ஒரு சிறுபெண்ணுக்கு மானசீகக் காதலன் இருந்தான். ஒரு நாள், காதலை அவனிடம் சொல்லி விட அவள் முடிவு செய்தாள். காதலனைத் தேடியும் வந்தாள். வந்த இடத்தில் அவளைக் கூட்டமாய் வன்புணர்ச்சி செய்து, கொன்று போடுகிறார்கள். வன்புணர்ந்த கூட்டத்தில் மானசீகக் காதலனும் இருந்தான் என்பதை அறிந்தே அவள் இறந்தாள். இது தான் மாடத்தியின் கதை.
மேம்போக்காகப் பார்க்க, இந்தக் கதை அறிவியல் முரணால் கட்டப்பட்டிருப்பது போலத் தெரியும். மானசீகத்திற்கும் யதார்த்ததிற்குமான முரணைப் பேசுவதாகத் தோன்றலாம். நினைப்பை விடவும் நிஜம் அசிங்கமானது என்ற உண்மையை கோதை எத்தனைக் கொடூரமாக உணர நேர்ந்தது என்பதை விளக்க வந்தது போலத் தெரியலாம். ஏராளமான யதார்த்தவாதக் கலைப்படைப்புகள் இதைத்தான் செய்திருக்கின்றன. புதுமைப்பித்தனின் பொன்னகரம் ஒரு உதாரணம்.
இந்தக் கதையை இன்னும் கொஞ்சம் தீவிரமாக யோசித்துப் பார்க்கிறவர்களுக்கு அதன் இன்னொரு பரிணாமம் எட்டக்கூடும். கூட்டு வன்புணர்ச்சி செய்தவர்கள் குடிபோதையில் இருந்தனர் என்ற செய்தியும் கதையில் வருகிறது. அப்படியானால் அங்கு நிகழ்ந்த வன்புணர்ச்சி இயல்பானது அல்ல என்று சொல்ல வேண்டும். அந்த இளைஞர்கள் போதையில் நிலைதடுமாறியதால் கொடூரம் நிகழ்ந்தது.
இந்த இடத்தில் யதார்த்தவாதம் மழுங்க ஆரம்பிக்கிறது. போதையில் செய்த காரியம் என்பதால், வன்புணர்ச்சியை தற்செயல் அல்லது விபத்து என்று சொல்ல வாய்ப்புகள் உண்டு. இப்படிச் சொன்ன மறுகணம், மைய முரண் அனர்த்தம் நோக்கி நகர்ந்து விடுகிறது. இனி கதையின் முரண், நோக்கத்திற்கும் தற்செயலுக்குமானது. அந்தப் பெண்ணின் காதலை வெளிப்படுத்தும் நோக்கத்திற்கும் வன்புணர்ச்சி என்ற விபத்துமே எதிர்நிலைகள். துரதிர்ஷடவசமாக, நோக்கமும் தற்செயலும் முரண்டிக் கொண்டால், அபத்தமே உங்களுக்கு மிஞ்சும்.
இப்பொழுது, மொத்த பழியையும் விதியின் மேல் கொட்டுகிறோம். அக்குறிப்பிட்ட நேரத்தில், அக்குறிப்பிட்ட இடத்தில், அக்குறிப்பிட்ட பெண் இருந்ததற்கு ஒரு நோக்கம் உண்டு என்றாலும், அந்த நோக்கத்தை, தற்செயல் அல்லது விதி சிதைத்து விடுகிறது என்று கதை திரிகிறது. இனி, வாழ்வின் அபத்தத்தை அல்லது புதிரை அங்கலாய்ப்பது மட்டுமே கலைப்படைப்பின் நோக்கமாக மாறிவிடுகிறது. ஜெயகாந்தனின் அக்னிப்பிரவேசம் மாதிரியான ஒரு படைப்பு உருவாக்க முடியலாம்.
மாடத்தி, அறிவியல் வாதத்தினுள்ளோ அல்லது அபத்த வாதத்தினுள்ளோ இறங்கவில்லை. மாறாக, அந்த வன்கொடுமை நிகந்ததற்கு வலுவான சமூக வரலாற்றுக் காரணம் உண்டு என்று நிரூபிக்க முயற்சிக்கிறது. அந்தக் காரணத்தையும் தெளிவாகச் சொல்லி விடுகிறது; சாதிச் சமூக அமைப்பே அது.
அந்தப் பெண் மிகத்தாழ்ந்த சாதி; வன்புணர்ந்த கூட்டமோ உயர்ந்த சாதி. இந்த விபத்து வரலாற்றில் ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்பதே திரைப்படத்தின் வாதம். இவ்வாறு சொல்வதன் மூலம், கற்பனை - நிஜம் என்ற அறிவியல் முரணோ அல்லது நோக்கம் - தற்செயல் என்ற அபத்த முரணோ அல்ல, தாழ்ந்த சாதி - உயர்ந்த சாதி என்ற சமூக முரணே இந்திய சமூகங்களின் ஒவ்வொரு அசைவையும் தீர்மானிக்கும் சக்தி என்று நீங்கள் நம்ப ஆரம்பிக்கிறீர்கள்.
இப்பொழுது ஒட்டுமொத்த கதையும் வேறொரு கோணத்தையும் பரிமாணத்தையும் அடையத் தொடங்குகிறது. ஒரு சிறுபெண்ணுக்கு மானசீகக் காதலன் இருந்ததாக நீங்கள் கதையை ஆரம்பிக்க முடியாது. கதையில் நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் வரலாற்றால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அச்சிறுபெண்ணின் பெயர் ‘யோசனா’ என்றிருந்தாலும் அவளை ‘மாடத்தி’ என்றே அடையாளப்படுத்த ஆரம்பிக்கிறோம். வரலாறு நெடுகிலும் இவ்வாறு வன்புணர்ச்சி செய்து கொலையுண்ட அத்தனைப் பெண்களும் மாடத்திகளே என்பது நமக்கு உரைக்க ஆரம்பிக்கிறது.
இப்போது அந்தப் பெண்ணின் கதையில் வரலாறு என்ற அமானுஷ்யம் வந்து உட்கார்ந்து கொள்வதை நம்மால் கவனிக்க முடிகிறது. இத்திரைப்படம் கலைப்படைப்பா அல்லது வரலாற்று ஆவணமா என்று நமக்கு மயக்கம் ஏற்படுகிறது. இந்த மயக்கத்தையும் அத்திரைப்படம் தெரிந்தே தான் உருவாக்குகிறது.
அத்திரைப்படத்தில் வரும் கதாபாத்திரமொன்று, யோசனாவைப் பார்க்கும் பொழுதெல்லாம் மருகுவதும், திகைப்பதும், சில சமயம் நெடுஞ்சாண்கிடையாக விழுந்து வணங்குவதும், எத்தகைய மனநிலையிலிருந்து உருவாகுகிறதோ அதே மனநிலையை திரைப்படக் கதையாடலும் வெளிப்படுத்துகிறது. யோசனா, சாதாரணப் பெண்ணில்லை, மாடத்தி என்று நமக்கு தொடர்ந்து ஞாபமூட்டியபடி இருக்கிறார்கள்.
அதே போல இத்திரைப்படம் தன்னை ஆவணம் போலக் காட்டிக் கொள்வதற்காக கதையோட்டத்திற்குத் தேவைப்படாத பல சம்பவங்களை சொல்லத் தொடங்குகிறது. உதாரணமாக, தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களை வன்புணர்தல் உயர்ந்த சாதி ஆண்களின் கேளிக்கை என்பதை நிரூபிக்க, யோசனாவின் தாயை ஒரு உயர்சாதி ஆண் வன்புணரும் காட்சியை ஒரு சாட்சியம் போல நம்மிடம் சமர்பிக்கிறார்கள்.
ஒரு சிறுபெண்ணின் காதல் கதைக்கு சாதியக் காரணங்களைக் கற்பிப்பதன் மூலம், இக்கதையாடல் என்ன சாதிக்கிறது என்று நாம் கேட்டுப் பார்க்கலாம். மேலே சொன்னது போல, தனி நபர் அனுபவத்தை சமூக அனுபவமாக மாற்ற முடிகிறது. இரண்டு, வாழ்வின் அபத்தங்கள் / புதிர்களுக்கு நீண்ட சமாதானங்களைச் சொல்ல முடிகிறது. மூன்றாவதாக, ஒரு திரைப்படம் கலைப்படைப்பாகவும் ஆவணமாகவும் ஒரு சேர செயல்பட முடியும் என்ற மயக்கத்தை ஏற்படுத்துகிறது. நான்கு, ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கருத்தியலைப் பேசிய ஆசுவாசத்தை எல்லோருக்கும் பகிர்ந்தளிக்கிறது.
*
இதையெல்லாம் மீறி, திரைப்படத்தில் அறையுங்குறையுமாய் சொல்லப்பட்டிருக்கும் அச்சிறுபெண்ணின் காதல் கதையை நான் என் போக்கில் இப்படி கற்பனை செய்து கொண்டேன்.
அதைக் காதல் என்று சொல்ல முடியுமா என்று சிலர் கேட்கக்கூடும். முதற்காதல் என்று அழைப்பதில் எனக்குத் தயக்கமில்லை. முதிரா பருவத்து முதற் காதல். இவ்வகைக் காதலை தமிழில் யாராவது முயற்சி செய்திருக்கிறார்களா என்றால், எனக்கு வரும் ஞாபகம் ஆண்டாள் மட்டுமே.
இந்தப் பெயர் எப்பொழுது ஞாபகத்திற்கு வந்ததோ அப்போதிருந்து, நீங்கள் வேறொரு திரைப்படத்தைப் பார்க்க ஆரம்பித்து விடுகிறீர்கள். யோசனாவின் கதையை சொல்லி வரும் போது, சாதிய அடக்குமுறை வரலாற்றை விரிவாகப் பேசும் திரைப்படம், பட்டும் படாமலாவது கோதை நாச்சியாரை கோடிட்டுக் காட்டியிருக்கலாம் என்று இதை எழுதிக் கொண்டிருக்கும் போது தோன்றுகிறது. உண்மை தான், யோசனாவை ஆண்டாள் என்று கண்டால், திரைப்படம் முற்றிலு வேறொரு அனுபவமாக மாறிவிடுகிறது.
ஆண்டாள் பக்தியால் பாழானவள். அவளது பாடல்களைப் பாசுரங்கள் என்று சொல்லி காயடித்து விட்டதால், முதிராக் காதலின் ரகசியங்களை நம்மால் பூரணமாய் உணர்ந்து கொள்ள முடிந்ததில்லை. ஆனால், மாடத்தியில் சொல்லப்படும் காதல் அப்படி இல்லை. ரத்தமும் சதையுமாக இருக்கிறது.
சிறுமியிலிருந்து பெண்ணுக்கு நழுவிக் கொண்டிருக்கும் ஓருயிர் அடையும் குறுகுறுப்பும், வெகுளியும், தவிப்பும், வேட்கையுமே பாதி படம். மீதப்பகுதியில் சொல்லப்படும், சமூக வரலாற்றுப் பின்புலங்களை மறந்து விட முடிந்தால் நீங்கள் வேறொரு படத்தைப் பார்க்க முடிகிற பாக்கியசாலி.
படத்தில் சில தருணங்கள் அற்புதமானவை. தாயும் தந்தையும் புணர்வதற்காக எழுந்து செல்லும் போது, தூங்கிக் கொண்டிருப்பதாகக் காட்டப்படும் யோசனாவின் முகம் ஒரு உதாரணம். நீரோடை மீன்கள், முயல், புறா, காணாமல் போன கழுதைக்குட்டி, மாதுளை தின்னும் குரங்குகள், காதலனின் சட்டை என்று கோதையின் உலகில் அபூர்வம் தறிகெட்டு பறக்கிறது.
தனக்கே தனக்கான வனத்தினுள், அங்குமிங்குமாய் ஒளிந்து நின்று, கண்ணனைப் பார்த்துப் பார்த்துப் பூரித்துப் போகிறாள் யோசனா. ஒரு கட்டத்தில், கண்ணனை நேரில் பார்த்தே விடுவது என்று கோதை கிளம்பி வரும் போது தான் அந்தத் துர்சம்பவம் நிகழ்ந்து விடுகிறது. கூட்டு வன்புணர்வு!
கோதை, ஆண்டாளாவதற்கும் மாடத்தியாவதற்கும் மயிரிழையே வேறுபாடு என்பது தான் தமிழின் வேடிக்கை!
Comments