Skip to main content

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல்

12 மேனாட்டார் பார்வையில் கம்மா இனமக்கள் வாழ்வியல்



முனைவர். சி.பி. கோபால் 



கம்மா, காபூ அல்லது ரெட்டி, வெலமா மற்றும் தெலகா ஆகியோரைக் கூற வந்த பிரான்ஸிஸ் இந்த நான்கு பெரிய ஜாதிகளும் தோற்றத்திலும் பழக்க வழக்கங்களிலும் ஒன்றையொன்று ஒத்திருந்தன என்றும் அனைத்து ஜாதிகளும் திராவிடத்திலிருந்தே வந்தன என்றும் கூறுகிறார். ஆரம்ப காலத்தில் வீரர்களாகத் திகழ்ந்த இவர்கள் தற்போது விவசாயிகளாகவும், வியாபாரிகளாகவும், வடக்கே சிலர் ஜமீன்தார்களாகவும் உள்ளனர். சத்திரியர்கள் என்று சொல்லப்படுகின்ற ராஜூஸ் என்ற ஜாதியினர் காபூஸ், கம்மாஸ் மற்றும் வெலமாஸ் என்ற ஜாதிகளில் இருந்து பிரிந்து இருக்கலாம். 


மதுரை மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் காணப்படும் கம்மாக்களும் காபூக்களும் தெற்கு விஜய நகர போர்ப்படையினைப் பின்பற்றி வந்து நாயக்கர் கவர்னர்கள் நிலை நிறுத்திக் கொண்ட போதே இம்மாவட்டங்களில் தங்கி விட்டனர். அவர்கள் வீட்டுப் பெண்கள் மற்ற ஜாதிப் பெண்களை விட கண்டிப்புக் குறைந்தவர்களாக இருந்தனர். அதிலும் கம்மாக்களின் ஒரு பிரிவு மகளிர் முஸ்லீம்களைப் போல் கோஷா அணிந்து தனித்து இருந்தனர்.


கம்மா, காபூ மற்றும் வெலமாக்களின் மூதாதையர் பற்றி ஏராளமான கதைகள் கூறப்படுகின்றன. 'கம்மா' என்ற சொல்லுக்கு, பெண்கள் காதில் அணியும் ஆபரணம் என்று பொருள். புராணக் கதையின்படி ஒரு முறை அசுரர்களின் கொடுமைகளைத் தாங்க முடியாத ரிஷிகள் விஷ்ணுவிடம் சென்று முறையிட, அவர் தம் தேவி லக்ஷ்மியிடம் முறையிடப் பணித்தார். லக்ஷ்மி தன்னிடம் முறையிட்ட இருடிகளிடம் தன்னுடைய காதணிகள் வைக்கப்பட்ட பேழையினைத் தந்து அதை நூறாண்டுகள் பூஜை செய்யுமாறு கட்டளையிட, நூறாண்டு பூஜைக்குப் பின் பேழையினைத் திறந்து கொண்டு வந்த ஐநூறு வீரர்கள் ரிஷிகளின் வேண்டுகோளின்படி அசுரர்களைக் கொன்று அழித்து விட்டனர். இதற்குப் பின் அவர்கள் நிலபுலன்களைக் கவனித்துக் கொள்ளும் விவசாயிகளாக மாறினர். சத்திரியர்களைப் போலவே அவர்களும் அமராவதி மற்றும் நெல்லூர், கிருஷ்ணா மாவட்டங்களில் குடிபெயர்ந்து சிறந்த வேளாண் குடிகளாயினர் 


எப். ஆர், ஹெமிங்வே என்பவர் கோதாவரி மாவட்டத்தில் உள்ள சில கம்மாக்களைப் பற்றிய விவரங்களை வினவிய போது அவர்கள் சொன்னதாவது: வெகு காலத்திற்கு முன்பு பரிஷத் குடும்பத்தைச் சேர்ந்த அரசன் ஒருவனைக் கம்மா ஒருவன் தகாத வார்த்தை சொன்னதால் கம்மாக்கள் தண்டிக்கப்பட்டார்களாம். நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட அவர்களைக் கபூக்கள் வரவேற்று அவர்கள் குலத்தோடு சேர்த்து ஏற்றுக் கொண்டார்கள். இன்னொரு புராணக் கதையின்படி ராஜா பிரதாப ருத்ரனுக்குரிய விலை மதிப்பிடற்கரிய காதணி எதிரிகளின் கையில் அகப்பட்டு விட அதைக் கபூக்கள் போராடி மீட்டனர். எனவே அவர்களும் கம்மா என்று அழைக்கப்பட்டார்கள். சில கபூக்கள் ஓடிவிட அவர்கள் வெலமாக்கள் என்று அழைக்கப்பட்டனார் (வெலி என்றால் வெளியே என்பது பொருள்), கம்மாக்களும் வெலமாக்களும் ஒரு ஜாதியாக இணைந்த போது அவர்கள் முஸ்லீம்களின் கோஷா அணியும் முறையைப் பின்பற்றி தம் குலப் பெண்டிரையும் தனியே இருக்க வைத்தனர். இம்முறை அவர்களின் விவசாயச் செயல்களுக்குத் தடையாக இருந்தது. இந்த முறையைக் கைவிட வேண்டி இரு தரப்பினரும் பனை ஓலையில் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டனர். உடன்பாடு ஏற்று கையெழுத்திட்டவர்கள் கம்மாக்கள் என்றும், உடன்படாதவர்கள் வெலமாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். காதிலே ஓட்டை போட உதவிடும் பனை ஓலையினைப் பின்பற்றி பனை ஓலையில் எழுதி ஒப்பந்தம் செய்து கொண்டதால் அவர்கள் கம்மாக்கள் என்று அழைக்கப்பட்டனர். பிறிதொரு கதையின்படி பெல்திரெட்டி என்ற அரசன் ஒருவனுக்கு ஏராளமான மனைவியர் இருந்தனர். அவர்களில் மிகவும் விரும்பிய ஒருத்தியை அவன் ராணியாகத் தேர்ந்தெடுத்தான். இதனால் பொறாமை கொண்ட மற்ற மனைவியர் ராணியின் நகைகளைத் திருடுவதற்குத் தங்கள் மகன்களைத் தூண்டி விட்டனர். ஆனால் சிலர் அகப்பட்டுக கொண்டனர். சிலர் தப்பி ஓடி விட்டனர். ஓடியவர்கள் வெலமாக்கள் என்றும் நகைகளைத் திரும்ப ஒப்படைத்தவர்கள் கம்மாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். 


1891 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்குப்படி கம்மாவின் உட்பிரிவுகள், கம்பா, இல்லுவேலனி, கோடாஜாதி, காவலி, வடுகா, பெட்டா மற்றும் பங்காரு. இதில் முக்கியமான இரு பிரிவுகள் கம்பா (கூடை) சாத்து மற்றும் கோடா (சுவர்) சாத்து.  சாத்து என்றால் திரை அல்லது மறைவிடம் என்று பொருள். இவ் உட்பிரிவுகளின் மூலத்தை ஆராய ஆரம்பித்தால் அதற்கும் ஒரு கதை இல்லாமல் இல்லை. அக்கதையாவது:


இரு சகோதரிகள் ஒரு குளத்தில் குளித்துக் கொண்டு இருந்த போது ஓர் அரசன் அவ்வழியே செல்ல நேர்ந்தது. இருவரும் மறைந்து கொள்ள வேண்டியிருந்ததால் ஒருத்தி கூடைக்குப் பின்னாலும் இன்னொருத்தி சுவரின் பின்னாலும் ஒளிந்து கொண்டனர். அவர்தம் வழியில் வந்தவர்கள் முறையே கோடா கம்மாக்கள் என்றும் கம்பா கம்மாக்கள் என்றும் அழைக்கப்பட்டனர். ஆயினும் அவர்களுக்குள் திருமண உறவுகள் வைத்துக் கொள்வதில்லை. 


இன்னொரு புராணக் கதைப்படி, சண்டையில் தோல்வியடைந்த கம்மா ஜாதியினைச் சேர்ந்தவர்கள் தப்பியோடும் போது சிலர் கூடைக்குப் பின்னாலும் சிலர் சுவரின் பின்னாலும் மறைந்து ஓடி விட்டனர். இல்லுவேவளி மற்றும் பெட்டாவும் கோடா ராத்துவிற்கு ஒரே சொல்லாகும். இந்த ஜாதிப் பெண்கள் கோஷாக்களாக பொதுவிடங்களுக்கு வராமல் தனியாகவே இருந்தனர், இன்றுகூட அவர்கள் வெளியே சென்று வயல்களில் வேலை செய்வதில்லை.  இல்லு என்றால் வீடு, வேலன் என்றால் வெளியே செல்லல், 'இல்லு வேலன் என்று சொன்னால் வெளியே செல்லாதவர்கள் என்பது பொருள்.  


பெத்தா என்றால் பெரியவர்கள் என்பது பொருள். வடுகன் என்றால் தெலுங்கு என்று பொருள். எனவே தமிழர்கள் கம்மாக்களுக்கு அளித்த பெயர் தெலுங்கு வாடு அல்லது மொழியைக் குறிக்கும் பெயராகிய வடுகன் என்பதாகும். 'பங்காரு' என்றால் பெண்கள் அணியும் ஆபரணங்கள் என்று பெயர்.  கோடா ஜாதி உட்பிரிவு வடக்கு ஆற்காட்டிலும் செங்கல்பட்டிலும், இல்லு வேலனி கிருஷ்ணாவிலும், நெல்லூரிலும் மற்றும் அனந்தப்பூரிலும் காணப்படுகிறார்கள். காவாலி பிரிவினர் கோதாவரியிலும் பெத்தாக்கள் கிருஷ்ணாவிலும் வடுகா கம்மாக்கள் கோயம்புத்தூரிலும் மிகப் பரவலாக உள்ளனர், 


கோதாவரி மாவட்டத்தில் உள்ள சும்மாக்கள் பற்றி ஹெமிங்வே கீழ்வருமாறு கூறுகிறார். இம்மாவட்டத்தில் கம்மாக்கள் காவித்திஸ், எரேடிஸ், கம்பாக்கள் அல்லது காடாக்கள், உக்கம்ஸ், ராச்சாஸ் என்று பிரிக்கப்பட்டுள்ளனர், இந்தப் பெயர்கள் பாரம்பரிய வழிப்படி நீர் கொண்டு வருதல் தொடர்பாக வைக்கப்பட்டுள்ளன. காவிடிஸ் இனத்தவர் காவிடி என்ற பானைகளில் தண்ணீர் எடுத்து வருகிறார். எரேடிஸ் இனத்தவர் மாடுகளின் முதுகிலும், உக்கம்ஸ் இனத்தவர் கைகளிலும் ராச்சாஸ் இனத்தவர் இருவராகவும் தண்ணீர் கொண்டு வருவர். 


இல்லுவேலனி கம்மாக்களைப் பற்றி எழுதும் போது கர்னூல் மேனுவல் (1886) என்ற மாவட்டக் கையேட்டின் பதிப்பாசிரியர் பின்வருமாறு பதிவு செய்துள்ளார். சில குடும்பங்கள் தான் தற்போது இம்மாவட்டத்தில் வாழ்ந்து வருகின்றன. பெண்கள் கோஷா முறையைத் தவறாமல் கடைப்பிடிக்கின்றனர். நூல் நூற்றலையோ வேலை செய்வதையோ அவர்கள் தம் மதிப்பிழிவு என்று எண்ணுகின்றனர். ஒரு உட்பிரிவைச் சேர்ந்த இந்த இனத்தவர் புல்லச் செருவு என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். கோஷா பெண்மணிகளான இவர்கள் மற்ற பெண்களைப் போல நூற்பாலைகளில் வேலை செய்து வருகின்றனர். இன்னுமொரு கம்மா பிரிவினர் ஒவ்க் என்ற இடத்தில் வசித்து வருகின்றனர். இவர்களும் கம்மாக்களின் வழிமுறைத் தோன்றலராவர். 


