகளும் செத்து விடும் என்பதில் ஐயமில்லை.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக