Skip to main content

பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!

பல்லுயிர் கனவியல்! Multispecies Oneirology!



கனவுகளில் மொழியின் வகிபாகம் குறித்து ஃப்ராய்ட் செலுத்திய கவனம் உளவியலில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியதுபின்னாட்களில், லெக்கன், நனவிலிமனம் மொழியைப் போலவே ஒழுங்கமைக்கப்பட்டிருக்கிறதோ என்று சந்தேகம் கொண்டதற்கு இதுவும் ஒரு காரணம்.  ‘கனவுகள், மூளையின் குடல்வால்என்று கருதிய நவீனத்துவ சூழலில், அவற்றை ஆழ்மனதின் சுவடுகளாகப் பாவிக்க முடியும் என்று நிரூபித்தது உளப்பகுப்பாய்வுஅதன் பின், கனவுகள் ஆய்வாளர்கள் மத்தியில் மரியாதையான இடத்தை வகிக்க ஆரம்பித்தன.





நானும் எல்லோரையும் போல கனவுகளின் துரதிர்ஷ்டசாலி தான்எனது நிறைய கனவுகளில்பேசினோம்என்று நினைவிருக்கும் ஆனால், என்ன பேசினோம் என்று சொல்ல வராதுஅதாவது, பேசிய விஷயம், ஒரு பனிப்படலம் போல நினைவிருக்கும்இன்னும் சரியாக சொல்லப்போனால், ‘செஷைர் பூனையின் சிரிப்புபோலபேச்சு மறந்து போன பின்பும், மரக்கிளையில்விஷயம்மட்டும் இளித்துக் கொண்டிருக்கும்.


ஃப்ராய்டிலிருந்து பலரும், கனவுகளை நம்மால் துல்லியமாய் ஞாபகம் வைத்திருக்க முடிவதில்லை என்பதாலேயே அந்த உரையாடல்கள் / பேச்சுகள் நினைவிலில்லை என்று நம்புகிறார்கள்அதனால், கூடுமானவரை அக்கனவை எழுத்திலோ பேச்சிலோ பதிவிடச் சொல்கிறார்கள்மொழி, அவர்களுக்கு, ஒரு பாதாளக்கரண்டியைப் போல.  ‘நினைவின்மையில்மூழ்கியக் கனவுகளை மொழி அள்ளிக் கொண்டுவரும் என்பது ஃப்ராய்டிய நம்பிக்கை.  


சமீபத்தில், விலங்குகள் காணும் கனவுகள் குறித்து நிறைய ஆய்வு செய்கிறார்கள்பகலில் நடந்ததை, விலங்குகள், இரவுகளில் ஞாபகங்களாக உருமாற்றுகின்றன; அதற்குக் கனவுகள் மிக முக்கியப் பங்காற்றுகின்றன என்ற திசையில் ஆய்வுகள் நகர்கின்றன.  


விலங்குகளின் கனவுகளில் அவை பேசக்கூடுமா?   கூடும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லைஒலி எழுப்பலாம் ஆனால், பேசுவதற்கு வாய்ப்பில்லைஅப்படியானால், விலங்குகளின் கனவுகள், செஷைர் பூனையின் சிரிப்புகளை மட்டுமே ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்க வேண்டும்பூனையோ, சிரிப்பொலியோ தேவைப்படாமல் தனித்தியங்கும் இளிப்புகளையேசெஷைர் பூனையின் சிரிப்புஎன்று சொல்கிறேன்விலங்குகளுக்கு அப்படி என்றால், மனிதர்களுக்கும் அப்படித்தானே இருக்க வேண்டும்?  


ஒரு வேளை, நமது கனவுகளிலும் கூட, பேச்சோ உரையாடலோ இல்லாமல் அதன்சாயல்மட்டுமே இடம்பெற்றிருக்கக்கூடுமோஏனெனில், பெரும்பாலும் நாம், நமது நினைவுகளில் அல்லது ஞாபகங்களில் முழுப் பேச்சுகளையும் வைத்துக் கொண்டிருப்பதில்லைஅதன், தொனி அல்லது பனிப்படலம் அல்லதுஇளிப்புமட்டுமே நமக்குப் போதுமானதாக இருக்கிறது.  


நினைவுகளின் எல்லையற்ற சேர்க்கை தான் கனவுகள் என்றால், மொழியின் பங்கு மீச்சிறியதோ என்று இப்பொழுது நினைக்கத் தோன்றுகிறதுமொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கண்டு வந்திருக்கிறோம் என்றால், மொழியின் வாசனையற்ற கனவுகள் சாத்தியம் தான், இல்லையா?


அப்படியானால், கனவுக்கும் மொழிக்குமான பந்தம் எத்தகையதுகாலையில் மறையத்தொடங்கும் கனவுகளுக்கு மொழியின் மூலம் நிரந்தர உருவம் கொடுக்கிறோம் என்று சொல்வது பொய்யா, ஃப்ராய்ட்உங்களையும் மொழி ஏமாற்றியதா?


மொழிக்கு முன்பிருந்தே நாம் கனவுகளைக் கொண்டிருக்கிறோம் என்றால், கனவுகளின் இயல்பான பயன்பாடு என்னஇன்றைக்கு அதனை, தேவையற்றது என்ற பொருளில் மூளையின்குடல்வால்என்று கருதுகிறோமே, அது நியாயமில்லையோ?  


காலையில் கனவுகள் நினைவிருப்பதில்லை என்று சொல்வதிலுள்ளநினைவிருக்க வேண்டும்என்ற விதியை, மொழி அல்லவா நமக்குக் கொண்டு வந்து சேர்க்கிறதுஅதனால் தானே, ஃப்ராய்டும், மொழியின் ஜாலத்தில் மயங்கி, குற்றம்சாட்டிய மொழியையே கனவுகளின் மீட்பராகக் கருதத் தொடங்கினார்!  


உண்மையில், கனவுகளை, காலையில் அது நினைவிருக்கும் (அரையுங்குறையுமாக) தன்மையிலேயே ஏற்றுக் கொள்வதில் நமக்கு என்ன சிக்கல்


ஒரு வேளை, இரவில் துல்லியமாகத் தெரிந்த கனவை, காலையில் பனிப்படலம் போர்த்திக் காட்டுவது மொழியாகக் கூட இருக்குமோ?


இருக்கும் பட்சத்தில், கனவுகளின் இரவு நேரத் துல்லியத்தை மீட்டெடுப்பதற்கு, மொழியின் பிடியிலிருந்து விடுபடுவது எவ்வாறு?


மொழியின் அசாத்தியங்களை நெருங்கும் போது, கனவுகளின் உண்மையை நம்மால் தரிசிக்க முடியுமோ?  


அப்படி உண்மையை நெருங்குகிற அன்று (ஆம் என்றும் இல்லை என்றும் அர்த்தம் தரும்அன்று’), கனவுகள் கடவுளின் செய்திகள் அல்லது முன்னுணர்த்தும் சங்கேதங்கள் அல்லது ஆழ்மன ரகசியக் குறியீடுகள் அல்லது தன்னிலையின் குளறுபடிகள் என்ற அத்தனை கற்பனைகளையும் கடந்து, கனவுகளின் இன்னொரு பரிமாணத்தை நம்மால் கண்டுகொள்ள முடியும்பிற உயிர்களுக்கும் நமக்குமான இன்னொரு மாபெரும் ஒற்றுமையாகக் கனவு காணுதல் இருக்க முடியும்அந்தக்கனவுமொழி மீறிய / கடந்த / அன்றிய கனவாக இருக்க முடியும்.  


பல்லுயிர்களையும் இணைக்கிற சங்கதி உயிரியல் மட்டுமல்ல, நினைவுகளின் தொழில்நுட்பத்திலும் எல்லா உயிர்களும் ஒரே மாதிரியானவை என்று சொல்வதற்குமொழி மீறிய கனவுஎன்ற யோசனை நமக்கு உதவி செய்யலாம்.


Comments

Popular posts from this blog

பால்ய கரகாட்டக்காரி கௌசல்யாவின் கதை

‘நாட்டார் கலைஞர்கள் எவ்வாறு உருவாகுகிறார்கள்?’ என்று தேடிக் கொண்டிருந்த போது தற்செயலாகத்தான் கௌசல்யாவை சந்தித்தேன். ‘நானும் கலைஞர் தான், சார்’ என்று வந்து நின்ற சிறுமிக்கு பதிமூன்று, பதினான்கு வயது இருக்கலாம். ‘நீயா?’ ‘ஆமா, சார்’, சங்கோஜத்தோடு சொன்னாள். நான் சந்தேகப்படுகிறேன் என்று தெரிந்ததும், பக்கத்தில் நின்றிருந்த மாரியம்மாளை ‘நீ சொல்லும்மா, அப்ப தான் நம்புவாங்க’ என்பது போல பார்த்தாள். அதற்கு மாரியம்மா, ’ரெண்டு வருசமா இவ ஆடி தான் சார் சாப்புடுறோம்’ என்றார்.  சிறுமி கெளசல்யா, ஒரு கரகாட்டக் கலைஞராம்!   அந்தத் தற்செயல் இப்படித்தான் நடந்தது.  ஒரு பால்ய கரகாட்டக்காரியை நான் முதல் முறையாகச் சந்திக்கிறேன். ************ நான் பார்க்க வந்தது மாரியம்மாளை.  அவர் ஒரு மேனாள் கரகாட்டக்கலைஞர்.  வயது ஐம்பதுக்குள் இருக்கலாம்.  கரகாட்டக்கலைஞர்கள் சீக்கிரமே ஓய்வு பெற்றுவிடுகிறார்கள். பெண் கலைஞர்கள் என்றால் இன்னும் வேகமாக, முப்பத்தைந்தை தாண்ட மாட்டார்கள்.   'ஓய்வு' என்பது கூட தவறான வார்த்தை தான்.     நாட்டார் கலைஞர்களுக்கு 'ஓய்வு' என்பதே கிடையாது.  கலைஞர்க

5 கலவரங்களும் கதையாடல்களும்

5   கலவரங்களும் கதையாடல்களும்  க . இராமபாண்டி   விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வட்டத்தில் புதுப்பட்டி எனும் ஊர் உள்ளது . இவ்வூரில் 18 வகைச் சாதியினர் உள்ளனர் . இங்கு 1918ஆம் ஆண்டிலிருந்து 2000ம் ஆண்டு வரை பல்வேறு காரணங்களால் சாதிய மோதல்கள் நடைபெற்று வந்துள்ளன .   1918 - ஆம் ஆண்டு பறையர்களுக்கும் (அப்பொழுது 70 குடும்பங்கள்) பண்ணாடிகளுக்கும் (150 குடும்பங்கள்) சுடுகாட்டுப் (பறையர்கள் பயன்படுத்திய சுடுகாட்டை பண்ணாடிகள் பயன்படுத்தியதால்) பிரச்சினை ஏற்பட்டு பண்ணாடி சமூகத்தவர்கள் காவல் நிலையத்தில் புகார் செய்கின்றனர் . காவல் துறையினர் பறையர்களில் 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்கின்றனர் .   காவல் துறையினரின் தொந்தரவு தாங்கமுடியாமல் , பறையர் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் திருவில்லிப்புத்தூர் பங்குத் தந்தை பிரெஞ்சுச் சாமியார் மாஜி அருளப்பரைச் சந்தித்து ‘நாங்கள் கிறித்தவ மதத்திற்கு மாறுகிறோம் . எங்களை காப்பாற்றுங்கள் ’ என்று கூறுகின்றனர் . மாஜி அருளப்பர் காவல் நிலையத்திற்குச் சென்று , ‘பிரச்சினை என்பது இரு பிரிவினருக்கும் தான் . ஆதலால் , இரு பிரிவினர் மீதும் வழக்குப் பதிவு செய்யுங

வன்முறையை வன்முறையாலும் புனைவை புனைவாலும்... தேவேந்திரர் புராணம்!

தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி? (‘இந்திர தேச சரித்திரம்’ என்ற தொடர் கட்டுரையிலும், ‘பறையர் என்ற பெயரின் உற்பவம்’ என்ற கட்டுரையிலும் பிராமண எதிர்ப்பின் வரலாற்றை கோவில் உரிமைகள், பூஜை புனஸ்காரங்கள் சார்ந்து ஒரு புனைவு போல அயோத்திதாசர் சித்தரித்திருப்பார்.  இப்படியான வரலாறு குறித்து என்னிடம் சில கேள்விகள் இருந்தன:   ‘சாதித் துவேசம் என்பது பிராமணர்களின் சதி’ என்ற வாதம் எவ்வளவு தீர்க்கமான உண்மை? பறையர் சாதிக்கு சொல்லப்படுவது போல தமிழகத்தின் அத்தனை சாதிகளுக்கும் தனித்தனியே ‘பிராமண எதிர்ப்பு’ வரலாறு இருக்க முடியுமா?  அப்படி இருந்தன என்றால் அவை எங்கே? இல்லை என்றால் ஏன் இல்லை?  இதற்காக, வேளாண் சாதி என்று தங்களைப் பெருமையாக அடையாளப்படுத்திக் கொள்ளும் தேவேந்திரர்கள் ‘பிராமண சூழ்ச்சியால்’ இன்றைய இழிநிலையை அடைந்தார்கள் என்று தொனிக்கக்கூடிய புனைவரலாறு ஒன்றை ‘தேவேந்திரர்கள் வீழ்த்தப்பட்டது எப்படி?’ என்ற பெயரில் எழுதினேன்.  அதை அம்மக்கள் மத்தியில் பரவவும் செய்தேன். ஆதியில் அவர்கள் பெளத்தர்களாக இருந்தார்கள் என்றும், போலி பிராமணர்களின் சூழ்ச்சியால் இத்தாழ்நிலை அடைந்தார்கள் என்றும் என்னால் ஏறக