ஜானுவைப் பார்த்ததும் ராம் துவண்டு போகிறான். மற்றவர்கள் முன்னிலையில் ஜானுவுடன் சகஜமாகப் பேசவோ பழகவோ அவனால் முடிவது இல்லை. ஜானுவோ படு இயல்பாக இருக்கிறாள். ராம் அடையும் சங்கோஜம் அவளுக்கும் நன்றாகவே தெரிகிறது. எனவே, கூடுமானவரை ரகசியமாக அவனோடு பேசத் தொடங்குகிறாள். ‘என்னாச்சு?’ என்று ஜாடையிலேயே கேட்பது. ஒரக்கண்ணால் பார்ப்பது, திரும்பிப் பார்த்து சிரிப்பது. அவன் விரும்புகிற பாடலை மட்டும் பாடாமல் அலைய விடுவது. ‘வாய் திறந்து தான் கேளேன்…’ என்று சீண்டுவது. அவன் பிறர் முன்னிலையில் எதையும் / எதுவும் கேட்க மாட்டான் என்பது அவளுக்கு நன்றாகவே தெரியும். அதை ரசிக்கவும் செய்கிறாள். ஆனாலும், தனது சீண்டல்களை அவள் எங்கும் நிறுத்துவது இல்லை. இந்தச் சீண்டல்களுக்கே நாம் ‘காதல் மொழி’ என்று பெயர் வைத்திருக்கிறோம். காதல், முரண்பட்ட இரண்டு குணாம்சங்களுக்குள் நிகழ்கிறது என்றொரு சொலவடை உண்டு. 96ல் இது ஆணின் சங்கோஜமாகவும், பெண்ணின் தைரியமாகவும் காட்டப்படுகிறது. இந்தக் கூச்சம் / தைரியம் என்றால் என்ன? ராமின் சங்கோஜத்திற்கானக் காரணங்கள் வெளிப்படையாய்ச் சொல்லப்படுவது இல்லை.