இவர்கள் 16 ஆம் நூற்றாண்டில் குண்டூரில் இருந்து காந்தி கோட்டாவிற்கு நாயக்கர்களைப் பின்பற்றி வந்தவர்களாவர். இன்று இவர்கள் மிகவும் சீரழிந்து விட்டனர். பெண்களும் வயலில் வேலை செய்கின்றனர். கம்மாக்களுக்கும் கம்பாக்களுக்கும் பெண்களிடம் உள்ள அடிப்படை வேறுபாடு என்னவென்றால் கம்பாக்கள் தோள் சேலைத் தலைப்பினை வலது புறமும். கம்மாக்கள் இடதுபுறமும் போட்டு இருப்பர்.


சமுதாயத்தைப் பாதிக்கக் கூடிய செய்திகளைப் பற்றி விவாதித்து முடிவு எடுக்க இனத்தின் மூத்த தலைவர்கள் கூடி ஆலோசிப்பர். சில இடங்களில் நிலையான தலைவன் உண்டு, அவருக்கு மன்மேமந்திரி அல்லது சாத்ரி என்ற பெயருண்டு. கம்மாக்கள் கூலிகளாகக் கூட வேலை செய்யத் தயாராக இருப்பர், ஆனால் வீட்டு வேலை செய்யத் துணிய மாட்டார்கள்.  


பாதிரியார் ஜே. கெய்ன் என்பவர் கூறுகிறார்: - மிகச் சிறந்த மற்றும் வலிமையான விவசாயிகளான கம்மாக்கள் நகர வாழ்க்கையின் மீது பற்றில்லாதவர்கள். தங்கள் மனைவிகளைத் தங்களுடைய வீட்டு வளாகத்தை விட்டு வெளியில் செல்ல அனுமதிக்க மாட்டார்கள். ஞாயிற்றுக்கிழமைகளில் விவசாய வேலைகளில் ஈடுபட மாட்டார்கள். வீட்டு வேலைகளிலேயே மூழ்கிக் கிடப்பர். பத்திரிக்கையாளர் யாராவது அவர்களை அணுகி, 'இந்த கிராமத்தில் இருப்பவர் பிராம்மணா' என்றால் 'இல்லை'. இங்கு சாதாரணமாக கம்மா அல்லது காபுதான் உண்டு '. எத்தனைபேர் இவ்வூரில் வருமானவரி கட்டுகிறார்கள் என்று கேட்டால் அவர்கள் சொல்வார்கள், 'இரண்டு வியாபாரிகள், இரண்டு சம்சாரிகள்' அதாவது கம்மா விவசாயிகள் என்று.


மதத்தினைப் பொறுத்தவரை கம்மாக்கள் சைவர்கள் மற்றும் வைஷ்ணவர்கள். சைவர்கள் ஆராத்யா பிராமணர்களின் சீடர்கள். வைஷ்ணவ பிராமணர்கள் மற்றும் சாத்தனீர்களின் சீடர்கள் சைவர்கள். கம்பாக்கள் திரௌபதி, மன்னார்சாமி, கங்கம்மா, அங்கம்மா மற்றும் பாத வேடியம்மா ஆகியோரைத் தொழுதார்கள். கோடாக்கள் போலரம்மா, பெய்கண்டலா தள்ளி மற்றும் பாடவேடியம்மா போன்ற தேவதைகளைத் தொழுது வந்தனர்.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக