ஒவ்வொரு முறை, இந்திய தேசியம், ‘இந்தி’யைக் கூடுதல் மொழியாக வலியுறுத்தும் போதும் நாம் ஏன் அதை ஆக்ரோஷமாய் தடுக்கிறோம்?
இதற்கு விதவிதமானக் காரணங்களைச் சொல்கிறார்கள். அதில் பிரபலமான காரணங்கள் இவை.
1. தமிழர்கள் மொழிவெறியர்கள், அதனால் இந்தியை எதிர்க்கிறார்கள்!
2. இந்தி மூலமாக சமஸ்கிருதமே ஆட்சிக்கு வருகிறது. சம்ஸ்கிருதமோ வர்ணாஸ்ரமத்தின் வேர்களைப் பாதுகாக்கிறது. அதனால் இந்தியை அனுமதிக்க முடியாது.
3. இந்தியை விடவும் தமிழே மூத்த மொழி!
4. இந்தி, எந்தவொரு தனித்தன்மையும், இலக்கிய வளமும் இல்லாத மொழி!
5. தமிழ் மொழியை அழித்து விடுவதற்கான சமஸ்கிருத சதி இது!
6. பிராமணர்கள் இந்தியை ஆதரிக்கின்றனர். எனவே, நிச்சயமாய் இதில் ஏதோ சதி இருக்கிறது.
7. தாய்மொழி வழிக் கல்வியே சிறந்தது.
8. தமிழர்களை இரண்டாம்தரக் குடிமக்களாக மாற்றுவதற்கான சதி இது.
9. மொழியை அழிப்பதன் மூலம், ஒரு இனத்தையே அழிக்க முடியும்.
10. மொழியைக் காப்பது என்றால் ஒரு இனத்தின் வரலாற்றை, பண்பாட்டை, விழுமியங்களைப் பாதுகாப்பது என்று பொருள்.
11, 12, 13, ….
இந்தக் காரணங்களில் பலவும் உண்மை; சில, பகுதி உண்மை; வேறு சில, மிகைப்படுத்தப்பட்டவை. ஆனால், இவை அனைத்தையும் இயக்கிக் கொண்டிருக்கிற, சொல்லப்படாத உண்மையொன்று இருக்கிறது. அது,
‘இந்திய தேசியத்தின் மீதான அவநம்பிக்கை!’
அது எப்பொழுதும் திருட்டுத்தனங்களோடே நம்முன் தோற்றமளிக்கிறது. அதாவது, ரகசிய அடியறுப்பு வேலைகளோடு. மத்தியில் எந்தவொரு கட்சி ஆட்சியில் இருந்தாலும் (காங்கிரஸோ அல்லது ஜனதாவோ அல்லது பாஜகாவோ) இந்த அபிப்பிராயம் நமக்கு மாறுவதில்லை. நாம் தேசியத்தை ஒரு அரசியல் அமைப்பாக ஒத்துக் கொள்கிற வேளையில், அதைப் பண்பாட்டு உணர்வாக ஸ்தாபிக்கிற திட்டத்தோடே இந்திய தேசியம் வளைய வருகிறது. இதற்காக, இந்தியா எப்பொழுதும் தமிழ் நாட்டின் புறக்கடை வழியாகவே நுழைய முயற்சிப்பது தான் இங்கே முதன்மைச் சிக்கல்.
எந்தவொரு மொழிக் கொள்கையோடும் மத்திய அரசு தலைவாசல் வழி தமிழகத்திற்குள் வரட்டும் என்பது தான் நமது கோரிக்கை. ஆனால், ‘தேசியம் என்பதே திருட்டுத்தனங்களின் தொகுப்பு தான்’ எனும் பொழுது, இப்படி நடக்க சாத்தியமே இல்லை. கூடவே, இந்தத் திருடர்கள் கொல்லை வழி வந்து போக, புறவாசலைத் திறந்து வைக்கும் நபர்களும் வீட்டிற்குள்ளேயே இருக்கிறார்கள் என்பது தான் இப்பிரச்சினையத் தீவிரப்படுத்துகிறது.
பன்னெடுங்காலமாக தமிழகத்தில் எரிந்து கொண்டிருக்கும் இந்த மொழிப் பிரச்சினையின் மையம் இது தான்: இந்தியா பொய் சொல்கிறது!
Comments