Skip to main content

6 செயல்பாட்டு நோக்கில் நெல்

6   செயல்பாட்டு நோக்கில் நெல் 





மா. சண்முகவேலு 



'நெல்லின மக்கள்' என்று அழைக்கப்பட்டு வரும் 'தேவேந்திரகுல வேளாளர்' வாழ்க்கையில் பயன்படுத்தப்பெறும் முக்கிய புழங்கு பொருளான 'நெல்லைச்' செயல்பாட்டு நோக்கில் இக்கட்டுரை ஆராய முயல்கிறது. வாழ்வியல் சடங்குகளைப் பிறப்பு, பூப்பு, திருமணம், இறப்பு என்று நான்கு நிலைகளில் ஆராயலாம். இச்சடங்கு முறைகளில் பல்வேறு புழங்கு பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன. தேவேந்திரகுல வேளாளர் சடங்கு முறையில் நெல் முதன்மைப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 


பிறப்பு: குழந்தை பிறந்தவுடன் அக்குழந்தையைக் குளிப்பாட்டி படுக்க வைத்து சேனைப்பால் தொட்டு வைக்கும் சடங்கு நடைபெறும். பின்னர் தாய்மாமன் 'தொட்டிக் கம்பு' வாங்கிக் கொடுத்தல், பெயர் வைத்தல், காது குத்துதல் என்னும் சடங்குகள் நடைபெறுகின்றன. குழந்தை பிறந்து இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கழித்து பெயர் வைக்கும் சடங்கு நடைபெறுகிறது. பெயர் வைக்கும் போது பச்சை நெல் குத்தி அரிசி எடுத்து குலதெய்வத்திற்குப் பொங்கல் வைத்து வழிபாடு செய்து பெயர் வைக்கின்றனர். இதனை 'அரிசி குத்திப் பெயர் வைத்தல்' என்பர். குழந்தை பிறந்து ஓராண்டு முடிந்தவுடன் குழந்தைக்கு முடி இறக்கிக் காது குத்தும் சடங்கு நடத்துவர். இதனை 'காது குத்துக் கல்யாணம்', 'காதணிவிழா' என்று குறிப்பிடுகின்றனர். இச்சமூகத்து மக்கள் தங்களது குழந்தைகளுக்கு மற்ற மக்கள் போன்று உலோகத்தைக் கொண்டு காது குத்தாது தங்களது வயல்களில் விளையும் 'நெல்மணிகளைக்' கொண்டே காது குத்துகின்றனர். பேய் பிசாசுகளிடமிருந்து குழந்தையைக் காப்பாற்ற காது குத்துவதாக இம்மக்கள் நம்புகின்றனர். தற்பொழுது இம்மக்களிடம் நெல் மணிகளைக் கொண்டு காது குத்தும் வழக்கம் மறைந்து வருகிறது.


பூப்புச் சடங்கு: பெண் திருமணம் ஆவதற்குத் தகுதி பெறுதலும், தாய்மை அடைவதற்கு உரிய உரிமையை அடைதலும் பூப்படைதல் ஆகும். இப்பூப்புக் காலத்தை ஒட்டிச் செய்யப்படும் சடங்குகள் பூப்புச் சடங்காகும். இம்மக்கள் இதனைப் பூப்படைதல், சடங்காதல், ஆளாதல், குமரியாதல், சமைதல், வயசுக்கு வருதல் என்றெல்லாம் குறிப்பிடுகின்றனர். ஒரு பெண் பூப்படைந்தவுடன் அவளது தாய்மாமன் அல்லது அவனது மகன் தென்னை, பனை ஓலைகளைக் கொண்டு வீட்டை விட்டுத் தனியே குச்சில் கட்டுவான். அக்குச்சிலின் உள்ளே 'பச்சை நெல்' பரப்பி அதன்மேல் வைக்கோல் போர்த்தி அருகில் ‘நிறைபடி நெல்' வைத்து அவற்றில் வெற்றிலை சொருகி வைத்திருப்பார். அதன் பின்னரே பூப்படைந்த பெண்ணைக் குச்சிலின் உள்ளே இருக்க வைப்பர். பூப்படைந்த பெண்ணின் உறவினர்கள் பச்சை நெல் குத்தி அரிசி எடுத்து அதனை மாவாக்கி பணியாரம் மற்றும் களி செய்து கொடுப்பர். பூப்புக்காலங்களில் இரத்தப்போக்கு அதிகம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் சோர்வைப் போக்கி வலுச் சேர்ப்பதற்கு இவற்றைத் தருவர். 


பூப்படைந்த பெண்ணிற்கு 11 அல்லது 15 வது நாளில் தலைக்கு தண்ணீர் ஊற்றி தாய்மாமன் எடுத்து வந்த புத்தாடைகளை அணிவித்து அலங்காரம் செய்து முக்காலியில் வண்ணார் விரித்த வெள்ளைத்துணியின் மேல் அமரச் செய்வர். அப்போது அவளின் முன்னே நிறைபடி நெல்லில் வெற்றிலை சொருகி வைப்பர். பின்னர் நெல் நிரப்பிய கூடையில் பூப்பெய்த பெண்ணை அமரச் செய்து தாய்மாமன் மேலும் கீழும் மூன்று முறைத் தூக்கி வைப்பார். இச்சடங்கிற்கு வரும் உறவினர்கள் 7 படி, 9 படி, 11 படி, 15 படி, 17 படி 'பச்சை நெல்' கொண்டு வருவர். இப்பூப்புச் சடங்கில் இடம்பெறும் 'நெல்' பூப்படைந்த பெண் உடல் ரீதியாகவும், உள்ள ரீதியாகவும் வளமையைப் பெற வளமையின் குறியீடாகச் செயல்படுகிறது. 


திருமணம்; ஆணும் பெண்ணும் ஒன்றினையும் நிகழ்ச்சியே திருமணம். திருமணத்திற்கு முக்கியமாகத் தேவைப்படுவது 'தாலி' ஆகும். இத்தாலியை ஆசாரியிடம் செய்யக் கொடுக்கும் போது இச்சமூகத்து மக்கள் நல்ல நாள், நேரம் பார்த்து நிறைபடியில் நெல் வைத்து அத்துடன் குங்குமம், மஞ்சள் முதலிய வழிபாட்டுப் பொருள்களை வைத்து வழிபாடு செய்து 'தாலி' செய்வதற்கு உரிய தங்கத்தை ஆசாரியிடம் உருக்கச் சொல்லுவர்.  இதனைப் 'பொன் உருக்கிவிடுதல்' என்று குறிப்பிடுவர். 'தாலி' என்பது மங்கலப் பொருளாகும். அந்த மங்கலத்தின் குறியீடாக 'நெல்' பயன்படுத்தப்படுகிறது.


திருமண வீட்டில் முகூர்த்தக்கால் ஊன்றும் போது முகூர்த்தக்காலில் நெல், கம்பு முதலிய நவதானியங்களை மஞ்சள் தோய்த்த வெள்ளை துணியில் முடிந்து கட்டுவர். மணமேடையில் நெல்லைப் பரப்பியும் வைக்கின்றனர். திருமணம் முடிந்து வீட்டிற்குள் செல்லும் மணமக்களுக்கு மாப்பிள்ளையின் சகோதரி செம்பின் வெளிப்புறத்தில் பச்சரிசியை மாவாக்கிப் பூசி அதில் நெல்லையும் குண்டுமணியையும் பதித்து வாய்ப்பகுதியில் விளக்கேற்றி ஆரத்தி எடுப்பார்.  இதனை 'முத்து ஆரத்தி' என்பர். இது இம்மக்களின் வேளாண் பண்பாட்டைக் காட்டுகிறது. திருமணம் முடிந்து மணமக்கள், பெண் வீட்டிற்கு முதல் முதலில் வரும் போது வண்ணார் மாத்து விரிக்க அதன் மேல் நெல்லைப் பரப்பி நடந்துவரச் செய்கின்றனர். 


இறப்பு: ஒரு மனிதன் இறந்ததும் செய்யப்படும் சடங்கினை 'இறப்புச் சடங்கு', 'ஈமச் சடங்கு'. ‘இறுதிச் சடங்கு' என்று குறிப்பிடுகின்றனர். தேவேந்திர குல வேளாளர் ஒருவர் இறந்தவுடன் அவரைக் குளிப்பாட்டிப் படுக்க வைப்பர்.  அவரின் தலைமாட்டின் அருகே நிறைபடி நெல் அல்லது நின்ற மரக்கால் நெல், தேங்காய் பழம் வைத்து ஊதுபத்தி பற்ற வைத்து வழிபாடு செய்வர். பின்னர் இறந்தவரின் உறவினர்கள் சின்ன நார்ப்பெட்டியில் பச்சை நெல்லைக் கொண்டு வந்து பிணத்தின் கால் பகுதியில் குவித்து வழிபாடு செய்வர்.  இவ்வாறு 'நெல்' கொண்டு வருவதை 'பச்சை கொண்ட வருதல்' என்பர். ஒருவர் இறந்தவுடன் அவர் தெய்வ நிலையை அடைந்து விடுவதாக இம்மக்கள் நம்புகின்றனர். தெய்வத்திற்கு நெல்லும் பூவும் தூவி வழிபாடு செய்வது போன்று இறந்தவர்க்கு இம்மக்கள் நிறைபடி நெல்லும், கால் பகுதியில் நெல்லினைக் குவித்தும் வழிபாடு செய்து தமது நெல் பணபாட்டை வெளிக்காட்டிக் கொள்கின்றனர். 


பிணத்தைச் சுடுகாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு முன் பிணத்தைக் குளிப்பாட்டி வீட்டின் முன் வைக்கின்றனர். பிணத்தைச் சுற்றி நெல் போடப்படுகின்றது. பின்னர் இறந்தவர் மகனும், மருமகனும் கையில் நெல்லும் விளக்கும் வைத்துக் கொண்டு மூன்று முறை சுற்றி வருகின்றனர். மூன்றாவது முறை வரும் போது மாட்டுச்சாணி உருண்டையை நெல்லில் தோய்த்து பிணத்தின் கையில் வைத்து 'மூதேவி போய் சிதேவி வா' என்று மூன்று முறை கூறி வாங்குகின்றனர். 


வாங்கிய சாணி உருண்டையை வீட்டிற்குள் பிணம் வைக்கப்பட்டிருந்த இடத்தின் சுவற்றில் அப்பி வைக்கின்றனர். பின்னர் தினந்தோறும் அதன் மேல் தண்ணீர் தெளித்து வருகின்றனர். நெல் முளைத்து வளர்ந்து வந்தால் குடும்பம் சிறக்குமென்றும் இல்லையென்றால் ஏதோ தீங்கு உள்ளதாகவும் நம்பி வருகின்றனர். பிணத்தைக் குழியில் புதைத்தல் அல்லது எரியூட்டுதலுக்கு முன் பச்சை நெல்லைக் குத்தி எடுக்கப்பட்ட அரிசியை வைத்திருப்பர். பிணத்தின் வயிற்றுப் பகுதியில் வண்ணார் துண்டு விரித்திருப்பார். இத்துண்டில் சில்லறைக் காசுகளைப் போட்டு விட்டு அரிசியை எடுத்து மூன்று முறை பிணத்தின் மேல் போடுவர். இந்நிகழ்ச்சியை 'வாய்க்கரிசி போடுதல்' எனக் குறிப்பிடுகின்றனர். இந்நிகழ்ச்சி பெண் மக்கள் குடம் உடைக்கும் 'இடுகாட்டிலும்', பிணத்தைப் புதைக்கும் சுடுகாட்டிலும் நடைபெறுகிறது. இடுகாட்டில் பெண்களும், சுடுகாட்டில் ஆண்களும் நிகழ்த்துகின்றனர். சுடுகாட்டிற்கு பெண் மக்கள் வருவதற்கு அனுமதி இல்லாத காரணத்தால் இடுகாட்டிலேயே செய்கின்றனர். 'இடுகாடு' என்பது ஊருக்கும் சுடுகாட்டிற்கும் இடைப்பட்ட பகுதியாகும். 


இறந்த மூன்றாவது நாள் 'குழி மெழுகுதல்' என்ற சடங்கு நடைபெறுகிறது. சுடுகாட்டிற்குச் சென்று பிணத்தைப் புதைத்த குழியினைச் சமப்படுத்தி தண்ணீர் ஊற்றி மெழுகுகின்றனர். பின்னர் குழிமேட்டின் தலைப்பகுதியில் பள்ளம் பறித்து பால் ஊற்றி அதன் மேல் 'நெல்லைத்' தூவுகின்றனர். அந்நெல் நன்கு முளைத்து வந்தால் இறந்தவர் குடும்பத்தில் உள்ளோருக்கு நன்மை பயக்குமென்றும், முளைக்கவில்லையென்றால் தீமை பயக்குமென்றும் நம்புகின்றனர். ஒரு மாதம் கழித்து இறந்தவர் அணிந்த ஆடை, அவருடைய புகைப்படம், அவர் விரும்பிப் புழங்கிய பொருட்கள் அத்துடன் ‘நிறைப்படி நெல்' வைத்து வழிபடுகின்றனர். சீதேவி வாங்குதல்' சடங்கில் மருமகள் வைத்திருந்த நிறைபடி நெல்லில் இருந்து அரிசி எடுத்து மாவாக்கி அதில் மாவிளக்கு செய்தும் வழிபடுகின்றனர். 


வழிபாட்டில் நெல்: உழவுத் தொழிலை முதன்மைத் தொழிலாகக் கொண்ட இம்மக்கள் நெல், வாழை, கரும்பு ஆகியவற்றைச் சாகுபடி செய்து வருகின்றனர். இவற்றைப் பயிர் செய்ய தொடங்குவதற்கு முன் ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் நல்ல நாள் பார்த்து உழவைத் தொடங்குகின்றனர். அப்போது வீட்டிலிருக்கும் அனைவரும் வழிபாடு செய்து ஏர், கலப்பையைப் பிடித்து சிறிது தூரம் உழுகின்றனர். பின்னர் வீட்டிலிருந்து ‘விதை நெல்' சிறிது கொண்டு வந்து வீட்டில் உள்ளோர் அனைவரும் மூன்று முறை அள்ளி விதைக்கின்றனர். இதனை 'விதை போடுதல்' என்றும் 'ஏர் விடுதல்' என்றும் அழைக்கின்றனர். இதனை 'பொன்னேர் பூட்டுதல்' என்பர். நெல் சாகுபடி செய்யும் காலம் தொடங்கி விட்டது என்பதை அறிவிக்கும் விழாவாக இவ்விழா காணப்படுகின்றது. நெல் விளைந்தவுடன் அறுவடைக்கு முன்னர் நல்லநாள் பார்த்து வயலில் சிறிது நெல் கதிர்களை அறுத்து கோவிலில் வைத்து வழிபாடு செய்வர். இதனை 'நாள் கதிர் அறுத்தல்' என்று குறிப்பிடுகின்றனர். 


'அலகு கதிர்' என்பது அறுவடைக்கு முன் நல்லநாள் பார்த்து அறுக்கப்பட்ட நெல்கதிரின் தாளினை நன்கு பின்னித் திரித்து மணி மகுடம் போன்றோ வேல் போன்றோ தேர் போன்றோ செய்து கோவிலுக்கு காணிக்கையாக்கி வழிபாடு செய்வதே ஆகும். இவை பெரும்பாலும் பழநி, மதுரை, கோவை மாவட்டங்களில் காணப்படுகிறது. 


அறுவடை முடிந்து களத்து மேட்டில் நெல் குவிக்கப்பட்டவுடன் தேங்காய் உடைத்து வழிபாடு செய்கின்றனர். பின்னர் நிறை சுளகு நெல் எடுத்து வைப்பர். இந்த நிறை சுளகு நெல்லைத் தனது குலதெய்வத்திற்குக் காணிக்கையாக்குகின்றனர். குல தெய்வம் மட்டுமல்லாது திருச்செந்தூர் முருகன், பழநி முருகன், தாயமங்களம் முத்து மாரியம்மன் போன்ற கோவிலுக்கும் நெல்லைக் காணிக்கையாகப் படைகின்றனர். தன்னையும் தனது நெல் வேளாண்மையையும் காத்து செழிப்புடன் வளர்வதற்குத் துணையாக இருந்த தெய்வத்திற்கு நன்றி சொல்லும் வகையிலேயே நெல் காணிக்கையாக்கப்படுகிறது. 


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக